பிறையும் புறக்கண்ணும்


ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?



1. முன்னுரை :-

பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்கு நாட்காட்டியாகவும் (காலண்டர்), இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)


ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக சந்திரனாகிய அதற்கு மாறிமாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்குர்ஆன் (2:189)


சந்திரனின் வளர்ந்து தேயும் நிலைகள் அனைத்தையும் கவனிக்க வேண்டும். அவ்வாறு கவனித்து அறிந்து ஒவ்வொரு மாதங்களையும் துல்லியமாகக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்க வேண்டும். குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் துல்லிய விஞ்ஞான கணக்கீட்டு முறையில் அமைந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்ற வேண்டும் என்று ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பிரச்சாரம் செய்தும் பின்பற்றியும் வருகிறோம். ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டிற்கு குர்ஆனின் வசனங்களையும், ஸஹூஹான ஹதீஸ்களையும் நேரடி ஆதாரங்களாக சமர்ப்பித்துள்ளோம்.


இந்நிலையில் முஸ்லிம்கள் ரமழான் மாதத்தைத் துவங்கவும், நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் தினங்களைத் தீர்மானிப்பதற்கும், பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்த்தே முடிவெடுக்க வேண்டும். இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளை என்ற தவறான சிந்தனை மக்கள் மனதில் மிகமிக ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. இப்பிறை பிரச்சனையை மையமாக வைத்து நம் முஸ்லிம் சமுதாயம் பல்வேறு குழுக்களாக இன்று பிரிக்கப்பட்டும் விட்டது.


இவ்வாறு சந்திர மாதத்தின் 29-வது நாளன்று பிறையைப் புறக்கண்ணால் பார்த்து, அதன் பின்னர்தான் நோன்பு அல்லது பெருநாள் போன்ற மார்க்கக் கடமைகளை செய்ய வேண்டும், இதுதான் நபிவழி என்பதும் நம்மில் பலரது நம்பிக்கை. இந்நம்பிக்கைக்குக் காரணம் பிறைகள் குறித்த நபிமொழிகளுக்குத் தவறான விளக்கங்களும், மொழியாக்கங்களும் கொடுக்கப்பட்டு மக்கள் மன்றத்தில் பல ஆண்டுகளாக போதிக்கப்பட்டதே. அத்தகைய நபிமொழிகளை குர்ஆன் சுன்னா வழியில் ஆய்வு செய்து மக்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலைத் தெரிவிப்பதே பிறையும் புறக்கண்ணும் என்ற இந்த ஆய்வுப் புத்தகத்தின் நோக்கம்.


சந்திர மாதத்தின் 29-வது நாளன்று, மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் பிறையை புறக்கண்களால் பார்த்த பின்னரே புதிய மாதத்தைத் தொடங்கிட வேண்டும் என்பது மாற்றுக் கருத்தினரின் அசைக்க முடியாத நம்பிக்iகை. ஆனால் ஒவ்வொரு சந்திர மாதத்திலும் 29-ஆம் நாளன்று பிறையை மேற்குத் திசையில் பார்க்க இயலாது. மாறாக தேய்பிறைகளின் இறுதி நாட்களான 28, 29 ஆகிய தினங்களில் பிறையை கிழக்குத் திசையில்தான் பார்க்க இயலும். அதுவும் அதிகாலை (ஃபஜ்ரு) நேரத்தில்தான் பார்க்க முடியும். சந்திரனை அன்றாடம் பார்த்து வருபவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். இந்த இயற்கையின் நீதிக்கு எதிரான கருத்தை இயற்கை மார்க்கம் இஸ்லாம் போதித்து இருக்குமா? சிந்தியுங்கள்..!


அப்படியானால் சந்திர மாதத்தின் 29-வது நாளன்று, மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் பிறை பார்த்த பின்னரே நோன்பையும், பெருநாளை முடிவு செய்ய வேண்டும் என்ற கருத்து எவ்வாறு நடைமுறைக்கு வந்தது? இதன் பிண்ணனி என்ன? போன்ற கேள்விகளுக்கு பிறையும் புறக்கண்ணும் என்ற இந்த ஆய்வுப் புத்தகம் உங்களுக்கு விடை பகரும்.


இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட, முழுமையான, முறைபடுத்தப்பட்ட வாழ்க்கை நெறியே தீனுல் இஸ்லாம். நபி (ஸல்) அவர்களது காலத்திற்குப் பின்னர் மார்க்கத்தின் பெயரால் 'பித்அத்துகள்' எனும் நூதனச் செயல்கள் முஸ்லிம்களிடம் ஏற்படுத்தப்பட்டது உண்மையே. அத்தகைய நூதனச் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்கும் தவறான விளக்கங்களும் மொழியாக்கங்களும் கொடுக்கப்பட்டு, அவற்றையே மார்க்கம் என்றும் போதிக்கப்பட்டன. அதனால்தான் பிற்காலத்தில் தோன்றிய ஒவ்வொரு வழிதவறிய பிரிவினர்களும் தங்களின் கொள்கைகளுக்கு ஆதாரமாக சில குர்ஆன் ஆயத்துகளையும், ஹதீஸ்களின் பெயரால் புனையப்பபட்ட செய்திகளையுமே சுட்டிக் காட்டினர் என்பது வரலாறு.


தவறான மொழியாக்கத்துடன் விளக்கப்பட்ட அல்லது இட்டுக்கட்டப்பட்ட அத்தகைய செய்திகளை அடிப்படையாகக் கொண்டே மார்க்கத்தின் பெயரால் இடைச்செறுகள் செய்யப்பட்டன. அத்தகைய நூதனங்களையும், கருத்து வேறுபாடுகளையும் களைவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. இதை சிந்தனைவாதிகள் எவரும் மறுக்க மாட்டார்கள். மேற்படி 'பித்அத்து'களைக் களைவதற்கு அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆனும், ஸஹீஹான சுன்னாவும் மட்டும்தான் அடிப்படையும், உரைகல்லும் ஆகும்.


அதனால்தான் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் (4:59) உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் உங்களுக்கு மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் என்று மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளான். இதை முதலில் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.


முக்கியமாக அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் இந்த உம்மத்திற்கு பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று கட்டளை இடவில்லை. ஒரு மாதத்தில் 29-ஆம் நாளன்று பிறையை அது மறையும் வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்று நமது மார்க்கம் வலியுறுத்த வில்லை. ஒரு சந்திர மாதத்தில் 29-ஆம் நாளன்று பிறையை மேற்குத் திசையில் பார்க்க இயலாது. மாறாக தேய்பிறைகளின் இறுதி நாட்களான 28, 29 ஆகிய தினங்களில் பிறையை கிழக்குத் திசையில்தான் பார்க்க இயலும். அதுவும் அதிகாலை (ஃபஜ்ரு) நேரத்தில்தான் பார்க்க முடியும்.


மாதத்தில் 29-ஆம் நாளன்று பிறையை பார்க்கும் நிலைபாட்டில் நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக ஒரு மாதம் எப்போது முடியும்? என்பதை முற்கூட்டியே அறிந்த நிலையில் இருந்தாhகள். இவற்றை தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக,


• நபியின் (ஸல்) வழியே நம்வழி,

• பிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுறையும்,

• பிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இமாம்கள்,

•யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்.


போன்ற தலைப்புகளில் மக்கள் மத்தியில் இன்னும் எடுத்துச் சொல்லப்படாத பிறைகள் குறித்த வரலாற்றுச் சுவடுகளும், குர்ஆன் சுன்னாவின் ஆதாரங்களும் விளக்கப்பட்டுள்ளன. பிறைகள் குறித்து இஸ்லாம் கூறும் உண்மையைத் தெளிவாக உணர்ந்து கொள்ள இந்த ஆய்வுப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்தறிய வேண்டுகிறோம்.


தீனுல் இஸ்லாம் எனும் நமது மார்க்கம் மட்டும்தான் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்று நம்புகிறோம். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கருத்துகள் நிறைந்த இறை மார்க்கம் என்றும் பிறரிடம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துகிறோம். மார்க்கம் காட்டித்தராத எச்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவே மாட்டான் என்பதையும் நாம் அறிவோம். பிறைகள் குறித்து பல நூதனங்களையும், தவறுகளையும் மார்க்கத்தின் பெயரால் மக்கள் விளங்கி வைத்துள்ளனர். எனவேதான் 'பிறையும் புறக்கண்ணும்' என்ற இந்த ஆய்வுப் புத்தகத்தை விருப்பு வெறுப்பின்றி படியுங்கள் என்று மீண்டும் தங்களிடம் கோருகிறோம்.


மாதத்தில் 29-ஆம் நாளன்று சூரியன் மறைந்த பின்னர் (மஃரிபில்) பிறையை மேகம் மறைத்தால் அந்த மாதம் 30 நாட்களைக் கொண்டது என்றும் பிறை தெரிந்தால் புதிய மாதம் தொடங்கி விடும் என்றும் மாற்றுக் கருத்தினர் நம்புகின்றனர். அப்படியானால் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும்? என்பதை அந்த மாதத்தின் 29-ஆம் நாளன்று மஃரிபில்தான் நம்மால் அறிந்து கொள்ள முடியும்..! ஆக 29-ஆம் நாளன்று பிறையை மேகம் மறைக்குமா? மறைக்காதா? என்று அறியாத நிலையில் ஒரு மாதத்தைக்கூட முற்கூட்டி கணக்கிட முடியாது என்ற நிலை. இதுதான் மார்க்கம் என்றால் 10:5 வது வசனம் குறிப்பிடும் ஆண்டுகளைக் கணக்கிட முடியும்? சுமார் 200 கோடி முஸ்லிம்கள் இவ்வுலகில் வாழ்ந்து வருகிறோம். நபி (ஸல்) அவர்களின் உம்மத்ததை ஒரு காலண்டர் இல்லாத சமுதாயமாகவா அல்லாஹ் வைத்திருப்பான்? என்பதை சிந்தியுங்கள்.


இப்புத்தகத்தைத் தூய நோக்கோடு படிக்கும்போது, இதுநாள்வரை நம்பியிருந்த பிறை கோட்பாடுகளை தற்போது எப்படி மாற்றிக் கொள்வது? என்ற சிந்தனை தங்களுக்கு ஏற்படலாம். அல்லது இக்கருத்துக்கள் சரியானதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் போது நமது சமுதாய மக்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது? என்ற தயக்கம்கூட ஏற்படலாம். சத்தியத்தை உளப்பூர்வமாக உணர்ந்து மேற்படி சிந்தனையில் நீங்களும் இருந்தால், தாங்கள் நிதர்சனமாக விளங்கிக் கொண்ட சத்தியத்தை துணிந்து உரைக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.


உண்மையை உணர்ந்து வெளிப்படுத்துவோரும், தவறை திறுத்திக் கொள்வோரும்தான் உத்தமர்கள், உயர்ந்தவர்கள், இறை உவப்பைப் பெற்றவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். சத்தியப்பாதையில் இருக்கும் ஒரு முஃமின் எதிர்ப்புகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் அஞ்சிவிடக் கூடாது. நேரான வழியில் நடப்பதற்கும், சத்தியத்திற்கு சான்று பகர்வதற்கும் தயங்கிடவே கூடாது என்று நமது மார்க்கம் நமக்குப் போதிக்கிறது. சத்தியப்பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்த, சத்தியத்தை உரக்கச் சொல்லிட எங்களோடு புறப்பட்டு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறோம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது இஸ்லாமாக இருக்கட்டும் என்ற சிந்தனையோடு வீழ்த்தப்பட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியை நிலைபெறச் செய்ய எங்களோடு கைகோத்து செயல்பட உங்களையும் அழைக்கிறோம்.


உங்களின் வேலைப் பளுவிற்கு மத்தியில் சற்று நேரம் ஒதுக்கி தூய சிந்தனையுடனும், திறந்த மனதுடனும் இப்புத்தகத்தை முழுவதுமாகப் படித்துச் சிந்திக்குமாறு மிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நாம் முன்னுரையில் விளக்கியுள்ள விஷயங்களை தங்கள் சிந்தனையில் நிறுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டு 'பிறையும் புறக்கண்ணும்' என்ற ஆய்வுக்குள் உங்களையும் அழைக்கிறோம்.


2. பல்வேறு பிறை நிலைபாடுகள்..!

உலக முஸ்லிம்கள் பிறை விஷயத்தில் அவரவருக்கென்று புதிது புதிதான நிலைப்பாடுகளை உருவாக்கியும், உருவாக்கி கொண்டும் உள்ளனர். குறிப்பாக நமது நாட்டு முஸ்லிம்களைப் பொருத்தவரையில் பெரும்பாலும்


1) ஹிஜ்ரி காலண்டரின் பிறைக் கணக்கீட்டை பின்பற்றுவோர்


2) தத்தமது பகுதி (மாநிலப்பிறை) நிலைபாட்டை பின்பற்றுவோர்


3) சர்வதேசப்பிறை நிலைபாட்டை பின்பற்றுவோர்


4) சவுதிஅரேபியா அரசாங்கத்தின் பிறை அறிவிப்பை பின்பற்றுவோர்


என்று நான்கு வகையான பிறை நிலைப்பாடுகளைப் பின்பற்றுபவர்களாகக் காண்கிறோம்.


பிறையும் புறக்கண்ணும் என்ற இந்த பிறை ஆய்விற்குள் நுழைவதற்கு முன்னர், உலக முஸ்லிம்களில் பலர் இஸ்லாமிய மாதங்களை எவ்வாறு துவங்குகின்றனர் என்பதை அறிந்து கொள்வோம்.


1-வது கருத்து : ஒரு மாதத்தை ஆரம்பிப்பதற்குப் பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் காண வேண்டும். அல்லது சர்வதேச அளவில் எந்தப் பகுதியிலாவது முஸ்லிம்கள் பிறந்த பிறையைப் பார்த்த தகவல் கிடைக்கப் பெறவேண்டும். அவ்வாறு பிறையைக் கண்டாலோ, தகவலைப் பெற்றாலோ அதற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள் ஆகும். இதை சர்வதேசப்பிறை நிலைப்பாடு ((International Sighting) என்று கூறுகின்றனர்.


2-வது கருத்து : எந்த ஊரில் புறக்கண்ணால் பிறை பார்க்கப்பட்டதோ அது அந்த ஊரைச் சேர்ந்தவர்களை மட்டுமே கட்டுப்படுத்தும். அவரவர்கள் தத்தமது பகுதியில்தான் மஃரிபில் பிறையைப் பார்க்க வேண்டும். அவ்வாறு பிறை பார்த்து விட்டால் அதை அடுத்தோ அல்லது அன்றைய மஃரிபிலிருந்தோ புதிய மாதத்தின் முதல் நாளாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்த நிலைப்பாடு தத்தமதுபகுதி (Local Sighting) பிறை நிலைப்பாடு என்று அறியத் தருகின்றனர். இந்த தத்தமதுபகுதி பிறை நிலைபாட்டின் படி ஒருசாரார் பிறை பார்க்கும் எல்கை ஒரு மாநிலம் அளவு (தமிழகம்) என்பதே சரியானது என்கின்றனர். பிரிதொரு சாரார் பிறை பார்க்கும் எல்கை ஒரு நாடு (இலங்கை) அளவிற்கு இருக்கலாம் என்கின்றனர்.


3-வது கருத்து : இன்னும் நாம் மக்காவை நோக்கியே தொழுகிறோம். ஹஜ்ஜை நிறைவேற்ற நாம் அங்குதான் செல்கிறோம். எனவே மக்காவைத்தான் நாம் பிறை பார்ப்பதற்கு அளவுகோளாகக் கொள்ள வேண்டும். எனவே சவூதி அரேபியா அரசாங்கம் என்றைய தினம் ரமழான் மாதத்தையும், ஹஜ் மாதத்தையும் அறிவிக்கிறதோ அன்றைய தினம்தான் உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். இது சவூதி அரேபியாவின் (Following Saudi Arabia ) பிறைத் தகவலை ஏற்று பின்பற்றி வருபவர்களின் நிலைப்பாடாகும்.


4-வது கருத்து : சூரியன் சந்திரன் பூமி நேர்க்கோட்டிற்கு வரும் சங்கமம் என்ற நிகழ்வு (The Geocentric Conjunction occurs before Sunset) சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஏற்பட்டு, சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் (The Moon sets after the Sun) ஏற்பட்டால் அதற்கு அடுத்த நாள் சந்திர மாதத்தின் புதிய நாளாகும். இந்த நிலைப்பாட்டிற்கு 'இம்கானே ருஃயத்' என்று பெயர். இதை கடந்த ஹிஜ்ரி 1423 ஆம் வருடம் முதல் சவூதி அரசாங்கம் தங்கள் பிறை நிலைப்பாடுகளில் ஒன்றாகப் பின்பற்றினர். அதன் பின்னர் நண்பகல் 3.00 மணிக்குள் சங்கமம் நிகழ்ந்தால் அதற்கு அடுத்த நாள் மாதத்தின் புதிய நாளாக கணக்கிட வேண்டும் என்ற புதிய நிலைப்பாட்டையும் பின்பற்றினர். இவை போன்ற நிலைப்பாடுகளை சவுதி அரசாங்கம் ஏற்றுப் பின்பற்றியதற்கான காரணம், மாதத்தைத் துவங்குவதற்கு பிறை புறக்கண்களால் பார்க்கப்பட வேண்டும் என்ற கொள்கையே ஆகும். பிறை பிறந்துவிட்டதா? அல்லது பிறையைப் பார்க்கும் சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்ற ரீதியில் தற்போது அவர்கள் சிந்திப்பதே புறக்கண் பார்வை நிலைப்பாட்டிலிருந்து சவுதி அரசாங்கம் சற்று விலகிக் கொண்டு வருவதைத்தான் காட்டுகிறது.


5-வது கருத்து : பிறையை 29-ஆம் நாள் மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்க்க முயல வேண்டும். அந்த நாளில் மேகமூட்டமாக இருந்து பிறையைப் பார்க்க முடியவில்லை என்றால் அந்த மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்யவேண்டும். அந்த முப்பதாவது நாளுக்குப் பின்னர் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு அடுத்தநாள் புதிய மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். நாம் வாழும் நாட்டிற்கு கிழக்குத் திசையில் அமைந்திருக்கும் நாடுகளில் பிறை பார்த்த தகவல் கிடைத்தால் ஏற்கலாம். ஆனால் மேற்கு திசையிலிருக்கும் நாடுகளில் பிறை பார்த்த தகவல் வந்தால் ஏற்கக்கூடாது. இப்படி ஒருசாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.


6-வது கருத்து : ஒரு ஊரில் பார்க்கப்பட்ட பிறை அருகிலுள்ள ஊர்களுக்கு மட்டுமே பொருந்தும், மிகத் தொலைவிலுள்ள ஊர்களுக்கு அது பொருந்தாது. எனவே எந்த ஊரில் பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதோ அது அந்த ஊரிலிருந்து குறிப்பிட்ட கிலோமீட்டர் சுற்றளவுள்ள பகுதி மக்கள் மட்டும் அடுத்த நாளை முதல் நாளாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு இன்னொரு சாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.


7-வது கருத்து : ஒரு ஊரில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த ஊரைச் சார்ந்தவர்கள் அனைவரும் அடுத்த நாளைப் புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ளலாம் என்று சிலர் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.


8-வது கருத்து : இன்னும் சிலரோ சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாகச் சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள். இந்த நிலைப்பாட்டிற்கு மக்கா (Makkah Date Line) தேதிக்கோடு? என்று கூறிக்கொள்கின்றனர். இதே வழிமுறையைச் சிலர் அவரவர்கள் பகுதியிலும் தற்போது பின்பற்ற துவங்கிவிட்டனர்.


9-வது கருத்து : அவரவர்களுடைய நாட்டில் ஃபஜ்ர் நேரத்திற்கு முன் சூரியன் சந்திரன் பூமி நேர் கோட்டிற்கு வரும் சங்கமம் என்ற நிகழ்வு (Geocentric Conjunction occurs before Dawn) நடைபெற்றால் ஃபஜ்ருக்குப் பிறகு ஆரம்பிக்கும் நாள் மாதத்தின் முதல் நாள் என முடிவு செய்து பின்பற்றி வருகிறார்கள். லிபியா போன்ற அரபு நாடுகள் இந்த முறையைப் பின்பற்றிவருகிறார்கள்.


10-வது கருத்து : ரமழான் மாத நோன்பை துவங்குவதற்கும், ஷவ்வால் மாதத்தைத் துவங்குவதற்கும் சர்வதேச பிறை நிலைப்பாட்டையும், ஹஜ் மாதத்தைத் துவங்குவதற்கு சவூதி அரசாங்க முடிவையும் ஏற்று சிலர் செயல்படுகின்றனர்.


இறுதியாக


சந்திரனின் வளர்ந்து தேயும் நிலைகள் அனைத்தையும் கவனிக்க வேண்டும். அவ்வாறு கவனித்து அறிந்து ஒவ்வொரு மாதங்களையும் துல்லியமாகக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்க வேண்டும். குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் துல்லிய விஞ்ஞான கணக்கீட்டு முறையில் அமைந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்ற வேண்டும். இதற்கு அல்குர்ஆன், சுன்னாவிலிருந்து பிரதான ஆதாரங்கள் பல இருப்பினும் கீழ்க்காணும் 5 குர்ஆன் ஆயத்துக்களை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம்.


பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்கு நாள்காட்டியாகவும் (காலண்டர்), இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)


அவன்தான் சூரியனை பிரகாசமானதாகவும், சந்திரனை ஒளியாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக சந்திரனாகிய அதற்கு மாறிமாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்லாஹ் உண்மை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் சமூகத்திற்காக அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (அல்குர்ஆன் 10:5)


உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளையை போல் திரும்பிவரும் வரை சந்திரனுக்கு நாம் பல தங்குமிடங்களை (மனாஜில்) ஏற்படுத்தியிருக்கின்றோம் (அல்குர்ஆன் 36:39)


சூரியனும், சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற கணக்கின்படியே இருக்கின்றன (அல்குர்ஆன் 55:5)


இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சி மங்கிடச் செய்தோம். உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்ளவும், ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு கொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம் (அல்குர்ஆன் 17:12)


மேற்படி பல்வேறு நிலைப்பாடுகளில், எந்த சாராரின் கூற்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த அடிப்படையில் உள்ளது என்பதை நாம் சிந்தித்து ஆராய்ந்து பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்.


ஹிஜ்ரி கமிட்டி பிரச்சாரம் செய்யும் பிறைக் கணக்கீடு நிலைப்பாட்டைத் தவிர்த்து மேற்கண்ட நிலைப்பாடுகள் அனைத்தும் பிறையை மேற்குத் திசையில் அது மறையும் வேளையில் புறக்கண்களால் பார்த்த பின்னரே புதிய மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற நம்பிக்கையால் ஏற்பட்டவையே.


ஆகவே இத்தனை பிறை நிலைப்பாடுகளையும் நாம் ஆராய்வதாக இருந்தால் அதுபற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை அறிந்திட வேண்டும். குறிப்பாக ரமழான் மற்றும் பெருநாள் தினங்களைத் தீர்மானிக்க பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? என்பதை முதலில் தெளிவாக விளங்கிட வேண்டும். அதைத் தெரிந்து கொண்டாலே மேற்கண்ட பிறை நிலைப்பாடுகளில் எது சத்தியம்? யாருடைய பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்க ஆதாரம் உள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிவிடும் இன்ஷா அல்லாஹ்.


இறைவனின் சாபத்தை பெற்று சிறுமையடைந்த ஷைத்தான், இறைவிசுவாசிகளான முஸ்லிம்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுக்க அனைத்து வழிகளிலும் முயல்வான். முஸ்லிம்களின் முக்கியக் கடமைகளுள் ஒன்றான ரமழான் நோன்பை, உரிய நாளில் ஆரம்பிக்க விடாது முஸ்லிம்களைத் தடுப்பான். புனித மாதங்களை உரிய நாளில் ஆரம்பிக்க விடாமலும், சரியான நாளில் ரமழான் நோன்பை முஸ்லிம்கள் முடிக்காமல் செய்வான்.


இன்னும் நோன்பு வைக்க ஹராமான நாட்களில் முஸ்லிம்களை நோன்பை பிடிக்க ஏவியும், பெருநாள் தினத்தில் ஈத் தொழுகையைத் தொழுது பெருநாளைக் கொண்டாடுவதைத் தவறச் செய்வான். மேலும் ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் என பிளவுபட்டு பெருநாள் கொண்டாட வைத்தும் ஆனந்தம் அடைவான். இதில் யாருக்கும் சந்தேகம் உண்டோ?. முஃமின்களை குழப்பிக் கூறு போடுவது கெட்ட ஷைத்தானின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். எனவேதான் இந்த பிறை விஷயம் என்று சொன்னவுடனேயே முகம் சுளிக்கும் அளவிற்கு பெரும் குழப்பம் என்ற ரீதியில் மக்கள் மத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளது போலும்.


3. பிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடுங்கள் என்பதின் விளக்கம் என்ன?

பிறையை புறக்கண்ணால் பார்ப்பதற்கு மாற்றுக் கருத்தினர் கூறும் பிரதான ஆதாரமாக இதைக் கொள்ளலாம். இன்று மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்னரே புதிய மாதத்தைத் துவங்க வேண்டும் என்று முஸ்லிம்களில் பலர் நம்பியுள்ளனர். பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்புதான் ரமழான் நோன்பைத் துவங்க வேண்டும் அல்லது பெருநாள் தினம் (ஷவ்வால்-1) என்று தீர்மானிக்க வேண்டும் என்கின்றனர். பிறந்த பிறையைப் புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்று கூறுபவர்கள் குறிப்பாக கீழ்க்காணும் நபிமொழிகளைப் பிரதான ஆதாரங்களாகக் கருதி மக்களிடையே பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.


1. حدثنا أبو داود قال حدثنا بن سعد عن الزهرى عن سالم عن بن عمر قال قال رسول الله صلى الله عليه و سلم : صوموا

لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فأقدروا له. مسند الطيالسي - (1 / 249 ( 1810 –

2. حدثنا عبد الله بن مسلمة عن مالك عن نافع عن عبد الله بن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه و سلم

ذكر رمضان فقال ( لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له ) صحيح البخاري - (2 /

674) 1807.


((صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فاقدروا له


ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி –


அதை (பிறையைப்) பார்த்து நோன்பு வையுங்கள் அதை(மறு பிறையை)ப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டமாக இருந்தால் அதைக் கணக்கிட்டு கொள்ளுங்கள்.


(لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلاَلَ ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ

மேலும் லா தஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால் வலா துப்ஃதிரு ஹத்தா தரவ்ஹூ


பிறையைப் பார்க்காத வரை நோன்பை நோற்காதீர்கள். (மறு)பிறையை பார்க்காத வரை பெருநாள் கொண்டாடாதீர்கள்.



(மேற்கண்ட இரு நபிமொழிகளுக்கும் மாற்றுக் கருத்துடையவர்களின் தவறான மொழிபெயர்ப்பை புரிந்து கொள்வதற்காகவே அப்படியே மாற்றம் செய்யாமல் நாம் தந்துள்ளோம். அவர்கள் கூறும் மேற்கண்ட ஹதீஸ்கள் புஹாரி கிரந்தத்தில் உள்ளதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. புஹாரி கிரந்தத்தில் அது போன்ற வாசகங்கள் கொண்ட அறிவிப்புகள் இல்லை என்பதையும் நினைவில் கொள்க)


இதில் ஸூமூ லி ருஃயத்திஹி (صُومُوا لِرُؤْيَتِهِ ) என்ற கருத்தைச் சொல்லும் ஹதீஸின் சரியான முழுமையான அறிவிப்புகளை முதலாவதாக நாம் ஆய்வு செய்வோம்.


1. عبد الرزاق عن عبد العزيز بن أبي رواد عن نافع عن عليه و سلم إن الله جعل الأهلة مواقيت للناس فصوموا لرؤيته وأفطروا

لرؤيته فإن غم عليبن عمر قال قال رسول الله صلى الله كم فعدوا له ثلاثين يوما . مصنف عبد الرزاق - (4 / 156)

5. عن ابن عمر ،أن رسول الله صلى الله عليه وسلم قال : إن الله جعل الأهلة مواقيت ، فإذا رأيتموه فصوموا ، وإذا رأيتموه

فأفطروا ، فإن غم عليكم فاقدروا له ، واعلموا أن الشهر لا يزيد على ثلاثين " *. ( صحيح ابن خزيمة - كتاب الصيام جماع

أبواب الأهلة ووقت ابتداء صوم شهر رمضان - باب ذكر البيان أن الله جل وعلا جعل الأهلة مواقيت للناس حديث : ‏1789(


''நிச்சயமாக அல்லாஹ் பிறை(யின் படித்தரங்)களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.''


அறிவித்தவர் இப்னு உமர் (ரழி). நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306)


''நிச்சயமாக அல்லாஹ் பிறை(யின் படித்தரங்க)ளைத் தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும் போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை.''


அறிவித்தவர் : இப்னு உமர் (ரழி). நூல்: ஸஹீஹ் இப்னு ஹூசைமா (1789)


மேற்கண்ட அறிவிப்புகள் மட்டுமே முழுமையான ஹதீஸ்களாக உள்ளன. ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி என்று துவங்கும் ரிவாயத்தில் ஸூமூ லி ருஃயத்திஹி என்ற சொற்றொடருக்கு அதைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று பொருளாகும். அதைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்றால் எதைப் பார்த்து? என்ற கேள்வி எழுகிறது. அதனால்தான் ஸூமூ லி ருஃயத்திஹி என்ற வாசகத்தில் உள்ள 'ஹி' என்ற பதம் எதைக் குறிக்கின்றது என்று கேட்கிறோம். நமது கேள்விக்கு மாற்றுக் கருத்துடையோர் தெளிவான பதில் அளிப்பதில்லை. மேலும் இந்த முழுமையான வாசகங்கள் அடங்கிய ஹதீஸை மக்கள் மன்றத்தில் மேற்படி அறிஞர் பெருமக்கள் விளக்கி கூறுவதும் இல்லை.


மாறாக 'ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி' என்ற ரிவாயத்துகள் பிறந்த பிறையைப் புறக்கண்களால் மட்டும் பார்த்து நோன்பு பிடியுங்கள் பிறந்த பிறையைப் புறக்கண்களால் மட்டும் பார்த்து நோன்பை விடுங்கள் என்று கூறுவதாக மாற்றுக் கருத்துடையோர் பிரச்சாரம் செய்கின்றனர். இன்னும் மாதத்தின் 29-வது நாளின் மாலையில் (30-வது நாளுக்குரிய!) மஃரிபு வேளையில், உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் ரமழானை 30 நாட்களாக பூர்த்தி செய்யுங்கள் என்று மார்க்கம் போதிப்பதாகவும் கூறுகின்றனர். மேலும்; வெறுமனே 'பிறை' பார்த்து என்று ஒருமையில் மொழிபெயர்த்து பிறந்த பிறையைப் புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டும் என நபி (ஸல்) அவர்களே சொல்லி விட்டார்கள் என்றும் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்கின்றனர். இத்தகைய கருத்துக்கள் அனைத்துமே தவறானதாகும்.


குறிப்பாக மேற்படி முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306) ஹதீஸில் வரும் ஸூமூ லி ருஃயத்திஹி என்பதில்''ஹி' என்ற பதம் அஹில்லாஹ்வை (அதாவது ஒரு மாதத்தில் தோன்றும் அனைத்து நாட்களின் பிறைகளையும்) குறிப்பதைக் காணலாம். மேலும் அல்குர்ஆன் 2:189-வது வசனத்தில் இடம்பெறும் சொற்றொடர்களை தாங்கியுள்ளதாகவும், சந்திரனின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான் என்று நாட்காட்டியின் அடிப்படையை வலியுறுத்துவதாகவும் மேற்படி முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306) ஹதீஸ் உள்ளது.


மேற்படி ஹதீஸ்களில் இடம்பெறும் 'மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள்' என்ற சொற்றொடருக்குப் பின்னால் பல விஞ்ஞான அறிவியல் ரீதியிலான கருத்துக்கள் புதைந்துள்ளன. அவை நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தான் என்பதற்கும், அவர்கள் சுயமாக எதையும் பேசுவதில்லை என்பதற்கும் தகுந்த எடுத்துக் காட்டுகளாகும். இப்புத்தகத்தை முழுவதுமாக படித்த பின்னர் தாங்கள் நிதர்சனமாக இதை அறிந்து கொள்வீர்கள்.


பிறந்த பிறையை அது மறையும் மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் பார்த்த பிறகு அடுத்த நாள் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். மேகமூட்டமாக ஆகிவிட்டால் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்ய வேண்டும். இவை மாற்றுக் கருத்துடையோரின் நம்பிக்கையும் பிறை நிலைப்பாடும் ஆகும்.


அதாவது ரமழான் மாதத்தைத் துவங்கவும், நோன்பை நோற்பதற்கும் பிறையை பார்த்தே ஆகவேண்டும் என்பதே மாற்றுக் கருத்துடையோரின் நிபந்தனை. இந்நிபந்தனையை நபி (ஸல்) அவர்கள் உண்மையிலேயே வலியுறுத்தியிருந்தால், அதே நபி (ஸல்) அவர்களே மேகமூட்டமாக ஆகிவிட்டால் பிறையைப் பார்க்காமலேயே 30 நாட்களாக மாதத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்று கூறியிருப்பார்களா? சற்று சிந்தியுங்கள். மேகமூட்டம் சம்பந்தமான எந்த சொல்லும் மேற்படி ரிவாயத்துகளில் இடம்பெறவில்லை என்பதே உண்மை.


இன்னும் பிறையை பார்த்தே ஆகவேண்டும் என்பதுதான் நிபந்தனையாக இருக்குமென்றால், மேற்படி முப்பதாவது நாளில் (மேகமூட்டமாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்) பிறையை பார்க்காமலேயே புதிய மாதத்தைத் துவங்கிக் கொள்ளுங்கள் என்று ஒரே நிகழ்வுக்கு இரண்டு முரண்பட்ட கருத்தைக் கூறியிருப்பார்களா? என்பதைச் சற்று சிந்திக்க வேண்டுகிறோம்.


மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் பிறைகள் குறித்த ஹதீஸ்களில் இடம்பெறும் 'ருஃயத்' என்ற சொல்லுக்கு 'பிறையை புறக்கண்களால் பார்த்து' என்று மட்டும் காலம் காலமாக மொழி பெயர்த்தனர்.


பிறையை புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்றும்


புறக்கண்ணால்தான் பிறையைப் பார்க்க வேண்டும் என்றும்


பிறை பார்க்கப்பட்ட பின்னர்தான் புதிய மாதத்தை துவங்க வேண்டும் என்றும்


மக்களும் புரிந்து கொண்டு நடைமுறைப் படுத்தியதின் விளைவாக நம் சமுதாயத்தில் இக்கருத்து புறையோடிப் போய்விட்டது. இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் முக்கியத்துவம், மகத்துவமும் முஸ்லிம்களுக்கு புரியாமலேயே போய் நாட்காட்டியின் அடிப்படைகளும் தகர்க்கப்பட்டு விட்டன.


'ருஃயத்' என்ற வேர்ச்சொல்லுக்கு சரியான மொழி பெயர்ப்பு 'காட்சி' என்பதாகும். 'அதன் அடிப்படையில் அப்பிறைகளின் காட்சியைக் கவனித்து, அவற்றின் அடிப்படையில் நோன்பை துவங்கவும் முடிக்கவும் வேண்டும்' என்ற பொருளை நாம் இங்கு கையாண்டிருக்கின்றோம். மேலும் 'காட்சி' என்பது புறக்கண்ணால் பார்த்துவிட்டு சிந்தனை செய்யாமல் வெறுமனே பார்த்துவிட்டுச் செல்வது என்ற அர்த்தத்தில் 'ருஃயத்' என்ற சொல்லை நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தவில்லை. அதன் உண்மை விளக்கத்தையும் இப்புத்தகத்தின் மூலம் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.


இன்னும் 'ஹிலால்' என்ற அரபுச் சொல்லுக்கு அரபுமொழி ஆய்வாளர்களின் விளக்கத்தையும் சுருக்கமாக அறிந்து கொள்வோம். இஸ்லாமிய மார்க்கத்திற்கு மூல ஆதாரம் குர்ஆனும், ஸஹீஹான சுன்னாவும் மட்டுமே. இதுவல்லாமல் அரபு அகராதி விளக்கங்களோ, அரபு இலக்கண இலக்கியங்களோ மார்க்கத்தின் அடிப்படை ஆதாரமாகாது. இருப்பினும் நமது நிலைப்பாட்டிற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து நாம் நேரடியான ஆதாரங்களை எடுத்து வைக்கும்போது சிலர் அகராதி நூட்களில் அப்படி உள்ளது, அரபு இலக்கண இலக்கியத்தில் இப்படி எழுதப்பட்டுள்ளது என்கின்றனர். எனவே 'ஹிலால்' என்ற அரபுச் சொல்லை புரிந்து கொள்வதற்காக, அத்தகைய அரபு மொழி ஆய்வு நூல்களில் இருந்தே சிலவற்றை உங்கள் குறிப்பிற்காகக் கீழே வழங்குகிறோம்.


அஸ்ஸிஹாஹ் ஃபில் லுஅ


الصحاح في اللغة - (2 / 254-255) هلل : الهِلالُ: أوَّل ليلةٍ والثانية والثالثة، ثم هو قمرٌ. والهِلالُ: ما يُضَمُّ بين الحِنْوَيْنِ من حديدٍ أو خشب؛ والجمع الأهِلَّةُ. والهِلالُ: الماءُ القليل في أسفل الرَكِيِّ والهلال: السنان الذي له شعبتان يصاد به الوحش. والهِلالُ: طرف الرحى إذا انكسر منه.


'ஹிலால்' என்பது முதல் நாளுக்கும், இரண்டாம் நாளுக்கும், இன்னும் மூன்றாம் நாளுக்கும் பிறகு அதை சந்திரன் என்று கூறுவார்கள். மேலும் 'ஹிலால்' என்பது மரக்குச்சி அல்லது இரும்பு கம்பியை வளைக்கும் போது இடையில் ஏற்படும் கொம்பு வடிவத்திற்கும் கூறுவர். அதன் பன்மைச் சொல் அல்'அஹில்லாஹ்' ஆகும். இன்னும் ஆட்டு உரலில் மாவு அரைத்த பின் கடைசியாக இருக்கும் சிறது தண்ணீருக்கும் 'ஹிலால்' என்று கூறுவர். மிருங்கங்களை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் இருசூலம் போன்ற இரண்டு பக்கம் கூர்மையான ஆயுதத்திற்கும் 'ஹிலால்' என்று கூறுவர். மாவரைக்கும் ஆட்டு உரல் உடைந்த பின் அதன் ஓரத்திற்கும் 'ஹிலால்' என்பர். நூல்: ஸிஹ்ஹா ஃபில் லுஆ


(குறிப்பு : மேற்கண்ட அகராதி குறிப்பில் இடம்பெறும் 'ஸின்னான்' என்ற பதம் நேரடி மொழி பெயர்ப்பின்படி இரண்டு பற்கள் என்று பொருள்படும். السنان الذي له شعبتان يصاد به الوحش என்ற முழுமையான வாக்கியத்தில் 'ஸின்னான்' என்ற பதம் கூர்மையான ஆயுதத்திற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமான மாற்றுக் கருத்துடையோரின் வரம்பை மீறிய விமர்சனங்கள் பற்றியும் 'ஸின்னான்' என்ற பதத்திற்கு இரண்டு பற்கள் என்ற பொருள் பற்றியும் கூடுதல் விளக்கங்களை விமர்சனம் பகுதியில் காண்க.)


காமூஸுல் முஹீத்:


القاموس المحيط - (1 / 1384) الهِلالُ : غُرَّةُ القَمَرِ أو لِلَيْلَتَيْنِ أو إلى ثلاثٍ أو إلى سبعٍ ولِلَيْلَتَيْنِ من آخِرِ الشهرِ سِتٍّ وعشرينَ وسبعٍ وعشرينَ وفي غيرِ ذلك قَمَرٌ.


சந்திரனில் ஏற்படும் ஒளிக்கும், இரண்டு மூன்று அல்லது ஏழு நாட்களுடைய சந்திரனிற்கும் 'ஹிலால்' என்பர். மேலும், மாதத்தின் இறுதியில் வரும் இரண்டு நாட்களான இருபத்தி ஆறு இன்னும் இருபத்தி ஏழு நாட்களுக்கும் கூறப்படும். அதுவல்லாவற்றிக்கு சந்திரன் என்பர். நூல்: காமூஸுல் முஹீத்.


தாஜுல் உரூஸ்:


تاج العروس من جواهر القاموس - (31 / 144) ه ل ل | ( * ! الهِلالُ ) ، بِالكَسْر : ( غُرَّةُ القَمَرِ ) ، | وَهِي أَوَّل لَيْلَة ، ( أَو ) يُسَمَّى * ! هِلَالًا | ( لِلَيْلَتَيْنِ ) مِنَ الشَّهْرِ ، ثُمَّ لَا يُسَمَّى بِهِ | إِلى أَنْ يَعُودَ في الشَّهْرِ الثَّاني ، ( أَوْ | إِلى ثَلَاثِ ) لَيَالٍ ، ثُمَّ يُسَمَّى قَمَرًا ، | ( أو إِلى سَبْع ) لَيالٍ ، وَقَريبٌ مِنْهُ قَوْلُ | مَنْ قَالَ : يُسَمَّى هِلَالًا إِلى أَنْ يَبْهَرَ | ضَوْؤُهُ سَوادَ اللَّيْلِ ، وَهذا لَا يَكُونُ | إِلَّا في السَّابِعَة . قَالَ أَبُو إِسحاق : | وَالَّذي عِنْدِي وَمَا عَلَيْهِ الأَكْثَر أَنْ | يُسَمَّى هِلَالًا ابْن لَيْلَتَيْن فَإِنَّهُ في | الثّالِثَة يَتَبَيَّن ضَوْؤُهُ . ( و ) في التَّهْذيب | عَن أَبي الهَيْثَم : يُسَمَّى القَمَرُ لِلَيْلَتَيْن | مِنْ أَوَّلِ الشَّهْرِ هِلَالًا ، و ( لِلَيْلَتَيْن مِنْ | آخِرِ الشَّهْرِ سِتٍّ وَعِشْرِينَ وَسَبْعٍ | وَعِشْرِين ) هِلالًا ، ( وفي غَيْرِ ذلِكَ | قَمَرٌ ) .


அல்ஹிலால், ''ஹ' என்ற எழுத்திற்கு கஸர் போட்டு சொல்லப்படும். ஹீர்ரத்துன் கமர் என்று முதல் நாளுக்குக் கூறப்படும். மாதத்தின் இரண்டு நாட்களுக்கு 'ஹிலால்' என்று கூறப்படும். அதன்பின் மறுமாதம் வரும் வரை அதை 'ஹிலால்' என கூற மாட்டார்கள். அல்லது மூன்று நாட்களுக்குக் கூறப்படும். பிறகு சந்திரன் எனக் கூறப்படும். அல்லது ஏழு நாட்களுக்குக் கூறப்படும். இந்த கூற்றுகளுக்கு மிகவும் நெருக்கமானது இரவு முழுமையாக வந்தபின் தெரியும் ஹிலாலின் வெளிச்சத்திற்கு 'ஹிலால்' என கூறுவர். மேலும் இது ஏழாவது நாளைத் தவிர நடைபெறாது. அபூஇஸ்ஹாக் என்பவர் கூறுகின்றார் என்னிடம் உள்ளதும், மேலும் அதிகமானோரின் கருத்தும் இரண்டு நாளுக்குரியதை 'ஹிலால்' என கூறுவோம். ஏனெனில் மூன்றாம் நாளில் அது தன் ஒளியை வெளிப்படுத்திவிடும். ஹூசைம் என்பவர் தஹ்தீபில் கூறுகின்றார் மாதத்தின் முதல் இரண்டு நாளுக்குரிய சந்திரனை 'ஹிலால்' எனக் கூறுவோம். மேலும் மாதத்தின் இறுதியில் 26, 27 க்கும் 'ஹிலால்' என கூறப்படும். இது அல்லாததை கமர் என கூறுவோம். நூல்: தாஜூல் உரூஸ்.


லிஸானுல் அரப்:


لسان العرب - (11 / 701) ………والجمع أَهِلَّة على القياس وأَهاليلُ نادرة ……………….. والهِلالُ غرة القمر حين يُهِلُّه الناسُ في غرة الشهر وقيل يسمى هِلالاً لليلتين من الشهر ثم لا يسمَّى به إِلى أَن يعود في الشهر الثاني وقيل يسمى به ثلاث ليال ثم يسمى قمراً وقيل يسماه حتى يُحَجِّر وقيل يسمى هِلالاً إِلى أَن يَبْهَرَ ضوءُه سواد الليل وهذا لا يكون إِلا في الليلة السابعة قال أَبو إِسحق والذي عندي وما عليه الأَكثر أَن يسمَّى هِلالاً ابنَ ليلتين فإِنه في الثالثة يتبين ضوءُه والجمع أَهِلَّة .


ஹிலாலின் பன்மை 'அஹில்லாஹ்' இது கியாஸின் அடிப்படையாகும். சில சமயங்களில் அஹாலீலு என்ற சொல் பயன்படுத்தப்படும். 'ஹிலால்' என்பது சந்திரனில் ஏற்படும் சிறு வெளிச்சத்திற்கு சொல்லப்படும். மக்கள் அதற்காகக் கூச்சலிடுவார்கள். மாதத்தின் இரண்டு நாட்களுக்கு 'ஹிலால்' என்று கூறப்படும். அதன்பின் மறுமாதம் வரும் வரை அதை 'ஹிலால்' என கூறமாட்டார்கள். அல்லது மூன்று நாளைக்கு கூறப்படும். பிறகு சந்திரன் எனக் கூறப்படும். அல்லது ஏழு நாட்களுக்குக் கூறப்படும். இந்த கூற்றுகளுக்கு மிகவும் நெருக்கமானது இரவு முழுமையாக வந்தபின் தெரியும் ஹிலாலின் வெளிச்சத்திற்கு 'ஹிலால்' என கூறுவர். மேலும் இது ஏழாவது நாளைத் தவிர நடைபெறாது. அபூஇஸ்ஹாக் என்பவர் கூறுகின்றார் என்னிடம் உள்ளதும், மேலும் அதிகமானோரின் கருத்தும் இரண்டு நாளுக்குரியதை 'ஹிலால்' என கூறுவோம். ஏனெனில் மூன்றாம் நாளில் அது தன் ஒளியை வெளிப்படுத்திவிடும். நூல்: லிஸானுல் அரப்


மேலும், நபி (ஸல்) அவர்களைப் பொருத்தவரை ஜவாமிவுல் கலாம் - அதாவது இரத்தினச் சுருக்கமான வார்த்தைகளைக் கொண்டு மிகப் பெரும் பொருளைத் தெரிவிக்கும் ஆற்றலை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான். மேற்கண்ட முஸன்னஃப் அப்துர்ரஸாக்கின் 7306-வது ஹதீஸை இதற்கு சிறந்ததோர் உதாரணமாகக் கொள்ளலாம்.


அதாவது நபி (ஸல்) அவர்கள் அல்அஹில்லாஹ், மவாகீத், மவாகீத்து லின்னாஸ், லி ருஃயத்திஹி, ஃபஇன்கும்ம அலைக்கும், ஃபக்துரு, ஃபஉத்தூ போன்ற அத்தகைய இரத்தினச் சுருக்கமான சொற்களை பிறைகள் குறித்த ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள். இத்தகைய சொற்களின் உட்பொருளை ஆய்வு செய்தாலே மேற்கண்ட நபிமொழிகள் கூறும் அர்த்தங்களின் ஆழம் புரியும். எனவே அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்து பார்ப்போம்.

4. பிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என்றால் என்ன?

அஹில்லாஹ் (பிறைகள்), மவாகீத்துலின்னாஸ் (மனிதர்களின் நாட்காட்டி) போன்ற சொற்களின் விளக்கம் என்ன? என்பதையும் அறிந்து கொள்வோம். 'ஹிலால்' என்பதின் பன்மைச் சொல்லே 'அஹில்லாஹ்' என்பதாகும். சந்திரனில் ஏற்படும் வடிவ நிலைகளான வளர்ந்து, தேயும் படித்தரங்களே 'அஹில்லாஹ்' எனப்படும். பொதுவாக மாதத்தின் முதல் வாரத்தில் தோன்றும் வளர்பிறை நாட்களிலும், மாதத்தின் இறுதிவாரத்தில் தோன்றும் தேய்பிறை நாட்களிலுமாக குறைந்தபட்சம் மொத்தம் 12 ஹிலால்களை (பிறைகள் - Crescents) ஒவ்வொரு மாதமும் நாம் புறக்கண்களால் பார்க்க முடியும். 'ஹிலால்' (பிறை - Crescent) என்ற அளவு அல்லாத நிலவின் மற்ற வடிவிலான படித்தரங்கள் 'சந்திரன்' என்று பொருள்படும் 'கமர்' என்ற பொதுவான பதத்திற்குள் உள்ளடங்கிவிடும் என்று மொழி ஆய்வாளர்கள் விளக்கியுள்ளதை முன்னர் கண்டோம்.


சில மாதங்களில் மேற்படி வளர்பிறை தேய்பிறை நாட்களின் 7-வது தினத்தில் பிறையானது அரை வட்டமாகவோ அல்லது அரை வட்டத்திற்குச் சற்று நெருக்கமாகவோ காட்சியளிக்கும். எனவே அதை (Crescent) பிறை என்ற பதத்திற்குள் சேர்க்க வியலாது. மாறாக அது (Half Moon) அரை நிலவாகும். எனவே அதை நிலவு என்றே அழைக்க வேண்டும் என்று வாதிக்கலாம். இவ்வாறு வாதிப்பவர்கள் ஹிலால்கள் என்றால் எத்தனை நாட்களுக்குரிய பிறைகள் குறித்து கூறமுடியும்? என்ற அரபு மொழி அகராதிகள் விளக்கியுள்ள பிறையின் மற்ற படித்தரங்களையும் ஒவ்வொரு மாதமும் தவறாது பார்த்தறிந்து வர வேண்டும். பிறந்த பிறையை புறக்கண்களால்தான் பார்க்க வேண்டும் எனக் கூறும் அன்பர்களும், 'ஹிலால்' கமிட்டியினரும், டவுண் காஜிகளும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


'தலைப்பிறை' என்ற பிறையின் ஒரு வடிவநிலையை மட்டும் புறக்கண்களால் பார்த்தால் போதுமானது என்ற கருத்து பிறைகள் விஷயத்தில் அலட்சியப் போக்கோடு இருப்பதையே காட்டும். சந்திரனின் படித்தரங்கள் மனிதகுலத்தின் நாட்காட்டிக்காக அமைக்கப்பட்டுள்ளதை வலியுறுத்தும் அல்குர்ஆனின் வசனங்களை சிந்திக்க மறுப்பது பிறை ஆய்வில் பலவீனமான நிலையையும், இயலாமையை வெளிப்படுத்துவதாகவே அமையும். இனிவரும் காலங்களில் இந்நிலையிலிருந்து மாறி பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் கவனமாக பார்த்தறிந்து குறிப்பொடுத்து வர வேண்டுகிறோம். அவ்வாறு தொடர்ந்து கவனித்து வந்தால் பிறைகள் குறித்து குர்ஆன், சுன்னா வலியுறுத்தும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் முக்கியத்துவத்தை தாங்கள் நிதர்சனமாக உணர்ந்து கொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.


அறிவியல் ரீதியாக சந்திரனின் ஒரு மாத சுழற்சியை 8 முக்கிய நிலைகளாக கீழ்க்கண்டவாறு பிரித்துள்ளார்கள்.


1. சந்திரனின் ஒளி பூமிக்கு வராத நிலை (New Moon – Geocentric Conjunction)

2. வளர்பிறைகளின் நிலை (Waxing crescents)

3. முதல் கால் பகுதி நிலை (First Quarter)

4. முழு நிலவை எதிர் நோக்கி வளரும் நிலை (Waxing Gibbous)

5. முழு நிலவு நிலை (Full Moon)

6. தேய்பிறையை எதிர் நோக்கித் தேயும் நிலை (Waning Gibbous)

7. கடைசி கால் பகுதி நிலை (Last Quarter)

8. தேய் பிறைகளின் நிலை (Waning Cresents)

இருப்பினும் 'அஹில்லாஹ்' என்ற பதத்திற்குள் ஒவ்வொரு நாளும் மாறுபட்டுத் தென்படும் சந்திரனின் அனைத்து படித்தரங்களையும் அருள்மறை குர்ஆன் உள்ளடக்கி பின் வருமாறு கூறுகிறது.


يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ ……. [البقرة : 189]


பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்கு தேதிக்காகவும்(காலண்டர்), இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)


திருமறை குர்ஆனின் மேற்படி வசனம் இந்த 'அஹில்லாஹ்' என்ற பிறைகளின் பல படித்தரங்களின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்குகிறது. 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற வாசகம் உள்ள, நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306) மற்றும் இப்னு ஹூசைமா (1789) வின் ஹதீஸ்கள் மேற்காணும் குர்ஆன் (2:189) வசனத்திலுள்ள வாசகங்களை தாங்கி, அவ்வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்களின் தெளிவுரை போல அமைந்துள்ளதை அறியலாம்.


இதில் 'ஹி' என்ற பதம் எதைக் குறிக்கின்றது என்ற நமது கேள்விக்கு மாற்றுக் கருத்துடையோர் தெளிவான பதில் அளிப்பதில்லை. இந்நிலையில் 'ஹி' என்ற பதத்தை இவர்கள் ஒருமையாக மொழிபெயர்ப்பதற்குக் காரணம் கூறும்போது 'லா தஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால்' என்ற அறிவிப்பில் 'ஹிலால்' என்ற ஒருமை சொல் வந்துள்ளது எனக் கூறுகின்றனர். எனவே 'ஹிலால்' என்ற பதம் வராத அனைத்து ஹதீஸ்களில் நாம் 'ஹிலால்' என்றே விளங்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த வாதம் தவறானதும் அடிப்படையற்றதுமாகும். மேற்படி வாதத்தை பலர் உண்மை என்று நம்பியுள்ளனர்.


ஆனால் மேற்கண்ட ஸூ மூ லி ருஃயத்திஹி என்ற அறிவிப்பில் வரும் ஹி என்ற எழுத்து 'அஹில்லாஹ்' என்ற பிறையின் பல படித்தரங்களைக் குறித்து சொல்லப்பட்ட பன்மைப் பெயரை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கருத்துதான் தப்ஸீர் இப்னு கதீர், தப்ஸீர் தபரீ போன்ற ஆரம்பக்கால குர்ஆன் விரிவுரை கிதாபுகளிலும் உள்ளது. இந்நிலையில் இந்த இடத்தில் கூட மேற்படி அறிஞர்கள் 'பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்' என்று ''பிறை' என்ற ஒருமை அர்த்தத்திலேயே பிரச்சாரம் செய்கின்றனர்.


மஸ்ஜிதுகளில் பயன்படுத்தப்படும் தொழுகையின் கால அட்டவணையின் வாயிலாக 'வக்து அல்லது 'அவ்காத்துஸ்ஸலாஹ்' போன்ற சொற்கள் தொழுகையின் நேரத்தைக் குறிக்கின்றன என்பதை நாம் அறிந்தே வைத்துள்ளோம். அதுபோன்று 'வக்து' என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்த 'மீக்காத்' என்ற பதத்தின் பன்மைச் சொல்தான் தேதிகள் எனப் பொருள்படும் 'மவாகீத்து' என்;ற சொல்லாகும். 'மவாகீத்துலின்னாஸ்' என்பதற்கு 'மக்களுக்குத் தேதிகளைக் காட்டுவது' என்ற பொருளை மேற்கண்ட 2:189 வசனம் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.


மேலும் 'மவாக்கீத்' என்ற சொல்லை விளங்குவதற்காகவே அல்லாஹ் கீழ்க்காணும் வசனங்கள் மூலம் நமக்கு தெளிவு படுத்துகின்றான்.


َوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً.........…الأعراف: 142


மூஸாவிற்கு நாம் முப்பது நாட்களை வாக்களித்தோம். மேலும் அவற்றுடன் பத்து நாட்களை இணைத்தோம். அப்பொழுது அவர் அவருடைய இரட்சகனின் தேதியை நாற்பது நாட்களாக முழுமையாக்கினார். அல்குர்ஆன் (7:142)


وَلَمَّا جَاءَ مُوسَى لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ………)الأعراف : 143(


இன்னும், நாம் நிர்ணயித்த தேதியில் மூஸா வந்தபோது, மேலும் அவருடைய இரட்சகனிடம் அவர் பேசினார். அல்குர்ஆன் (7:143)


َمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ [الواقعة : 50]


அறிவிக்கப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூட்டப்படுவீர்கள். அல்குர்ஆன் (56:50)


ِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا [النبأ : 17]


நிச்சயமாக தீர்ப்பு நாள், தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவே இருக்கிறது. அல்குர்ஆன் (78:17)


َجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَعْلُوم [الشعراء : 38]


அப்போது சூனியக்காரர்கள் குறிப்பிட்ட தேதியில், அறிவிக்கப்பட்ட நாளில் ஒன்று திரட்டப்பட்டார்கள். அல்குர்ஆன் (26:38)


இன்னும் தேய்ந்து வளரும் பிறைகள் மனிதர்களுக்கு எவ்வாறு தேதிகளாக (காலண்டராக) அமையும் என்ற வினாவிற்கு விடை காண்பதும் அவசியமாகும். இதைத்தான் வல்ல அல்லாஹ்,


َالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ [يس : 39]


உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளையைப் போல் திரும்பி வரும் வரை சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம் (36:39) என்று கூறுகிறான்.


அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட படித்தரங்களைஃவடிவநிலைகளைக் கொண்ட பிறைகளை நாம் தொடர்ந்து அவதானித்து வரவேண்டும். அவ்வாறு வரும் வேளையில், ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்றால் இறைவசனம் (36:39) கூறும் 'உர்ஜூஃனில் கதீம்' - உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த பாளை என்ற பிறையின் இறுதி வடிவம் 29-ஆம் நாளன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில் காட்சியளிக்கும். அதுபோல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் எனில், அந்த மாதத்தின் 28-ஆம் நாள் அன்று 'உர்ஜூஃனில் கதீம்' ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில் காட்சியளிக்கும்.


'உர்ஜூஃனில் கதீம்' என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதிப் படித்தரத்திற்கு அடுத்த நாள் புவிமையசங்கம (Geocentric Conjunction Day) தினமாகும். சங்கமம் என்பது ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு தளத்தில் (அல்லது ஒரே நேர்கோட்டில்) தவறாமல் சங்கமிக்கும் தினமாகும். அந்த புவிமைய சங்கம தினத்தில் (Geocentric Conjunction Day) தேய்பிறை அல்லது வளர்பிறையை பொதுவாக பார்க்க முடியாதவாறு புறக்கண்களுக்கு அது மறைக்கப்பட்டிருக்கும். இதற்குத்தான் 'கும்மிய', 'உஃமிய', 'கபி(கு)ய', 'க(பு)ம்மிய', 'ஹஃபிய்ய', 'குபிய' அல்லது 'கும்ம' வுடைய நாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


மேற்சொன்ன கும்மவுடைய நாளுக்கு அடுத்த நாள் சூரியனுக்குப் பின்னால் சந்திரன் கிழக்குத் திசையில் தோன்றி (உதித்து) அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்கு திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். இதுவே முதல் நாளுடைய சந்திரனின் படித்தரமாகும். முதல் நாளுக்குரிய அந்தப் பிறை, அந்த முதல் நாளின் (கிழமையின்) பாதிப் பகுதியை (சுமாராக 12 மணிநேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.


இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சந்திரனில் ஏற்படும் படித்தரங்களான பிறைகளை மவாகீத்துலின்னாஸ் - மக்களுக்குத் தேதிகளை காட்டும் (Calendar For Mankind) என்ற ஒரு சொல்லை வைத்து இந்த உம்மத்திற்கு வலியுறுத்தியதாகும். மேற்கூறிய விபரங்களை நாம் குர்ஆனிலும், பழங்கால குர்ஆன் விரிவுரைகளில் காணலாம்.


وَالشَّمْسِ وَضُحَاهَا (1) وَالْقَمَرِ إِذَا تَلَاهَا (2) وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا (3) وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا (4) (الشمس : 1 – 4) சூரியன் மீதும் அதன் ஒளியின் மீதும் சத்தியமாக! அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக! அதனை வெளியாக்கி விடும் பகலின் மீதும் சத்தியமாக! மூடிக் கொள்ளும் இரவின்மீதும் சத்தியமாக! அல்குர்ஆன் (91:1-4).


تفسير الطبري - (24 / 452) حدثني يعقوب، قال: ثنا هشيم، قال: أخبرنا عبد الملك، عن قيس بن سعد، عن مجاهد، قوله:( وَالْقَمَرِ إِذَا تَلاهَا ) يعني: الشمس إذا تبعها القمر.


மேலும், சந்திரன் மீது சத்தியமாக! அதை அது பின்தொடரும் போது. இதற்குப் பொருள் என்னவென்றால், 'சூரியனை சந்திரன் பின்தொடரும் போது' என்ற விளக்கத்தை முஜாஹித் அவர்கள் தப்ஸீர் தபரியில் கூறுகின்றார்.


حدثنا بشر، قال: ثنا يزيد، قال: ثنا سعيد، عن قتادة( وَالْقَمَرِ إِذَا تَلاهَا ) يتلوها صبيحة الهلال فإذا سقطت الشمس رُؤي الهلال.


விடியக்காலைப் பொழுதில் சூரியனை சந்திரன் பின்தொடரும். சூரியன் அஸ்தமித்த பின் 'ஹிலால்' காட்சியளிக்கும். (மேலும், சந்திரன் மீது சத்தியமாக! அதை அது பின் தொடரும் போது) என மேற்கண்ட வசனத்திற்கு விளக்கத்தை கதாதா அவர்கள் தப்ஸீர் தபரியில் கூறுகின்றார்.


حدثني يونس، قال: أخبرنا ابن وهب، قال: قال ابن زيد، في قول الله:( وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلاهَا ) قال: هذا قسم، والقمر يتلو الشمس نصف

الشهر الأوّل، و تتلوه النصف الآخر، فأما النصف الأوّل فهو يتلوها، وتكون أمامه وهو وراءها، فإذا كان النصف الآخر كان هو أمامها يقدمها، وتليه


هي


'வாவ்' சத்தியத்திற்குரிய வார்த்தையாகும். மேலும் சந்திரன் மாதத்தின் முதல் பாதியில் சூரியனைப் பின்தொடரும். இன்னும் மாதத்தின் கடைசி பாதியில் சந்திரனை சூரியன் பின்தொடரும். ஆயினும் மாதத்தின் முதல் பாதியில் சந்திரன் சூரியனைப் பின் தொடரும். மேலும் சூரியன் சந்திரனிற்கு முன்னிருக்கும், மேலும் சந்திரன் சூரியனிற்கு பின்னிருக்கும். மாதத்தின் கடைசி பாதி ஆகிவிட்டால், சந்திரன் சூரியனுக்கு முன்னால் இருக்கும். சந்திரன் அதை முந்திவிடும். மேலும் சந்திரனை சூரியன் பின்தொடரும் என மேற்கண்ட வசனத்திற்கு விளக்கத்தை இப்னு ஸைத் அவர்கள் தப்ஸீர் தபரியில் கூறுகின்றார்.


Conjunction என்னும் கும்மவுடைய தினத்தில் பொதுவாக பிறை பார்க்க முடியாதவாறு புறக்கண்களுக்கு (Naked Eye) அது மறைக்கப்பட்டிருக்கும் என்ற இஸ்லாம் கூறும் விஞ்ஞான உண்மையை நாம் கூறி வருகிறோம். இதற்கு மாற்று கருத்துடையவர்கள் மாதத்தின் இறுதிநாளான மேற்படி (Conjunction) தினத்தில் பிறை காட்சியளிக்கின்றதா? என்று ஒவ்வொரு மாதமும் கவனிக்கின்றனர்.


அவ்வாறு தொடர்ந்து பார்த்து வந்ததில், அந்நாளில் பிறை தெரியவில்லை என்ற உண்மையை உணர்ந்துள்ளர். இவ்வாறு ஹிஜ்ரிகமிட்டி கூறும் குர்ஆன் சுன்னாவின் கூற்றை ஒவ்வொரு மாதமும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் - இது ஒரு சாரார்.


மற்றொரு சாராரோ, சிலஆண்டுகளில் ஒருசில மாதங்களில் மட்டும், அஸ்திரேலியாவுக்குக் கிழக்கில் புவிமைய சங்கம நாளில் (Geocentric Conjunction Day) ஃபஜ்ர் வேளையில் பிறை தெரிகின்ற வாய்ப்பு இருக்கிறது என்ற இன்டர்நெட் கற்பனை செய்திகளை நம்புகின்றனர்.


மேற்படி இருசாராரும் ஹிஜ்ரிகமிட்டியை பொய்ப்படுத்திட வேண்டும் என்ற தங்களது போக்கை கைவிட்டுவிட்டு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக திறந்த மனதுடன் நம் கருத்துக்களை ஆய்வு செய்ய வேண்டுகிறோம். பிறைகள் குறித்து நமது இஸ்லாமிய மார்க்கம் சொல்வது என்ன? என்பதை முதலில் தெளிவாக அறிந்துகொள்ள முயலுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.


எனவே மேற்கண்ட நபிமொழியில் ஜஃலல்லாஹூ அஹில்லத மவாகீத்து லின்னாஸ் என்பதற்கு அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனிதர்களுக்கு தேதிகளுக்காக (காலண்டராக) அமைத்துள்ளான் என்ற பேருண்மையை அறிய வேண்டுகிறோம். மனிதகுலத்திற்கு இறைவன் வழங்கியுள்ள காலண்டர் வானத்தில் சந்திரனாக தினம் ஒளிவீசிப் பிரகாசிக்கிறது. ஜஃலல்லாஹூ அஹில்லத மவாகீத்து லின்னாஸ் என்ற சொற்றொடரில் இத்தனை விஷயங்கள் பொதிந்துள்ளன என்பதை சுருக்கமாக விளங்கிக் கொள்ளுங்கள்.

5. ருஃயத் (காட்சி) என்றால் என்ன?

'ருஃயத்' என்ற அரபுச்சொல் அன்னளரு பில் அய்ன் (புறப் பார்வை), அன்னளரு பில் கல்ப் (உளப் பார்வை), அன்னளரு பில் அக்ல் (சிந்தனைப் பார்வை) என்ற பரந்து விரிந்த அர்த்தத்தில் கண்ணால், தகவலால், அறிவால், ஆய்வால், கணக்கீட்டால் பிறையின் காட்சியை சிந்தனையுடன் அறிந்து கொள்வது என்ற விரிவான பொருளைத் தரும் சொல் ஆகும்.


'ருஃயத்' என்ற அரபுப்பதம் குர்ஆனில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. மேலும் பிறை சம்பந்தமான மேற்கண்ட ஹதீஸ்களில் 'ருஃயத்' என்ற இப்பதம் 'மஸ்தர்' என்னும் மூலச்சொல்லாகவே வந்துள்ளது. அரபு மொழி விற்பனர்களின் ஏகோபித்த கூற்றுப்படி 'மஸ்தர்' எனும் மூலச் சொற்கள் பெயர்ச் சொல்லாக கையாளப்பட வேண்டும் என்பதால் மேற்படி ஹதீஸில் வினைச் சொல்லாக அதை மொழி பெயர்க்க இயலாது. இந்நிலையில் மேற்படி 'ருஃயத்' என்ற அரபுப்பதத்தை புறக்கண்ணால் மட்டும் பார்ப்பது என்று மொழிபெயர்ப்பது மொழி ரீதியாக கூட பிழையானதாகும். புறக்கண்ணால் மட்டுமே பார்ப்பதற்கு அருள்மறை குர்ஆன் எத்தகைய சொல்லை பயன்படுத்தியுள்ளது? என்ற கேள்வி எழுவது இயற்கை. இதன் விடையை இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள்.


'ருஃயத்' என்ற மேற்படி மூலச்சொல்லுக்கு நாம் 'காட்சி' என்று மொழி பெயர்த்துள்ளோம். இதன் அடிப்படையில் 'அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள்' என்று நாம் இதுவரை விளக்கிவரும் ஹதீஸின் வாசகம் அமையும். 'ருஃயத்' என்ற மேற்படி மூலச்சொல்லுக்கு 'காட்சி' என்ற பொருள்தான் பொருத்தமானது என்பதற்கு கீழ்க்காணும் ஸஹீஹான நபிமொழியை ஆதாரமாக அமைகிறது.


حدثني محمد بن عبد العزيز حدثنا أبو عمر حفص بن ميسرة عن زيد بن أسلم عن عطاء بن يسار عن أبي سعيد الخدري رضي الله عنه : أن أناسا في زمن النبي صلى الله عليه و سلم قالوا يا رسول الله هل نرى ربنا يوم القيامة ؟ قال النبي صلى الله عليه و سلم ( نعم هل تضارون في رؤية الشمس بالظهيرة ضوء ليس فيها سحاب ) . قالوا لا قال ( وهل تضارون في رؤية القمر ليلة البدر ضوء ليس فيها سحاب ) . قالوا لا قال النبي صلى الله عليه و سلم ( ما تضارون في رؤية الله عز و جل يوم القيامة إلا كما تضارون في رؤية أحدهما ……..( صحيح البخاري - (4 / 1671 4305 )


நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், சில மனிதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் மறுமை நாளன்று நமது இரட்சகனை நாம் பார்க்க முடியுமா எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆம்' நண்பகல் நேரத்தில் மேகம் மறைக்காத போது சூரியனுடைய 'காட்சியில்' சிரமம் இருக்குமா? என்று கேட்டனர் அதற்கு மக்கள் இல்லை என்றனர். மேலும் பௌர்ணமி நாளில் முழு நிலவை மேகம் மறைக்காத போது சந்திரனுடைய காட்சியில் சிரமம் இருக்குமா? என்று கேட்டனர் அதற்கும் மக்கள் இல்லை என்றனர். (இவ்வுலகில்) உங்களுக்கு அவைகளில் ஏதேனும் ஒன்றின் 'காட்சியில்' சிரமம் ஏற்படுவது போல் மறுமையில் அல்லாஹ்வின் 'காட்சியில்' எந்த தடங்கலும் ஏற்படாது...

(அறிவித்தவர் : அபூஸைதுல்குத்ரி (ரழி). நூல் : புகாரி).


'ருஃயத் என்ற மூலச்சொல்லுக்கு 'காட்சி' என்று பிரபலமான மேற்படி ஹதீஸை வைத்து நாம் மொழி பெயர்த்துள்ளோம். மேற்கண்ட நபிமொழியில் 'மேகம்' என்பதற்கு 'ஸஹாப்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கும்ம என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. காரணம் கும்ம என்ற சொல் மேகத்தை ஒருபோதும் குறிக்காது. நபி (ஸல்) அவர்கள் காலத்தின் அரபுமொழி வழக்கப்படி 'மேகம்' என்பதற்கு 'ஸஹாப்' மற்றும் 'கமாம்' என்ற சொற்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளதை பல ஹதீஸ்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.


இந்நிலையில், இன்று சர்வசாதாரணமாக மொழி பெயர்க்கப்படுவதைப் போல 'ருஃயத்' என்ற அரபு மூலச்சொல் புறக்கண்ணால் மட்டும் பார்ப்பதை குறிக்காது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். மேலும், 'ருஃயத்' என்ற மூலச்சொல்லில் இருந்து பிறந்த 'ரஆ', 'தரா' போன்ற சொற்கள் திருமறை குர்ஆனில் சுமார் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில வசனங்களுக்குத்தான் புறக்கண்களால் பார்த்தல் என்ற அர்த்தத்தை குறிப்பதாக அமைந்துள்ளன. அதில் பெரும்பாலான வசனங்கள் தகவலால், அறிவால், ஆய்வால் அறிந்து கொள்வதையே குறிக்கின்றன. (பார்க்க 105:1, 37:102, 2:243,246,258,260, 3:23, 4:44,49, 51,60,77, 14:9,24,28, 19:83, 22:18, 63,65, 24:41,43, 25:45, 26:225). எனவே 'ருஃயத்' என்ற அரபு மூலச்சொல்லை 'புறக்கண்ணால் பார்ப்பது' என்ற குறுகிய வட்டத்திற்குள் கட்டுப்படுத்திடக் கூடாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.


'ருஃயத்' என்ற அரபுச்சொல்

• அன்னளரு பில் அய்ன் (புறப் பார்வை),

• அன்னளரு பில் கல்ப் (உளப் பார்வை),

• அன்னளரு பில் அக்ல் (சிந்தனைப் பார்வை)

என்ற பரந்துவிரிந்த அர்த்தத்தில் கண்ணால், தகவலால், அறிவால், ஆய்வால், கணக்கீட்டால் பிறையின் காட்சியை சிந்தனையுடன் அறிந்து கொள்வது என்ற விரிவான பொருளைத் தரும் என்று நாம் கூறிவருகிறோம். அதேபோல் 'நளர்' என்ற சொல்லும் கவனித்து, சிந்தித்து, ஆய்வுசெய்து, அறிந்து என்பது போன்ற பொருள்களை தரும் என்பதையும் 2:280, 6:46, 37:88, 43:66, 47:20, 59:18, 86:5 ஆகிய அல்குர்ஆன் வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம். அல்குர்ஆனின் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வசனங்கள் மூலம் நமது கருத்தே சரியானது என்பது இன்னும் வலுப்பெறுகின்றது.


மேலும், பார்வை என்றாலே சிந்தனையுடன், அறிவுடன் பார்ப்பது என்பதே உண்மையான அர்த்தமாகும். நாம் ஒருவரிடம் ஒரு விஷயத்தை பார்த்துக்கொள் என்று கூறினாலேயே அதில் அறிவார்ந்து பார்ப்பதைத்தான் அது குறிக்கும். பாதையில் முள் கிடக்கிறது பார்த்து வாருங்கள் என ஒருவரிடம் கூறினால், அவர் அதை பார்த்து கொண்டே அதன் மேல் தனது கால்களால் மிதித்து வந்தால், அவரை நாம் புத்தி பேதலித்தவர் என்றுதான் கூறுவோம். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களின் பார்வைதான் சிந்திக்காத வெறும் பார்வையாக மட்டும் இருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.


ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பாருங்கள் என்கிறோம். மாப்பிள்ளை பாருங்கள் என்றால் வெறுமனே மாப்பிள்ளையை பார்த்துவிட்டு வருவதல்ல. மாறாக அந்த இளைஞனின் மார்க்க அறிவு என்ன? அவருடைய ஒழுக்க நிலைகள் என்ன? அவர் என்ன படித்திருக்கிறார்? என்ன வேலை செய்கிறார்? போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் அறிவதாகும். அதுபோலத்தான் பிறையைப் பார்ப்பது என்பது அதன் கோணவிகிதம், அது காட்டும் தேதி, அது அமைந்திருக்கும் இடம் ஆகியவற்றை நாம் ஆய்ந்து அறிந்து சிந்தனையுடன் பார்ப்பதே ஆகும்.


ஒரு வாதத்திற்காக மாற்றுக் கருத்துடையோர் சொல்வதுபோல 'ருஃயத்' என்பதற்கு பார்த்தல் என்று பொருள் கொண்டல்கூட, சிந்தனையோடு கூடிய பார்வையைத்தான் இஸ்லாம் இந்த பிறை விஷயத்தில் கூறுகின்றது. 'ருஃயத்' என்றால் புறக்கண்ணால் மட்டும் பார்த்தல் என்ற பொருள் மிகவும் பிழையானது. இதை அறிந்து கொள்ள குர்ஆனில் உள்ள 'ருஃயத்' என்ற மூல சொல்லில் இருந்து பிறந்த ''ரஆ', 'தரா', 'யரா', 'யரவ்' உட்பட அனைத்து பதங்களும் கையாளப்பட்டுள்ளதை வைத்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.


'ருஃயத்' என்றால் வெறும் கண்களால் பார்ப்பதை மட்டும் குறிக்காது. இதற்கு மேலும் சிறந்த உதாரணமாக, யானைப்படைக் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1) என்று கஃபாவை அழிக்க வந்த அப்ரஹா என்பவனின் வரலாற்றை இறைவன் நபி (ஸல்) அவர்களுக்குக் கூறுகிறான். அதுபோல ஆது கூட்டத்தைப் பற்றி கூறும்போது, உம்முடைய இறைவன் ஆது கூட்டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6) என்றும் கேட்கிறான்.


'அலம்தர' என்று துவங்கும் இவ்விரு வசனங்களிலும் வல்ல இறைவன் 'தரா' என்ற சொல்லை பயன்படுத்துகிறான். இச்சொல்லுக்கு கண்ணால் பார்த்தல் என்ற பொருள் இருந்தாலும், நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி வல்ல அல்லாஹ் தனது தூதருக்கு தகவல் அளிக்கிறான் என்றே நாம் பொருள் கொள்கிறோம். இதைவிடுத்து நீர் பார்க்கவில்லையா? என்ற மொழிபெயர்ப்பை வைத்து நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு பல ஆண்டு காலங்கள் முன்னரே ஏற்பட்ட அச்சம்பவங்களை தங்கள் புறக்கண்களால் நபி (ஸல்) பார்த்தார்கள் என்று பொருள் கொள்வது தவறாகும். அப்படி பொருள் கொள்வது அறிவுடைமையாகாது என்பதை நாம் நன்கு விளங்கியுள்ளோம்.


மேலும் திருமறை குர்ஆனின் சூரத்துல் ஹஜ் அத்தியாயத்தின் 27-வது வசனத்தில் ''ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் வெகு தொலைவிலிருந்து நடந்தும், மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்'' என்று மெலிந்த ஒட்டகத்தைக் குறிப்பிட்டே அல்லாஹ் விவரிக்கின்றான். இன்றைய சூழ்நிலையில் ஹஜ்ஜிற்;கு எவரும் ஒட்டகத்தில் செல்வதில்லை. விதவிதமான வாகனங்களில் செல்கின்றனர். 'மெலிந்த ஒட்டகம்' என்ற சொல் ஒட்டகம் அல்லாத வேறு பொருளைத் தராது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேற்கண்ட வசனத்தை வைத்துக்கொண்டு மெலிந்த ஒட்டகத்தில் சென்று ஹஜ்ஜூ செய்தால்தான் ஹஜ் நிறைவேறும் என்று சொன்னால் எவ்வளவு பிழையானதோ அதேபோன்றுதான் பிறைவிஷயத்தில், ருஃயத் என்ற சொல்லை தவறாக விளங்கி அதையே பிடித்துக்கொண்டு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்று சொல்வதும் மிகவும் தவறானதாகும்.


காரணம் 'ருஃயத்' என்ற சொல்லிலிருந்து பிறந்ததுதான் 'ரஆ' என்ற அரபுச் சொல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமறை குர்ஆனில் வல்ல இறைவன் 'ரஆ' என்ற சொல்லை பல இடங்களில் பயன்படுத்துகிறான். இச்சொல்லுக்கு கண்ணால், தகவலால், அறிவால், ஆய்வால் அறிந்து கொள்வது என்ற பரந்த அர்த்தங்களிலேயே நாம் விளங்குகிறோம். புறக்கண்ணால் பார்த்தல் என்ற ஒரு பொருளில் மட்டும் நாம் புரிந்து கொள்வதில்லை.


இதற்கு உதாரணமாக நபி இபுராஹிம் (அலை) அவர்கள், தமது மகனான நபி இஸ்மாயில் (அலை) அவர்களோடு உரையாடிய நிகழ்வை திருமறை குர்ஆன் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது.


பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார். '''என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!'' (மகன்) கூறினார்;, '''என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்'' (அல்குர்ஆன் 37:102).


மேற்படி வசனத்தில் இடம்பெறும் இன்னீ அராஃபில் மனாமி – நான் கனவில் கண்டேன் என்ற வார்த்தையும், ஃபன்ளுர் மாதா தரா- உன் கருத்து என்ன என்ற வார்த்தையையும் கவனிக்க வேண்டும். இந்த இறைவசனத்தில் 'ருஃயத்' என்ற மூலச்சொல்லிலிருந்து பிறந்த 'தரா' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கும் 'தரா' என்ற சொல் புறக்கண்ணால் பார்த்தல் என்ற கருத்தில் வரவில்லை. மாறாக, 'கனவு', 'கருத்தை அறிவது' போன்ற பொருளில் வந்துள்ளதை காண்கிறோம்.


இன்னும் பத்ருகளம் பற்றிய நிகழ்வை திருமறை குர்ஆன் (3:13) விவரிக்கும்போது 'ரஃயல்அய்ன்' என்ற சொல்லை புறக்கண்ணால் பார்த்தல் என்பதற்கு வல்ல அல்லாஹ் பயன்படுத்துகிறான்.


(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது. ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது. பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது. நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர். இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான். நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. அல்குர்ஆன் (3:13)


மேற்படி வசனத்தில் இடம்பெறும் 'ரஃயல்அய்ன்' அதாவது 'புறக்கண்ணால் பார்த்தல்' என்ற இச்சொல் பிறை சம்பந்தமாக வரும் எந்த ரிவாயத்திலும் இடம் பெறவில்லை. இந்த பேருண்மையையும் இங்கு சுட்டிக் காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும். ஒரு விஷயத்தை புறக்கண்ணால் மட்டுமே பார்ப்பதற்கு அருள்மறை குர்ஆன் எத்தகைய சொல்லை பயன்படுத்தியுள்ளது? என்று சற்று முன்னர் உங்களுக்கு எழுந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கும்.


எனவே ருஃயத் என்ற அரபு மூலச் சொல்லை தவறாகப் புரிந்து கொண்டு

பிறையை புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்றோ

புறக்கண்ணால்தான் பிறையைப் பார்க்க வேண்டும் என்றோ

பிறை பார்க்கப்பட்ட பின்னர்தான் புதிய மாதத்தை துவங்க வேண்டும் என்றோ பிரச்சாரம் மிகவும் தவறானதாகும்.


நபி (ஸல்) அவர்கள் தொழுகை நேரங்களை சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்ணால் பார்த்தே முடிவு செய்தார்கள். அப்படியானால் அன்று அவர்கள் செய்ததைப் போலவே இன்றும் நாமும் நமது தொழுகை நேரங்களை முடிவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எழுவது இயற்கை. இருப்பினும் நம்மில் எவரும் சூரியனால் ஏற்படும் நிழலின் அளவைப் புறக்கண்களால் பார்த்து தொழுகை நேரங்களை முடிவு செய்வதில்லை. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சூரியனை மையமாக வைத்து பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு ஏற்படுத்தப்பட்ட கடிகார நேரங்களைப் பார்த்தும், முற்கூட்டியே கணக்கிடப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணையையே நாம் நடைமுறை படுத்துகிறோம். இவ்வாறு தொழுகை நேர அட்டவணையைப் பின்பற்றுவது நபிவழிக்கு முரண்பாடாகும் என்று யாரும் பிரச்சாரம் செய்வதில்லை. இன்னும் நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்காக தொழுகையின் வக்துகளை அறிந்துகொள்ள சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்களால்; பார்த்துதான் தொழுகை நேரத்தைக் கணக்கிட்டார்கள். எனவே தொழுகை நேரங்களை அறிந்துகொள்வதற்கு சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்களால்; பார்ப்பது கட்டாய விதியாகும் என்று நம்மில் எவரும் விவாதிப்பதில்லை.


காரணம் எவ்வித விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் வாழ்ந்தார்கள். அன்றைய காலத்தில் தொழுகை நேரங்களை ஒரு குச்சியை நிலத்தில் நட்டி, அதன் நிழல்விழும் அளவை வைத்து முடிவு செய்யும் ஒரே வழிதான் அன்று இருந்தது. நபி (ஸல்) அவர்களின் காலம் சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்களால்; பார்த்து தொழுகை நேரங்களை முடிவுசெய்யும் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலம் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். அதனால் தொழுகையின் வக்திற்காக சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்களால்; பார்ப்பது மார்க்கக் கடமையில்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் நாட்களை (தேதியை) முடிவுசெய்வதற்கு மட்டும் பிறையை புறக்கண்களால் பார்த்தே ஆகவேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.


இந்நிலையில், மேற்படி அறிஞர்களிடம் பிறை கணக்கை எதிர்க்கும் நீங்கள், சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து கணக்கிடுடப்பட்டுள்ள தொழுகை கால அட்டவணையை மட்டும் ஏன் ஆட்சேபனை செய்யாமல் பின்பற்றி வருகீறீர்கள்? என்று நாம் கேட்கிறோம். நமது கேள்விக்கு கீழ்க்கண்டவாறு அவர்கள் விடையளிக்கின்றனர். அதாவது ''சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின்தான் நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை என்றும் மேகமூட்டமான நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மஃரிபு தொழுங்கள் இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதை கருதிக்கொள்ளுங்கள் என சூரியன் குறித்து நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. ஆனால் பிறைக்குதான் இந்த நிபந்தனையை கூறினார்கள். மேகமூட்டமாக இருந்தால் 30-ஆக பூர்த்தி செய்யுங்கள் என்ற அளவுகோல் பிறைக்குத்தான் உள்ளது'' என்கின்றனர்.


சூரியன் விஷயத்தில் இவர்களின் கருத்தை ஒரு வாதத்திற்காக சரி என்று வைத்துக் கொண்டாலும்;, துல்லியமான சூரிய கணக்கீட்டையும், தொழுகை அட்டவணையையும் தொழுகை நேரத்திற்கு ஒப்புக்கொண்டது, நபி(ஸல்) அவர்களின் நேரடி வழிகாட்டுதலான சூரியனின் வெளிச்சத்தால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து நேரத்தை கணக்கிடவேண்டும் என்பதற்கு எதிரானது அல்லவா? மேற்படி மாற்றுக் கருத்துடையோர் கருத்துப்படி தொழுகை அட்டவணையை நபி (ஸல்) அவர்கள் பின்பற்ற வில்லையே. பிறை விஷயத்தில் கூட மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்ற கருத்தும் நபி(ஸல்) அவர்களின் எந்த வழிகாட்டுதலிலும் இல்லை என்பதே உண்மை.


இன்னும் நோன்பு துறக்கும் நேரத்தைக் (வக்த்) குறித்து கூறும்போது நபி (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை சுட்டிக்காட்டி 'இங்கிருந்து இரவு வருவதைக் கவனித்தால்' (ஃபஇதா ரஅய்துமுல் லைல) நீங்கள் நோன்பைத் துறந்து விடுங்கள் (புகாரி) என்று கூறியுள்ளார்கள். மேற்படி ஹதீஸ் வாசத்தில் இடம்பெறும் 'ரஅய்த்தும்' என்ற சொல்லுக்கு 'கண்ணால் காணுதல்' என்று பொருள் கொள்வதில்லை. மேலும் மஃரிபு வேளையில் கிழக்குத் திசை நோக்கி நின்று கொண்டு இரவு வருகிறதா என்று பார்ப்பதுமில்லை. மாறாக கடிகாரத்தை வைத்து முற்கூட்டியே கணக்கிட்டும், நேரத்தைத் துல்லியமாக அறிந்தும் நோன்பை துறந்து (இஃப்தார்) விடுகிறோம். அப்படியானால் நோன்பு துறக்கும் விஷயத்தில் ஏன் இந்த இரட்டை நிலை?


அதுபோல ' ஸல்லூ கமாரஅய்த்துமூனி உஸல்லீ ' - صلوا كما رأيتموني أصلي– என்னுடைய தொழுகையை நீங்கள் எவ்வாறு கவனித்தீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளை. இதை நாம் அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம். இதை மொழி பெயர்ப்பாளர்கள் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள் என்று பெரும்பாலும் மொழி பெயர்த்துள்ளனர். இதில் என்னுடைய தொழுகையை நீங்கள் எவ்வாறு கவனித்தீர்களோ அல்லது என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ போன்ற மொழிபெயர்ப்பின் வாக்கியத்தில் கண்டீர்களோ அல்லது கவனித்தீர்களோ என்ற சொல் இடம்பெறுகிறது. இந்த சொல்லை வைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதை புறக்கண்களால் பார்த்தவர்கள் மட்டும் தொழுதால் போதுமானதாகும் என்று யாரேனும் வாதம் வைத்தால் அது சரியாகுமா?. இன்னும் நபி (ஸல்) அவர்கள் தொழுவதைப் பார்த்து தொழுதுவிட்ட ஸஹாபாக்கள் சொன்னதைக் கேட்டு முஸ்லிம்களாகிய நாம் இன்றும் தொழுது வருவது எப்படி சரியாகும்? என்று இவர்கள் பாணியில் யாரேனும் கேள்வி எழுப்பினால் இவர்களின் பதில் என்னவாக இருக்கும்.


இன்னும் லி ருஃயத்திஹி என்பதில் ' லி ' என்பதற்கு பரந்த பொருள் இருந்தாலும் இவ்விடத்தில் 'அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு' என்ற பொருள் இந்த ஹதீஸில் கையாளப்பட்டுள்ளது. அதாவது தொழுகை நேரங்களை சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து அளவிடுவதைப் போல நாட்களை அளவிட சந்திரனின் 'அஹில்லாஹ்' (படித்தரங்கள்)தான் கையாளப்பட வேண்டும் என்பதாகும்.


நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொழுகை நேரங்களை சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை கண்களால் பார்த்து முடிவு செய்ததை சற்று முன்னர் படித்தோம். அதுபோல, மாதம் பிறந்ததை அறிந்து கொள்ள அன்றிருந்த ஒரேவழி பிறைகளைப் புறக்கண்களால் பார்ப்பதுதான். பிறைகளின் நிலைகளை அறிந்தும், தேதிகளை அமைத்துக் கொண்டு பின்பற்றும் ஒரு நிலை மட்டும்தான் அக்காலத்தில் இருந்தது. அவ்வாறு தேதியை அறிந்து கொண்டு மாதங்களைத் துவங்குவது எல்லா மாதத்திற்கும் உரிய ஒரு செயலாகவே அன்று இருந்து வந்தது. தற்போது மாற்றுக்கருத்தினர் கூறுவதைப் போல பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்து மாதத்தை ஆரம்பிப்பது என்பது ரமழான் மாதத்தின் அசலான (பர்ளு) கடமைகளுள் உட்பட்டதல்ல. தமிழக டவுண்காஜிகளும், ஹிலால் கமிட்டி உலமாக்களும் இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பில் இருக்கின்றனர்.


இதை மறுத்து பிறந்த பிறையைப் புறக்கண்களால் மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் பார்த்து ரமழான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். அதுதான் மார்க்க கடமை என்று இன்னும் அவர்கள் கூறினால் அதற்கான தெளிவான ஆதாரங்களைத் தரவேண்டும். தங்களின் சுயகருத்தை வைத்து விளங்கங்கள் அளிக்காமல் நேரடியான குர்ஆன் வசனங்களிலிருந்தும், ஸஹீஹான ஹதீஸிலிருந்தும் ஆதாரங்களை நமக்கு அவர்கள் காட்ட வேண்டும். பிறைகள் விஷயத்தில் ஹிஜ்ரி கமிட்டியின் நிலைப்பாட்டை தவறெனக் கருதும் மாற்றுக் கருத்தினர் அவர்களது கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இதையே தலைப்பாக வைத்து தங்களுடைய இணையதளங்களிலே எழுத்துப்பூர்வமாக மக்கள் அறியும் வண்ணம் தங்கள் ஆதாரங்களை பதிவு செய்யட்டும்.


ரமழான் துவக்கத்தையும், இரு பெருநாள் தினங்களையும் தீர்மானிக்க பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது, நமது மார்க்கம் கட்டளையிட்டுள்ள முக்கியக் கடமை என்று மாற்றுக் கருத்தினர் நம்பியுள்ளனர். அவ்வாறு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது கடமை என்றால்,

நபி (ஸல்) அவர்களும் பிறந்த பிறையை தமது கண்களால் அவசியமாகப் பார்த்திருப்பார்கள்.

தமது மனைவிமார்களுக்கும், தோழர்களுக்கும் பிறந்த பிறையைப் புறக்கண்களால் மேற்கு திசையில் மஃரிபு நேரத்தில் சென்று பார்க்கும்படி கட்டளை இட்டிருப்பார்கள்.

பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்து வருவது முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று நிச்சயமாக கட்டளை இட்டிருப்பார்கள்.


ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவற்றில் எதையுமே செய்யவில்லை. மாறாக அவர்கள் சந்திரனில் ஏற்படும் அனைத்து படித்தரங்களின் காட்சியையும் அவதானித்து மாதத்தை முடிவு செய்து வந்தார்கள். நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306), ஸஹீஹ் இப்னு ஹூசைமா (1789) வின் ஹதீஸ்கள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.


மேலும் நபி (ஸல்) அவர்கள் எந்தெந்த நாட்களில்? எந்தெந்த நேரங்களில்? எந்தத் திசையில்? இன்று இவர்கள் கூறுவது போல் பிறையைத் தேடினார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். மாற்றுக் கருத்தினரின் கூற்றுப்படி 29-வது நாளின் பின்னேரம் 30-வது நாளின் இரவு என்ற அந்தநாளில், மஃரிபு நேரத்தில், மேற்குத் திசையில் பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பதற்கு சிறு விபரங்கள் கூட ஹதீஸ்களில் காணப்படவில்லை. இதையும் உங்கள் கவனத்திற்கு சுட்டிக்காட்டுகிறோம்.


ஆக 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்று பிறை தொடர்பாக வரும் இந்த சொற்றொடரில் 'ருஃயத்' என்ற அரபு மூலச்சொல்லுக்கு மாற்றுக் கருத்தினரின் வாதப்படி 'புறக்கண்ணால் பார்த்தல்' என்று ஒரு பொருளை மட்டும் கொள்ளவே முடியாது. மாறாக அஹில்லாக்களின் (பிறையின் படித்தரங்களின்) காட்சிகளை கொண்டு சிந்தித்து அறிதல் என்ற பொருள் உட்பட மேற்கூறப்பட்ட தகவலால், அறிவால், ஆய்வால், கணக்கீட்டால் அறிந்து கொள்வது என்ற பரந்த அர்த்தங்களையே இந்நபிமொழி தெளிவாக உணர்த்துகின்றது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.


குர்ஆனும் சுன்னாவும் நவீன அறிவியலோடு எவ்வாறெல்லாம் ஒத்துப்போகின்றன?

பிறைகளின் படித்தரங்கள் மனிதர்களுக்கு எவ்வாறு நாட்காட்டியாக அமையும்?

பூமியில் ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும் பகுதிகளில் எவ்வாறு தொழுகை நேரங்களைக் கணக்கிட வேண்டும்?


இவை போன்ற ஆய்வுகளை அரபு மொழி மதரஸாவில் பயிலும் மாணவர்களுக்குப் படித்துக் கொடுப்பதில்லை. மேற்படி கல்வி முறையிலிருந்து உருவாகும் மாணவர்களால் விண்ணியல் குறித்து குர்ஆன் சுன்னா கூறுவதென்ன? என்பதை அவர்களால் புரிந்து கொள்ளவும் இயலவில்லை. இதனால்தான் இப்பிறை பிரச்சனைக்கு இந்த நூற்றாண்டுவரை எத்தகைய தீர்வுகளைகளையும் உலமாக்களால் தர முடியவில்லை. இது ஒரு வேதனையான விஷயமாகும். எனவே பிறைகள் குறித்து குர்ஆன், சுன்னா அடிப்படையில் நவீன அறிவியலோடு ஆய்வு செய்து கூறப்படும் விஷயங்களை குறிப்பு எடுத்துக் கொண்டு தொடர்ந்து இறுதிவரை படித்தறிந்து, மேற்படி உலமாக்களுக்கும் விளக்கிட வேண்டுகிறோம்.

6. மேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றியமைக்குமா?

ஃபஇன்கும்ம அலைக்கும் (உங்களுக்கு மறைக்கப்படும்போது) என்பதின் பொருள் என்ன? என்பதை இந்த பகுதியில் விரிவாக காண்போம். நபிமொழிகளில் இடம்பெறும் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற வாக்கியத்திலுள்ள கும்ம என்ற சொல்லுக்கு 'மேகமூட்டம்' என்று சிலர் மொழிபெயர்க்கிறார்கள். இது மிகவும் தவறான மொழிபெயர்ப்பாகும். அதாவது 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை 30 தினங்களாக மாற்றும் சக்தி மேகமூட்டத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதைப் போல உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று சர்வ சாதாரணமாக பிரச்சாரமும் செய்கின்றார்கள். அரபு மொழி அறிஞர்கள் எனப்படுவோர் பிறை குறித்து பேசும்போது சற்று எச்சரிக்கையோடும், நிதானத்தோடும் நடந்து கொள்ள வேண்டுகிறோம். அல்லாஹ் அவர்களுக்கு மார்க்க அறிவில் அபிவிருத்தி செய்வானாக, பிறைகள் விஷயத்தில் தெளிவை அளிப்பானாக என்று அவர்களுக்காக பிராத்திக்கிறோம்.


ஒவ்வொரு மாதத்தின் இறுதிவாரத்தில் ஏற்படும் தேய்பிறைகள் அனைத்தும், புறக்கண்களுக்கு ஃபஜ்ர் வேளையில் கிழக்குத் திசையில்தான் தெரியும். பிறைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் இதை அறிந்திருப்பர். நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையும் இதுவே. இந்நிலையில் மாதத்தின் 29-ஆம் நாளன்று மஃரிபு வேளையில் பிறை மேற்குத் திசையில் தெரியும் என்று மேற்படி அறிஞர்களுக்கு சொன்னது யார்? எந்த ஆதாரத்தை வைத்து மக்களிடம் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள்? இக்கேள்விகளுக்கு மாற்றுக் கருத்துடைய அரபுமொழி புலமை பேசும் அவ்அறிஞர்கள்தாம் பதில் தரவேண்டும்.


இன்னும் மாதத்தின் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத் தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்றால் என்ன செய்வது? அந்த மாதத்தை இருபத்து ஒன்பது நாட்களோடு நிறுத்திக் கொள்வதா? அல்லது முப்பது நாட்களாக பூர்த்தி செய்வதா? உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்ற ஹதீஸ் வாசகத்தை வைத்து எப்படி சட்டம் எடுப்பது? போன்ற கேள்விகளுக்கும் அவர்கள் பதில்சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.


நாங்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பிறந்த பிறையைத் தேடிப்பார்ப்போம் என்று பதில் சொல்வார்களேயானால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் இவர்கள் சொல்லும் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்று வைத்துக் கொண்டு நமது கேள்வியை சற்று சிந்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


இன்னும் மேகமூட்டம் மட்டும்தான் ஒருவர் பிறை பார்ப்பதை மறைக்குமா?

• கடும் சூறைக்காற்றால் ஏற்படும் மாசுகள்,

• புளுதிப் புயல் போன்றவற்றால் ஏற்படும் தூசிதுகள்கள்,

• புகை மூட்டம்,

• பனிப்பொழிவுகள்,

• அதிகமான வெளிச்சம்,

• பார்வைக் கோளாறு போன்ற காரணங்களாலும் பிறை நம் புறக்கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படும் வாய்ப்புள்ளதே அப்போது என்ன செய்வது? அவர்கள் கருத்துப்படி 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு மேகமூட்டமாக இருந்தால் மட்டும்தானே மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யமுடியும்?. நபி (ஸல்) அவர்கள் மேகத்தை குறித்து இங்கு குறிப்பிடவில்லை என்பது தான் உண்மையான விளக்கமாகும்.


இல்லை இல்லை 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற வார்த்தை தூசி, புகைமூட்டம், வெளிச்சம், பார்வை கோளாறு, பனிப்பொழிவு என்பன போன்ற அனைத்து காரணங்களுக்கும் பொருந்தும் என்று இவர்கள் தற்போது ஒப்புக்கொள்ளத் தயாரா? அப்படி ஒப்புக் கொள்வதாக இருந்தால், 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு 'மேகமூட்டம்' என்று நாங்கள் தவறான விளக்கம் அளித்துவிட்டோம் மக்களிடம் அறிவிக்க தயாரா? 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற வார்த்தை மேற்சொன்ன அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும் என்றும் மக்கள் மத்தியில் அவர்கள் சொல்லட்டும். தாங்களாகவே முன்வந்து பகிரங்கமாக இதை ஒப்புக்கொள்ளுமாறு மேற்படி அறிஞர்களை வேண்டுகிறோம்.


நபி (ஸல்) அவர்கள் காலத்தின் அரபுமொழி வழக்கப்படி மேகம் என்பதற்கு 'ஸஹாப்' மற்றும் 'கமாம்' என்ற சொற்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளதை முன்னர் தெரிவித்தோம். இந்நிலையில் மாதம் 29 நாட்களை கொண்டதாக இருந்தால் 29-வது நாளில் பொதுவாக பிறை புறக்கண்களுக்குத் தெரிவதில்லை. அதுபோல மாதம் 30 நாட்களை கொண்டதாக இருந்தால் அந்த 30-வது நாளில் நாளில் பொதுவாக பிறை புறக்கண்களுக்குத் தெரிவதில்லை. இவ்வாறு சந்திர மாதத்தின் இறுதி நாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் மறைக்கப்படுகின்றதே அதற்கு அரபு மொழியில் எப்படி சொல்ல வேண்டும்? அந்த நாள் எதைக் குறிக்கிறது? அந்த நாள் சந்திர மாதத்தின் இறுதிநாளா இல்லையா? இவற்றை இந்த அரபு மொழி புலமை பேசும் அவ்வறிஞர்கள் மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.


சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன (அல்குர்ஆன் 55:5)


அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்;. பகலை இரவில் புகுத்துகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான். இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் (அல்குர்ஆன் 35:13)


மேற்கண்ட இரு வசனங்களையும் சற்று நிதானமாக சிந்தியுங்கள். திட்டமிட்ட துல்லியமான கணக்கின்படி இயங்கும் சூரியனும், சந்திரனும் தனது அதிகாரத்தில் இருப்பதாக வல்ல அல்லாஹ் கூறுகிறான். மேற்படி சந்திரன் மக்களுக்குத் தேதியைக் காட்டும் என்றும் (2:189) வல்ல அல்லாஹ் கூறுகிறான். இன்னும் இன்னென்ன மாதத்திற்கு இத்தனை இத்தனை நாட்களே என்று அல்லாஹ் தனது பதிவுப் புத்தகத்தில் என்றோ விதியாக்கி விட்டான் (அல்குர்ஆன் 9:36) வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து அல்லாஹ் இதை விதியாக்கிவிட்ட நிலையில், மேகமூட்டத்தைக் காரணம் காட்டிக் கொண்டு 29-நாட்கள் கொண்ட மாதத்தை 30-நாட்களாக மாற்ற முடியுமா? இன்னும் மாநிலப்பிறை, தேசியப் பிறை மற்றும் சர்வதேசப்பிறை என்று அவரவரவர்கனள் தத்தமது விருப்பப்படி ஒரு மாதத்திற்குரிய தேதிகளை மாற்றி மாற்றி அமைத்துக் கொள்வது சரிதானா?




இன்னும் 29-வது நாளில் மேகமூட்டமாக இருந்தால் அந்த மாதத்தை 30 நாட்களாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற கருத்தை சரிகாணும் ஒருவர் பிறை ஓர் விளக்கம் என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டு தான் அறிவார்ந்த ரீதியில் வாதிப்பதாக நினைத்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். அதாவது


(மதீனாவைச் சுற்றிலும் உஹது போன்ற பெரும் மலைகள் இருந்தன. அம்மலைகளின் உச்சியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. அப்படியிருந்தும் மேகமூட்டம் ஏற்படும் நாட்களில் பிறை தென்படுகிறதா என்று மலையின் மீது ஏறித் தேடிப் பார்க்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கட்டளையும் இடவில்லை ஆர்வமூட்டவுமில்லை. மேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று எளிமையான தீர்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள். பிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று கூறி பிறை பார்க்க வேண்டியதன் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி விட்டார்கள். ஒவ்வொரு பகுதியிலும் பிறை காணப்பட வேண்டும். காணப்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது. காணப்படாவிட்டால் அம்மாதத்திற்கு முப்பது நாட்களாகும் என்பது எவ்வளவு தெளிவான சட்டம். மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.)


இவ்வாறு 'ஃபஇன் கும்ம அலைக்கும் என்பதற்கு மேகமூட்டமாக இருந்தால் என்று தவறாக பிரச்சாரம் செய்பவர்களை நாம் பரிகசிக்கவில்லை மாறாக அவர்கள் மீது பரிதாபப்படுகிறோம். காரணம் நம் சமுதாயம் நன்கு படிப்பு ஏறும் மாணவர்களை இவ்வுலக செல்வங்களை திரட்டும் நோக்கில் இவ்வுலகக் கல்வியை மட்டும் படிக்க வைத்து மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக்கி அழகு பார்க்கிறது. அதேவேளையில் படிப்பில் ஆர்வமில்லாத சராசரி மாணவர்களைத்தான் அவர்கள் பெற்றோர்கள் அரபு மொழியை பயிற்றுவிக்கும் (இலவச) மதரஸாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் அவர்கள் அரபு மொழியைக்கூட அங்கு சரியாக படிக்காத நிலையில் வெளிவந்தாலும், மக்கள் இவர்களை இஸ்லாமிய மார்க்கக் கல்வியை பரிபூரணமாக படித்து வந்துவிட்டனர் என நம்புகின்றனர். மேலும் அவர்களை சமுதாயத்தில் 'ஆலிம்கள்' என்றும் அறிமுகப்படுத்தி அவர்கள் மார்க்கம் என்று எதைக் கூறினாலும் கண்மூடி ஏற்றும் செயல்படுகின்றனர். அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது. இங்கு நாம் அனைத்து உலமாக்களையும் குறிப்பிடவில்லை. ஆலிம்களில் பெரும்பான்மையினர் நிலை இவ்வாறுதான் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.


மேகமூட்டமாக இருந்தால் சில்வர் அயோடைடு (Silver Iodide) போன்ற இரசாயனங்களைப் பயன்படுத்தி அம்மேகக் கூட்டத்திலிருந்து செயற்கை மழையைப் பொழியச் செய்யும் அறிவியல் யுகத்தில் நாம் வாழ்கிறோம். அம்மேகங்களை கலைத்துவிடும் இத்தகைய விஞ்ஞான வளர்ச்சிகள் பற்றிய பாடங்களையும் அரபு மதரஸாக்களில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இத்தகைய விஞ்ஞான உண்மைகள் பற்றியும் அறிந்திருந்தால் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு 'மேகமூட்டம் என்று நம் மதரஸாக்கள் உருவாக்கிய ஆலிம்கள் தவறாக மொழிபெயர்த்திருக்க மாட்டார்கள். எனவேதான் அவர்கள் மீது நாம் கோபம் அடையவில்லை மாறாக அனுதாபப் படுகிறோம்.


காரணம் இந்த சுயநல உலகில், மார்க்கத்திற்காக நம் பிள்ளைகள் உழைக்க வேண்டும் என்ற நன்னோக்கில் முன்வந்த பெற்றோர்களின் பிள்ளைகளே அவர்கள். இதை நினைத்து நாம் அவர்கள் மீது உயர்ந்த எண்ணமே கொள்கிறோம். எனவே அவர்கள் தங்கள் பெற்றோர்களை கண்ணியப்படுத்தும் நோக்கிலாவது தாங்கள் படித்த கல்வியைக் கொண்டு, ஆர்வத்துடனும், இப்பிறை விஷயத்தில் பிரதான கவனம் எடுத்தும், சத்தியத்தை சரியான முறையில் மக்களுக்கு விளக்குவார்கள் என்று நம்புகிறோம். இப்பிறை விஷயத்தில் ஆர்வம் கொண்ட ஆலிம்களின் முயற்சிகள் எதுவும் வீண்போகாத வண்ணம் அவர்களுக்கு உதவிட இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி கமிட்டி என்றும் தயாராகவே இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஒரு விஷயத்தை ஆய்வு செய்து மக்களிடம் ஒரு கருத்தை சொல்வதாக இருப்பின் ஆய்வாளருக்கு அத்துறை சார்ந்த முழுமையான அறிவு முதலில் வேண்டும். அத்துறை சார்ந்த ஆழ்ந்த அறிவோடு கூடிய ஆய்வுகள்தான் சரியான ஆய்வாகவும், பலன்தரக் கூடியதாகவும் அமையும். இதற்கு சிறந்த உதாரணமாக சமகாலத்தில் நிகழ்ந்த ஒரு விஷயத்தை இங்கு நினைவு கூறுவது மிகப் பொறுத்தமாக இருக்கும்.


டாக்டர் கீத்மூர் (Dr.Keith Moore) அவர்கள் கருவியல்துறையில் முனைவர் பட்டம் பெற்றவரும், உலகப் பிரசித்திபெற்ற கருவியல் அறிஞரும் ஆவார். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக் கழகத்தில் உடற்கூறுயியல் மற்றும் கருவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போது மாணவர்களில் சிலர் கருவியல் பற்றியும், மனிதனின் படைப்பு பற்றியும் அல்குர்ஆனின் வசனங்களை ஆய்வுக்காக அவரிடம் அளித்தனர். அவை பற்றிய தெளிவை தெரிவிக்குமாறும் வேண்டினர். அவ்வசனங்களில் கீழ்க்காணும் வசனமும் ஒன்றாகும்.


(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். 96:1-2


He has created man from a clot. (96:2 Tafsir Ibn Kathir Translation)


Created man, out of a (mere) clot of congealed blood (96:2 Yousuf Ali Translation)


மேற்படி வசனத்தில் இடம்பெறும் 'அலக்' என்ற அரபுச் சொல்லுக்கு வெறுமனே ரத்தக்கட்டி (Clot / Clot of Congealed Blood)என்று பல குர்ஆன் விரிவுரையாளர்கள் மொழி பெயர்த்திருந்தனர். ஆனால் மனிதப் படைப்பு பற்றி குர்ஆன் கூறும் பல்வேறு வசனங்களை தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட டாக்டர் கீத்மூர் அவர்கள் 'அலக', 'நுத்ஃபா' போன்ற சொற்கள் மிக ஆழமான பொருளைத் தருவன என்றும் அது 'அட்டைப்பூச்சிபோல ஒட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்த' (clings, a leech-like substance) கருவின் ஆரம்ப நிலையைக் குறிக்கும் மிக ஆழமான சொல் என்று குறிப்பிட்டார். இச்சொற்றொடரை மிக ரத்தின சுறுக்கமாக திருமறைக் குர்ஆன் சொல்லியிருப்பது கண்டு வியப்புற்றார். மனிதன் படைக்கப்பட்டது பற்றி விரிவாக எடுத்துரைக்கும் அல்குர்ஆனின் வசனங்கள் (96:1-2, 86:5-7, 22:5, 23:12-13, 16:4, 18:37, 35:11, 36:77, 40:67, 53:46, 75:37, 76:2, 80:19, 32:8, 86:5-7) 21-ஆம் நூற்றாண்டின் நவீன கருவியல் கோட்பாட்டை நிரூபிக்கின்றது என்றும், அவ்வசனங்கள் எவ்வித முரண்பாடுகளுமின்றி மிகத்துல்லியமாக உள்ளன என்ற உண்மையையும் உலகிற்கு உணர்த்தினார்.


இதில் நாம் குறிப்பிடுவது என்னவெனில், 'அலக' என்ற அரபுச் சொல்லுக்கு வெறுமனே 'ரத்தக்கட்டி' என்று முற்கால அரபுமொழி அறிஞர்கள் மொழிபெயர்த்தனர். அன்றைய காலத்தில் இருந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஒப்ப 'அலக' என்றால் 'ரத்தக்கட்டி' என்று அன்றைய அறிஞர்கள் மேலோட்டமாகப் புரிந்தனர். கருவியல்துறையில் முழுமையான, ஆழமான ஞானமில்லாத காலத்தில் அவ்வாறுதான் மொழிபெயர்க்க முடியும்.


டாக்டர் கீத்மூர் அவர்களும், அவரது தலைமையில் அமைந்த ஆய்வுக்குழுவும் கருவியல் சம்பந்தமான பல்வேறு குர்ஆன் வசனங்களையும் கற்று, அரபுமொழியில் அமைந்த அச்சொற்றொடர்களின் கருத்தை கவனமாக ஆய்வு செய்து, கருவின் வளர்ச்சியை படம் பிடித்தும் காட்டினர். பின்னர் அலக என்பதற்கு 'அட்டைப்பூச்சிபோல ஒட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்த ஒரு பொருள்' என்பதுதான் முழுமையான பொருள் என்பதைப் புரிந்து கொண்டு தற்போதைய மொழிபெயர்ப்பாளர்கள் தங்களின் மொழிபெயர்ப்புகளைத் திருத்திக் கொண்டனர்.


Created man from a clinging substance. (96:2 Sahih International Translation)


இது போன்ற ஒரு நிலையில்தான் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்றால் 'உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால்' என தவறான மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஹதீஸை ஆய்வு செய்வதாக இருந்தால் அது சம்பந்தமான ரிவாயத்துகளை முழுமையாக ஆய்வு செய்தால்தான் அதன் உண்மையாக பொருளை விளங்க முடியும். 'ஃபஇன் கும்ம அலைக்கும் என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு 'உங்களுக்கு மறைக்கப்படும்போது' என்பதாகும். மறைக்கப்படும்போது என்ற இந்த சொல் மறைக்கப்பட்டால் என்ற சந்தேகமான பொருள்படும் சொல் அல்ல. மாறாக ஒவ்வொரு மாதத்தில் இறுதிநாளிலும் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் மறைக்கப்படுமே அந்நாளில் என்ற பொருளில் கையாளப்பட்ட ஒரு சொல்லாகும்.


சந்திரனில் அதன் படித்தரங்களின் காட்சி எவ்வாறு ஏற்படுகின்றன என்பதின் அறிவியல் நிலைகளை மனிதர்கள் விளங்கிக் கொள்ளாத நேரத்தில் சந்திரன் எப்படி வானத்தில் மறைக்கப்படும் என ஒரு மனிதன் சிந்தித்தால் அவனுக்கு மேகம்தான் சந்திரனை மறைக்க முடியும் என அவன் நினைப்பான். இது எப்போதாவது அரிதாக மழைக் காலங்களில் நடக்கும் ஒரு நிகழ்வு அவ்வளவுதான். நம் பகுதியில் மழையாக இருந்தால், மழை பொழியாத பிற பகுதிகளில் மேகங்கள் சூழாமல் வானம் தெளிவாக இருக்கலாம். அங்கு மேகம் பிறையை மறைக்கும் என்ற நிலை இருக்காது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


சில சமயம் நாம் சந்திரனை பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது கண்முன்னே வானில் தவழும் மேகங்கள் நகர்ந்து நாம் பார்த்துக் கொண்டிருந்த சந்திரனை தற்காலிகமாக மறைத்துவிடும். அச்சமயம் நண்பர் ஒருவர் என்ன பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என நம்மிடம் கேட்டால் நாம் சந்திரனின் காட்சியை ரசித்து கொண்டிருந்தேன் தற்போது மேகம் மறைத்து விட்டது என்றே கூறுவோம். அப்போது அவர் சந்திரனின் காட்சியை நான் பார்க்கவில்லையே அதனால் சந்திரன் இருக்க வாய்ப்பே இல்லை என்று வாதித்தால் அவரைப்பற்றி நாம் என்ன கூறுவோம்? அதைப்போல்தான் 'கும்ம' என்ற சொல்லுக்கு 'மேகம் மறைப்பது' என்று வாதிப்பதின் நிலையாகும்.


பூமியை தனது நீள்வட்ட சுழற்சிப் பாதையில் சந்திரன் துல்லியமாக சுற்றிவருகிறது. ஒரு மாதத்திற்கு 29 நாட்களாக இருந்தால் 28 நாட்களும், மாதம் 30 நாட்களாக இருக்கும் போது 29 நாட்களும் மக்களுக்கு காட்சி தருகிறது. சந்திர மாதத்தின் இறுதிநாளான அந்த ஒரு நாள் மட்டும் சந்திரனின் காட்சியை பொதுவாக நாம் காண முடியாமல் போகிறது. ஏனெனில் மாதத்தின் இறுதிநாளான அன்று, சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் சமதளத்திலோ அல்லது ஒரே நேர்கோட்டிலோ வருவதால் சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் மறைக்கப்படுகிறது. இவ்வாறு சந்திரனின் ஒளி பூமிக்கு மறைக்கப்படும் அந்த நிலை ஒவ்வொரு மாதமும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு சந்திரன் மறைக்கப்படும் இந்த நிலையைத்தான் நபி(ஸல்) அவர்கள் 'கும்ம' என்று நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இதை முதலில் நாம் கற்றறிய வேண்டும். நமது மார்க்கத்தில் கல்வி கற்பது முக்கியக் கடமைகளில் ஒன்றாக உள்ளதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.


'கும்ம' என்ற சொல்லுக்கு பல அர்த்தங்களை நாம் வழங்க இயலும் என்றாலும் தவறான அர்த்தமான மேகமூட்டம் என்று மொழிபெயர்த்து, நாட்களை மாற்றி மாதங்களை தவறாக ஆரம்பிப்பது இறைநிராகரிப்பில் கொண்டு சேர்க்கும் என்கிறோம். இதே 'கும்ம' என்ற சொல் திருமறை குர்ஆனின் (10:71) ஐயம் சந்தேகம் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளதையும் நினைவூட்டுகிறோம். 'கும்ம' என்பதற்கு மேகமூட்டம் என்றுதான் அர்த்தம் செய்யவேண்டும் என்று சொல்வோர் அல்-குர்ஆனின் 10:71 வசனத்திற்கும் இதே மேகமூட்டம் என்ற மொழிபெயர்ப்பை செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது.

7. நபி (ஸல்) அவர்கள் 'ஃபஇன்கும்ம' என்று மட்டும்தான் சொன்னார்களா?

'கும்ம' என்ற இந்த ஒரு பதம் மட்டும்தான் ஹதீஸ்களில் வருகிறதா என்றால் அதுவுமில்லை. மறைக்கப்படும் பொழுது நீங்கள் கணக்கிடுங்கள் போன்ற வாசகங்களைத் தாங்கி பல ஹதீஸ்கள் உள்ளதே அவை எல்லாம் நம் மக்கள் மன்றத்தில் இன்னும் பிரச்சாரமாக வைக்கப்படாமல் இருப்பதின் ரகசியம் நமக்கு இன்னும் புரியவில்லை.


இதோ அந்த ஹதீஸ்களின் பட்டியலிலிருந்து ஒருசிலவற்றை இங்கு தருகிறோம். ருஃயத் என்பதற்கு புறக்கண்ணால் பார்த்தல் என்பது பொருள் ஆகாது மாறாக அது பரந்து விரிந்த பொருள்தரும் ஒரு சொல் என்பதை நாம் முன்னரே விளக்கி விட்டோம். இருப்பினும் 'ருஃயத்', 'ரஆ' போன்ற சொல்லுக்கு 'புறக்கண்ணால் பார்த்தல்', 'புறக்கண்ணால் காணுதல்' போன்ற பதங்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதை மக்களுக்கு விளக்குவதற்காக பின்வரும் நபிமொழிகளின் இறுதியில் குறிப்புகள் தந்துள்ளோம்.


மாற்றுக் கருத்துள்ளவர்கள் சரிகாணும் கீழ்க்காணும் ரிவாயத்துகளின் மொழி பெயர்ப்புகளில்கூட ஃபக்திருலஹூ என்பதற்கு நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை மொழிபெயர்த்தவர்களால் மறுக்க இயலவில்லை என்பதையும் நீங்களே காணுங்கள். அதுபோல 'கும்ம' என்ற பதத்தைப் போல 'கும்மிய', 'உஃமிய', 'கபி(கு)ய', 'க(பு)ம்மிய', 'ஹஃபிய்ய'இ 'குபிய' போன்ற பதங்களும் பயன்படுத்தப் பட்டுள்ளதையும் காணுங்கள். இதோ அந்த ரிவாயத்துகள்...


صحيح البخاري - كتاب الصوم باب قول النبي صلى الله عليه وسلم - حديث


حدثنا عبد الله بن مسلمة ، حدثنا مالك ، عن نافع ، عن عبد الله بن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان فقال : لاَ تَصُومُوا حَتَّى تَرَوْا الهلال وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ " *.


1. ரமழான் மாதத்தைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நினைவு கூறும் போது அவர்கள் சொன்னார்கள்: பிறையை நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும். நீங்கள் அதை கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள்;. அது உங்கள் மீது மறைக்கப்படும் போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். என இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : புகாரி :1906.


குறிப்பு : இங்கு கவனிக்காதவரை என்பதற்கு வெறுமனே புறக்கண்களால் பார்க்காதவரை என்று மொழிபெயர்ப்பது தவறாகும்.


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- ذَكَرَ رَمَضَانَ فَضَرَبَ بِيَدَيْهِ فَقَالَ « الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا - ثُمَّ عَقَدَ إِبْهَامَهُ فِى الثَّالِثَةِ - فَصُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِىَ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ ثَلاَثِينَ ». صحيح مسلم - (3 / 122). 2551


2. ரமழான் மாதத்தை பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நினைவு கூறினார்கள் அப்போது அவர்கள் தன் இரு கைகளை கொண்டு சைகை செய்தார்கள். மாதம் இவ்வாறு இவ்வாறு மேலும் இவ்வாறு இருக்கும் பிறகு மூன்றாவது முறையில் கையின் பெருவிரலை மட்டும் மடக்கி காட்டினார்கள் எனவே நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு நோன்பு வையுங்கள்; மேலும் நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள். உங்கள் மீது அது மங்கும் போது அதை நீங்கள் முப்பதாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். என இப்னு உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள். நூல் : முஸ்லிம் :2551.


குறிப்பு : இங்கு காட்சியை அடிப்படையாகக் கொண்டு என்பதற்கு வெறுமனே புறக்கண்களால் பார்த்து என்று மொழிபெயர்ப்பது தவறாகும்.


صحيح مسلم - كتاب الصيام باب وجوب صوم رمضان لرؤية الهلال - حديث : ‏1865


وحدثنا يحيى بن يحيى ، ويحيى بن أيوب ، وقتيبة بن سعيد ، وابن حجر - قال يحيى بن يحيى : أخبرنا وقال الآخرون : حدثنا إسماعيل وهو ابن جعفر ، عن عبد الله بن دينار ، أنه سمع ابن عمر رضي الله عنهما ، قال : قال رسول الله : " « الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً لاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ إِلاَّ أَنْ يُغَمَّ عَلَيْكُمْ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ ».


3. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டதே! அதை (மாதத்தை) நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும் நீங்கள் அதை (மாதத்தை) கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள்;, உங்கள் மீது அது மறைக்கப்பட்டு இருந்தாலே தவிர. எனவே உங்கள் மீது அது மறைக்கப்படும் போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். என இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : முஸ்லிம் (1865)


صحيح ابن خزيمة - كتاب الصيام جماع أبواب الأهلة ووقت ابتداء صوم شهر رمضان - باب الأمر بالتقدير للشهر إذا غم على الناس حديث : ‏1790‏.


حدثنا علي بن حجر السعدي ، ثنا إسماعيل يعني ابن جعفر ، عن عبد الله بن دينار ، عن ابن عمر قال : قال رسول الله صلى الله عليه وسلم :


الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً لاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ إِلاَّ أَنْ يُغَمَّ عَلَيْكُمْ فَإِنْ غُمِّىَ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ " *


4. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டதே! அதை (மாதத்தை) நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும் நீங்கள் அதை (மாதத்தை) கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள்;, உங்கள் மீது அது மறைக்கப்பட்டு இருந்தாலே தவிர. எனவே உங்கள் மீது அது மங்கும் போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : ஸஹீஹ் இப்னு குஜைமாஹ் : 1790


மேற்கண்ட இப்னு உமர் (ரழி) அவர்களின் அறிவிப்புகளில் 'கும்ம' என்ற சொல்போல 'உஃமிய', 'யுகும்ம', 'கும்மிய' போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 'ஹிலால்' என்ற பதம் மேற்கண்ட பட்டியலில் 1-வது அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக 'ஜஃலல்லாஹூ அஹில்லத மவாகீத்து லின்னாஸ்' என்று துவங்கும் இப்னுஉமர் (ரழி) அவர்களின் முழுமையான அறிவிப்பை முன்னரே பரிசீலித்துள்ளளோம். அதில் 'அஹில்லாஹ்' அதாவது 'பிறைகள்' எனப் பன்மையாகத்தான் ரிவாயத் செய்யப்பட்டுள்ளது. அவை மக்களுக்கு காலம் காட்டுவதற்காக படைக்கப்பட்டுள்ளதாவும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். குர்ஆனின் 2:189 வசனமும் இதையே உறுதி செய்கின்றது. எனவே மேற்காணும் முதலாவது அறிவிப்பில் 'ஹிலால்' என்று ஒருமையில் இடம்பெற்றுள்ள இந்தச்சொல் கூட 'அஹில்லாஹ்' என்று கூறப்படும் பன்மை வார்த்தைக்காகவே கையாளப்பட்டுள்ளது. 'ஹிலால்' என்ற சொல் அரபு அகராதிகளில் சுமார் 14 நாட்களுக்குரிய பிறைகள் குறித்து சொல்லப்படும் என்பதை முன்னரே அறிந்தோம்.


'நிலவு', 'சந்திரன்' என்று அழைக்கப்படும் ஒருமையான ஒரு துணைக்கோளில்தான் 'அஹில்லாஹ்' என்ற பன்மையான பல படித்தரங்கள் (வடிவங்கள்) அதில் ஏற்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 'ஹிலால்' என்ற சொல் இந்த இடத்தில் சந்திரனை குறித்துதான் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் அறிவிப்பில் (புகாரி 1906) 'ஹிலால்' என்பதற்கு அஹில்லாஹ்வின் காட்சிகளை கவனித்தறிந்து என்றே பொருள் அமைகிறது. மேற்கண்ட பட்டியலில், இதுவல்லாத இப்னு உமர் (ரழி) அவர்களின் பிற அறிவிப்புகளில் நாம் ஏற்கனவே பிறை சம்பந்தமாக விளக்கியுள்ள அந்த முழுமையான அறிவிப்பில் கையாளப்பட்டுள்ள 'அஹில்லாஹ்' குறித்த வாசகம் அல்லது (ஷஹ்ரு) மாதங்கள் குறித்த வாசகங்களே இடம் பெற்றுள்ளன. மாதத்தில் ஒரேயொரு பிறையை மட்டும் பார்த்தால் போதுமானது என்று இப்னு உமர் (ரழி) அவர்களின் ரிவாயத்து அமையவில்லை.


குறிப்பாக ஒரே அறிவிப்பாளர் மூலமாக அறிவிக்கப்படும் பல செய்திகளில் ஒரு செய்தியில் மட்டும் ஒரு வாசகம் அதிகப்படியாக இடம் பெற்றிருந்தால், (ஷாத்) அதற்கு ஹதீஸ்கலையில் அந்தச் செய்தி ஏற்றுக் கொள்ளப்படாது என்பதை மாற்றுக் கருத்துடையவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள்.


صحيح البخاري - كتاب الصوم باب قول النبي صلى الله عليه وسلم : " إذا رأيتم - حديث : ‏1823‏


حدثنا آدم ، حدثنا شعبة ، حدثنا محمد بن زياد ، قال : سمعت أبا هريرة رضي الله عنه ، يقول : قال النبي صلى الله عليه وسلم : أو قال : قال أبو القاسم صلى الله عليه وسلم : " صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ " *


5.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே உங்கள் மீது புலப்படாத போது நீங்கள் ஷஃஅபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள். என அபூ ஹூரைராஹ்(ரழி) அவர்கள் அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : புகாரி (1823)


مسند أحمد بن حنبل - ومن مسند بني هاشم مسند أبي هريرة رضي الله عنه - حديث : ‏9641


حدثنا حجاج ، قال : حدثنا شعبة ، عن محمد بن زياد ، قال : سمعت أبا هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم - أو قال أبو القاسم صلى الله عليه وسلم - : " صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غَبِيَ عَلَيْكُمْ فَعُدُّوا ثَلَاثِينَ " *


6.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள்; மேலும் நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள்; உங்கள் மீது புலப்படாத போது நீங்கள் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என அபூ ஹூரைராஹ் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : அஹ்மத் (9641)


حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلاَّمٍ الْجُمَحِىُّ حَدَّثَنَا الرَّبِيعُ - يَعْنِى ابْنَ مُسْلِمٍ - عَنْ مُحَمَّدٍ - وَهُوَ ابْنُ زِيَادٍ – عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُمِّىَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعَدَدَ ». صحيح مسلم - (3 / 124)2567 –


7.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். மேலும் நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். உங்கள் மீது புலப்படாத போது எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துங்கள் என அபூ ஹூரைராஹ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : முஸ்லிம் (2567)


அதே போல,


• 'நீங்கள் ஷஃஅபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப் படுத்துங்கள்',


• 'நீங்கள் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்',


• 'எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துங்கள்'


என்றெல்லாம் பல வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஒரே ஸஹாபி அறிவிக்கும் செய்தியில் மேற்படி வித்தியாசமான சொற்றொடர்களைக் கொண்டு மாற்றி மாற்றி அறிவிக்கப் பட்டுள்ளதால், நபி (ஸல்) அவர்கள் எந்த வார்த்தையை பயன்படுத்தினார்கள்? அல்லது மேற்கண்ட அனைத்து சொற்றொடர்களையும் அவர்கள் கூறினார்களா? என்ற கேள்வியும் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்றது.


தெளிவாக சொல்வதென்றால் அபூஹூரைராஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட அறிவிப்புகளிலும் 'ஹிலால்' - 'பிறை' என்ற சொல் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


நமது பட்டியலில் மேற்கண்ட 5-வது மற்றும் 6-வது அறிவிப்பில் உள்ள செய்திகளில் முப்பதாக முழுமைப்படுத்துங்கள் என்ற வாசகம் உள்ளது. அதுபோல அபுஹூரைராஹ் (ரழி) அவர்களே அறிவிக்கும் அறிவிப்பான 7-வது செய்தியிலோ முப்பது என்ற வாசகம் இடம்பெறாமல் 'எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துங்கள்' என்று வந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்களது இரண்டு அறிவிப்புகளுக்கு மாற்றமாக அவர்களின் மற்றொரு அறிவிப்பு உள்ளதையும் காணலாம்.


எனவே இவற்றை கருத்தில் கொண்டு, சந்தேகங்கள் கொள்ள வாய்ப்பே இல்லாத குர்ஆன் கூறுகின்ற அடிப்படையில் சந்திரனில் ஏற்படும் அனைத்து படித்தரங்களையும் கவனமாக ஆராய்ந்து ஒவ்வொரு மாதங்களையும் சரியாக ஆரம்பித்தும், முடிக்கவும் வேண்டும் என்பது சந்தேகத்திடமின்றி புலனாகின்றது.


மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களை கொண்டதாகவும் இருக்கும். அதுபோல் முப்பது நாட்களைக் கொண்ட மாதங்களும் இருக்கின்றன. இவ்வாறு 29 அல்லது 30 என்ற இருவேறு எண்ணிக்கையில் அமைந்த நாட்களைக் கொண்ட மாதங்களைப் பற்றிய சட்டங்களை நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பாக அறிவித்திருப்பார்கள். மேற்கண்ட ஹதீஸ்களை அரபு மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்த்த அறிஞர்கள் இதுபோன்ற கோணங்களில் சிந்திக்காமல் அனைத்துத் ஹதீஸ்களையும் ஒன்றாக விளங்கி மொழிபெயர்த்ததின் காரணமாக மக்களுக்கு அவற்றை பிரித்தறிய முடியாமல் போயிற்று. இதனால் பிறை விஷயத்தில் உலக முஸ்லிம் உம்மத்திற்குள் மிகப்பெரும் குழப்பங்களும் ஏற்பட்டுவிட்டன. இந்த துர்பாக்கிய சூழ்நிலையை மிகுந்த கவலையோடு எண்ணிப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம்.


பிறை தெரியாவிட்டால் மாதத்தை முப்பதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று மக்கள் விளங்கியுள்ளனர். அதற்கு முதல் முக்கியக் காரணம் பிறைகள் குறித்த ஹதீஸ்களை இத்துறை சார்ந்த முழுமையான ஞானமில்லாத மொழிபெயர்ப்பாளர்கள் மொழி பெயர்த்ததே ஆகும். அதாவது 29 நாட்களில் முடிகின்ற மாதங்களையும், 30 தினங்கள் கொண்ட மாதங்களையும் பிரித்தறிய நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு சிறந்த தீர்வை தரவில்லையா? அதற்கான ரிவாயத்துகள் எங்கே உள்ளன? என்ற கோணத்தில் அம்மொழிபெயர்ப்பாளர்களும் அறிஞர்களும் சிந்திக்க மறந்து விட்டனர். மேற்படி வினாக்களை மனதில் கொண்டு பிறை சார்ந்த ஹதீஸ்களை அணுகாமல் பொத்தாம் பொதுவாக புறக்கண்ணால் அவரவர்கள் பிறையைப் பார்த்து முடிவுசெய்யுங்கள் என்ற ரீதியில் அணுகியுள்ளனர். இதையே பல்லாண்டுகளாக வீரியமாக பிரச்சாரமும் செய்து விட்டனர். அதன் விளைவுகள்தான் உலக முஸ்லிம் உம்மத்தினர் பிறையை மையக் கருத்தாக்கி, பல பிறை நிலைப்பாடுகளையும் தமதாக்கிக் கொண்டு பல பிரிவுகளாக பிரிந்தும் விட்டனர்.


حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ قَالَ سَأَلْتُ جَابِرًا هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَصُومُوا حَتَّى تَرَوْا الْهِلَالَ فَإِنْ خَفِيَ عَلَيْكُمْ فَأَتِمُّوا ثَلَاثِينَ وَقَالَ جَابِرٌ هَجَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ شَهْرًا فَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ وَقَالَ إِنَّمَا الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ.مسند أحمد - 23 / 3314670 - 8.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பிறையை கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்;. எனவே உங்கள் மீது அது மறைந்து இருக்கும் போது முப்பதாக பூர்த்தி செய்யுங்கள். ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன் மனைவிகளை விட்டும் ஒருமாதம் பிரிந்து இருந்தனர். மேலும் 29-வது நாளில் இறங்கினார்கள். மேலும் நிச்சயமாக இந்த மாதம் 29 நாட்களை கொண்டது என கூறினார்கள். அறிவித்தவர் : ஜாபிர் (ரழி) அவர்கள், நூல் : அஹ்மத் (14670)


நமது பட்டியலில் மேற்கண்ட 8-வது அறிவிப்பில் ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்த செய்தியில் முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்களோ இந்த மாதம் இருபத்தொன்பது நாட்கள் என்று அறிவித்த செய்தியும் அதே ரிவாயத்தில்தான் வந்துள்ளது என்பதை காணுங்கள். இதையும் நாம் கருத்தில் கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.


மேலும் மேற்கண்ட பட்டியலில் உள்ள அறிவிப்புகளில் 'கும்ம' என்ற சொல்லைப் போலவே 'கும்மிய', 'உஃமிய', 'கபி(கு)ய', 'க(பு)ம்மிய', 'ஹஃபிய' அல்லது 'குபிய' போன்ற பதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ள பல்வேறு ஹதீஸ்களில் ஒருசிலவற்றை மட்டும் இங்கு பதிந்துள்ளோம். ஆக்கத்தின் நீளம் கருதி மற்ற ரிவாயத்துகளை இங்கு தவிர்க்கிறோம்.


மேலும் 'ஹஃபிய' என்ற சொல்லுக்கு மறைத்தல் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் கொள்ள இயலாது என்பதை அனைவரும் அறிவோம். இவைபோன்ற ஹதீஸ்களெல்லாம் மக்கள் மன்றத்தில் மறைக்கப்பட்டு பிறந்த பிறையைப் புறக்கண்hல் பார்க்கத்தான் வேண்டும், 'ஃபஇன்கும்ம அலைக்கும்' - 'உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால்' முப்பது நாட்களாக பூர்த்தி செய்யவேண்டும் என்ற சிலரது தொடர் பிரச்சாரங்களின் நிலையை மக்களே சற்று எண்ணிப் பாருங்கள்.


நாம் கேட்பது என்னவென்றால் பிறைகள் குறித்து வரும் மேற்காணும் ரிவாயத்துகளில் மறைக்கப்படும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பல பதங்களை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ள நிலையில் பிறைபற்றி பேசும் அறிஞர்கள் மேற்காணும் ஹதீஸ்களை மக்கள் மன்றத்தில் இன்னும் எடுத்து வைக்காதது ஏன்? என்று கேட்கிறோம். 'ஃபஇன்கும்ம அலைக்கும்' என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு இல்லாத மேகமூட்டத்தை முன்னிலைப்படுத்தும் ஆலிம்கள் மறைக்கப்படும்போது, மறைந்து இருக்கும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பதங்கள் குறித்து ஏன் இன்னும் ஆய்வுசெய்ய முன்வரவில்லை?


இன்னும் பிறை சம்பந்தமாக 'கணக்கிட்டுக் கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் பல ரிவாயத்துகளிலும் வலியுறுத்தி கூறி இருக்கையில், நபி (ஸல்) அவர்கள் ஏதோ பிறையின் படித்தரங்களை கணக்கிடுவதை ஹராம் என்று தடுத்ததைப் போன்ற ஒரு தவறான மாயையை மக்களிடம் ஏற்படுத்துவது ஏன்? இதனால் அவர்கள் அடையும் இலாபம்தான் என்ன? என்று கேட்கிறோம்.


அல்லாஹ் பிறைகளின் படித்தரங்களை மனிதர்களுக்கு தேதியை அறிவிப்பதாக அமைத்துள்ளான். எனவே அவற்றைக் கவனித்து அறிந்து அதனடிப்படையில் சரியான நாளில் அனைத்து மாதங்களையும் துவக்க வேண்டும். அதுபோல ரமழான் மாதத்தையும் சரியாக துவங்கி, பிறைகளைக் கவனித்தறிந்து சரியான தினத்தில் பெருநாளையும் கொண்டாட வேண்டும். சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் மறைக்கப்படும் சங்கம தினமான கும்மவுடைய நாள் (Geocentric Conjunction Day) ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளாகவே இருக்கும். அப்போது பிறை பொதுவாக புறக்கண்களுக்கு மறைக்கப்படும். அப்படி மறைக்கப்படும் அந்த கும்மவுடைய நாளை ஏற்கனவே சந்திரனில் ஏற்பட்ட படித்தரங்களான தேய்பிறைகளை பார்த்த மாதத்தோடு சேர்த்து கணக்கிட்டு (அல்லது எண்ணி) மாதத்தை மிகச்சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். இவைதான் மேற்கண்ட நபிமொழிகள் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.


ஒரு மாதத்தின் 30-ஆம் நாளுக்குரிய பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்க்க வேண்டும், அல்லது அவ்வாறு பார்த்தவர்களின் சாட்சியைப் பெறவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் எங்கும் சொல்லிட வில்லை. இன்று மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்னரே புதிய மாதத்தைத் துவங்க வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்திட வில்லை. பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்புதான் ரமழான் நோன்பைத் துவங்க வேண்டும் அல்லது பெருநாள் தினம் (ஷவ்வால்-1) என்று தீர்மானிக்க வேண்டும் என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வடை தூதரோ கட்டளையிட வில்லை. எனவே பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று கூறும் மாற்றுக் கருத்துடையோரின் புறக்கண் பார்வைக்கு 'ஸூமுலிருஃயத்திஹி என்ற வாசகங்கள் வரும் எத்தகைய ஹதீஸ்களும் எவ்விதத்திலும் ஆதாரமாகாது என்பது மிகவும் தெளிவாக நிரூபணமாகி விட்டது.

8. பிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள் என்ற கூற்றின் விளக்கம் என்ன?

இதுவரை 'அல்அஹில்லாஹ்', 'மவாகீத்', 'மவாகீத்து லின்னாஸ்', 'லி ருஃயத்திஹி', 'ஃபஇன்கும்ம அலைக்கும்', 'ஃபக்துரு', 'ஃபஉத்தூ' போன்ற சொற்களை உள்ளடக்கியுள்ள 'ஸூமூ லி ருஃயத்திஹி' (صُومُوا لِرُؤْيَتِهِ) என்ற கருத்தைச் சொல்லும் ஹதீஸின் முழுமையான ஹதீஸ்களான முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306), ஸஹீஹ் இப்னு ஹூசைமா (1789) வின் ஹதீஸ்களிள் விரிவான விளக்கங்களை இதுவரை படித்துள்ளோம்.


பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழியையும் மேற்படி அறிஞர்கள் பிரதான ஆதாரமாக வைக்கின்றனர். புறக்கண் பார்வைக்கு மாற்றுக் கருத்தினர் கூறும் இரண்டாவது ஆதாரமான அதையும் சற்று ஆராய்வோம்.


عبد الله بن دينار عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال : " الشهر تسع وعشرون ليلة فلا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له. مسند الموطأ - (1 / 146) "


நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸின் சரியான மொழிபெயர்ப்பானது : இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களை கொண்டதே! பிறையை நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும் நீங்கள் அதை கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள்;. உங்கள் மீது அது மறைக்கும்போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல்: முஅத்தா


மேற்கண்ட ஹதீஸை வைத்துக் கொண்டு பார்த்தீர்களா? பிறையை பார்க்காத வரை நோன்பு நோற்காதீர்கள், பிறையை பார்க்காத வரை நோன்பை விடாதீர்கள்; என்று ரஸூலுல்லாஹ்வே நமக்குக் கட்டளை இட்டு விட்டார்கள் என்று வாதம் வைக்கின்றனர். இது பிறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ள குர்ஆன், சுன்னாவின் ஆதாரக் கூற்றுக்களை உள்ளார்ந்து ஆய்வு செய்யத் தவறியதையே காட்டுகிறது.


பிறைகள் குறித்து நாம் இதுவரை படித்த ஹதீஸ்களை முறைபடுத்துவதெனில்

• குறிப்பிட்ட ஒரு மாதத்தைக் குறித்த நபிமொழிகள் வந்துள்ளன.

• குறிப்பிட்ட ஒரு மாதத்தை 30-ஆக பூர்த்தி செய்யுமாறு ரிவாயத்துகள் வந்துள்ளன.

• ஒரு மாதத்திற்கு 29-நாட்கள்தாம் என்ற ரீதியில் ஹதீஸ்கள் உள்ளன.

• 30-நாட்களைக் கொண்ட மாதங்கள் குறித்த ஹதீஸ்களும் உள்ளன.

• ஒரு மாதத்திற்கு 29-நாட்கள் அல்லது 30-நாட்கள் இருக்கும் என்று பொதுவான நபிமொழிகளும் வந்துள்ளன.

• மாதத்தை பூர்த்தியாக்குமாறு பொதுவாக கட்டளையிடப்பட்டுள்ளது

• மாதத்தை எண்ணிக் கணக்கிடுமாறு பல ஹதீஸ்களில் கட்டளைகள் உள்ளன.

• எண்ணிக்கையை பூர்த்தியாக்குமாறும் ரிவாயத்துகள் பல இடம் பெற்றுள்ளன.


இவ்வாறு பிறைகள் குறித்து பல வகையிலும் ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அரபு மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்த்த அறிஞர்களும், அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அறிஞர்களும், இவற்றை பிரித்தறிந்து ஆய்வுகள் செய்யாமல் அனைத்து ரிவாயத்துகளையும் ஒரே கோணத்தில் அணுகியதின் காரணத்தினால் உலக முஸ்லிம் உம்மத்திற்குள் பிறைகள் குறித்த தெளிவின்மையும், குழப்பங்களும் ஏற்பட்டுவிட்டன.


அதன் வரிசையில்தான் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ள மேற்கண்ட முஅத்தாவின் அறிவிப்பும் அடங்கும். மேற்கண்ட ஹதீஸ் எதை அறிவிக்கின்றது? பிறை பார்க்கிறோம் என்ற ரீதியில் இருபத்து ஒன்பது நாட்களைக் கொண்ட ஒரு மாதத்தை உங்கள் வசதிற்கேற்ப முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ளுங்கள், அதற்கு மேகமூட்டத்தை காரணம் காட்டுங்கள் என்றா கூறுகிறது? அல்லது மஃரிபு வேளையில் மறையும் பிறையை பார்த்துவிட்டு இது அடுத்த நாளுக்குறிய பிறை என்று கூறுகிறதா? இரண்டும் இல்லையே.


'ஹிலால்' என்ற சொல் அரபு அகராதிகளில் எத்தனை நாட்களுக்குரிய பிறைகள் குறித்த சொல்லப்படும் என்பதை முன்னரே அறிந்தோம். பிறையை பார்க்காத வரை என்றால் எந்த நாளுக்குரிய பிறையைப் பார்க்காதவரை? என்று சொல்லட்டும்.


ஒரு வாதத்திற்காக முதல்நாளின் பிறையைப் பார்க்க வேண்டும், அதுதான் 'ஹிலால்' என்றே வைத்துக் கொள்வோம். புவிமைய சங்கம தினத்திற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள். சந்திர மாதத்தின் முதல்நாளில், சூரியனுக்குப் பின்னால் சந்திரன் கிழக்குத் திசையில் தோன்றி (உதித்து) அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்குத் திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். அந்தப் பிறை அந்த முதல் நாளின் (கிழமையின்) பாதிப் பகுதியை (சுமாராக 12 மணி நேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.


ஹிலாலைப் பார்க்கிறோம் என்று கூறிக்கொண்டு மறையும் அந்த முதல்நாளின் பிறையைப் புறக்கண்களால் பார்த்து விட்டு அடுத்தநாள் மாதத்தின் முதல்நாள் என்று கூறினால் அந்த மாதத்தின் 'முதல் நாளை' இழக்க நேரிடும்.


மேலும் முதல்நாளின் பிறையைப் பார்க்க முடியாமல் ஆகி, இரண்டாவது நாள் மறையும் பிறையை பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் மாதத்தின் முதல்நாள் என்று கருதினால் அந்த மாதத்தின் 'முதல் இரண்டு நாட்களை' இழக்க நேரிடும்.


முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் காலங்காலமாக மாதங்களைத் துல்லியமாக, சரியாகத் துவக்காமல் இப்படித்தான் நாட்களையும், இபாதத்துகளையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். பிறைகள் பற்றிய தீர்க்கமான ஞானமில்லாதவர்கள் 'பிறையைப் பார்க்காத வரை நோன்பு நோற்காதீர்கள், பிறையை பார்க்காத வரை நோன்பை விடாதீர்கள்;' என்று பிரச்சாரம் செய்வதால் சமுதாய மக்களுக்கு ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை சற்று கவலையோடு சிந்திக்க வேண்டுகிறோம்.


ஒவ்வொரு சந்திரமாதத்தின் இறுதிவாரத்தின் தேய்பிறை இறுதி நாட்களில், குறிப்பாக 27,28,29-வது நாளில் மஃரிபு வேளையில் பிறையை பார்க்க இயலாது என்பது நிதர்சனமான உண்மையாகும். இது பிறை பார்த்தலின் சாதாரண அடிப்படைகளில் உள்ளவையாகும்.


ஒவ்வொரு மாதத்திலும் முதல் நாளுக்குரிய பிறை, அந்த முதல்நாளில் மேற்குத் திசையில் அது மறையும் மஃரிபு நேரத்தில், உலகின் சிலபகுதிகளில் சில நிமிடங்களுக்கு மட்டும் காட்சியளிக்கும். அந்தப்பிறை உதிக்கும் பிறையல்ல மாறாக அது முதல் நாளுக்குரிய மறையும் பிறையாகும். மாதத்தின் வளர்பிறை நாட்களின் ஆரம்ப நாட்களுக்குரிய பிறைகள் மட்டும்தான் மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் அது மறையும் நேரத்தில் காணலாம். மாதத்தின் அனைத்து நாட்களுக்குரிய பிறைகளும் மஃரிபு நேரத்தில் மறைவதில்லை.


சூரியனைப் போலவே சந்திரனும் (பிறையும்) தினமும் கிழக்குத் திசையில் உதித்து மேற்குத் திசையில் மறைகிறது. அப்படி அதிகாலையில் உதிக்கும் சூரியன் சுமார் 12 மணிநேரங்கள் கடந்து மஃரிபு வேளையில் மறைவதென்பது மாதத்தின் அனைத்து நாட்களிலும் நடைபெறும் தினசரி நிகழ்வாகும். ஆனால் சந்திரன் இவ்வாறு இல்லை. சந்திரன் மாதத்தின் அனைத்து நாட்களிலும் ஒருசீராக அதிகாலை நேரத்தில் உதித்து மாலை நேரத்தில் மறைவதில்லை. இருப்பினும் சந்திரன் தினமும் கிழக்குத் திசையில் உதித்து மேற்குத் திசையில்தான் மறைகிறது. மாறாக அது மேற்குத் திசையில் உதிக்க வில்லை. சந்திரன் மேற்கே உதித்து கிழக்குத் திசையில் மறைகிறது என்று சிலர் அழுத்தமாக நம்பிக் கொண்டிருப்பதால்தான் இதை இந்த அளவிற்கு அழுத்தமாகச் சொல்கிறோம்.


பிறை மாதத்தின் அனைத்து நாட்களிலும் அதிகாலையில் உதிப்பதில்லை என்று கூறியுள்ளோம். இதை புரிந்து கொள்வதென்றால் முதல்நாளுக்குரிய முதல் பிறை சூரியன் உதயமாகும் அதிகாலை நேரத்தில் உதிக்கும். பின்னர் சூரியன் மறையும் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் சூரியன் மறைந்த பின்னர் சுமார் 48 நிமிடங்கள் அளவிற்கு பின்தங்கி பிறையும் மறையும்.


அதுபோல மாதத்தின் முதல் கால்பகுதி (குசைளவ ஞரயசவநச) க்குரிய 7-வது அல்லது 8-வது தேதியைக் காட்டும் பிறையானது நண்பகல் நேரத்தில் கிழக்குத் திசையில் உதிக்கும். பின்னர் மாலை சூரியன் முழுமையாக மேற்கு திசையில் மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறையானது பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90 டிகிரியில்) நிலைபெற்றிருக்கும். சூரியன் மறைந்து சுமார் 6 மணி நேரங்களுக்குப் பின் மேற்குத் திசையில் நடுநிசியில் (நள்ளிரவில்) அந்த அரை நிலவு மேற்கில் மறையும்.


மேலும் மாதத்தின் முழு நிலவு (Full Moon) என்னும் பவுர்ணமி நிலவு 14 அல்லது 15-ஆம் தேதியைக் காட்டும். சில மாதங்களில் 13-ஆம் நாளிலும், அரிதாக 16-ஆம் நாளிலும்கூட பவுர்ணமி ஏற்படும். அந்த பவுர்ணமி நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனமாகும்போது, கிழக்குத் திசையில் சந்திரன் முழு நிலவு உதிப்பதை நாம் காணலாம். பின்னர் சூரியன் மறைந்து சுமார் 12 மணிநேரங்களுக்குப் பின் மேற்குத் திசையில் அதிகாலையில் அந்த முழு நிலவு மறைவதையும் காணலாம். சந்திரன் தினமும் கிழக்குத் திசையில் உதித்து மேற்குத் திசையில்தான் மறைகிறது என்பதையும் அது மேற்குத் திசையில் உதிக்க வில்லை என்பதையும் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.


இன்னும் மாதத்தின் கடைசி கால் பகுதி (டுயளவ ஞரயசவநச) க்குரிய 21-வது அல்லது 22-வது தேதியைக் காட்டும் பிறையானது நள்ளிரவு நேரத்தில் கிழக்குத் திசையில் உதிக்கும். அதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில், அது நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருக்கும். பின்னர் நண்பகலில் சூரியன் நம் தலை உச்சியில் இருக்கும் நேரத்தில் அந்த அரைவட்ட நிலவு மேற்கில் மறையும்.


நாம் மேலே குறிப்பிட்டுள்ள இவை பிறைகள் உதித்து மறையும் நேரத்தை தோராயமாக அறிந்து கொள்ளும் முறைதான். பிறையானது எந்தக் கிழமையில், எந்த இடத்தில், எந்த நேரத்தில், எத்தனை மணிநேரத்தில், எத்தனை நிமிடத்தில் மற்றும் நொடிகளில் உதிக்கும் மறையும் என்பதை நாம் அறிவியலின் துணை கொண்டு அறியலாம். மேலும் பிறையானது எந்தக் கோண விகிதத்தில் தற்போது உள்ளது என்பதையும், அது உதிப்பதையும், அதன் வளர்ச்சியையும், பின்னர் அது மறைவதையும், அதன் நிலைகளையும் துல்லியமானக் கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிந்த விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை இங்கு நினைவு படுத்துகிறோம்.


நபித்தோழர் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக முஅத்தாவில் இடம்பெறும் மேற்கண்ட ரிவாயத்தும் ஒரு மாதத்தை துவங்குவதற்கு பிறைகளை கவனமாக அவதானிக்க வேண்டும் என்ற செய்தியைத்தான் சொல்கிறது. தவிர முதல்நாளின் மறையும் பிறையை பார்த்துவிட்டு அடுத்தநாள் மாதத்தை துவங்க வேண்டும் என்ற செய்தி அதில் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம். மேற்படி ரிவாயத்தை தற்போது படித்துப் பாருங்கள்.


''இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களை கொண்டதே! பிறையை நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும் நீங்கள் அதை கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள்;. உங்கள் மீது அது மறைக்கும்போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்''


அதாவது பிறை முதல் தேதியை காட்டினால் மாதத்தின் முதல் நாளில் நாமும் இருக்க வேண்டும். பிறை ரமழானின் ஏழாவது நாளைக் காண்பித்தால் நாமும் ஏழாவது நோன்பை பிடித்திருக்க வேண்டும் என்பதைத்தான் மேற்காணும் ரிவாயத்து விளக்குகிறது. சந்திரன் காட்டும் தேதியும் நமது கிழமையின் தேதியும் சரியான கணக்கில் இருக்க வேண்டும் என்பதே முக்கிய அடிப்படையாகும். இன்னும் 'இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களை கொண்டதே' என்று ஒரு குறிப்பட்ட மாதத்தைக் சுட்டுவதைப் போன்ற வாசக அமைப்பு உள்ளது. மேலும் 'அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்' என்று மாதக் கணக்கீட்டை வலியுறுத்துவதாகவும் இந்த ரிவாயத் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இன்னும் மேற்கண்ட ஹதீஸ் மூலம் ஒரு மாதத்தின் 29-வது நாளின் மாலை, 30-வது நாளின் இரவில்தான் பிறையைத் தேடிப் பார்க்க வேண்டும் என்று விளங்குகிறது என்கின்றனர். இது உண்மையானால், இந்த கருத்தில் வரும் அறிவிப்புகளை ரிவாயத்து செய்த நபித்தோழர் இப்னு உமர் (ரழி) அவர்கள் உட்பட நபித்தோழர்கள் யாரும் மேற்படி 29-வது நாளன்று மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் பிறையைப் பார்க்கச் சென்றிருக்க வேண்டும். அல்லது வேறு யாரையாவது பிறையை பார்த்து வருவதற்கு அனுப்பியிருக்க வேண்டும். இதில் எதையுமே அவர்கள் செய்யவில்லையே ஏன்? சிந்திக்க வேண்டாமா?


அவ்வளவு ஏன் இவ்வாறு மஃரிபு வேளையில் பிறையை பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்தியிருந்தால், கடமையான மஃரிபு தொழுகையை விட்டு ஸஹாபாக்களில் ஒரு சிலராவது பிறை பார்க்கச் சென்றிருக்க வேண்டும். அவர்களுக்கு ஜமாஅத் தொழுகையை தாமதமாக தொழுது கொள்ள நபி (ஸல்)அவர்கள் ஏதாவது சலுகை கொடுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட எந்த சம்பவமும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ, ஸஹாபாக்களின் காலத்திலோ நடைபெற்றதாக எந்தக் குறிப்பும் இல்லையே! ஏன்? சிந்திக்க வேண்டாமா?


நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை அப்படியே அடிபிசகாமல் நடைமுறைப் படுத்தியவர்களே ஸஹாபாக்கள். மார்க்கம் சம்பந்தமாக நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத ஒன்றை ஸஹாபாக்கள் நிச்சயமாக செய்ய மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம். இவற்றை கவனத்தில் கொண்டு இன்று மறையும் பிறையை மஃரிபு வேளையில் பார்த்து விட்டு அடுத்த நாள்தான் முதல் தினம் என்று நினைத்துக்கொண்டு நோன்பையோ, பெருநாளையோ முடிவு செய்ய மேற்காணும் ஹதீஸ் ஒருபோதும் ஆதாரமாகாது. இதை ஸஹாபாக்களின் நடைமுறையை வைத்தே தெளிவுபடுத்துகிறோம்.


நபி(ஸல்) அவர்கள் பிறைகளை கவனிக்கும் வாய்ப்பு கிடைக்காத 'ஈலாஉ' சம்பவத்தில் கூட இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு மாதத்தின் நாட்கள் இருபத்தி ஒன்பதா (29) அல்லது முப்பதா (30) என்பதை ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் வல்ல அல்லாஹ் வஹீ அறிவித்து விட்டான். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் பிறைகளைக் கவனித்து, கணக்கிட்டு வருவதில் மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக. 'ஈலாஉ' சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து அந்த மாதம் 29 நாட்கள் என்று கூறியதாக இடம்பெறும் ஸஹீஹான ஹதீஸ் நஸாஈ கிரந்தத்தில் 2104-வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


பிறையைப் பார்த்த பின்புதான் மாதத்தைத் துவங்க வேண்டும். அல்லது பிறையைப் புறக்கண்ணால் பார்க்காமல் மாதத்தை முடிக்கவோ துவங்கவோ கூடாது. இவைதான் மார்க்கம் சட்டம் என்றால், அதற்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்திருப்பானா? இறை வஹியின் வெளிப்பாடு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின்னர் இல்லை என்பதால், மாதத்தைத் துவங்கவும், அதை சரியான நாளில் முடிக்கவும் நமக்கு பிறைகளை தொடர்ந்து அவதானித்து கணக்கிட்டு வருவதைத்தவிர வேறு வழியில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

9. பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க நிபந்தனையா?

இன்னும் சிலர் மேற்கண்ட ஹதீஸின் லாதஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால் வலா தப்ஃதிரு ஹத்தா தரவ்ஹூ- என்ற வாக்கியத்தை மட்டும் வைத்துக் கொண்டு ரமழானுக்காக பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்ப்பது என்பது ஷரத்து (நிபந்தனை), கண்ணால் பார்ப்பது என்பது ஒரு கண்டிஸன். எனவே பிறந்த பிறையை பார்ப்பது என்பது ஒரு வஸீலா வழிமுறை அல்ல என்று மக்கள் மத்தியில் தவறான செய்தியை பிரச்சாரமாக வைக்கின்றார்கள். மேலும் பிறந்த பிறையை கண்ணால் பார்ப்பது என்பது கட்டாயம் அதனால்தான் லா - ஹத்தா என்ற வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. பஸ் டிக்கட் எடுக்காமல் பஸ்ஸில் பிரயாணம் செய்யக்கூடாது. இது நடக்காமல் அது நடக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


இதில் நாம் என்ன கேட்கிறோம் என்றால் மேகமூட்டத்தைக் காரணம்காட்டி 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை 30 நாட்களாக ஆக்கும்போது இதே பஸ் டிக்கட் கதையின் நிலை என்ன? அப்போது மட்டும் பிறையைப் புறக்கண்களால் பார்ப்பது என்பது 'ஷரத்து' (நிபந்தனை), கண்ணால் பார்ப்பது என்பது ஒரு 'கண்டிஸன்' என்ற பிடிவாதங்கள் தளர்ந்து விடுவதேன்?. 30-வது நாள் பிறைப்பார்க்கத் தேவையில்லை என்று எந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை இவர்கள் மக்கள் மன்றத்தில் காட்டுவார்களா? பயணச்சீட்டு எடுக்காமல் பேருந்தில் பிரயாணம் செய்யக்கூடாது என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். அது பேருந்து பயணத்திற்கும், பயணச்சீட்டிற்கும் இந்த உதாரணம் ஒத்துப்போகும். ஆனால் பிறந்த பிறையை அறிந்து கொள்வதற்கு இந்த உதாரணம் பொருந்தாது என்கிறோம்.


காரணம் ரமழான் மற்றும் பெருநாட்களை தீர்மானிப்பது என்பது மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம். எனவே மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு குர்ஆன் சுன்னாவிலிருந்துதான் தெளிவான ஆதாரத்தைத் தரவேண்டும். பஸ் டிக்கட் உதாரணங்கள் எங்களுக்குத் தேவையில்லை என்கிறோம்.


மேலும் மேற்படி ஆலிம்கள் எனப்படுவோர் பிறந்த பிறையை மேற்குத்திசையில் மஃரிபு நேரத்தில் 29-வது நாள் பின்னேரம் என்ற அந்த ஒரு நாள் மட்டும் புறக்கண்ணால் (அல்லது தொலை நோக்கியால்) பார்த்து மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர். மாற்றுக் கருத்துடையோரின் இந்த நம்பிக்கையின்படி புறக்கண்ணால் பிறை பார்த்தல் என்பது ஷரத்து (நிபந்தனை) என்பதும், புறக்கண்ணால் பார்ப்பது என்பது ஒரு கண்டிஸன் என்பதும் மார்க்கம் என்றிருந்தால்...


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 29-வது நாள் பின்னேரம் என்ற அந்த ஒருநாள் மட்டும் பிறையை பார்த்திருக்க வேண்டும்.

அதுவும் மேற்குத் திசையில் மஃரிபு நேரத்தில் புறக்கண்களால் பிறையை பார்க்குமாறு இந்த உம்மத்திற்குக் கட்டளையிட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் தானும் பார்த்து, பிறரையும் தவறாது பார்த்து வரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருக்க வேண்டும்.

இன்னும் பிறந்த பிறையைப் பார்த்து வருவது முஸ்லிமான ஒவ்வொரு ஆண் பெண் மீதும் கடமையான விதியாக ஆக்கி இருக்க வேண்டும்.

இதில் ஒன்றைக்கூட நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லையே ஏன்? நபி (ஸல்) அவர்களே செய்யாத போது மார்க்கத்தில் இல்லாத ஒரு நிபந்தனையை மார்க்கத்தின் பெயரால் புகுத்தி முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்கிறோம்.


حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري قال عروة بن الزبير قالت عائشة رضي الله عنها ............... ثم قام النبي صلى الله عليه و سلم من العشي فأثنى على الله بما هو أهله ثم قال ( ما بال أناس يشترطون شروطا ليس في كتاب الله من اشترط شرطا ليس في كتاب الله فهو باطل وإن اشترط مائة شرط شرط الله أحق وأوثق ) صحيح البخاري - (2 ஃ 756) 2047 - ஸ


பின்னர் இஷாவில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே (உரையாற்ற) எழுந்து நின்று, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அவனைப் புகழ்ந்துரைத்துவிட்டு, 'சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை எல்லாம் விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனை எதுவாயினும் அது செல்லாததாகும்; அவர்கள் நூறுமுறை நிபந்தனையிட்டாலும் சரியே. அல்லாஹ்வின் தீர்ப்பே பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானதும் (கட்டுப்படுத்தக் கூடியதும்) ஆகும். வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும்' என்று கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்: புகாரி 2047, 2729.


குர்ஆனுக்கு எதிராகவும், நபிவழிக்கு எதிராகவும், நூறு நிபந்தனைகளைக் கூறி மக்களை பிறை விஷயத்தில் குழப்பும் இயக்கங்கள், ஜமாஅத்துகள், அரசாங்கங்கள் மற்றும் தலைவர்கள் மேலே சுட்டிக்காட்டியுள்ள நபிமொழியை ஒன்றுக்கு பலமுறை படித்துப்பார்த்து தங்களை திருத்திக் கொள்ளுமாறு உபதேசிக்கிறோம். பிறையை பார்க்கச் சொல்லி மக்களுக்குக் கட்டளையிடுபவர்கள் இவ்வாறு பிறருக்கு உபதேசிக்கும் முன்னர் முதலில் அவர்கள் பிறைகளை பார்த்து வருவதற்கோ, அதற்காக முயற்சி எடுப்பதற்கோ முன் வராதது ஏனோ?


எனவே பிறைகளை பார்ப்பது என்பது இறைவனின் நாட்காட்டியான பிறையின் படித்தரங்களை அவதானித்து அறிந்துகொள்ளும் ஒருவழிமுறைதானே தவிர அது கட்டாயக் கடமையல்ல என்பதை மக்களே நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று பேசும் அறிஞர்களில் எத்தனை பேர் அவ்வாறு பிறைகளை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்? அல்லாஹ்விற்காக அவர்கள் நெஞ்சத்தில் கைவைத்து சொல்லட்டும்.


இன்னும் சில அறிஞர்களோ, அரபு மொழியின் அகராதிப்படியும் அதன் இலக்கணத்தின் படியும். ரஆ, ரஅய்தும், தரவ்ன போன்ற சொற்கள் எந்த இடத்தில் வந்தாலும் நேரடி அர்த்தமான கண்ணால் பார்த்தல் என்ற பொருள் மட்டும் தான் கொள்ள வேண்டும். மேலும் கருவியின் துணைகொண்டு பார்த்தாலும் கண்ணால்தான் பார்க்கிறோம் என்றும் கூறுகிறார்கள். மேலும் ரஆ என்ற வார்த்தை செயல்பாட்டு வினையைக் குறிக்கிறது. பார்த்தான் என்றால் எதைப் பார்த்தான் என்ற கேள்விக்கு அவன் பார்த்த பொருளின் பெயர் விடையாக வரும். இத்தகைய ஒரேயொரு செயல்பாட்டுவினை மட்டும் ஒரு வாக்கியத்தில் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள். ஒன்றுக்கு அதிகமான செயல்பாட்டு வினை ஒரு வாக்கியத்தில் இருந்தால்தான் பார்த்தல் என்ற விதியோடு மற்ற பொருளும் வரும் என்று தங்களது அரபுப் புலமையை மக்களிடத்தில் வெளிப்படுத்துகின்றனர்.


முதலில் வினை என்றால் என்ன? செயல்பாட்டுவினை என்றால் என்ன என்பதைக்கூட அறியாத இவர்களின் பேச்சைக் கேட்கும் அரபுமொழி தெரியாத மக்களும் நமது ஆலிம் அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றனர். மேலும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக என்ற அத்தியாயாத்தில் யானைக் கூட்டத்தை அல்லாஹ் என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா? என்று அல்லாஹ் கேட்கிறான். இதில் யானைக்கூட்டம் என்பது ஒரு பெயர்ச்சொல், இங்கு அல்லாஹ் என்ன செய்தான் என்பது VERB(வினை), எனவே அரபு அகராதியின் விதிப்படி இரண்டு வினைகளைப் பார்த்தல் (தரா) என்று கூறப்பட்டால் அதை சிந்தனையால், கற்பனையால் பார்த்தல் என்ற பொருளைக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, இதா ரஅய்துமுல் ஹிலால்...ஸூமு லி ருஃயத்திஹி...லாத ஸூமு ஹத்தா தரவுல் ஹிலால் போன்ற ஹதீஸ் சொற்றொடர்களில் பிறந்த பிறையைப் பார்த்தல் என்ற ஒரு செயல்பாட்டு வினைதான் வருகிறது எனவே பிறந்த பிறையைப் புறக்கண்களால்தான் பார்க்கவேண்டும் என்று தங்களது தவறான வாதத்தை நிலைநாட்ட முற்படுகிறார்கள்.


மக்களே சற்று சிந்தியுங்கள்! மேற்கண்ட வாதத்தின்படி அல்ஃபீல் அத்தியாத்தின் 'அலம்தர கைஃப ஃபஅல ரப்புக்க' என்ற வசனங்களில் 'யானைக் காரர்கள்' என்ற 'ஒரு பெயர்ச்சொல்'லும், 'அல்லாஹ் என்ன செய்தான்?' என்பதில் 'செய்தான்' என்ற 'ஒரு வினையும்'தானே உள்ளது. அந்த வசனத்தில் இவர்கள் கூறியுள்ளபடி ஒரேயொரு வினைச் சொல்தானே வந்துள்ளது. ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்பதே இவர்களின் வாதம். இவர்கள் இயற்றியுள்ள இப்புதிய அரபு இலக்கண விதிப்படி பார்த்தால், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னரே அப்ரஹாவின் யானைப்படை அழிக்கப்பட்ட அச்சம்பவத்தை நபி (ஸல்)அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்ற பொருள் அல்லவா வருகிறது.


இன்னும் இறைவன் ஆது கூட்டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6) என்பதிலும் 'அலம்தர கைஃப ஃபஅல ரப்புக்க' என்ற சொற்றொடரே வந்துள்ளன. இங்கும் ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான்? என்பதில் 'செய்தான்' என்ற ஒருரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்று கூறும் இவர்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆது கூட்டத்தார் அழிந்ததையும், நபி (ஸல்) அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா? சொன்னாலும் சொல்வார்கள்.


அதுபோல வானங்கள் படைக்கப்பட்ட முறையைப் பற்றி சிந்திக்குமாறு வல்ல அல்லாஹ் கூறுகிறான். ''ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?'' (71:15) என்று குறிப்பிடுகிறான். மேற்கண்ட வசனம் தூண்களின்றி படைக்கப்பட்டுள்ள வானம் அடுக்கடுக்காவும் இருக்கின்றன என்ற அற்புதத்தைப் பற்றி சிந்திக்கவே தூண்டுகிறது. இந்த வசனத்தில் இடம்பெறும் 'பார்க்கவில்லையா' என்ற சொல்லை வைத்துக் கொண்டு ''நான் வானத்தைப் பார்த்தேன், எந்த அடுக்குகளும் என் கண்களுக்குத் தெரியவில்லை, வெறும் நீலநிறமாகத்தான் தெரிகிறது'' என்று எவரும் கூறினால் அவரை என்னவென்று சொல்வோம்?.


இன்னும் ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்றும், ஒன்றுக்கு அதிகமான செயல்பாட்டு வினை அவ்வாக்கியத்தில் இருந்தால்தான் சிந்தனையுடன் பார்த்தல் என்றும் இத்தகைய இலக்கண விதியை இவர்களுக்கு சொன்னது யார்? இந்த இலக்கண விதி எங்கே உள்ளது? எந்த இலக்கணப் புத்தகத்திலும் காணக்கிடைக்காத இந்த இலக்கண விதிக்கு மார்க்க ஆதாரம் அல்லது அங்கீகாரம்தான் என்ன? என்பதை முதலில் சொல்லட்டும். அதன்பிறகு தங்களின் தவறான இந்த வாதங்களை பிரச்சாரம் செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இப்படி ஒரு விதிமுறை அரபு இலக்கணத்தில் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை நிலை. ஒரு வாதத்திற்காக அரபு இலக்கணத்தில் இப்படி ஒரு கருத்து இருப்பதாகவே வைத்துக் கொள்வோம், அப்படி இருந்தால் மனிதன் தனது கரங்களால் இயற்றிய அரபு இலக்கணம் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அடிப்படை ஆதாரமாகுமா? என்பதை அவர்கள் முதலில் விளக்க வேண்டும். இது சமத்பந்தமாக லிஸானுல் அரப் எனும் அகராதி நூலில் இடம்பெற்றுள்ள கருத்தின் விளக்கத்தை விமர்சனம் பகுதியில் காண்பீர்கள்.


மாற்றுக் கருத்தினரின் தற்போதைய வாதப்படி பார்த்தாலும் வினைச் சொல் வரும்பொழுது தான் கண்ணால் பார்;ப்பதா? அறிவால் பார்ப்பதா? என்ற வாதப்பிரதிவாதங்கள் ஏற்படும். ஆனால் வினைச்சொல் அல்லாத பிற சொற்களோ, 'ருஃயத்' (மஸ்தர்) போன்ற பெயர்ச் சொல்லோ பிறைதொடர்பான ஹதீஸ்களில் வரும்போதும் இதே சர்ச்சையை ஏன் கிளப்புகின்றார்கள்? இதிலிருந்து இவர்களது அரபுப் புலமையின் நிலைமையை நாம் அறிந்து கொள்ளலாம். 'புறக்கண்ணால் பார்த்தல்' என்பதற்கு அல்குர்ஆன் மூலம் வல்ல அல்லாஹ் 'ரஃஅய்யல் அய்ன்' என்ற பதத்தை பயன்படுத்தி விளக்கிவிட்டதை ஒன்று சேர்ந்து மறைப்பதேன்?


மக்களே! நபி (ஸல்) அவர்கள் மக்கத்து குறைஷி ஆலிம்களின் தலைமைப்பீடமான 'தாருந்நத்வா' அறிஞர்களிடம் இஸ்லாம் என்னும் இறைச்செய்தியை எடுத்துச் சொன்னார்கள். அப்போது 'தாருந்நத்வா'வின் ஆலிம்களாக வீற்றிருந்த அபூஜஹிலும் அவனது கூட்டாளிகளும் இதே அரபுமொழி இலக்கணப் பெருமையைத்தான் பேசினார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். உண்மையை மறைத்து பொய்களை இட்டுக்கட்டி சத்தியத்தை எதிர்த்ததற்காக இறுதியில் இறைச்சாபம் பெற்று அவர்கள் அனைவரும் அழிந்தே போயினர் என்பது முஸ்லிம்கள் எவரும் மறக்கவியலாத வரலாறு.


இன்றைய ஆலிம்களில் சிலர் நபிமார்களின் வாரிசுகளாக தங்களை நம்புகின்றனர். தங்களின் பிறை நிலைப்பாட்டிற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து ஆதாரத்தைத் தராமல் இல்லாத இலக்கணத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாமிய மார்க்கத்திற்கு அடிப்படை ஆதாரமாகாத அகராதி வியாக்கியானங்களையும், யூத தயாரிப்பில் வெளியான 'முன்ஜித்' போன்ற அரபுமொழி அகராதியை கூட கையில் எடுத்துக் கொண்டு, பிறந்த பிறையைப் புறக்கண்ணால்தான் பார்க்கவேண்டும், அதுதான் மார்க்கம் என்று பிடிவாதமாக பேசுகின்றனர். இது அழகல்ல, மாறாக அது 'தாருந்நத்வா' குரைஷிகளின் வாதமேயாகும்.


ஆக்கத்தின் இப்பகுதி இலக்கணமா? அல்லது குறைஷிகளின் தலைக்கனமா? என்று ரீதியில் அமைந்திருப்பது தங்களுக்கு நெருடலாக இருக்கலாம். மாற்றுக் கருத்துடைய உலமாக்களை தலைக்கனம் பிடித்தவர்கள் என்று வசைபாடுவது நமது நோக்கம் அல்ல. அல்லது அவர்களை மக்கத்து குறைஷிகளோடு ஒப்பிட்டுக் கூறவேண்டும் என்ற எண்ணமும் நமக்கில்லை. நமது உள்ளத்தை அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான். ஆலிம்களை குறை காண்பதற்காக இப்படி ஒரு தலைப்பை நாம் இதற்கு சூட்டவில்லை. குடும்பம், பொருளாதாரம் என்று பல நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் சத்திய மார்க்கத்தை நிலைநாட்டும் இலட்சியப் பாதையில் தூய மனதுடன் பயணித்துக் கொண்டிருக்கும் கனிசமாக ஆலிம்கள் இன்றும் இருக்கின்றனர். அவர்களை நன்றியுடன் இத்தருனத்தில் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம். இருப்பினும் இப்பிறை விஷயத்தில் ஆலிம்கள் என்று அறிப்படும் மாற்றுக் கருத்துடைய ஒருசிலர் செய்யும் பிரச்சாரங்கள் ஒட்டுமொத்த ஆலிம்களின் கண்ணியத்தையும் பாதிப்பதாக அமைகிறது. எனவே அகராதி விளக்கம், இலக்கண இலக்கியம் என்று பெருமை பேசித் திரியும் அப்படிப்பட்;ட ஆலிம்களின் கருத்துக்களுக்குத்தான் இப்பகுதியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இன்னும் தற்போதைய யூத, கிருஸ்துவர்கள்கூட திருமறைக் குர்ஆனை தவறாக விமர்சனம் செய்யும்போது, இதே அரபு இலக்கணத்தை மேற்கோள்காட்டியே விமர்சிக்கின்றனர் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் இப்படி எழுதியுள்ளதை வைத்துக் கொண்டு அரபு இலக்கண, இலக்கியத்தையும், அரபுமொழி அகராதியையும் ஹிஜ்ரி கமிட்டி எதிர்க்கிறது என்றும் எண்ணிவிட வேண்டாம். நமது மார்க்க விஷயமாக ஒரு சட்டத்தைச் சொல்வதற்கு அவை அடிப்படை ஆதாரமாகாது என்கிறோம். குர்ஆன், சுன்னாவிலிருந்து ஆதாரத்தைத் தாருங்கள், இவ்விரண்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்று சொல்வதைப் புரிந்து கொள்ளுங்கள்.


இப்பிறை குழப்பத்தை தீர்ப்பதற்கான தீர்வுகளையும், வழிமுறைகளையும் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிவழியில் இருந்து மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகிறோம். இந்நிலையில் நமது கருத்திற்கு நேரடியான பதிலை அளிக்காமல் அகராதி விளக்கம், இலக்கண இலக்கியம் என்று மாற்றுக் கருத்துடையோர் விஷயத்தை திசை திருப்புவது சரியான செயல் அல்ல என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

10. 'யவ்முஷ்ஷக்' (சந்தேகமான நாள்) என்ற வாதம் எடுபடுமா?

மேலும் இவர்களின் ஆராய்ச்சியின் உச்சகட்டமாக 'யவ்முஷ்ஷக்' يوم الشك சந்தேகமான நாளில் நோன்பு வைக்கக்கூடாது என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளை. லா தஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால் - பிறந்த பிறையைக் காணாமல் நோன்பை நோற்காதீர்கள் என்பதில்தான் ஷக்குடைய நாள் என்பது சாத்தியப்படும். எனவே காலண்டரை பின்பற்றினால் 'யவ்முஷ்ஷக்' يوم الشك என்ற நாளே இல்லாமல் போகும் என்கின்றனர். காரணம் இன்னென்ன நாட்களில் நோன்பு மற்றும் பெருநாள் என்று சந்தேகமற அறியப்பட்டுவிடும் ஆகையால் 'யவ்முஷ்ஷக்' يوم الشك சம்பந்தமான ஹதீஸை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் கூறுகின்றனர்.


இத்தகைய சால்ஜாப்புகள், போலி பேணுதல்கள் எல்லாம் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் மட்டும் பார்க்க வேண்டும் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டியவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியைக் காட்டுகிறது என்று மக்கள் விளங்கிக் கொள்வார்கள். காலண்டரை பின்பற்றினால் 'யவ்முஷ்ஷக்' يوم الشك என்ற நாளே இல்லாமல் போகும் என்று இவர்கள் கூறுவதால் சந்தேகத்திற்குரிய நாள் என்று ஒருநாள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் போலும்?


மார்க்கத்தில் 'யவ்முஷ்ஷக்' என்ற ஒன்று உண்டா? அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதலும்தானே இஸ்லாமிய மார்க்கம். இதில் 'யவ்முஷ்ஷக்' அதாவது சந்தேகத்திற்குரிய நாள் என்பது உண்டென்றால் அதைப்பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லியிருக்க மாட்டார்களா? எனவே 'யவ்முஷ்ஷக்' பற்றி பேசுவோர் திருமறை குர்ஆனிலிருந்து நேரடியான வசனத்தை ஆதாரமாகத் தந்துவிட்டு பேசட்டும். அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக ஸஹீஹான ஒரு ஹதீஸையாவது இதற்கு ஆதாரமாகக் காட்டட்டும்.


இப்படி நாம் கூறியவுடன் ஒருவேளை இதோ அதற்கு ஆதாரம் என்று கீழ்க்காணும் ஸஹாபியுடைய கூற்றை ஹதீஸ் என்று நினைத்துக் கொண்டு சொல்லக்கூடும்.


صحيح البخاري - (2 / 673)


وقال صلة عن عمار من صام يوم الشك فقد عصى أبا القاسم صلى الله عليه و سلم


எவர் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு வைக்கிறாரோ அவர் அபுல்காஸிமிற்கு மாறு செய்து விட்டார். அறிவிப்பாளர் - அம்மார் பின் யாஸிர் ரழி, நூல் : புகாரி - 2ஃ673.


ஹாகிமிலும் இதே அறிவிப்பாளரால் ஒரு அறிவிப்பு உள்ளது. அச்செய்தியில் இடம்பெறும் அல்இஸ்ஹாக் மற்றும் அபூஹாலித் என்பவர்களைப் பற்றி விமர்சனங்கள் உள்ளன. அந்த செய்தி தெளிவான விமர்சனத்திற்குட்பட்டது என்பதை கருத்தில் கொண்டும், ஆக்கத்தின் நீளம் கருதியும் இங்கே தவிர்க்கிறோம்.


இருப்பினும் அபுல்காஸிமை நிராகரித்துவிட்டார் என்று படர்க்கையில் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட செய்தி நபித்தோழர் அம்மார் பின் யாஸிர் (ரழி) அவர்கள் கூறியதாக அவர்களது சொந்த கூற்றாகத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிவிப்பை மவ்கூஃப் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுகிறார்கள். மவ்கூஃப் என்றால் நபித்தோழரின் சொந்தக்கூற்று, நபி (ஸல்) அவர்களின் கருத்தல்ல என்பதாகும். மேற்காணும் அறிவிப்பை ஆய்வு செய்வது நமக்கு கட்டாயமில்லை என்றாலும், மேற்கண்ட அறிவிப்பை 'யவ்முஷ்ஷக்' என்பதற்கு ஆதாரமாக யாரும் கருதினால் நபித்தோழர்களின் சொந்தக்கூற்று மார்க்க அடிப்படை ஆதாரமாகுமா? என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.


'யவ்முஷ்ஷக்' பற்றி அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் நேரடி கூற்றாக வரும் ஒரு ஸஹீஹான ஹதீஸையாவது தாருங்கள் என்றே நாம் கேட்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். அப்படி ஒரு ரிவாயத்தும் இல்லை. இருக்கவும் முடியாது, காரணம் அல்லாஹ் ஆண்டுகளின் எண்ணிக்கையை உலகம் படைக்கப்பட்ட நாளிலேயே நிர்ணயம் செய்துவிட்டான் என்று திருமறை குர்ஆன் கூறுகிறது. ஒவ்வொரு நாளுக்கு சந்திரனின் படித்தரங்களை விதியாக்கி விட்டதாக வல்ல அல்லாஹ் கூறியுள்ளான். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் எவ்வித சந்தேகமுமற்ற, வெண்மையான, வெளிச்சம் நிறைந்த பாதையாகும். நமது மார்க்கம் தீனுல் இஸ்லாம் தெளிவான ஒரு வாழ்க்கை நெறியாகும். அதில் 'யம்முஷ்ஷக் - சந்தேகத்திற்குரிய நாள்' என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதற்கு கீழ்க்காணும் இறைவசனங்களும், நபிமொழிகளும் ஆதாரங்களாக உள்ளன.


إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ [التوبة : 36]


நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு புனிதமானவை இதுதான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் எவ்விதமெல்லாம் முழுமையாக உங்களை எதிர்கின்றார்களோ அவ்விதமெல்லாம் நீங்களும் முழுமையாக எதிர்க்கவும். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9:36)


4477 - عَنْ أَبِى بَكْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « إِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبٌ شَهْرُ مُضَرَ الَّذِى بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ …………………. صحيح مسلم - (5 / 107)


ஹஜ்ஜத்துல் விதாவில் (மினாவில் உரையாற்றிய போது) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து ரஜப் மாதம் ஆகும். என அபூ பக்ரா(ரழி) அறிவித்தார்கள். நூல்: முஸ்லிம் 4477.


ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள்தாம் என்பதில் எத்தனை வாரங்கள்? எத்தனை நாட்கள்? எத்தனை மணிநேரங்கள்? உட்பட அனைத்தும் அடங்கி விடுகின்றன. ஒவ்வொரு மாதத்திற்கும் இத்தனை நாட்கள்தாம் என்று வல்ல அல்லாஹ் நிர்ணயித்துவிட்டதை 'யவ்முஷ்ஷக்' என்று கூறிக்கொண்டு யாராலும் முன்பின்னாக மாற்றிவிட முடியாது. அதாவது ரமழானுக்குரிய நாளை ஷஃஅபானிலும், ஷவ்வாலுக்குரிய நாளை ரமழான் மாதத்திலும் சேர்க்க முடியாது. அவ்வாறு மாற்றுவது இறைநிராகரிப்பாகும் என்று திருக்குர்ஆன் (9:37) எச்சரிக்கிறது. மேலும், காலத்தைத் திட்டாதீர்கள் ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வே காலமாக இருக்கிறான் (முஸ்லிம் 2246) என்று காலத்தின் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு உணர்த்தியுள்ளார்கள்.


إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَالِهِمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ [التوبة : 37]


முன்னும் பின்னும் மாற்றுவது நிராகரிப்பையே (குஃப்ரையே) அதிகப்படுத்துகிறது. இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அதை (முன்னும் பின்னும் மாற்றுவதை) அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்; மற்றொரு வருடத்தில் அதைத் (முன்னும் பின்னும் மாற்றுவதைத்) தடுத்து விடுகின்றனர். அல்லாஹ் தடுத்திருக்கும் எண்ணிக்கைக்குச் சரியாக்கி கொண்டு, அல்லாஹ் தடுத்ததை தாங்கள் ஆகுமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் தீச்செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ், நிராகரிக்கும் (காஃபிர்கள்) கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் (9:37)


6001 - عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِى ابْنُ آدَمَ يَقُولُ يَا خَيْبَةَ الدَّهْرِ. فَلاَ يَقُولَنَّ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ. فَإِنِّى أَنَا الدَّهْرُ أُقَلِّبُ لَيْلَهُ وَنَهَارَهُ فَإِذَا شِئْتُ قَبَضْتُهُمَا ». صحيح مسلم - (7 / 45)


ஆதமுடைய மகன் என்னை நோகச் செய்கின்றான். அவன் காலத்தின் நாசம் என்று கூறுகின்றான். உங்களில் எவரும் காலத்தின் நாசம் என திட்டவேண்டாம். ஏனெனில் நிச்சயமாக நானே காலமாக இருக்கின்றேன். அதன் இரவையும் பகலையும் நானே மாற்றுகின்றேன். நான் நினைத்தால் அவை இரண்டையும் பிடித்து வைப்பேன். அறிவித்தவர் : அபூஹூரைரா (முஸ்லிம் 2246) என்று காலத்தின் முக்கியத்துவத்தை அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு உணர்த்தியுள்ளார்கள்.


இன்னும் 'யவ்முஷ்ஷக்' يوم الشك என்ற நாளே இல்லாமல் போகுமே என்று கவலையுறுவதுபோல காட்டிக் கொள்கின்றனர். அப்படியானால் முஸ்லிம் சமுதாயம் பிரிந்து விடக்கூடாது, நாம் அனைவரும் ஒற்றுமையாக ஓர் அணியில் இருக்கவேண்டும் என்று எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் மூலம் வல்ல அல்லாஹ் எச்சரித்திருந்தும் அவ்வசனங்களை நடைமுறைப் படுத்துவதில் கவலை கொள்வதாகத் தெரியவில்லையே. மேற்படி ஒற்றுமையை வலியுறுத்தும் அவ்வசனங்களைப்பற்றி கொஞ்சம்கூட சிந்திப்பது


மில்லை, அதற்கான முயற்சிகளை எடுப்பமுமில்லை.


எங்கள் மத்ஹபு, எங்கள் தரீக்கா, எங்கள் ஜமாஅத்து, எங்கள் இயக்கம், எங்கள் கட்சி, எங்கள் அமைப்பு என்ற குறுகிய சிந்தனைகள் இந்த முஸ்லிம் உம்மத்திற்குள் விதைக்கப்பட்டு, உம்மத்தன் வாஹிதா என்ற இந்த மாபெரும் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம் கூறுபோடப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பிறைவிஷயத்தை பேசும்போது மட்டும் காலண்டரை பின்பற்றினால் 'யவ்முஷ்ஷக்' - يوم الشك என்ற நாளே இல்லாமல் போகும் என்று கூறும் அறிஞர்கள் மேற்கண்ட பிரிவினை விஷயத்தில் விதிவிலக்கானவர்கள் அல்லர். இதை இந்த ஆய்வுக் கட்டுரையின் இந்த வரிகளை படித்துக் கொண்டிருக்கும் உங்கள் ஆழ்மனதே தெரிவிக்கும். இதே அறிஞர்களிடம் முஸ்லிம்கள் அனைவரும் 24 மணிநேரங்கள் கொண்ட ஒருநாளில் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்று நாம் கூறினால் ஒற்றுமை கோஷம் போட வந்துவிட்டார்களோ என்று நம்மை நையாண்டி செய்து நாம் முன்வைக்கும் குர்ஆன் சுன்னாவின் ஆதாரங்களை சுலபமாகத் தட்டிவிடுவதையும் பார்க்கிறோம்.


இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக 72 கூட்டம் சம்பந்தமாக முன்அறிவிப்பு என்று மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வரும் பலவீனமான அறிவிப்பை காரணம் காட்டுவர். இந்த உம்மத்து பிரிந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கைதான் அந்த 72 கூட்டம் சம்பந்தமான அறிவிப்பில்கூட உள்ளது. இந்நிலையில் முஸ்லிம் உம்மத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களின் பிரிவினைக்கான காரணத்தை நியாயப்படுத்தி தாங்கள் மட்டும்தான் நேர்வழிபெற்ற ஒரே கூட்டம் என்று பெருமை கொள்வதைப் பார்க்கிறோம். ஒற்றுமையை வலியுறுத்தி பிரிவினையைக் கண்டித்துள்ள இறைவனின் எண்ணற்ற கட்டளையையும், இறைதூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் வசதியாகப் புறக்கணிக்கின்றனர். மேற்கண்ட ஒற்றுமை விஷயத்தில் பேணிக்கையைக் காட்டாதவர்கள் 'யவ்முஷ்ஷக்' சம்பந்தமான செய்தியை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடுமே என்ற பாசாங்கு செய்வது அர்த்தமற்றதாகும், வேடிக்கையானதாகும்.


ஆக மார்க்கத்தில் ஆதாரமில்லாத 'யவ்முஷ்ஷக்' என்ற ஒரு நாளை உருவாக்கிக் கொண்டு அதிலிருந்து வாதம் எழுப்புவது அவ்வாறு வாதம் வைக்கும் அறிஞர்களின் அறியாமை என்று நாம் எடுத்துக் கொள்வதா? அல்லது முஸ்லிம்கள் எந்த விஷயத்திலும் ஒன்றுபட்டு விடக்கூடாது என்ற இஸ்லாத்தின் எதிரிகளின் சதிதிட்டமா? அல்லது மார்க்கத்தின் பெயரால் பலனை அடையும் சில சுயநலவாதிகளின் திட்டமிட்ட பிரச்சாரமா? இதில் எது உண்மை என்பதை சம்பந்தப்பட்ட நபர்களே நமக்கு விளக்கிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


இனியும் யவ்முஷ்ஷக் என்ற நாளை நம்புபவர்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடையளிப்பது கடமையாகும்.


1. 'யவ்முஷ்ஷக்' என்ற நாளில் நோன்பு வைக்கக்கூடாது என்பதற்கும், 'யவ்முஷ்ஷக்' நாள் உண்மையிலேயே இருக்கின்றது என்பதற்கும் குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் எங்கே உள்ளது? அந்த நேரடி ஆதாரத்தைத் தரவேண்டும்


2. 'யவ்முஷ்ஷக்' என்ற நாள் இந்தநாள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? அல்லது 'யவ்முஷ்ஷக்' என்ற நாள் 29-வது நாளைக் குறிக்கிறதா? அல்லது 30-வது நாளைக் குறிக்கிறதா? இதற்கான மார்க்க ஆதாரம் எங்கே?


3. 'யவ்முஷ்ஷக்' நாளில் நோன்பு நோற்கக்ககூடாது என்பதை ரமழான் மாதத்தின் இறுதியில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது ?


4. 'யவ்முஷ்ஷக்' என்ற இந்த சித்தாந்தம் ரமழான் நோன்புக்கு மட்டும்தான் பொருந்துமா? மற்ற எல்லா சுன்னத்தான நோன்புகளுக்கும் பொருந்துமா?


5. 'யவ்முஷ்ஷக்' என்ற இந்த சித்தாந்தம் ரமழான் மாதத்திற்கு மட்டும்தான் பொருந்துமா? மற்ற எல்லா மாதங்களுக்கும் பொருந்துமா?


6. மாற்றுக் கருத்துடையோர் ரமழான் முப்பதாவது இரவில் பிறை தென்பட்டு விட்டால் 'யவ்முஷ்ஷக்' என்ற நாள் வராது என்றும் முப்பதாவது இரவில் பிறை தென்படா விட்டால் அந்த நாள் 'யவ்முஷ்ஷக்' ஆகும் என்றும், அப்போது மஃரிபு வேளையிலிருந்து பிறையை தேடி அலையவேண்டும் என்றும் நம்பி பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்கின்றோம் என கூறி மேற்படி 'யவ்முஷ்ஷக்' நாளன்று எவ்வாறு நோன்பை வைக்கின்றார்கள்? இவ்வாறு நோன்பை நோற்பது அபுல் காசிம் அவர்களுக்கு மாறு செய்வதாகாதா?


7. ரமழான் முப்பதாவது இரவில் பிறை தென்பட்டு விட்டால் 'யவ்முஷ்ஷக்' இல்லை என்பதும், அதேவேளையில் அந்த முப்பதாவது இரவில் பிறை பார்க்காமல், பிறை தகவல் பெறாமல் போனாலும் 'யவ்முஷ்ஷக்' நாள்தான் எனக்கூறுவதென்பது முரண்பாடாகத் தெரியவில்லையா?


8. சந்திரனின் படித்தரங்களைப் பற்றிய துல்லியமான கணக்கை அறிந்து, கணக்கிட்டு அதனடிப்படையில் சந்திர கிரகணம், சூரியக் கிரகணம் போன்றவைகளை முன்கூட்டி அறிவிக்கும் இந்த காலக்கட்டத்தில் 'யவ்முஷ்ஷக்' எப்படி ஏற்படும்?


9. பிறை பார்க்கும் எல்கையை 'தத்தம் பகுதி' அல்லது 'தமிழக அளவு' என்று நிர்ணயித்தவர்கள் அவர்களின் 29-வது நாள் பின்னேரம் யவ்முஷ்ஷக் என்று கூறி அடுத்தநாள் ரமழானை 30-நாட்களாக பூர்த்தி செய்கிறோம் என்று அறிவிக்கின்றனர். அதே நாளில், அதே வேளையில் தமிழகத்தில் இருக்கும் சர்வதேசப்பிறைக் கருத்தினர் பிறைபார்த்த தகவல் பிற நாடுகளிலிருந்து வந்து விட்டது என்று நாளை பெருநாள் தினம் என்று அறிவிக்கின்றனர். இவ்வாறு ரமழானை 30-நாட்களாக பூர்த்தி செய்கிறோம் என்று ஒருசாரார் அறிவித்த நிலையில், நாளை பெருநாள் தினம் என்று மற்றொரு சாரார் அறிவிப்பதினால் அவர்களுக்கு யவ்முஷ்ஷக் இல்லாமல் போய்விடுகிறது. எனவே யவ்முஷ்ஷக் என்பது எத்தனை நாட்கள்? அதை வரையறுப்பது எப்படி? என்பதை 'யவ்முஷ்ஷக்' ஜமாஅத்தினர் தெளிவுபடுத்த வேண்டும்.


10. தமிழகப்பிறை, தேசியப் பிறை மற்றும் சர்வதேசப்பிறை நிலைப்பாடுகளிலுள்ளவர்கள் ஒரே இடத்தில் வசிக்கும் வேளையில்கூட யவ்முஷ்ஷக்கு என்ற மாயநாள் வெள்ளி, சனி, ஞாயிறு என்று அவரவர்களின் பிறை நிலைப்பாடுகளுக்கு ஏற்றார்போல மூன்று வௌ;வேறு கிழமைகளில் தனித் தனியாக வருவதேன்? இதுதான் யவ்முஷ்ஷக்கா? மாநில, தேசிய, சர்வதேச எல்லைக்கோட்டிற்கும் யவ்முஷ்ஷக் என்பதற்கும் என்ன சம்பந்தம்? யவ்முஷ்ஷக் என்பதற்கு ஏன் இந்த நிலை?


ஏனெனில் 'யவ்முஷ்ஷக்' என்ற ஒரு மாயநாளுக்கு குர்ஆனிலிருந்து ஒரு ஆயத்தையோ, நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலிலிருந்து ஒரேயொரு ஸஹீஹான ஹதீஸையோ இதுவரை ஆதாரமாகக் காட்டிட இயலாத நிலையிலும் 'யவ்முஷ்ஷக்' என்ற இல்லாத ஒருநாளைப் பற்றி மணிக்கணக்கில் பிரச்சாரம் செய்து அதை இணையதளங்களிலே பரப்பிவிடும் அறிஞர்களை என்னவென்று சொல்வது? நபி (ஸல்) அவர்கள் இந்த முஸ்லிம் உம்மத்தை 'யவ்முஷ்ஷக்' - சந்தேகமான நாள் என்ற சந்தேகத்துடன்தான் வாழும்படி விட்டுச் சென்று விட்டார்கள் போலும் என்று பாமரனும் நினைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. பிறை ஆய்வுகளில் மிகவும் பின்தங்கியுள்ள அவ்வறிஞர்களின் பிரச்சாரங்களின் தொனி இந்த அளவிற்கு சென்று விட்டது. இந்த பேராபத்தின் அபாய விளைவுகளை மேற்படி அறிஞர்கள் என்றுதான் உணர்வார்களோ!


அல்குர்ஆனின் கீழ்க்காணும் வசனங்கள் உட்பட பிறைகளை வைத்து தேதிகளை அறிந்துகொள்வது சம்பந்தமாக வரும் பல்வேறு வசனங்களை நாம் ஆய்வு செய்து பார்க்கையில் 'யவ்முஷ்ஷக்' - அதாவது சந்தேகமான நாள் என்ற ஒன்றை வல்ல அல்லாஹ் ஏற்படுத்திடவே இல்லை என்பதைத்தான் புரிந்திட முடிகிறது.


وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ [يس : 39]


உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளையை போல் திரும்பிவரும் வரை சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம் (36:39) என்று கூறுகிறான்.


هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللَّهُ ذَلِكَ إِلَّا بِالْحَقِّ يُفَصِّلُ الْآَيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ [يونس : 5]


அவன்தான் சூரியனை (சுடர்விடும் ஒளிப்பிளம்பால்) பிரகாசமானதாகவும், சந்திரனை (பிரதிபளிக்கும்) ஒளியாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அதற்கு மாறிமாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்லாஹ் உண்மை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் சமூகத்திற்காக அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (அல்குர்ஆன் 10:5)


صحيح البخاري - (2 / 676) 1815 - حدثنا مسلم بن إبراهيم حدثنا هشام حدثنا يحيى بن أبي كثير عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم صومه فليصم ذلك اليوم )صحيح البخاري - (2 / 676) 1815 - حدثنا مسلم بن إبراهيم حدثنا هشام حدثنا يحيى بن أبي كثير عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم صومه فليصم ذلك اليوم )


ரமழானை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம். வழக்கமாக நோன்பு வைக்கும் மனிதரைத்தவிர. எனவே அந்த நாட்களில் அவர் நோன்பு நோற்றுக்கொள்ளலாம். அறிவித்தவர் : அபூஹரைரா (ரழி) அறிவித்தார். நூல்: புகாரி 1815 (தமிழ் மொழிபெயர்ப்பில் : 1914)


இன்னும் ஷஃஅபான் மாதத்தின் இறுதி தினங்களில் நோன்பு வைக்க கூடாது என்பது நபிவழி. அதுபோல வழக்கமாக நோன்பு வைக்கும் ஒருவர் மாதத்தின் கடைசி நாட்களில் நோன்பு வைக்கலாம் என்பதும் நபிவழியாகும். இதிலிருந்து விளங்குவது என்னவென்றால், வழக்கமாக நோன்பு நோற்பவர் பிறைகளின் தேதிகளை அறிந்து எந்த மாதத்திற்குரிய கிழமைகளில் நாம் நோன்பு நோற்றிருக்கிறோம் என்ற தெளிவுடன் இருப்பார். ரமழான் மாத நோன்பை மட்டும் வைக்கும் ஒருவர் அனுமானமாக இரு தினங்களுக்கு முன்னதாகவோ, ஒரு தினத்திற்கு முன்னதாகவோ நோன்பு வைத்துக் கொண்டு எனக்கு ரமழான் மாதம் முழுமையாக கிடைத்து விட்டது என கூறினால் அவர் இஸ்லாத்தின் பார்வையில் குற்றம் புரிந்தவராகின்றார் என்பதுதான் மேற்கண்;ட ஹதீஸிலிருந்து நாம் பெறவேண்டிய பாடமாகும்.


எனவே ஒருவர் ரமழான் மாத நோன்புகளை மட்டும் நோற்பவராக இருந்தால், அவர் ரமழானின் முந்தைய மாதங்களின் கணக்கையும், தேதியையும் அறியாமல் நோன்பு வைக்கக் கூடாது. அவர் சந்திரனின் படித்தரங்களை கவனித்து அறிந்த பின்னரே நோன்பை ஆரம்பிக்க வேண்டும் அல்லது முடிக்கவேண்டும் என்பதுதான் மேற்படி ஹதீஸ்கூறும் நிபந்தனையாக உள்ளது.


ரமழான் மாதத்தின் ஒரு தினத்திற்கு முன்னதாகவோ, இரு தினத்திற்கு முன்னதாகவோ நோன்பு வைக்க வேண்டாம். இப்படி நபி (ஸல்) அவர்கள் அந்த மக்களுக்கு கட்டளையிட்டுள்ளதை மேற்குறிப்பிடப்பட்டுள்ள புகாரி 1815-வது ஹதீஸ் கூறுகிறது. இதிலிருந்து விளங்கும் இன்னொரு முக்கிய பாடம் என்னவென்றால் அன்றைய சமுதாயம் (ஸஹாபாக்கள்) ஒருமாதம் எப்போது முடிவடையும் என்பதை முற்கூட்டியே அறிந்து கொள்ளும் நிலையில் இருந்துள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.


இன்றைய சர்வதேசப்பிறை, தமிழகப் பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களின் நம்பிக்கைபடி அவர்கள் பிறை பார்க்கும் வரை நோன்பை ஆரம்பிக்க முடியாது. ஏனென்றால் பிறையை பார்க்கும் வரை அல்லாஹ் மாதத்தை நீட்டியுள்ளான் என்று கூறுகின்றனர். மேற்படி ஹதீஸோ ரமழான் துவங்குவதற்கு ஒரு நாளோ இரு நாட்களோ மீதம் இருக்கும் போது நோன்பு வைக்காதீர்கள் என்று கூறுகின்றது. இதை சற்று சிந்திக்க வேண்டுகிறோம். எனவே அன்றைய சமுதாயம் (ஸஹாபாக்கள்) ஒவ்வொரு மாதமும் 29 தினங்களில் முடிகிறதா? அல்லது 30 தினங்களில் முடிகிறதா? என்பதை முற்கூட்டியே அறிந்து கொள்ளும் நிலையில் இருந்துள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. அப்படி இருந்திருந்தால் மட்டும்தான், மாதத்தில் இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருப்பதை அவர்களால் அறிந்து இருக்க முடியும். இன்னும் பிறந்த பிறையை புறக்கண்களால் பார்க்கும் பட(ல)த்தை நடத்தி, மஃரிபில் பிறை காணப்பட்டால் அதற்கு அடுத்தநாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்று அவர்கள் நடைமுறைப் படுத்திட வில்லை என்பதும் தெரிகிறது. காரணம் இப்படிப்பட்ட நடைமுறையால் ஒருமாதம் 29 நாட்களில் முடிகிறதா? அல்லது 30 நாட்களில் முடிகிறதா? என்பதை முற்கூட்டியே அறியமுடியாது.


மேற்படி ஹதீஸை நாம் அலசும் போது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் ஒருமாதம் எப்போது துவங்கும் என்பதைத் துல்லியமாக அறிந்து வைந்திருந்ததை தெரிந்து கொண்டோம். இருப்பினும் ஒருவேளை பேணுதலுக்காக முந்தைய மாத நாட்களையும் ரமழானில் சேர்த்து 32 அல்லது 31 நோன்புகள் வைக்கும் பழக்கத்தை கொண்டிருப்பர். அதனால் மேற்படி உத்தரவின் மூலம் நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்திருக்கலாம். எனவேதான் நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதம் துவங்கும் அந்த முதல் தினத்தில் அனைவரும் நோன்பை சரியாக ஆரம்பித்தே ஆக வேண்டும் என்ற இந்த கட்டளையை கொடுத்துள்ளார்கள் போலும்.


நபி (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அந்த முஸ்லிம் சமுதாயம் (ஸஹாபாக்கள்) எவ்வித விஞ்ஞான முன்னேற்றங்களும் இல்லாத காலத்தில் பிறைகளைக் கவனிப்பதிலும், மாதத்தைத் துல்லியமாக அறிந்து சரியான நாளில் நோன்பை வைப்பதிலும் மிகச்சரியாக செயல்பட்டு முன்னனியில் இருந்துள்ளார்கள். இதைத்தான் மேற்படி புகாரி 1815-வது ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது. இந்நிலையில் இன்றைய தமிழகப் பிறை (தத்தம்பகுதி பிறை), தேசியப் பிறை மற்றும் சர்வதேசப் பிறை நிலைப்பாடுகளில் உள்ளவர்கள் பிறைகளைக் கவனிப்பதிலும், மாதத்தைத் துல்லியமாக அறிந்து சரியான நாளில் நோன்பை வைப்பதிலும் மிகவும் பின்தங்கி ரமழான் மாதத்தில்கூட இரண்டு நோன்புகளையோ அல்லது ஒரு நோன்பையோ சர்வசாதாரணமாக இழக்கும் நிலையில் இருப்பதைப் பார்த்து பரிதாபப்படுகிறோம்.


நாங்கள் நபி (ஸல்) அவர்களைத்தான் முன்மாதிரியாக கருதுகிறோம் என்று வெறுமனே சொல்லிக் கொள்கிறார்களே தவிர பிறை விஷயத்தில் நபி (ஸல்) வழிகாட்டுதலையும், முன்மாதிரியையும் செயல்படுத்துவதாகத் தெரியவில்லை.


இன்னும் நபி(ஸல்) அவர்கள் மூன்றாம் பிறையைத்தான் முதல் பிறையாக எடுத்துக்கொள்ளக் கட்டளையிட் டுள்ளார்கள் என்று நபி (ஸல்) சொல்லாத ஒன்றை அவர்கள் கூறியதாக அவதூறாக பிரச்சாரம் செய்கின்றனர். அப்படி செய்பவர்கள் தயவுசெய்து மேற்படி ஹதீஸை நிதானமாக படித்து தங்களின் தவறான நிலைப்பாட்டை திருத்திக்கொள்ள கடமைப் பட்டுள்ளார்கள். பிறந்த பிறையைப் பார்த்து விட்டுத்தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்பது ஷியாக்களின் வழிமுறை என்ற உண்மையை 'யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்' என்ற தலைப்பில் பின்னர் விரிவாக விளங்கிக் கொள்வீர்கள்.


ஆக 'யவ்முஷ்ஷக்' என்ற பெயரில் நாள் ஒன்று இருப்பதாகவும், அந்த நாளில் முஸ்லிம்கள் நோன்பு வைப்பது ஹராம் என்றும், செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம். மேற்படி ஹதீஸிலும் 'யவ்முஷ்ஷக்' என்ற வார்த்தை எங்கேயும் இடம்பெறவில்லை. 'யவ்முஷ்ஷக்' என்ற பெயரில் ஒருநாள் இருப்பதாகக்கூட அந்த செய்தியில் கூறப்பட வில்லை. ஒரு நாளையோ, இரு நாட்களையோ கொண்டு ரமழான் மாதத்தை முற்படுத்தாதீர்கள் எனக் கூறப்படும் வாசகத்தை வைத்து இரண்டு நாட்களும் 'ஷக்குடைய நாள்'தான் என்றோ, அல்லது ஒரு நாள்தான் 'ஷக்குடைய நாள்' என்றோ யாரும் கூறினால் அது அவர்களின் சுயவிளக்கமும், அறியாமையும், மனோ இச்சையுமே ஆகும். இவர்கள் கூறுவது உண்மையென்றால், ஒருவருக்கு அந்த நாள் சந்தேகமான நாள், மற்றவருக்கு நோன்பு வைக்க அனுமதிக்கப்பட்ட நாள் என்ற இரு நிலைப்பாடுகள் இந்த செய்தியில் உள்ளதால் இவர்களுடைய 'யவ்முஷ்ஷக்' என்ற வாதம் இங்கே தவிடு பொடியாகி விட்டது என்பதை சிந்திப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.


'ஆக அஷ்ஷஹரு திஸ்வூன் வ இஷ்ரூன்... லாத ஸூமு ஹத்தா தரவுல் ஹிலால்' என்ற நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மேற்படி ஹதீஸானது


இருபத்து ஒன்பது நாட்களைக் கொண்ட ஒரு மாதத்தை நம் வசதிக்கேற்ப முப்பதாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை.


இன்னும் முதல்நாள் மஃரிபு வேளையில் அந்தநாளின் மறையும் பிறையைப் பார்த்துவிட்டு இது அடுத்த நாளுக்குறிய பிறையாக அதை கருதிக் கொள்ளுங்கள் என்றும் விளக்கிடவில்லை.


மேலும் பிறந்த பிறையைப் பார்த்து விட்டுத்தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்ற ஷியாக்களின் வழிமுறையையும் கூறவில்லை என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம்.


எனவே பிறைகளின் படித்தரங்களைக் கவனிக்காமல் நோன்பு நோற்காதீர்கள், அவற்றை கவனிக்காமல் பெருநாளை கொண்டாடாதீர்கள். உங்களுக்கு அது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்ற மேற்கண்ட நபிமொழியை வைத்து பிறந்த பிறையைப் புறக்கண்களால்தான் பார்க்க வேண்டும் என்பது தவறான வாதமாகும்.


குறிப்பாக சந்தேகத்திற்குரிய நாளில் (யவ்முஷ்ஷக்) எவரையும் நோன்பு பிடிக்க ஹிஜ்ரி கமிட்டி கூறவில்லை. நபி (ஸல்) அவர்களும் கூட மக்களுக்கு அவ்வாறு கட்டளையிடவு மில்லை. மாறாக எந்த சந்தேகமும் இல்லாமல் துல்லியமாக உள்ள சந்திரனின் படித்தரக் கணக்கின் அடிப்படையில் தங்களின் வணக்க வழிபாடுகளை சரியான நாளில் செய்வதற்காகத்தான் ஹிஜ்ரி கமிட்டி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை ஓய்வின்றி செய்து கொண்டு வருகின்றது. மக்களை மீண்டும் சந்தேகத்திற்குரிய (யவ்முஷ்ஷக்) நாட்களில் கொண்டுபோய் விட்டு அவர்களின் வணக்க வழிபாடுகளை (இபாதத்களை) வீணாக்க முயற்சி செய்பவர்கள்தான் உண்மையில் மக்களிடம் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றார்கள் என்பதையும் இத்தருணத்தில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.


பிறைகள் விஷயத்தில் தங்களுக்கு இருக்கின்ற அறியாமையையும், பின்னடைவுகளையும் மக்கள் விளங்கி விட்டால் அது தங்களுக்கு அவமானமாக ஆகிவிடுமே என்று கருதிய ஆலிம்களின் பெரும்பான்மையினோர் அவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகத்தான் 'யவ்முஷ்ஷக்' போன்ற குழப்பமான கருத்துக்களை முன்னிலைப்படுத்தி மக்களிடையே பிரச்சாரம் செய்து பல சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். அத்தகையோர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டும் நாடி தவ்பா செய்து மீண்டும் தங்கள் ஆய்வுகளை மறுபரிசீலனை செய்து சத்தியத்தைப் பின்பற்றும்படி ஹிஜ்ரி கமிட்டி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றது.


எனவே 'ஸூமு லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி ', 'லா தஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால் வலா தப்ஃதிரு ஹத்தா தரவ்ஹூ' போன்ற ஹதீஸ்களை வைத்து பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டம் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்வது தவறாகும். மாற்றுக் கருத்தினரின் கூற்றுப்படி 29-வது நாளின் பின்னேரம் 30 நாளின் இரவு என்ற அந்தநாளில், மஃரிபு நேரத்தில், மேற்குத் திசையில் பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் உட்பட எந்த ஹதீஸ்களும் ஆதாரமாக இல்லை என்பதும் தௌ;ளத் தெளிவாக நிரூபணமாகி விட்டது.

11. நபியின் (ஸல்) வழியே நம்வழி..!

நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும் நிறைந்த மார்க்கத்தில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் இரவுகூட பகலைப் போல காட்சியளிக்கும். சந்திரனின் படித்தரங்களே ஒவ்வொரு கிழமைக்குரிய தேதிகளாகும் (2:189) என்பதுதான் அல்குர்ஆனின் கூற்றும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுமாகும். சந்திரனின் ஒவ்வொரு நாளுக்குரிய மன்ஜிலில் அமைந்த ஒவ்வொரு வடிவ நிலையும் ஒரு கிழமையைக் குறிக்கும். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதே என்பதை (புஹாரி 1827, 4999, முஸ்லிம் 1861, 1871 போன்ற) ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் இஸ்லாமிய மாதங்களை அமைத்துக் கொண்டார்கள். அவ்வழிமுறையில் அணுவளவும் பிசகாமல் உறுவாக்கப்பட்டதே இந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி ஆகும்.


ஒரு மாதத்திற்குள் இருக்கும் நாட்களின் எண்ணிக்கையில் கூட்டிக் குறைத்து நம் சுய விருப்பப்படி செயல்படக் கூடாது. அவ்வாறு சுய விருப்பப்படி மாற்றினால் அது இறை நிராகரிப்பு என்று வல்ல அல்லாஹ் தனது திருமறையில் (9:37) எச்சரித்து உள்ளான். தற்போது புழக்கத்தில் இருக்கும் கிருஸ்துவ மதப்போதகர் போப் கிரிகோரியன் தயாரித்து வெளியிட்ட ஆங்கில நாட்காட்டியில், நபிவழிக்கு மாற்றமான முறையில் ஒரு மாதத்தின் எண்ணிக்கையை 28 முதல் 31 வரை அமைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். நமது இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டருக்கு முரண்பட்டு உருவாக்கப்பட்டுள்ள அனைத்து காலண்டர்களும் பிழையானதும், வழி பிறழ்ந்ததுமாகும்.


பிறைகளின் அனைத்து வடிவநிலைகளையும் கவனித்தும், கணக்கிட்டும் வரவேண்டும் என்பதே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகும். மேலும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழிகள் சாட்சி பகர்கின்றன.


حدثنا أحمد بن حنبل ، حدثني عبد الرحمن بن مهدي ، حدثني معاوية بن صالح ، عن عبد الله بن أبي قيس ، قال : سمعت عائشة رضي الله عنها تقول :" كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ، ثم يصوم لرؤية رمضان ، فإن غم عليه عد ثلاثين يوما ثم صام " * سنن أبي داود - كتاب الصوم باب إذا أغمي الشهر - حديث : ‏1993‏.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃஅபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட. பிறகு ரமழானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பார்கள். அது அவர் மீது மறைக்கப்படும் போது அவர் அதை முப்பதாவது நாள் என்று எண்ணிக் (Count) கொள்வார்கள் பிறகு நோன்பு வைப்பார்கள்.

அறிவித்தவர் : ஆயிஷா (ரழி), நூல் : அபூதாவூத் (1993)


حدثنا يوسف بن موسى ، حدثنا جرير ، عن الأعمش ، عن أبي صالح ، عن أبي هريرة قال : ذكرنا ليلة القدر عند رسول الله صلى الله عليه وسلم ، فقال رسول الله صلى الله عليه وسلم : " كم مضى من الشهر ؟ " قلنا : مضى اثنان وعشرون ، وبقي ثمان قال : " لا ، بل بقي سبع " قالوا : لا ، بل بقي ثمان قال : " لا ، بل بقي سبع " قالوا : لا ، بل بقي ثمان قال : " لا ، بل بقي سبع ، الشهر تسع وعشرون " . ثم قال بيده ، حتى عد تسعة وعشرين " ، ثم قال : " التمسوها الليلة " . صحيح ابن خزيمة - كتاب الصيام جماع أبواب صوم التطوع - باب ذكر الخبر المفسر للدليل الذي ذكرت حديث : ‏2024‏


நாம் கத்ரு நாளை பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன? என்று வினவினார்கள். அதற்கு 22 நாட்கள் முடிந்துவிட்டன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்களே மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள். இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என அவர்கள் கூறினர். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள். இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என அவர்கள் கூறினர். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன இந்த மாதம் 29 நாட்கள் உரியது என நபி (ஸல்) கூறினார்கள். பிறகு நபி அவர்கள் தன் கையில் 29 நாட்கள் வரை எண்ணிணார்கள். பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் எனக் கூறினார்கள்.

இப்னு குஜைமாஹ் - ஹதீஸ் எண் - 2024.


أخبرنا عبد الله بن محمد الأزدي ، حدثنا إسحاق بن إبراهيم ، أخبرنا جرير بن عبد الحميد ، عن الأعمش ، عن أبي صالح ، عن أبي هريرة قال : ذكرنا ليلة القدر عند رسول الله صلى الله عليه وسلم ، فقال رسول الله صلى الله عليه وسلم : " كم مضى من الشهر ؟ " فقلنا : مضى اثنان وعشرون يوما ، وبقي ثمان ، فقال صلى الله عليه وسلم : " لا ، بل مضى اثنان وعشرون يوما ، وبقي سبع ، الشهر تسع وعشرون يوما ، فالتمسوها الليلة " * صحيح ابن حبان - باب الإمامة والجماعة باب الحدث في الصلاة - ذكر الخبر الدال على صحة ما تأولنا اللفظة التي ذكرناها قبل حديث : ‏2588


நாம் கத்ரு நாளை பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் : மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன? 22 நாட்கள் முடிந்தன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன. இந்த மாதம் 29 நாட்கள் உரியது பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் என கூறினார்கள்.

அறிவித்தவர் : அபூஹூரைரா (ரழி), நூல் : இப்னு ஹிப்பான் (2588).


وأخبرنا أبو بكر أحمد بن الحسن ثنا أبو محمد دعلج بن أحمد السجستاني بمدينة السلام ثنا موسى بن هارون ، قال : قلت لأبي نعيم , أحدثكم أبو إسحاق الفزاري , عن الأعمش ، عن أبي صالح ، عن أبي هريرة ، وأراه قد ذكر ابن عمر قال : كنا عند رسول الله صلى الله عليه وسلم فذكروا ليلة القدر ، فقال رسول الله صلى الله عليه وسلم " كم مضى من الشهر ؟ " قالوا : اثنتان وعشرون وبقي ثمان قال : "مضى اثنتان وعشرون وبقي سبع الشهر تسع وعشرون فالتمسوها الليلة " فقال أبو نعيم : نعم * السنن الكبرى للبيهقي - كتاب الصيام باب الترغيب في طلبها ليلة ثلاث وعشرين - حديث : ‏8018‏


நாம் கத்ரு நாளைப் பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன? 22 நாட்கள் முடிந்தன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன இந்த மாதம் 29 நாட்கள் உரியது பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் என கூறினார்கள்.

அறிவித்தவர் : அபூஹூரைரா (ரழி), நூல் : பைஹகீ (8018).


حدثنا عبد الله بن يوسف ، أخبرنا مالك ، عن يحيى بن سعيد ، عن عمرة بنت عبد الرحمن ، قالت : سمعت عائشة رضي الله عنها تقول : خرجنا مع رسول الله صلى الله عليه وسلم ، لخمس بقين من ذي القعدة ، لا نرى إلا الحج ، فلما دنونا من مكة " أمر رسول الله صلى الله عليه وسلم من لم يكن معه هدي إذا طاف وسعى بين الصفا والمروة أن يحل " ، قالت : فدخل علينا يوم النحر بلحم بقر ، فقلت : ما هذا ؟ قال : نحر رسول الله صلى الله عليه وسلم عن أزواجه صحيح البخاري - كتاب الحج باب ذبح الرجل البقر عن نسائه من غير أمرهن - حديث : ‏1633‏


ஹஜ்ஜை மட்டும் எண்ணத்தில் கொண்டு துல்கஅதா மாதத்தின் ஐந்து நாட்கள் மீதமிருக்கும் நிலையில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும், பலிப் பிராணியைக் கொண்டு வராதவர் வலம் வந்து விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10-ஆம் நாள் மாட்டின் இறைச்சி எங்களுக்கு வந்தது. இது என்ன? எனக் கேட்டேன். மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிகளின் சார்பாகப் பலியிட்டார்கள்' என்றனர். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.


மேற்படி நபிமொழிகளை சற்று ஆய்ந்து படித்தால் ஒரு பேருண்மை வெளிப்படும். அதாவது நபி (ஸல்) அவர்களோ, அவர்களிடம் பாடம் பயின்ற ஸஹாபாக்களோ ஒரு வருடத்திற்கு ஷஃஅபான், மற்றும் ரமழான் மாதங்களில் மட்டும் பிறைகள் குறித்து பேசவில்லை. இன்னும் மாதத்தின் 29-வது நாள் பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்கவுமில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. மேலும் பிறை படித்தரங்களை வைத்து ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற (10:5) அல்லாஹ்வின் கட்டளையை அன்று இருந்த ஒரே வழிமுறையான பிறைகளை புறக்கண்களால் கவனித்தும், ஒரு மாதம் அளவுக்குக் கணக்கிட்டும் வந்துள்ளது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரிகிறது.


மேலும் நபி (ஸல்) அவர்கள் தங்களது வாழ்நாளில் ரமழான் மாதத்தில் 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். ஒரு ரமழானின் முதல் பத்து நாட்களிலும், மற்றொரு ரமழான் மாதத்தில் நடுப்பத்து நாட்களிலும், பெரும்பான்மையான ரமழான் மாதங்களில் இறுதி பத்து நாட்களிலும் இஃதிகாப் இருந்தார்கள் என்பதை (புகாரி 1930, 1940, 2036) போன்ற ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.


இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ள மாதங்களில், அந்த மாதம் 29-நாட்களைக் கொண்டதாக இருந்தால் 20-வது நாளன்று ஃபஜ்ரு வேளையில் நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை துவங்கியுள்ளார்கள். அதுபோல 30-நாட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் 21-வது நாளன்று ஃபஜ்ரு வேளையில் இஃதிகாஃபில் நுழைந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் அச்செயல் நமக்கு எதை உணர்த்துகிறது? நபி (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கு அவர்கள் இஃதஜகாஃப் இருந்த அந்தந்த ரமழான் மாதங்கள் எத்தனை நாட்களில் முடியும் என்பதை முற்கூட்டியே அறிந்து வைத்திருந்ததை இச்சம்பவம் இன்னும் தெளிவாக உணர்த்துகின்றன. அப்படி தெரிந்து வைத்திருந்ததின் காரணமாகத்தான் அவர்களால் இறுதி 10-நாட்கள் என்று துல்லியமாக இஃதிகாஃப் இருக்க முடிந்தது. இந்த இஃதிகாஃப் சம்பந்தமாக இடம்பெறும் ஹதீஸ்களை வைத்தும் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தெளிவான கணக்கீட்டு முறையில் இருந்துள்ளதை விளங்கலாம். மேலும் 'ஃபஜ்ரு வேளையில்' நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை துவங்கி, பத்துநாட்களை முழுவதுமாக முடித்து 'ஃபஜ்ரு தொழுகைக்குப் பின்னர்' பெருநாள் தொழுகைக்கு விரைந்துள்ளார்கள். இதன்மூலம் ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு அல்ல என்பதும் நிரூபனமாகிறது.


ஒரு துல்லியமான மாதக் கணக்கீட்டு முறையை நபி (ஸல்) அவர்கள் பின்பற்றாமல் இருந்திருந்தால் 29-நட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் 21-வது நாளன்று இஃதிகாஃபிற்குச் சென்றிருந்தால் அவர்களுக்கு 9 (ஒன்பது) நாட்கள் மட்டும்தான் கிடைத்திருக்கும். அதுபோல 30-நட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் 20-வது நாளன்று இஃதிகாஃபிற்குச் சென்றிருந்தால் அவர்களுக்கு 11 (பதினொன்று) நாட்கள் என்று ஒருநாள் கூடுதலாக இருந்திருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு அவ்வாறு நிகழவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இவற்றை வைத்து நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் 29-வது நாள் பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்கவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை மேலும் அறிய முடிகிறது.


பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்குக் காலம் காட்டியாகவும், இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)


வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் 12 ஆகும். அதில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய) நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். (அல்குர்ஆன் 9 : 36)


அவன்தான் சூரியனை (சுடர்விடும் ஒளிப்பிளம்பால்) பிரகாசமானதாகவும், சந்திரனை (பிரதிபளிக்கும்) ஒளியாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அதற்கு மாறிமாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்லாஹ் உண்மை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் சமூகத்திற்காக அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (அல்குர்ஆன் 10 : 5)

12. பிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுறையும

அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு முன்னர் சந்திரனின் மனாஸிலை அடிப்படையாகக் கொண்டு தேதியைக் கணக்கிட்டு வந்தனர். இன்னும் சந்திர மாதத்தின் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பெயர்களைச் சூட்டி அடையாளப் படுத்தினர். அவர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை வைத்து ஆண்டுகளை குறித்துக் கொண்டனர். இச்செய்திகளை தஃப்ஸீர் இப்னு கஃதீரில் காணலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் காலத்திலும் நிலைமை இவ்வாறே நீடித்தது.


இஸ்லாமிய மாதங்களைத் துவங்குவது முதல் குழந்தைக்கு பாலூட்டும் காலம், இத்தாவின் மாதக் கணக்கு உட்பட ஃபர்ளான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள் போன்ற வணக்கங்கள் வரை அனைத்து விஷயங்களிலும் பிறைகளை வைத்து மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்.


உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் போது அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள். அதில் தனக்கு அனுப்பும் கடிதங்களில் தேதிகள் குறிக்கப்படுவதில்லை என முறையிட்டிருந்தார்கள். அதைப் புரிந்து கொண்ட கலீஃபா உமர் (ரழி) அவர்கள் சக நபித்தோழர்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள். பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு முஸ்லிம்களின் நாட்காட்டியுடைய ஆண்டின் துவக்கம் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து அமைய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.


காரணம் நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றதை இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக அனைத்து ஸஹாபாக்களும் ஒருமித்துக் கருதினர். இன்னும் சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாக அந்த ஹிஜ்ரத் பயணம் அமைந்தது. மேலும் இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திற்குப் பின்னரே துவங்கியது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இஸ்லாமிய நாட்காட்டியின் முக்கியத்துவத்தை அறிந்து அன்றைய ஸஹாபாக்களின் ஏகோபித்த ('இஜ்மாவுஸ் ஸஹாபா') முடிவு அறிவிக்கப்பட்டது.


அதாவது அல்லாஹ் நமக்கருளிய சந்திர நாட்காட்டியைக் கொண்டே ஆண்டுகளை எண்ணிக் கணக்கிட வேண்டும் என்றும், ஹிஜ்ரி நாட்காட்டியுடைய ஆண்டின் துவக்கம் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணத்திலிருந்து (Hijri Era) ஆரம்பிக்கப் படவேண்டும் என்றும் வரையறுக்கப் பட்டது. இதை நிறுவுவதற்காக உமர் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்திலிருந்து சுமார் 200 மாதங்கள் பின்னோக்கிச் சென்று அன்றைய ஸஹாபாக்கள் கணக்கிட்டனர். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிலவியிருந்த 'உம்மி சமுதாயம்' என்ற நிலை கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் மெல்ல மெல்ல விலகத் துவங்கியதை இந்த வரலாற்றுச் சம்பவம் பறைசாற்றுகிறது.


இதில் நாம் கூறவருவது என்னவெனில் அதாவது நபி (ஸல்) அவர்களோ, அவர்களிடம் பாடம் பயின்ற ஸஹாபாக்களோ ஒரு வருடத்திற்கு ஷஃஅபான், மற்றும் ரமழான் மாதங்களில் மட்டும் பிறைகளைப் பற்றி கவலைபட வில்லை. மேலும் இன்று முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் நம்புவதைப்போல மாதத்தின் 29-வது நாள் பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்க வில்லை என்பதை அறியலாம்.


மேலும் நபி (ஸல்) அவர்கள் தங்களது இறுதி ஹஜ்ஜின் போது, மினாவில் வைத்து வரலாற்று சிறப்புமிகு உரை நிகழ்த்தியதை முஸ்லிம் 4477-வது ஹதீஸ் போன்ற பல ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. அப்போது கூடியிருந்த தோழர்களிடம் இந்த நாள் எந்த நாள்? என்று கேள்வி கேட்டனர். பிறகு அந்த நாள் 'யவ்முன் நஹர்' என்று நபி (ஸல்) அவர்களே விடையும் பகர்ந்தார்கள். அதாவது குர்பானிப் பிராணிகளை அறுத்துப் பலியிட வேண்டிய துல்ஹஜ் 10-வது நாள்தான் அந்த நாள் என்பதை தெளிவு படுத்தினார்கள். மேலும் ''அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த பழைய நிலைக்கே காலம் திரும்பிவிட்டது'' என்று அறிவித்து இஸ்லாமிய மாதங்களில் உள்ள நாட்கள் எவ்வித குழப்பங்களுக்கும் அப்பாற்பட்டு துல்லியமாக உள்ளதை உம்மத்திற்கு உணர்த்தினார்கள்.


இதன் அடிப்படையில் நபி (ஸல்) ஹஜ்ஜத்துல் விதாவின் துல்ஹஜ் 10-வது நாள் (அதாவது ஹிஜ்ரி 10-12-10) வெள்ளிக் கிழமை என்ற அளவுகோலை வைத்து தற்போதைய சந்திர நாட்காட்டியின் தேதிகள் சரிவர பொருந்திப் போகின்றதா என்பதை பின்னோக்கிக் கணக்கிட்டும் நாம் பரிசோதித்துக் கொள்ளலாம். எனவேதான் ஹஜ்ஜத்துல் விதாவின் கிழமைகளிலும், பேருரை நிகழ்த்தப்பட்ட இடம், மற்றும் அதன் தேதிகளில் இஸ்லாமிய மார்க்கத்தின் விரோதிகள்; பல கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி குழப்பங்களைச் செய்துள்ளனர். அவற்றைத் தனித் தலைப்பில் விரிவான புத்தகமாக இன்ஷா அல்லாஹ் நாம் விளக்குவோம்.


இதில் நாம் பதிவு செய்வது என்னவெனில் மேற்படி துல்ஹஜ் 10-வது நாள் ஹஜ்ஜத்துல் விதாவில் நபி (ஸல்) அவர்களோடு வீற்றிருந்த உமர் (ரழி) அவர்களும், நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் பேருரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். ஹிஜ்ரி ஆண்டின் துவக்க நாளான 01-01-01 (முதல் நாள்- முதல்மாதம் - ஒன்றாவது வருடம்) என்பதை ஹிஜ்ரத்திலிருந்து மிகத்துல்லியமாகக் கணக்கிட்டு வரையறுத்தனர். 01-01-01 அன்று வியாழக்கிழமை என்பதும் அந்த நாளுக்கு முந்தைய நாள் புதன்கிழமை அமாவாசை என்னும் புவிமைய சங்கமநாள் என்பதையும் நாம் கணக்கிட்டு அறிய முடிகிறது. அத்தோடு ஹிஜ்ரி 01-01-01 அன்று வியாழக்கிழமைக்கு முந்தைய நாளான புதன் கிழமை அன்றுதான் சந்திர மாதத்தின் இறுதிநாள் என்பதை மேலும் உறுதிபடுத்தும் முகமாக சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சங்கமித்து சூரியக் கிரகணமும் அந்த சங்கம நாளில் நடைபெற்றது.


நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் அந்த 'கும்ம'வுடைய நாள் (அமாவாசை) என்னும் புவிமைய சங்கமநாள்தான் சந்திர மாதத்தின் இறுதிநாள் என்பதையும், அதற்கு அடுத்தநாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து பாடம் பெற்ற அந்த ஸஹாபாக்கள் ஹிஜ்ரி 01-01-01 ஆம் தேதியை வியாழக்கிழமையாக வரையறுத்து இந்த உம்மத்திற்கு நடைமுறையில் உணர்த்தி விட்டு சென்றுள்ளார்கள். இவற்றை முற்கால வரலாற்று நூற்களில் காணலாம். இன்னும் 01-01-01 ஆம் தேதியில்கூட வியாழக்கிழமை என்பதிலிருந்து வெள்ளிக் கிழமையாக மாற்றப்பட்ட சதிகளைப் பற்றி இன்ஷா அல்லாஹ் மற்றொரு தலைப்பில் விளக்குவோம்.


கிழக்கில் பிறந்த பிறையை அது மறையும் மஃரிபு வேளையில் மேற்கில் புறக்கண்களால் பார்த்த பின்னரே மாதங்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாடில் எந்த ஸஹாபாக்களும் இருந்திருக்க வில்லை என்பதற்கு இந்நிகழ்வுகள் மாபெரும் சான்றாகும். காரணம் ஸஹாபாக்கள் பிறையை பார்த்த பின்னரே மாதங்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைபாட்டை வைத்து ஹிஜ்ரி காலண்டரை நிறுவிட வில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக சான்று பகர்கிறது. விஞ்ஞானம் விழித்திடும் முன்னரே உம்மி நபியின் உத்தமத் தோழர்கள் இந்த அளவுக்கு மிகத்துல்லியமாக இஸ்லாமிய நாட்காட்டியை நிறுவியது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது - அல்லாஹூ அக்பர்.


ஹிஜ்ரி 01-01-01 வியாழக்கிழமைக்கு முந்தைய நாள் புதன்கிழமை அன்றுதான் சங்கமதினம் (அமாவாசை) என்பதையும் ஹிஜ்ரி 01-01-01 வியாழக்கிழமைதான் என்பதையும் பாதுகாக்கப்பட்ட வானியற் பௌதீகத் தரவுகளின் துல்லியமான பதிவுகள் உலகிற்கு இன்றும் பறைசாற்றுகின்றன. இதை ஏன் இங்கு அழுத்தமாகச் சொல்கிறோம் என்றால் ஹிஜ்ரி நாட்காட்டியின் துவக்கத் தேதியின் கிழமையை குழப்பி விடவேண்டும் என்று எண்ணிய இஸ்லாமிய விரோத சக்திகள், ஹிஜ்ரி 01-01-01 அன்று வியாழக்கிழமை என்பதற்குப் பதிலாக வெள்ளிக்கிழமை என்று மாற்றி அமைக்க பல சூழ்ச்சிகள் செய்தனர். இவற்றை நம்மில் எத்தனைபேர் அறிந்துள்ளோம்? அச்சூழ்ச்சிகளை நம்பி ஹிஜ்ரி காலண்டரை குறைகூறித் திரிபவர்களை என்னவென்று சொல்வது?


எனவே ஹிஜ்ரி 01-01-01 அன்று வியாழக்கிழமை என்ற அளவுகோலை வைத்தும், ஹிஜ்ரி 10-12-10 அன்று வெள்ளிக் கிழமை என்பதை வைத்தும் தற்போதைய சந்திர நாட்காட்டியின் தேதிகள் சரிவரப் பொருந்திப் போகின்றதா என்பதை பின்னோக்கிச் சென்று கணக்கிட்டு நாம் பரிசோதித்துக் கொள்ளலாம்.


இன்னும் சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகிய மூன்றும் சங்கமிக்கும் அமாவாசை என்னும் புவி மைய சங்கம நாள்தான் ஒரு மாதத்தின் இறுதிநாள் ஆகும். மாதத்தின் முதல் நாளில் சந்திரன் சூரியனை பின்தொடர்ந்து வரும். அவன் சந்திரனின் ஒளியை வேறுபடுகின்றவாறு ஏற்படுத்தியுள்ளான் சில சமயங்களில்; சந்திரனின் ஒளி முழுமை அடைகின்றவரை அது அதிகரிக்கின்றது. பிறகு சந்திரனின் ஒளி முற்றிலுமாக மறைகின்ற வரை அது தேய ஆரம்பிக்கின்றது. இந்த நிலையே கடந்துசென்ற மாதங்களையும் வருடங்களையும் குறிக்கின்றது என்று அல்-குர்ஆனின் 71:16 வசனத்திற்கான தஃப்ஸீர் இப்னு கதீரின் விளக்கம் தெளிவுபடுத்துவதைக் கீழே காணலாம்.


وجعل القمر فيهن نوراً وجعل الشمس سراجاً} أي فاوت بينهما في الاستنارة فجعل كلاً منهما أنموذجاً على حدة ليعرف الليل والنهار بمطلع الشمس ومغيبها, وقدر للقمر منازل وبروجاً وفاوت نوره فتارة يزداد حتى يتناهى ثم يشرع في النقص حتى يستتر ليدل على مضي الشهور والأعوام, كما قال تعالى: {هو الذي جعل الشمس ضياء والقمر نوراً وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الاَيات لقوم يعلمون}. ) تفسير ابن كثير - سورة نوح : 16- الجزء : 8 - رقم الصفحة 233(


மேலும் சந்திர மாதத்தின் முதல்நாளில், பிறையானது சூரியன் உதித்த பின்னர் சற்று தாமதித்து கிழக்கில் உதிக்கும். அந்த முதல் நாளில், சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்னரே அந்தப்பிறை நம் புறக்கண்களுக்கு காட்சி அளிக்கும் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


قال مجاهد: { وَالشَّمْسِ وَضُحَاهَا } أي: وضوئها.


وقال قتادة: { وَضُحَاهَا } النهار كله.


قال ابن جرير: والصواب أن يقال: أقسم الله بالشمس ونهارها؛ لأن ضوء الشمس الظاهر هو النهار (1) .


{ وَالْقَمَرِ إِذَا تَلاهَا } قال مجاهد: تبعها. وقال العوفي،


عن ابن عباس: { وَالْقَمَرِ إِذَا تَلاهَا } قال: يتلو النهار.


وقال قتادة: { إِذَا تَلاهَا } ليلة الهلال، إذا سقطت الشمس رؤي الهلال.


وقال ابن زيد: هو يتلوها في النصف الأول من الشهر، ثم هي تتلوه. وهو يتقدمها في النصف الأخير من الشهر.


)تفسير ابن كثير - (8 / 410)(


இன்னும் மாதத்தின் முதல் நாளில் சந்திரன் சூரியனை பின்தொடர்ந்து வரும். இதை நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அதே தஃப்ஸீர் இப்னு கஃதீர் தெளிவுபடுத்தும் அல்-குர்ஆனின் 91-வது அத்தியாயம் முதல் இரண்டு வசனங்களுடைய விளக்கவுரைகளில் மேலே காணலாம். இத்தகைய தஃப்ஸிர் விளக்கங்களை நமதூர் ஆலிம்கள் மக்களுக்கு இன்னும் ஏன் எடுத்துச் சொல்லிட வில்லை?

13. பிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இமாம்கள்

பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத் துவங்க வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்தும், சுன்னாவிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். இன்னும் பிறைகள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன? என்பதையும் சற்று முன்னர் படித்தோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் முடிவதற்கு முன்னரே குறிப்பிட்ட அந்த மாதம் எத்தனை நாட்களில் முடிவடையும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததை ஹதீஸ்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டோம்.


இன்னும் ஸஹாபாக்கள் ஹிஜ்ரி நாட்காட்டியின் வருடக் கணக்கை குறிப்பிட்ட விஷயத்தில் திட்டமாக கணக்கிட்டார்கள் என்பதையும் தெரிந்து கொண்டோம். இந்நிலையில் பிறைகளைக் கணக்கிடத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மத்ஹபு இமாம்களின் கூற்றுக்களையும் அறியத் தருகிறோம். மத்ஹபு இமாம்களின் பெயரைப் பயன்படுத்தி மத்ஹபு நூல்களின் பதியப்பட்டுள்ள குர்ஆன் சுன்னாவிற்கு முரணாண அனைத்து கருத்துக்களையும் நாம் மறுக்கிறோம். குர்ஆனும் சுன்னாவும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள். கீழ்க்காணும் மத்ஹபு இமாம்களின் கூற்றுக்கள் பிறைகள் விஷயத்தில் கணக்கிட வேண்டும் என்ற குர்ஆன் சுன்னாவின் கூற்றுக்கு முரணில்லாத வகையில் அமைந்துள்ளதால் அவற்றில் சிலவற்றை மட்டும் குறிப்புக்காக இங்கு பதிக்கிறோம்.


وَجُمْلَةُ الْقَوْلِ أَنَّنَا بَيْنَ أَمْرَيْنِ : إِمَّا أَنْ نَعْمَلَ بِالرُّؤْيَةِ فِي جَمِيعِ مَوَاقِيتِ الْعِبَادَاتِ أَخْذًا بِظَوَاهِرِ النُّصُوصِ وَحُسْبَانِهَا تَعَبُّدِيَّةً ، وَحِينَئِذٍ يَجِبُ عَلَى كُلِّ مُؤَذِّنٍ أَلَّا يُؤَذِّنَ حَتَّى يَرَى نُورَ الْفَجْرِ الصَّادِقِ مُسْتَطِيرًا مُنْتَشِرًا فِي الْأُفُقِ ، وَحَتَّى يَرَى الزَّوَالَ وَالْغُرُوبَ إِلَخْ ، وَإِمَّا أَنْ نَعْمَلَ بِالْحِسَابِ الْمَقْطُوعِ بِهِ لِأَنَّهُ أَقْرَبُ إِلَى مَقْصِدِ الشَّارِعِ ، وَهُوَ الْعِلْمُ الْقَطْعِيُّ بِالْمَوَاقِيتِ وَعَدَمِ الِاخْتِلَافِ فِيهَا ، وَحِينَئِذٍ يُمْكِنُ وَضْعُ تَقْوِيمٍ عَامٍّ تُبَيَّنُ فِيهِ الْأَوْقَاتُ الَّتِي يُرَى فِيهَا هِلَالُ كُلِّ شَهْرٍ فِي كُلِّ قُطْرٍ عِنْدَ الْمَانِعِ مِنَ الرُّؤْيَةِ وَتُوَزَّعُ فِي الْعَالَمِ ، فَإِذَا زَادُوا عَلَيْهَا اسْتِهْلَالَ جَمَاعَةٍ فِي كُلِّ مَكَانٍ فَإِنْ رَأَوْهُ كَانَ ذَلِكَ نُورًا عَلَى نُورٍ ، وَأَمَّا هَذَا الِاخْتِلَافُ وَتَرْكُ النُّصُوصِ فِي جَمِيعِ الْمَوَاقِيتِ - عَمَلًا بِالْحِسَابِ مَا عَدَا مَسْأَلَةَ الْهِلَالِ - فَلَا وَجْهَ وَلَا دَلِيلَ عَلَيْهِ ، وَلَمْ يَقُلْ بِهِ إِمَامٌ مُجْتَهِدٌ بَلْ هُوَ مِنْ قَبِيلِ (أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ) (2 : 85) وَاللهُ أَعْلَمُ وَأَحْكَمُ ا هـ . تفسير المنار - (2 / 151)


ஒட்டுமொத்த கருத்துப்படி நாம் இரு விஷயங்களுக்கு மத்தியில் உள்ளோம். ஒன்று இபாதத் அடிப்படையில் தெளிவான ஆதாரங்களின் வெளிப்படையான பொருளையும், அதன் கணக்கையும் எடுத்து வணக்க வழிபாடுகளின் நேரங்கள் அனைத்திலும் பார்ப்பதைக் கொண்டே அமல் செய்வதாகும். இந்நேரத்தில் அடிவானத்தில் படர்ந்து அகன்று வருகின்ற ஃபஜ்ர் நேரத்தின் ஒளியை காணும் வரையிலும், சூரியன் உச்சி சாய்வதையும், அது மறைவதையும் காணும் வரை பாங்கு சொல்லாமல் இருப்பது ஒவ்வொரு முஅத்தினுக்கும் வாஜிபாகி விடும்.


மற்றொரு கருத்து உறுதி செய்யப்பட்ட கணக்கீட்டின் படி அமல் செய்வதாகும். இதுதான் அல்லாஹ்வின் நோக்கத்திற்கு மிக நெருக்கமானதாகும். இதுவே நேரங்கள் (காலங்கள்) பற்றிய உறுதியான கல்வியும், கருத்து வேறுபாடில்லாத நிலையும் ஆகும். இச்சமயம் பிறையை பார்க்க முடியாத நேரத்தில் (காலத்தில்) ஒவ்வொரு நாட்டிலும் (பகுதியிலும்) ஒவ்வொரு மாதத்தின் பிறை பார்க்கப்படுகின்ற நேரங்களை விளக்குகின்ற பொது நாட்காட்டியை பயன்படுத்துவதற்கு இது சாத்தியமாகும். மேலும் அது உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட வேண்டும். இந்த நாட்காட்டியுடன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஜமாஅத் (கூட்டம்) பிறை தொடங்கப் படுவதை கண்டால் அது தெளிவுக்கு மேல் தெளிவாகும்.


இக்கருத்து வேறுபாடு பிறையின் சட்டத்தைத் தவிர கணக்கீட்டின் படி அமல் செய்வதற்குத் தான். மற்ற ஏனைய நேரங்களில் தெளிவான ஆதாரங்களை விட்டு விடுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும் இதனை எந்த ஆய்வாளரும் (முஜ்தஹிதும்) சொல்லவில்லை. மாறாக இது (நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? என்ற) அல்குர்ஆனின் 2:85-வது வசனத்தைச் சார்ந்ததாகும்.


نَقَلَ الْقَلْيُوبِيُّ عَلَى الْجَلَالِ عَنْ الْعَبَّادِيُّ أَنَّهُ قَالَ إذَا دَلَّ الْحِسَابُ الْقَطْعِيُّ عَلَى عَدَمِ رُؤْيَتِهِ لَمْ يُقْبَلْ قَوْلُ الشُّهُودِ الْعُدُولِ بِرُؤْيَتِهِ وَتُرَدُّ شَهَادَتُهُمْ بِهَا وَلَا يَجُوزُ الصَّوْمُ حِينَئِذٍ وَمُخَالَفَةُ ذَلِكَ مُعَانَدَةٌ وَمُكَابَرَةٌ ا هـ . (شرح البهجة الوردية -7 / 17(.


சாட்சியாளர் காட்சியைத் தான் கண்டதாகக் கூறினாலும், காட்சியைக் காண முடியாது என்பது தீர்க்கமான கணக்கின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டால், நீதமான சாட்சியாளரின் கூற்று காட்சி குறித்து ஏற்றுக்கொள்ளப் படாது. இதன் காரணமாக அவர்களின் சாட்சிகள் மறுக்கப்படும். மேலும், அச்சமயம் நோன்பு நோற்ப்பது அணுமதிக்கப் படாது. அதை மறுப்பது வரம்பு மீறுவதும் பெரிய பாவமுமாகும் என இமாம் அப்பாதி (ரஹ்) அவர்களிடமிருந்து இமாம் கல்யூபி (ரஹ்) குறிப்பிடுகிறார். (நூல் : ஷர்ஹ் அல் பஹ்ஜத்துல் வர்தீயா 7ஃ17).

மேற்படி இமாம் கல்யூபி (ரஹ்) அவர்கள் ஷஃபிய்யீ மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.


قَالَ السُّبْكِيُّ : لَا تُقْبَلُ هَذِهِ الشَّهَادَةُ ؛ لِأَنَّ الْحِسَابَ قَطْعِيٌّ وَالشَّهَادَةَ ظَنِّيَّةٌ ، وَالظَّنِّيُّ لَا يُعَارِضُ الْقَطْعِيَّ ،)مغني المحتاج إلى معرفة ألفاظ المنهاج - (5 / 165)(. رد المحتار - (7 / 365)(.


இச்சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது ஏனெனில், கணக்கே தீர்க்கமானது. சாட்சியோ கற்பனை. இன்னும், கற்பனையால் தீர்க்கமானதை எதிர்க்க முடியாது என இமாம் ஸூப்கி கூறினார். (நூல் : முக்னியுல் முஹ்தாஜ் இலா மஅரிஃபதில்ஃபாதில் மின்ஹாஜ் 5ஃ165, ரத்துல் முக்தார் 7ஃ365).


இமாம் ஸூப்கி (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.


வானவியல் கணக்கும், அதை எழுதுவதையும் நாம் அறிந்திருக்க வில்லை. இந்நிலை நமக்கு எதுவரை என்றால் நட்சத்திரங்களின் கல்வியும், சந்திர ஓட்டத்தின் கல்வியும் நாம் உறுதியாகப் பெற்றுக் கொள்ளும் வரையில்தான். மேலும், நாம் அந்தக் கல்வியின் மூலம் மாதத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என (இன்னா உம்மத்துன் உம்மிய்யா என்பதற்கு விளக்கமாக) இப்னு மாலிக் கூறினார்கள்.(நூல்: அல்மிர்க்காத் ஷர்ஹூல் மிஸ்காத்)

இமாம் இப்னு மாலிக் (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.


அரபு சமுதாயம்; அல்லது தம்மை குறித்தே கண்ணியமிக்க நபி (ஸல்) இவ்வாறு (அதாவது - இன்னா உம்மத்துன் உம்மிய்யா) கூறினார்கள். (அறிவித்தவர் : அல்கஃத்தலானி)

இமாம் அல்கஃத்தலானி (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள்.


அரபு சமுதாயத்தையும் தம்மையும் குறித்தே நபி(ஸல்) இவ்வாறு (அதாவது - இன்னா உம்மத்துன் உம்மிய்யா என்று) குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. (ஃபத்ஹூல் பாரி).


பிறைகளைக் கணக்கிடுவதுதான் தீர்க்கமானது, புறக்கண் பார்வையால் அமைந்த பிறை சாட்சியம் தோராயமானது என்று மத்ஹபு இமாம்கள் கூறியுள்ளார்கள். மேலும் பிறையைக் புறக்கண்களால் பார்க்க முடியாது என்று தீர்க்கமான கணக்கிட்டின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டால் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிறையைப் பார்த்தேன் என்று சாட்சி கூறுபவர் நீதமானவராக இருந்தாலும் தீர்க்கமான கணக்கிட்டிற்கு முரணாக இருந்தால் அவரது பிறை சாட்சியை மறுக்க வேண்டும் என்றெல்லாம் மத்ஹபு நூற்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. இதிலிருந்து பெரும்பான்மையான மத்ஹபு சார்ந்த இமாம்கள்கூட புறக்கண்களால் பிறையைப் பார்ப்பதை மறுத்தும், பிறைகளைக் கணக்கிடுவதை வலியுறுத்தியும் உள்ளனர் என்பது தெளிவாகிறது.

14. யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (ஊழதெரnஉவழைn னுயல) பிறை பிறந்து அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல் நாளில் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அது மறையும் போதுதான் புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும் என்பதை தெரிந்து கொண்டோம். இருப்பினும் அந்த முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு, மாதத்தின் இரண்டாவது நாளை முதல்நாளாகக் கொள்ளும் இந்தப் பழக்கம் யூதர்களின் வழிமுறையிலிருந்து பிறந்ததாகும். யூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்த பின்னர் மஃரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். அதுபோல முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் முதல் தங்கள் மாதத்தைத் துவங்குகின்றனர். இதற்கான சுருக்கமான ஆதாரங்களை கீழ்க்கண்ட தரவுகள் மூலம் படித்து அறிந்து கொள்ளுங்கள்.


And it was evening and it was morning, one day (Genesis 1:5). It says God called the light "day," and the darkness he called "night." Thus evening came, and morning followed-- the first day.


தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பெயரிட்டார்;. சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் (1:5)


Jewish Calendar Date : When God created time, He first created night and then day. Therefore, a Jewish calendar date begins with the night beforehand. While a day in the secular calendar begins and ends at midnight, a Jewish day goes from nightfall to nightfall. Shabbat begins on Friday night..(www.chabad.org)


யூத நாட்காட்டியின் தேதி : கடவுள் காலத்தை உருவாக்கிய போது, அவர் முதலில் இரவை படைத்தார் பின்னர் பகலை உருவாக்கினார். எனவே, ஒரு யூத காலண்டரில் தேதி இரவிலிருந்து தொடங்குகிறது. மதச்சார்பற்ற நாட்காட்டியில் (ஆங்கில நாட்காட்டி) ஒரு நாள் என்பது நள்ளிரவில் துவங்கி, நள்ளிரவில் முடிவடைகிறது. இருப்பினும் யூதர்களின் ஒரு நாள் என்பது பொழுது சாய்ந்ததிலிருந்து (மஃரிபிலிருந்து) துவங்கி, அடுத்த பொழுது சாயும்வரை (மஃரிபு) ஆகும். சபாத் (எனும் யூதர்களின் புனித நாள் சனிக்கிழமை) வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடங்குகிறது..(www.chabad.org)


All Jewish holidays begin the evening before the date specified on most calendars. This is because a Jewish "day" begins and ends at sunset, rather than at midnight. If you read the story of creation in Genesis Ch. 1, you will notice that it says, "And there was evening, and there was morning, one day." From this, we infer that a day begins with evening, that is, sunset. Holidays end at nightfall of the date specified on most calendars; that is, at the time when it becomes dark out, about an hour after sunset. (www.jewfaq.org)


அனைத்து யூத விடுமுறை நாட்களும், காலண்டர்களில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் மாலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. இதற்குக் காரணம் என்னவெனில், யூதர்களின் ஒருநாள் என்பது சூரியன் மறையும் நேரத்திலிருந்து துவங்கி சூரியன் மறையும் போது முடிவடைகிறது, மாறாக நள்ளிரவில் அல்ல. பைபிலின் ஆதியாகமம் 1-வது அதிகாரத்தில் படைப்பின் கதையைப் பற்றி 'சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று' என்றே நீங்கள் படிப்பீர்கள். இதிலிருந்து நாம் ஒரு நாள் என்பது சூரியன் மறையும் மாலை நேரத்திலிருந்து துவங்குகிறது என்கிறோம். விடுமுறை நாட்கள் காலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின் இரவோடு (பொழுது சாய்ந்ததும்) முடிவடைகிறது. அதாவது அது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் என்ற அளவில் இருள் சூழும் அந்த நேரம் ஆகும். (www.jewfaq.org)


Shabbat is observed from a few minutes before sunset on Friday evening until the appearance of three stars in the sky on Saturday night. (wikipedia.org)


சபாத் (யூதர்களின் புனித நாள்) வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையும் முன் ஒரு சில நிமிடங்களிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. அதாவது அது சனிக்கிழமை இரவு வானில் மூன்று நட்சத்திரங்கள் தோன்றும் வரையுள்ள நேரமாகும். (wikipedia.org)


The first time that the waxing crescent of the Moon is visible (from Jerusalem) marks the begining of a Jewish month, called Rosh Chodesh ("head of the month"). As soon as the new moon was visible as a waxing crescent, the Sanhedrin (The Supreme Rabbinical Court) in Israel was informed and Rosh Chodesh was formally announced. The Day after new moon was sighted was a festival, heralded with sounding of shofar and commemorated with convocations and sacrifices. (www.hebrew4christians.com)


ரோஷ் சோடஸ் (தலைமாதம்) எனும் யூதர்களின் மாதப்பிறப்பானது, தலைப்பிறை என்ற சந்திரனின் முதல் வளர்பிறை (ஜெரூஸசலமில்) பார்க்கப்படுவதிலிருந்து துவங்குகிறது. தலைப்பிறை தென்பட்டவுடன், இஸ்ரேலின் அறிஞர் பேரவை (யூதமுரப்பிகளின் உச்ச நீதிமன்றம்) மூலம் தகவல் அளிக்கப்பட்டு யூதர்களின் மாதப்பிறப்பு (ரோஷ் சோடஸ்) முறையாக அறிவிக்கப்படும். தலைப்பிறையைப் பார்த்த பின்னர் அதற்கு அடுத்தநாளே திருவிழா தினமாகும். அந்நாளில் கட்டியங்கூறி கனிமொழி யுரைத்தலும், வழியனுப்பு விழாக்களும், அறுத்துப் பலியிடலும் நிகழும்.(www.hebrew4christians.com)


திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் படி முஸ்லிம்கள் தங்களுடைய நாளை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்க வேண்டும். இதற்கான குர்ஆன், சுன்னாவின் தெளிவான ஆதாரங்களை வழங்கி பலமுறை மக்களுக்கு நாம் விளக்கி விட்டோம். 'ஒரு நாளின் துவக்கம் எது? ஃபஜ்ரா? மஃரிபா?' என்ற ஹிஜ்ரிகமிட்டியின் பதிவுகளையும், ஆக்கங்களையும் அவசியம் படியுங்கள் ((www.mooncalendar.in). இஸ்லாமிய மார்க்கத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பரம விரோதிகளான யூத, நஸாராக்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் செய்யத் துணிந்த குழப்பங்களை நாம் விளக்கித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை.


முஸ்லிம்களின் மானம், உயிர், உடைமைகளைத் தொடர்ந்து சூறையாடிக் கொண்டிருக்கும் அத்தகைய யூதர்களுக்கு மாறு செய்ய வேண்டியது நமது கடமையாகும். அந்த யூதர்களைப் போல இன்றைய முஸ்லிம்களும் ஒருநாள் என்பது மஃரிபிலிருந்தே ஆரம்பமாகின்றது என்று தவறாக விளங்கியுள்ளனர். அதுதான் சரி என்றும் நம்புகின்றனர். மறுமைநாள் நெருங்கும் வேளையில் முஸ்லிம்கள் யூத கிருஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு-ஜான் முழத்திற்கு-முழம் பின்பற்றத் துவங்குவார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இத்தருணத்தில் மனதில் கொள்ள வேண்டுகிறோம். எனவே உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்களது அன்றாடக் கிழமையை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்கி யூதர்களுக்கு மாறு செய்ய வேண்டுகிறோம். அதுபோல குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த துல்லியமான இஸ்லாமிய ஹஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்றி யூத, நஸாராக்களுக்கு மாறு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.


حَدَّثَنِى سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ حَدَّثَنِى زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لَتَتَّبِعُنَّ سَنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ دَخَلُوا فِى جُحْرِ ضَبٍّ لاَتَّبَعْتُمُوهُمْ ». قُلْنَا يَا رَسُولَ اللَّهِ آلْيَهُودَ وَالنَّصَارَى قَالَ « فَمَنْ ». صحيح مسلم - (8 / 57) 6952 –


நீங்கள்; உங்கள் முன்சென்றவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யூதர்களும், நஸாராக்களுமா என்று நாம் கேட்டோம்? அதற்கு அவர்களல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும். என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்: முஸ்லிம் 6952


யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழி - அதுவே நேர்வழி என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல்குர்ஆன் 2:120)


மேற்கண்ட எச்சரிக்கையை உணராத ஷியாக்கள் யூதர்களின் சூழ்ச்சியில் வீழ்ந்தது வரலாறு. அதன் காரணமாக இஸ்லாமிய மார்க்கத்தில் பல்வேறு குழப்பங்களை ஷியாக்கள் உண்டாக்கினர். அத்தகைய குழப்பங்களில் ஒன்றுதான் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்த பிறகே முதல் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதும், பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்தபிறகே பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பன போன்ற பித்அத்துகளுமாகும். ஃபத்ஹூல்பாரியில் இடம்பெறும் நீளமான அந்த வரலாற்றுச் சுவடின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.


فتح الباري-إبن حجر- (4/ 121(. 1807 - (قوله: "لا تصوموا حتى تروا الهلال" ظاهره إيجاب الصوم حين الرؤية متى وجدت ليلا أو نهارا لكنه محمول على صوم اليوم المستقبل وبعض العلماء فرق بين ما قبل الزوال أو بعد، وخالف الشيعة الإجماع فأوجبوه مطلقا، وهو ظاهر في النهى عن ابتداء صوم رمضان قبل رؤية الهلال فيدخل فيه صورة الغيم وغيرها ولو وقع الاقتصار على هذه الجملة لكفى ذلك لمن تمسك به لكن اللفظ الذي رواه أكثر الرواة أوقع للمخالف شبهة ....


அன்றைய சுன்னவல்ஜமாஅத் அறிஞர்கள் ஷியாக்களின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தனர். இவ்வாறு பிறந்த பிறையை பார்த்துவிட்டு சுன்னவல்ஜமாஅத் அறிஞர்கள் அமல் செய்வதில்லை என்று அன்றைய காலத்து ஷியாக்கள் 'லாத்தஸூமூ' என்னும் மேற்காணும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டியே சுன்னவல்ஜமாஅத் அறிஞர்களுக்கு எதிராக வாதிட்டனர்.


ஒரு நாளை ஜவ்வால் என்னும் நண்பகலிலிருந்து கணக்கிடுவதா, அதன்பின்னர் கணக்கிடுவதா என்றதொரு பிரச்சனையை சுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்களுக்கு எதிராகக் கிளப்பினர். இன்று மக்களிடையே புரையோடிப் போய்விட்ட மஃரிபுக்குப் பின்னர்தான் ஒருநாளைத் துவங்க வேண்டும் என்ற யூதர்களின் வழிமுறையை ஷியாக்கள் நடைமுறைக்குக் கொண்டுவர எடுத்த முயற்சிகளை அன்றைய ஷியா எதிர்ப்பு சுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்களின் (இஜ்மா) ஆலோசனை முடிவின்படி நிராகரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஃபத்ஹூல்பாரியின் ஆதாரத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.


குறிப்பாக நாட்காட்டியைக் கட்டமைக்கும் விஷயத்திலும், பூமியின் தினம் கிழமைகள் மாறும் நிகழ்விலும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது என்பதில் மேற்படி இஸ்லாமிய விரோத சக்திகள் திட்டமிட்டு செயலாற்றி வந்துள்ளதை நாம் அறிவோம்.


ஒருநாள் (Day) என்பது எங்கு மாறுகின்றது? என்பதை நாம் அறிந்து கொள்ள வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையும், வெள்ளிக்கிழமையின் ஜும்ஆ தொழுகையும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி எவ்விடத்தில் மாற்றப்படுகிறதோ, அவ்விடத்தில்தான் நாட்களும், கிழமைகளும் மாறுகின்றது என்பதை நமது மார்க்க அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ளலாம். ஜூம்ஆ தொழுகை அல்லாத மற்ற தொழுகைகளை வைத்தோ, முஸ்லிம்களின் பிற வணக்கங்களை வைத்தோ கிழமை மாற்றத்தை நாம் அறிந்து கொள்ள இயலாது.


இவ்வாறு கிழமைகள் மாறும் இடத்திற்கு நிரூபிக்கப்பட்ட பூமியின் நிலவியல் விஞ்ஞானம் (Earth Geographical Science) சான்று பகர்கின்றது. அந்த இடம் பசிபிக் பெருங்கடலில் உலகத் தேதிக்கோடு (International Dateline-IDL) என்று கூறப்படும் இடத்தில் இருப்பதை அறிய முடிகின்றது.


புரியும்படி சொன்னால், அமெரிக்கன்சமோவா மற்றும் ஃபிஜி தீவுகளின் பகுதிகளை இந்த சர்வதேசத்தேதிக் கோடு பிரிக்கிறது. ஃபிஜியைவிட சுமார் 23 மணிநேரங்கள் பின்தங்கியிருக்கும் அமெரிக்கன்சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருக்கும் வேளையில், நண்பகலின் ஒரே சூரியனுக்குக்கீழ் இருப்பர். அந்த ஒரே சூரியனை அவ்விரு நாட்டு மக்களும் பார்த்தவர்களாக இருப்பர்.


அவ்வாறு அந்த ஒரே சூரியனுக்குக்கீழ் இருந்தாலும், அமெரிக்கன்சமோவா நாட்டு முஸ்லிம்கள் வியாழக்கிழமையின் நான்கு ரத்அத்துக்கள் கொண்ட லுஹர் தொழுகையை தொழவேண்டும். அதேவேளை ஃபிஜி நாட்டு முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையின் இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையைத் தொழவேண்டும். இதுதான் கடமையான தொழுகையின் சட்டமாகும்.


பின்னர் 23 மணிநேரங்கள் கழித்து அமெரிக்கன்சமோவா நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆவின் வக்து வரும் வேளையில், அவர்களும் ஃபிஜி நாட்டு மக்கள் தொழுததைப்போல இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையைத் தொழுவார்கள். அப்போது ஃபிஜி நாட்டு மக்களோ சனிக்கிழமையின் லுஹர் தொழுகையைத் தொழுது கொண்டிருப்பார்கள்.


அந்த இடத்தில் கோடு போடாமலேயே கோடு போடப்பட்டதாக கூறுவதும், உலகப்படங்களில் கோடு போட்டு காட்டுவதும் கற்பனையே. இருப்பினும், நமது இஸ்லாம் கூறும் வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையும், லுஹர் தொழுகையும் அருகருகே நடைபெறும் பகுதியாக அந்த இடமே உள்ளதை யாரும் மறுக்கவே இயலாது.


மேற்படி கிழமைமாற்ற நிகழ்வின் மூலம் முஸ்லிம்கள் தொழுகை விஷயங்களை உலக மக்கள் அறிந்து இஸ்லாம் கூறும் பூமியின் நிலவியல் விஞ்ஞானத்தை அறிந்து விடக்கூடாது என்பதற்காக உலகத் தேதிக்கோட்டை (International Dateline-IDL) மாற்றம் செய்யும் முயற்சியிலும் யூதர்கள் முனைப்போடு செயல்படுகின்றனர்.


'ஒரு நாள் என்பதை எங்கிருந்து துவங்கலாம் என்பதில் யூத அறிஞர்களிடையே கருத்து மோதல்கள் உள்ளன. சர்வதேசத் தேதிக் கோட்டுப்பகுதியை தவிர்த்து விட்டு அவர்கள் புனித பூமியாகக் கருதும் ஜெரூசலத்தை பிரதான தீர்க்கைரேகையாக (Prime Meridian) அறிவித்து அலாஸ்கா நாட்டின் கிழக்குப் பகுதியை எதிர் தீர்க்கரேகையாக (Anti Meridian) அமைக்க வேண்டும் என்று கருத்தும் நிலவுகிறதுCourtesy : Wikipedia)


உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் (International Dateline-IDL) தினமும் சூரியன் 90 டிகிரி கோணத்தில் உச்சியில் வரும்போது ஒரு நாளை அளவிட்டு கணக்கிட்டு வருகின்றோம். அவ்வாறு சூரியன் 90 டிகிரி கோணத்தில் உலகத் தேதிக்கோட்டிற்கு உச்சத்தில் வரும்போது நமக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கிப்லாவில் (கஃபாவில்), பழைய கிழமை மாற்றப்பட்டு புதிய கிழமை குறிக்கப்பட வேண்டும். நாள் மாறும்போது கிழமையும் மாறவேண்டும். இந்நிகழ்வு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்று கொண்டே இருக்க வேண்டும். அப்படி தினமும் மாறிக்கொண்டிருக்கும் கிழமைகளுக்கான தேதிகளை சந்திரனின் படித்தரங்கள் அறிவித்துக் கொண்டே இருக்கும்.


உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் சூரியன் 90 டிகிரி கோணத்தில் உச்சியில் இருக்கும்போது, தற்போது உலகில் பயன்படுத்தப்படும் கடிகார நேர அளவுப்படி இந்தியா உள்நாட்டு நேரம் (IST-India Standard Time)அதிகாலை 5:30 மணியிலும், சவூதி அரேபியா உள்நாட்டு நேரம் (AST-Arabia Standard Time) நள்ளிரவு (தஹஜ்ஜத்) 3.00 மணியிலும் இருக்கும். அதுபோல் உலகில் ஒவ்வொரு பகுதியும் உள்நாட்டு நேரங்களின்படி ஒவ்வொரு நேர அளவில் இருக்கும்.


இன்று நஸராக்கள் அவர்களுடைய கிப்லாவாக (Prime Meridian) லண்டன் கிரீன்விச் பகுதியை வைத்திருப்பதால் உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரிய உச்சத்தில் இருக்கும் போது அந்த லண்டன் கிரீன்விச் பகுதியானது உள்நாட்டு நேரம் இரவு 12 மணியாக இருக்கும். எனவே இஸ்லாத்தை எதிர்ப்போர் அவர்களுடைய கிப்லாவாக (Prime Meridian) லண்டன் கிரீன்விச் பகுதியை மையப்படுத்தி, அவர்களுடைய கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில் இரவு 12 மணிக்கு தேதியையும் கிழமையையும் மாற்றி வருவதைப் பார்க்கலாம்.


ஹூப்ரு நாட்காட்டி(Hebrew Calendar) அல்லது யூத நாட்காட்டி யூதர்களால் சமய சடங்குகளுக்காக பயன்படுத்தப்படும் ஓர் சூரியசந்திர நாட்காட்டி ஆகும். அண்மைய காலங்களில் சில கிறிஸ்துவர்களும் இதனை பாஸ்கா விழாவை குறிக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்நாட்காட்டி முதன்மையாக சமய சடங்குகளுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இஸ்ரேலில் யூத விவசாயிகளால் விவசாய கால கணிப்பிற்கும் இது பயன்படுகின்றது. யூத நாட்காட்டியில் 29 அல்லது 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் உள்ளன. மற்றும் சூரிய நாட்காட்டியுடன் ஒருங்கிணைக்க பத்தொன்பது ஆண்டுகளில் ஏழுமுறை ஓர் இடைச்செருகல் மாதம் (Intercalary) சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் புதிய மாதம் துவங்கும். (Courtesy : Wikipedia)


இன்னும் உலகத் தேதிக்கோடு முஸ்லிம்களால்தான் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது என்பதையும், முஸ்லிம்களின் இறைவணக்கமான தொழுகையையும், முஸ்லிம்களின் கிப்லாவையும் மையப்படுத்தியே கிழமை மாற்றம் நடைபெறுவதையும் மறைத்து வரலாறுகளில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து விட்டனர். கடந்த 1995 ஆம் ஆண்டில் சர்வதேசத் தேதிக் கோட்டிற்கு அருகாமையிலுள்ள கிரிபாட்டி தீவுகளில் ((Kiribati Islands) சிலவற்றை சர்வதேசத் தேதிக் கோட்டைத் தாண்டி கிழக்குப் பகுதிக்கு முன்னதாக செல்லும்படி மாற்றியமைக்கப் பட்டது. காரணம் கடந்த 2000-ஆம் ஆண்டு ((Millennium) துவக்க நாளின் சூரியன் எங்கள் நாட்டில்தான் முதலில் உதிக்கிறது என்று கூறி சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக இதைச் செய்தார்களாம். இந்த பெயரில் கிரிபாட்டி தீவுகளை 24 மணிநேரங்கள் அளவுள்ள (ஒருநாள்) வித்தியாசத்தில் இடமாற்றம் செய்து விட்டனர்.


இதனால் பிற மதத்தினர்களுக்கு வழிபாட்டு ரீதியான பாதிப்புகள் இல்லை. ஆனால் முஸ்லிம்களுக்குப் பாதிப்புகள் இருக்கின்றன. காரணம் அங்குள்ள முஸ்லிம்கள் வியாழக்கிழமை அன்று வெள்ளிக்கிழமை என்று கருதி ஜூம்ஆ தொழுகையை தொழும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய குழப்பத்திற்கு யார் காரணம்? தீர்வு என்ன? என்பதைக் கூட சித்திக்காமல் இந்த முஸ்லிம் உம்மத் பராமுகமாகவே உள்ளது.


இவ்வாறு இஸ்லாத்தை வெறுப்போர் குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டுதல்கள், கட்டளைகள் மற்றும் விதிமுறைகளுக்கு நேர் மாற்றமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். அல்லாஹ் வலியுறுத்தும் சந்திரனின் படித்தரங்களால் நிறுவப்பட்டுவிட்ட துல்லியமான இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவதிலிருந்து உலக மக்களை முழுமையாக திசைதிருப்பி விட்டனர். அல்லாஹ் இந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைத் துல்லியமானதாகவும், தவறுகளிலிருந்து அப்பாற்பட்டதாகவும் பாதுகாத்துள்ளான் அல்ஹம்துலில்லாஹ். எனவே நாம் விளக்கியுள்ள அனைத்து விஷயங்களை நடுநிலையோடு சிந்தித்து இப்புத்தகத்தை இறுதிவரை படித்தறிய வேண்டுகிறோம்.

15. பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா?

நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்கப் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் கட்டளையிடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள். தொழுகை நேரங்களை அறிந்துகொள்ள சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை கணக்கிடுவது எவ்வாறு அவசியமோ, அதுபோல ஒரு கிழமைக்குரிய தேதியை அறிந்துகொள்ள சந்திரனின் மனாஸில்களை (தங்குமிடங்களை) கணக்கிட்டுத்தான் ஆகவேண்டும். அதற்கு திருமறை குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் கட்டளையிடுகிறது, வலியுறுத்துகிறது, ஆர்வமூட்டுகிறது. அன்றி தடை விதிக்கவில்லை என்பதையும் தெளிவாக நீங்கள் புரிந்திருப்பீர்கள்.


இன்று அதிகமான மக்கள் நம்பியுள்ளது போல பிறை மறையும் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அதைப் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்பது தவறான வழிமுறையாகும் என்பதை இதுவரை படித்த விளக்கங்களிலேயே நீங்கள் தெரிந்திருப்பீர்கள்.


இருப்பினும் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று வாதிடும் சிலர், பலவீனமான அறிவிப்புகளை சிறிதும் ஆய்வு செய்திடாமல் தங்களின் பிறை கொள்கைக்கு தக்க ஆதாரங்களாக நம்பி அவற்றை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர். பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்பதற்கு அவ்வறிஞர்கள் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களுமே மிகவும் பலவீனமாகத்தான் உள்ளன என்ற நிலையில், அத்தகைய அறிவிப்புகளில் சிலவற்றை சுருக்கமான தகவல்களுடன் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.

15.A ஒரு கிராமவாசியின் பிறை அறிவிப்பு:

حدثنا أبو العباس محمد بن يعقوب ، ثنا أبو البختري عبد الله بن محمد بن شاكر ، ثنا الحسين بن علي الجعفي ، ثنا زائدة ، عن سماك بن حرب ، عن عكرمة ، عن ابن عباس ، قال : جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم ، فقال : إني رأيت الهلال - يعني هلال رمضان - ، فقال : " أتشهد أن لا إله إلا الله ؟ " قال : نعم ، قال : " أتشهد أن محمدا رسول الله ؟ " قال : نعم ، قال : " يا بلال أذن في الناس أن يصوموا غدا " تابعه سفيان الثوري ، وحماد بن سلمة ، عن سماك بن حرب. *(المستدرك على الصحيحين للحاكم - كتاب الصوم حديث : ‏1477‏).


நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்தார். நான் நிச்சயமாக பிறையைக் கவனித்தேன் என்று அவர் கூறினார். நீ லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சாட்சி கூறுகிறாயா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கிராமவாசி) ஆம் என்றார். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கிராமவாசி) ஆம் என்றார். பிலாலே! நாளை நோன்பு நோற்க மக்களிடம் நீர் அறிவிப்பு செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவித்தவர் : இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஹாக்கிம் 1477.


மேற்படி அறிவிப்பை காரணம் காட்டி பார்த்தீர்களா ஒருகிராமவாசி பிறையைப் பார்த்து அவர் மட்டும் தனித்து வந்து சாட்சி சொன்னதற்கே நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நோன்பு வைப்பதற்கு மக்களுக்கு கட்டளையிடுமாறு பிலால் (ரழி) அவர்களை வலியுறுத்தியுள்ளார்கள் பாருங்கள் என்று கூறி இந்த அறிவிப்பு பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்குரிய ஆதாரம் என்று வாதம் வைக்கின்றார்கள்.


இந்த ஹதீஸில் ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறும்போது ''ழயீஃபுல் ஹதீஸ்', 'முள்தரபுல் ஹதீஸ்', 'மனன ஆற்றலில் மோசமானவர்' என்று விமர்சிக்கின்றனர். மேலும் குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அவரைப் பற்றி கூறும்போது இக்ரிமா இடமிருந்து இவர் கூறும் ஹதீஸ்களில் அதிக முள்தரபுகள் இடம் பெற்றிருக்கும். மேலும், இவரின் மனன ஆற்றல் கடைசி காலத்தில் மோசமாகி விட்டது. ஆகையினால் இக்ரிமாவிடமிருந்து இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப் படாது என்று திட்ட வட்டமாக கூறியுள்ளார்கள். மேற்படி ஹாக்கிமின் 1477-வது அறிவிப்பையும் ஸிமாக் பின் ஹர்ப் அவர்கள் இக்ரிமாவிடமிருந்துதான் அறிவித்துள்ளார்.


இதே ரிவாயத்து அபூதாவுதில் 2006-வது அறிவிப்பாகவும், திர்மிதியில் 659-வது அறிவிப்பாகவும் இடம்பெறுகின்றன. அந்த ஸனதுகளில் 'வலீது' என்பவர் இடம்பெறுகிறார். அவரைப்பற்றி ஹதீஸ்கலை வல்லுனர்கள் 'பலவீனமானவர்', 'கத்தாப் - பொய்யர்', 'சரியில்லாதவர்' என்றெல்லாம் மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளனர். அவர் ரிவாயத்து செய்யும் அறிவிப்பை 'ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.


இந்நிலையில் இவ்வளவு கடுமையாக விமர்சனங்கள் செய்யப்பட்ட, பலவீனமான அறிவிப்பாளர்களைக் கொண்ட மேற்படி அறிவிப்புகள் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்கு எப்படி ஆதாரமாகும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். எனவே பிறையைக் பார்த்து அதன் தகவலைக் கூறி, நபி (ஸல்) அவர்கள் ரழமான் நோன்பை ஆரம்பித்ததாக வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவையாகவே உள்ளன.


குறிப்பாக பிறை மறையும் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அதைப் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அடுத்த நாள்தான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள், நபி (ஸல்) அவர்கள் பிறையை நேரடியாகப் பார்த்ததாக ஒரு ஹதீஸைக்கூட தரமுடிவில்லையே ஏன்? யாரோ பிறையைப் பார்த்தாகவும், அவர்கள் தகவல் அளித்ததாகவும் வரும் பலவீனமான செய்திகளையே புறக்கண் பார்வைக்கு ஆதாரமாக வைப்பது ஏன்? இதையும் சற்று கவனிக்க வேண்டுகிறோம்.

15. B பிறையை பார்த்ததும் ஒதும் துஆ:

பிறையைப் ('ஹிலால்'!) பார்க்கும் போது ஓத வேண்டிய துஆ சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட அறிவிப்பையும் தங்களின் புறக்கண் பார்வைக்கு மற்றொரு ஆதாரமாகக் கூறுகின்றனர். பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டியது இபாதத் என்பதாலேயே நபி(ஸல்) அவர்கள் அதற்கான துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள் என்றும் கூறுகின்றனர். எனவே அத்தகைய அறிவிப்புகளின் நிலையையும் சுருக்கமாகக் காண்போம்.


حَدَّثَنَا أَبُو عَامِرٍ ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُفْيَانَ الْمَدَايِنِيُّ ، حَدَّثَنِي بِلَالُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْهِلَالَ ، قَالَ " اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيمَانِ ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ " . مسند أحمد بن حنبل » مُسْنَدُ الْعَشَرَةِ الْمُبَشَّرِينَ بِالْجَنَّةِ ... » مُسْنَدُ بَاقِي الْعَشَرَةِ الْمُبَشَّرِينَ بِالْجَنَّةِ ... » مُسْنَدُ أَبِي مُحَمَّدٍ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ...


அல்லாஹ்வே, அதை அபிவிருத்தி உள்ளதாகவும், ஈமானையும், இஸ்லாமையும், சாந்தியையும் தரக்கூடியதாக ஆக்கிவைப்பாயாக! உன்னுடைய ரப்பும் என்னுடைய ரப்பும் அல்லாஹ்தான்.

அறிவித்தவர் : தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி), நூல்: முஸ்னத் அஹமத்.


மேற்கண்ட செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் 'சுலைமான் பின் சுப்யான் அல் மதாயினி' மற்றும் 'பிலால் பின் யஹ்யா' ஆகிய இருவருமே பலவீனமானவர்கள் என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். நீங்கள் அறிந்து கொள்வதற்காக சில விபரங்களை மட்டும் சுருக்கமாக இங்கே தந்துள்ளோம்.


இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் தாரக்குத்னீ(ரஹ்) மற்றும் இமாம் தஹபீ(ரஹ்) ஆகியோர் அனைவரும் மேற்படி சுலைமான் பின் சுப்யான் ழயீஃபானவர் - பலவீனமானவர் என்று விமர்சிக்கின்றனர்.


அதைப்போல், இமாம்களான அபூ ஹாதிம் அல் ராஸி (ரஹ்), அபூ சுர்ஆ அர் ராஸி (ரஹ்), அலி இப்னு மதனீ (ரஹ்), முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி (ரஹ்) மற்றும் யாகூப் பின் சீபா (ரஹ்) ஆகியோர்கள் மேற்படி சுலைமான் பின் சுப்யானை 'முன்கருல் ஹதீஸ் - ஹதீஸ்களில் தடுக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர்.


இன்;னும் எஹ்யா பின் மயீன் (ரஹ்), நஸாயீ (ரஹ்), மற்றும் அபீ பிpச்ர் அத் துலாவி (ரஹ்) ஆகியோர் சுலைமான் பின் சுப்யானை 'லைஸ பி ஸிகா – அவர் நம்பகமானவர் அல்ல' என்றும் விமர்சித்துள்ளார்கள்.


பிலால் பின் யஹ்யா என்பவர் பற்றிய விமர்சனங்களில், 'லையினுல் ஹதீஸ் - ஹதீஸ்களில் பலவீனமானவர்' மேலும், தக்ரீபுத்தஹ்ஸீபில் 'மஜ்ஹூல் இனம் காணப்படாதவர்' என்று இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் பிலால் பின் யஹ்யாவை 'ழயீப்- பலவீனமானவர் எனக் கூறியுள்ளார்கள்.


ஆக, இந்த அறிவிப்பின் தரம் எந்த அளவிற்கு பலவீனமானது என்பதை அதன் அறிவிப்பாளர்கள் விமர்சிக்கப் பட்டுள்ளதை வைத்தே உணர்ந்து கொள்ள இயலும். மேலும் சிறுசிறு வார்த்தை மாற்றங்களுடன் ஹிலாலைப் பார்த்ததும் துஆ ஓத வேண்டும் என்று இடம்பெறும் இவைபோன்ற அறிவிப்புகள அனைத்தும் பலவீனமான தரத்திலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே ஆக வேண்டும் என்பதற்கு பிறையைப் பார்த்ததும் ஓதும் துஆ சம்பந்தப்பட்ட மேற்கண்ட அறிவிப்பை தக்க ஆதாரமாகக் கருதி எவ்வாறு வாதிடுகின்றனர் என்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


'ஹிலால்' என்ற பதம், சந்திரனின் குறைந்தது 12 படித்தரங்களையாவது குறிக்கும் என்பதை அரபு அகராதி விளகக்ங்களை மேற்கோள் காட்டி ஆதாரங்களுடன் முன்னர் விளக்கியுள்ளோம். எனவே எந்த நாளின் ஹிலாலைப் பார்த்து இந்த துஆவை ஓத வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், 30-வது நாள் பார்க்கும் பிறைக்கு மட்டும்தான் மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்ய முடியும்? ஆக பிறந்த பிறையைப் புறக்கண்ணால், முப்பதாம் நாள் மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற பிறை நிலைப்பாட்டை கொண்டவர்களுக்கு இந்த பலவீனமான அறிவிப்பில் கூட எந்த ஆதாரமும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.


மேற்கண்ட பலவீனமான செய்தியை நம்பியிருக்கும் மாற்றுக் கருத்துடையோர் கீழ்க்காணும் கேள்விகளை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்ப்பட்டு சிந்தித்து பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.


1. பிறந்த பிறையைப் பார்த்து இந்த துஆவை ஒத வேண்டும் என்று சொல்பவர்களில் நீங்களும் இருந்தால் இவ்வாறு எத்தனை தடவை பிறந்த பிறையை நேரடியாக பார்த்து இந்த துஆவை ஓதியுள்ளீர்கள்? அல்லாஹ்வை முன்னிறுத்தி உங்கள் நெஞ்சில் கை வைத்துக் கூறுங்கள்.


2. அப்படியே நீங்கள் ஒரு வெள்ளிக்கிழமை மஃரிபில் பிறைபார்த்து ஓதியிருந்தாலும், அது சனிக்கிழமைக்குரிய பிறைதான், அதுதான் தலைப்பிறை என்று உங்கள் மனசாட்சி ஊர்ஜிதமாக சொல்லுகிறதா?


3. ஒரு மாதத்தின் 29-வது நாளின் பின்னேரம் 30-வது இரவு என்று நீங்கள் முடிவு செய்யும் ஒருநாளில் மேற்குத் திசையில் பார்க்கும் பிறைக்குத்தான் மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நீங்கள் எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள்?


4. 'உன்னுடைய ரப்பும் என்னுடைய ரப்பும் அல்லாஹ்தான்' என்ற வாசகம் அந்த துஆவில் இடம் பெற்றிருக்கையில் நம் அனைவருக்கும் 'ரப்பாகிய' வல்ல அல்லாஹ் பிறைகளை பற்றி அல்குர்ஆனில் 10:5, 2:189, 55:5, 36:39, 6:96 போன்ற வசனங்களில் கூறியுள்ளவற்றை என்றாவது சிந்தித்ததுண்டா? அவற்றை தற்போதாவது நடைமுறைப்படுத்த தயாரா?


5. பிறைக்கும் நமக்கும் ரப்பாகிய அல்லாஹ்தான் ஒரு மாதத்தில் புறக்கண்களால் பார்க்க இயலும் பிறையின் இறுதி படித்தரத்தைப் பற்றிக் கூறியுள்ளான். அந்த 'உர்ஜூஃனில் கதீம்' என்ற அந்த ஹிலாலைப் பார்க்கும் போதும் மேற்படி துஆவை ஓதலாமா?


6. தேய்பிறையின் இறுதி நாளான 'உர்ஜூஃனில் கதீம்' என்ற ஹிலாலுக்கும் மேற்படி துஆ பொருந்தும் என்றால், அதற்கு அடுத்தநாள் சங்கமதினம் என்ற பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் நாள் என்பதையும், அந்த சங்கம தினத்திற்கு அடுத்தநாள்தான் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?


7. இல்லை 'உர்ஜூஃனில் கதீம்' என்ற ஹிலாலைப் பார்க்கும் போது மேற்படி துஆவை ஓதக்கூடாது என்றால், ஏன் ஓதக்கூடாது? உர்ஜூஃனில் கதீம் என்ற பிறைப்படித்தரம் பிறையே இல்லையா? சந்திரனின் அப்படித்தரம் பிறையில் சேராது என்பதை ஆதாரங்களுடன் விளக்கத் தயாரா?


8. பிறை பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும், பிறையைப் பார்த்தால் துஆவும் ஒத வேண்டும் என்று வாதிக்கின்றனர். நீங்கள் யாராவது பிறையைப் பார்த்தால் டவுண் காஜியிடமோ, எங்கள் இயக்கத்தின் தலைமைக்கோ, பிறை கமிட்டியிடமோ அறிவிக்கவும் என்றும் விளம்பரப் படுத்துகின்றார்கள். அப்படி பிறந்த பிறையைப் பார்த்து தகவலை அறிவிக்கும் போது நீ முதலில் பிறை துஆவை ஓதிவிட்டாயா? என்று எந்த டவுண்காஜி கேட்கிறார்? டவுண் காஜிகளுக்கு இவ்வாறு தலைப்பிறையை பார்த்து துஆ ஓதக்கூடிய பாக்கியம் என்றாவது கிடைத்துண்டா? பிறைத் தகவலை அளிப்பவருக்கு இந்த துஆ அவசியம் தெரிந்திருக்க வேண்டுமா? இந்த துஆவை ஒதத் தெரியாதவர்கள் பிறையைப் பார்த்து விட்டு ஒருவேளை அறிவிக்கும் போது அவரின் அந்தத் தகவலை ஏற்று அமல் செய்யலாமா?


இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை நம்மால் எழுப்ப இயலும். இருப்பினும் மேற்படி துஆ சம்பந்தப்பட்ட அறிவிப்பு யாரும் மறுக்க இயலாத வகையில் அமைந்துள்ள 'ழயீஃபான - பலவீனமான' செய்தியாக இருப்பதால் அதுபற்றிய சுருக்கமாக தகவல்களை மட்டுமே இங்கு சமர்ப்பித்துள்ளோம்.


கடந்த 2000-ஆம் ஆண்டு நெல்லை ஏர்வாடியில் பிறை விவாதம் ஒன்று நடைபெற்றது. அவ்விவாதத்தில் அவரவர்கள் தத்தமது பகுதியில்தான் பிறை பார்க்க வேண்டும் என்று ஒரு சாராரும், சர்வதேசப் பிறை கொள்கைதான் சரி என்ற மற்றொரு அணியாகவும் இருந்து விவாதித்தனர். அந்த விவாதத்தைத் துவங்கும் போது சர்வதேசப்பிறை கொள்கை தரப்பில் இருந்தவர்கள், ஹிலாலைப் பார்த்து ஒதும் மேற்படி துஆவை ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். அப்போது ' ஆரம்பிக்கும் போதே பலவீனமான ஹதீஸா' என்று தத்தமது பிறை கொள்கையினர் கேலி செய்தனர்.


அவ்வாறு கேலிசெய்த தத்தமதுபகுதி பிறையினர் பின்பு ஒருநாள் அவர்களின் இதழ் ஒன்றில் இதே துஆ ரிவாயத்தை பிரசுரித்திருந்தார்கள். அப்போது சர்வதேசப் பிறை கொள்கையினர் பதிலுக்கு அவர்களை கேலிசெய்தனர். சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தை இங்கு பதிவு செய்கிறோம். தற்போது மக்களின் மறதியைப் பயன்படுத்தி தங்களுடைய பிறை கொள்கையை நிலைநாட்டிட வேறு வழியில்லை என வரும்போது இவ்வாறான பலவீனமான ஹதீஸ்களையும் தூக்கி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ளோம்.

15. C ரிப்யீ பின் ஹிராஷ் அறிவிக்கும் இரண்டு கிராமவாசிகளின் பிறை செய்தி :

حدثنا مسدد ، وخلف بن هشام المقرئ ، قالا : حدثنا أبو عوانة ، عن منصور ، عن ربعي بن حراش ، عن رجل ، من أصحاب النبي صلى الله عليه وسلم قال : اختلف الناس في آخر يوم من رمضان ، فقدم أعرابيان ، فشهدا عند النبي صلى الله عليه وسلم بالله لأهلا الهلال أمس عشية ، " فأمر رسول الله صلى الله عليه وسلم الناس أن يفطروا " . )سنن أبي داود - كتاب الصوم باب شهادة رجلين على رؤية هلال شوال - حديث : ‏2005‏(.


ரமழானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து, நேற்று இஷா நேரப் பிறையால் சப்தமிட்டனர் என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டனர் அறிவித்தவர்: ரிப்யீ பின் ஹிராஷ், நூல்: அபூதாவூத் 2005.


حدثنا أبو بكر النيسابوري , ثنا الحسن بن محمد بن الصباح , ثنا عبيدة بن حميد , عن منصور , عن ربعي , عن رجل , من أصحاب النبي صلى الله عليه وسلم , أن النبي صلى الله عليه وسلم أصبح صائما لتمام الثلاثين من رمضان , فجاء أعرابيان فشهدا أن لا إله إلا الله وإنهما أهلاه بالأمس , فأمرهم " فأفطروا " . (سنن الدارقطني - كتاب الصيام باب الشهادة على رؤية الهلال - حديث : ‏1921‏).


நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் முப்பதாம் நாளில் நோன்பு நோற்றவர்களாக சுப்ஹூ வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சாட்சி கூறி நேற்று அவர்கள் அதற்காக சப்தமிட்டனர். எனவே அவர்கள் அவர்களை நோன்பை விடுமாறு கட்டளையிட்டார்கள். அறிவித்தவர்: ரிப்யீ, நூல்: தாரகுத்னீ


மேற்படி அறிவிப்பை வைத்துக்கொண்டு அந்த இரண்டு கிராமவாசிகள் பிறையை பார்த்துவிட்டுத்தானே நபி (ஸல்) அவர்களிடம் அறிவிக்கின்றார்கள் என்று வாதம் வைக்கின்றார்கள். முதலில் ரிப்யீ பின் ஹிராஷ் என்ற தாபிஈயீ அறிவிக்கும் மேற்கண்ட செய்தியை மீண்டும் படித்துப் பாருங்கள்.


மேற்காணும் அபூதாவூது 2005-வது அறிவிப்பில் இடம்பெறும் 'அஷிய்யா' என்ற அரபுப் பதம் இரவு உணவு சாப்பிடும் நேரத்தைக் குறிப்பதாகும். மேலும் அங்கே கிராமவாசிகள் பிறை பார்த்ததாக எந்த நேரடி வாசகமும் இல்லை. இன்னும் பிறை பற்றி 'அஷிய்யா' நேரத்தில் மக்கள் சப்தமிட்டதாக நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி கூறியதாகவே செய்தி இடம்பெறுகிறது. மேலும் தாரகுத்னீயில் இடம்பெறும் 1921-வது அறிவிப்பிலும் யாரும் பிறை பார்த்ததாக நேரடி வாசகம் எதுவும் இல்லை.


மேற்கண்ட இரு அறிவிப்புகளின் இடம் பெற்றுள்ள 'நேற்று இஷா நேரப் பிறையால் சப்தமிட்டனர்', 'சாட்சி கூறி நேற்று அவர்கள் அதற்காக சப்தமிட்டனர்' போன்ற வாசகங்களை நேரடியாக மொழிபெயர்த்தால் நகைப்புகுரியதாகவே அமையும். இந்நிலையில் மேற்கண்ட இரு அறிவிப்புகளுமே 'முர்ஸல்' அறிவிப்புகள் ஆகும். இந்த அறிவிப்புகளை ஆதாரமாக ஏற்றுக்கொள்பவர்கள் 'முர்ஸல்' அறிவிப்புகள் மார்க்க ஆதாரமாகாது என்பதை வசதியாக மறந்தது ஏன்? என்று கேட்கிறோம்.


முர்ஸல் என்றால் இடையில் விடுபட்;டது என்பது இதன் சொற்பொருளாகும். அதாவது அர்ஸல் என்ற இறந்த கால வினைச் சொல்லிலிருந்து வந்த இஸ்மு மஃப்ஊல் வடிவமே முர்ஸல் என்பதாகும். இதன் பொருள் பொதுவாக விட்டுவிட்டான் என்பதுதாகும்.


ஏனெனில் முர்ஸல் வகை நபிமொழியில் அறிமுகமான அறிவிப்பாளரை குறிப்பிடாமல் அறிவிப்பாளர் தொடர் விடப்பட்டு விடுகிறது. ஏற்றுக் கொள்ளத்தக்க நபிமொழிக்கான நிபந்தனைகளில் ஒன்றான 'அறுபடாத' அறிவிப்பாளர் தொடர்ச்சியை இழந்த காரணத்தினாலும், விடுபட்ட அறிவிப்பாளரின் விவரம் தெரியாததாலும் அவ்வாறு விடுபட்டவர் நபித்தோழர் அல்லாதவராக இருக்கலாம் என்ற காரணத்தாலும் இந்த முர்ஸல் வகை நபிமொழி ஏற்றுக் கொள்ளப்படாத பலவீனமான நபிமொழியாகும் என்று தைஸீரு முஸ்தலஹுல் ஹதீத் போன்ற ஹதீஸ்கலை நூல்களில் நாம் காணமுடிகிறது.


ஒரு செய்தி நபி (ஸல்) அவர்களிடம் இருந்து பெறப்பட்டதா? என்பதை அறிவதுதான் ஹதீஸ் கலையின் முக்கிய விதியாகும். அறிவிப்பாளர்களின் தொடர் எத்தகைய சந்தேகங்களுக்கும், பலவீனங்களுக்கும் அப்பாற்பட்ட நபி (ஸல்) அவர்கள் வரை சீராகச் சென்று முடிந்தால்தான் அந்தச் செய்தி ஹதீஸ் என்ற தரத்தை அடையும். அதுவரை அந்த செய்தியை ஹதீஸாக ஏற்க முடியாது.


ஒரு செய்தி நபி (ஸல்) அவர்கள் வரை செல்லாமல் நபித்தோழர்கள் காலத்திற்கு பின்னால் வாழ்ந்த ஒரு தாபிஈ ஒருவரால் பொத்தாம் பொதுவாக நான் ஒரு ஸஹாபியிடம் கேட்டேன் என்று மறைத்து அறிவித்தால் அது எவ்வகையிலும் ஹதீஸ் என்ற தரத்தை அடையவே முடியாது. எல்லா விதிகளும் சரியாக இருக்கும் ஒரு செய்தியைத்தான் ஸஹீஹ் தரத்தில் உள்ள ஹதீஸ் எனக் கூறப்படும்.


மேற்கண்ட செய்திகள் எவ்வகையிலும் மர்ஃபூவு தரத்தை அடையவே முடியாது என்பதை சிந்திப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்நிலையில் முர்ஸலான அறிவிப்புகள் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கும் நிலையில் மேற்கண்ட அறிவிப்புகளுக்கு மட்டும் அது விதிவிலக்காகி விட்டதா? என்று இவற்றை ஆதாரமாகக் கருதுபவர்களிடம் நாம் மீண்டும் கேட்க விரும்புகிறோம்.


எனவே தாரகுத்னீயில் இடம்பெறும் 1921-வது அறிவிப்பும், அபூதாவூது 2005-வது அறிவிப்பும் எந்த நபித்தோழர் இதை அறிவித்தார்கள் என்ற தகவல் காணப்படாத பலவீனமான அறிவிப்புகளாகிவிட்ட நிலையில் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்கு அவை எக்காலமும் ஆதாரமாகாது என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். இன்னும் தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறை பார்த்த தகவல் போன்ற பிறை நிலைப்பாடுகளுக்கு வாகனக்கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா? என்ற நமது ஹிஜ்ரிகமிட்டி வெளியிட்ட புத்தகத்தை நீங்கள் படித்தால் முர்ஸலான அறிவிப்புகள் பற்றிய முழுமையான விளக்கங்களைப் பெறலாம்.


அறிவிப்பாளர் விடுபட்ட ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று நாம் பிரச்சாரம் செய்து வந்ததின் விளைவாக கஷ்டப்பட்டு, மெல்லவும் இயலாமல், விழுங்கவும் முடியாமல் கீழ்க்கண்ட ஒரு அறிவிப்பை எடுத்துள்ளனர். இதோ விடுபட்ட நபித்தோழர் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டோம், இதுவே எங்களுடைய ஆதாரம் என்று சிலர் முழங்குகின்றனர். குறிப்பாக அவர்களுடைய அந்த ஆதாரத்தையும் நாம் இப்போது அலசுவோம்.

15. D இரண்டு கிராமவாசிகள் சம்பந்தமாக வரும் மேலும் ஒரு அறிவிப்பு:

سنن الدارقطني - كتاب الصيام باب الشهادة على رؤية الهلال - حديث : ‏1938‏


حدثنا محمد بن إسماعيل الفارسي , ثنا عثمان بن خرزاذ , ثنا إبراهيم بن بشار , ثنا سفيان بن عيينة , عن منصور , عن ربعي بن حراش , عن أبي مسعود الأنصاري , قال : أصبحنا صبيحة ثلاثين , فجاء أعرابيان رجلان يشهدان عند النبي صلى الله عليه وسلم أنهما أهلاه بالأمس , فأمر الناس " فأفطروا " *


முப்பதாவது காலையை நாம் அடைந்தோம். அப்போது இரு மனிதர்களான கிராமவாசிகள் வந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் நேற்று அதற்காக இருவர் சப்தமிட்டதாக சாட்சி கூறினர். அச்சமயம் அவர் மக்களுக்கு கட்டளையிட்டார். எனவே நீங்கள் நோன்பை நிறைவு செய்யுங்கள்.


அறிவித்தவர் : அபீ மஸ்வூத் அல் அன்சாரி (ரழி). நூல்: தாரகுத்னீ 1938.


மேற்கண்ட இந்த அறிவிப்புதான் மாற்றுக் கருத்துடையோர் எடுத்துக்காட்டும் செய்தியாகும். இதிலும் அவர்களுடைய பிறை நிலைப்பாட்டிற்கு எந்த ஆதாரமும் காண முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க இந்த அறிவிப்பின் பலவீனமான இலட்சனங்களைப் பாருங்கள்.


இதில் அபீ மஸ்வூத் அல் அன்சாரி என்ற நபித்தோழரிடமிருந்து ரிப்யீ பின் ஹிராஷ் கேட்டதாக அறிவிப்பாளர் தொடர் அறுபடாமல் உள்ளது என்பதே அவர்களின் வாதம். இவ்வாறு வாதம் புரிபவர்களுக்கு ஹதீஸ்கலையை உண்மையிலேயே தெளிவாக படித்திருந்தால் அவர்கள் இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டியிருக்க மாட்டார்கள்.


ஏனெனில் இந்த செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சுப்யான் பின் உவைனா என்பவரின் இறுதி காலத்தில் 'மனன சக்தியை இழந்துவிட்டார்' என்றும் 'அவர் செய்திகளை மறைத்து அறிவிப்பார்' என்பதும் அறிஞர்களின் விமர்சனங்களாகும். அதாவது 'இல்லாததை இருப்பது போலும், இருப்பதை இல்லாதது போலும் ஹதீஸிலும், அறிவிப்பாளர் வரிசையிலும் இணைத்துவிடுவார்' என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் மேற்படி சுப்யான் பின் உவைனாவைப் பற்றி விமர்சித்து உள்ளார்கள்.


மேலும் இந்த ரிவாயத்தில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளரான இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி என்ற அறிப்பாளரும் பலவீனமானவரே. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் தஹபி (ரஹ்) போன்றவர்கள் இவரைப் பற்றி கூறும்போது, மேற்படி இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதியாகிய 'இவர் கற்பனை செய்து கூறுவதும்', 'இல்லாததை இணைப்பதும்' இவரின் பணியாகும் என்று விமர்சித்துள்ளனர்.


மேலும் இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி பற்றி இமாம் நஸாயி (ரஹ்) கூறும்போது 'இவர் பலமற்றவர்' என்றும், 'இவர் கற்பனை செய்து கூறுபவர்' என்று இமாம் புஹாரி (ரஹ்) அவர்களும் கூறுகின்றார்கள்.


அபூ அகமது பின் ஆதி அவர்கள் இவரைப் பற்றி கூறும்போது 'இப்னு உவைனாவிடமிருந்து இவர் அறிவிப்பது முர்ஸலாகவே உள்ளன' என்கின்றார்கள்.


இமாம் அஹமத் (ரஹ்) அவர்களின் மகனான அப்துல்லாஹ் அவர்கள் இமாம் அவர்களிடம் இவரைப் பற்றி விசாரித்தார். இமாம் அவர்கள் இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி அவர்கள் 'சுப்யானிடமிருந்து அறிவிப்பதாக இவர் கூறினால் அது சுப்யான் பின் உவைனாவிடமிருந்து கேட்டதாக இல்லை'. அது வேறு சுப்யானாகும் என்றார்கள்.


இமாம் இப்னு முயீன் (ரஹ்) அவர்கள் இவரைப்பற்றி கூறும்போது 'லைஸ பி ஷை' என்று கூறுவார்கள். மேலும் 'அவர் சுப்யானிடமிருந்து எதையும் எழுதிக்கொள்ள வில்லை'. மேலும் 'அவருடைய கையில் எழுதுகோலை எப்பொழுதும் பார்த்ததேயில்லை'. 'மக்கள் எழுதும் போது சுப்யான் எதையெல்லாம் கூறவில்லையோ அவற்றையெல்லாம் எழுதி வைத்துவிடுவார்' என்று கூறியுள்ளார்கள்.


அல் அகீலி அவர்கள் இவரின் பல ஹதீஸ்கள் மீது 'லைஸ லஹூ அஸ்லுன் மின் ஹதீஸி இப்னு உவைனா' எனக் கூறுவார். அதாவது 'அவருக்கு அபூஉவைனாவின் ஹதீஸில்; எந்த ஒரு மூலமும் கிடையாது' என இப்னு அதி கூறும் கூற்றை பதிவு செய்வார்.


இவ்வாறு விண்னை முட்டும் விமர்ச்னங்கள் மேற்காணும் ரிவாயத்தில் இருக்க, மேற்படி சங்கதிகளை மூடி மறைத்து, அறிவிப்பாளர் தொடர்பு அறுபடாது வந்து விட்டது என்று திசை திருப்புவது ஏன்? புறக்கண் பார்வை நிலைப்பாட்டிற்கு எந்த சம்பந்தமும் இல்லாத மேற்படி செய்தியை ஆதாரமாகக் கருதும் மாற்றுக் கருத்துடையோரின் ஹதீஸ் ஆய்வின் மிகவும் பின்னடைந்த போக்கை கண்டு வியப்படைகிறோம்.


இவ்வாறு விண்னை முட்டும் விமர்ச்னங்கள் கொண்ட செய்திகளையே மாற்றுக் கருத்துடையோர் தங்களின் பிறை நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். அத்தகைய பவீனமான ஆதாரங்கள் பிறைகள் விஷயத்தில் மக்களை வழிநடத்த அவர்கள் கொஞ்சம்கூட தகுதியற்றவர்கள் என்பதற்கு சான்றாக அமைகிறது. அவர்களின் நிலைப்பாட்டை தெரிவிக்காத ஒரு செய்தியை (தாரகுத்னீ 1938) அவர்கள் ஆதாரமாகக் கொண்டு வந்தனர். அந்த ஆதாரமும் தேறவில்லை. இந்நிலையில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மட்டுமே செயல்பட வேண்டும் என்ற அவர்களின் கூற்றை எவ்வாறு நிரூபிக்க போகின்றார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


மேலும், அல்லாஹ்வின் உதவியால் இந்த பிறை விஷயங்கள் பற்றி முழுவீச்சில் நாம் ஆய்வுக் களத்தில் இறங்கிய பிறகுதான், மாற்றுக் கருத்துடையவர்கள் ஹதீஸ்களை இப்படி கூடவா வளைத்தும், திரித்தும் தங்களுடைய ஆதாரமாக வாதிடுவர்? என்பதை அறிந்து வியந்தோம். அவர்கள் ஹதீஸ்களை கையாளும் அவல நிலையையும் தெளிவாக அறிந்து கொண்டோம்.


தங்களின் சுயஅறிவிற்கு ஒத்துவராத செய்திகளை அது ஸஹீஹானதாக இருக்கும் நிலையில்கூட அவற்றைத் தட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் அவ்வதீஸ்களை துருவித் துருவி ஆய்வு செய்து பலவீனமாக்க முயலும் அவர்கள், பிறை விஷயத்தில் மட்டும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக்கூட ஆதாரமாகக் காண்பித்து மக்களை ஏமாற்றும் மோசடி போக்கைக் கண்டு உண்மையிலேயே அதிர்ச்சி அடைகிறோம். இப்புத்தகத்தை கவனமாக படித்து உள்வாங்கி வரும் நீங்கள்கூட இதே மனநிலைமையில் இருக்கலாம்.


ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈயீன்களின் கூற்று மார்க்க ஆதாரமாகாது என்று மேடைக்கு மேடை முழங்கும் பிரபல மௌலவி, சரியான அறிவிப்பாளர்கள் வரிசையைக் கொண்ட ஸஹீஹான ஹதீஸ்களைக்கூட தமது சிந்தனைக்கு ஒத்துவரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி ழயீஃப் என்று அவர் சுலபமாக தட்டிவிடும் நிலையில், பிறை விஷயத்தில் மட்டும் இந்த முர்ஸலான அறிவிப்பு உட்பட பல பலவீனமான அறிவிப்புகளைக்கூட தமது பிறைநிலைப்பாட்டிற்கு தக்க ஆதாரங்களாகத் தூக்கிப்பிடிக்கும் இரகசியம்தான் என்ன? என்று கேட்கிறோம்.

15. E நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை அவரவர் முடிவு செய்து கொள்ளலாமா?:

حدثنا محمد بن إسماعيل قال : حدثنا إبراهيم بن المنذر قال : حدثنا إسحاق بن جعفر بن محمد قال : حدثني عبد الله بن جعفر ، عن عثمان بن محمد ، عن سعيد المقبري ، عن أبي هريرة ، أن النبي صلى الله عليه وسلم قال : " " الصوم يوم تصومون ، والفطر يوم تفطرون ، والأضحى يوم تضحون " *.(سنن الترمذي الجامع الصحيح - أبواب الجمعة أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم - باب ما جاء في أن الفطر يوم تفطرون حديث : ‏665‏).


நோன்பு நீங்கள் நோன்பு நோற்கும் கிழமையாகும்;. பெருநாள் நீங்கள் நோன்பு பிடிக்காத கிழமையாகும்;;. ஹஜ்ஜுப் பெருநாள் நீங்கள் குர்பானி கொடுக்கும் கிழமையாகும்;;; ஆகும்;. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவித்தவர்: அபு ஹுரைராஹ் (ரழி), நூல்: திர்மிதீ,அபூதாவூத்).


மேற்கண்ட அறிவிப்பை வைத்து மாற்றுக் கருத்துடையோர், நோன்பு என்று ஒருநாளை நாம் அனைவரும் முடிவு செய்துவிட்டால் அது நோன்பு நாளாகிவிடும் என்றும் அதுபோல நாம் விரும்பியபடி அனைவரும் சேர்ந்து பெருநாள் என்று ஒருநாளை முடிவெடுத்து விட்டால் அது பெருநாள் தினமாகிவிடும் என்றும் கூறுகின்றனர். முதலில் நபி (ஸல்) அவர்கள் இப்படி கூறியிருப்பார்களா? என்று சிந்தியுங்கள்.


நீங்கள் நோன்பு நோற்கும் நாளில்தான் நோன்பு என்றால் அதில் 'நீங்கள்' என்ற சொல் யாரையெல்லாம் குறிக்கும்? தனித்தனி நபர்களையா? அந்தந்த ஊர்களில் வாழும் முஸ்லிம்களையா? அல்லது சர்வதேச முஸ்லிம்கள் அனைவரையும் சேர்த்து குறிக்குமா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் விளக்க வேண்டும்.


சரி இந்த அறிவிப்பாவது ஸஹீஹானதுதானா என்றால் அதுவுமில்லை. இந்த அறிவிப்பில் இப்ராஹிம் பின் முன்திர் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப்பற்றி இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) மற்றும் ஜக்கரிய்யா (ரஹ்) மற்றும் இப்னு ஹஜர் (ரஹ்) போன்றோர் கூறும்போது 'இவர் வெறுக்கப்படக் கூடியவர்' மேலும் ஹல்கில் குர்ஆன் (குர்ஆன் படைக்கபட்டதா) என்ற விஷயத்தில் இவர் பேசப்பட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளனர்.


மேலும் இந்த அறிவிப்பில் உஸ்மான் பின் முஹம்மது என்பவரும் இடம் பெற்றுள்ளார். அவரை 'சந்தேகத்திற்குரியவர்', 'வெறுக்கப்படக் கூடியவர்' என்று இமாம் தஹபி (ரஹ்) மற்றும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்படி படித்தவுடனேயே இது பலவீனம்தான் என்று தெளிவாக தெரியும் மேற்கண்ட அறிவிப்பா? புறக்கண்ணால் பிறந்த பிறையை பார்ப்பதற்கு ஆதாரம்? மேலும் மேற்கண்ட அறிவிப்பில் சில வார்த்தை மாற்றங்களுடன் வந்துள்ள அனைத்து செய்திகளும் பலவீனமானவைகளே.


மேலும், மேற்கண்ட அறிவிப்பில் உள்ள வாசகங்களை உற்று நோக்கும் போது, ஒரே நாளில் தான் அனைவரும் நோன்பிருக்க வேண்டும். அதே போல் ஒரே நாளில் தான் பெருநாளாகும் என்பதைத்தான் அந்த செய்தி தெளிவுபடுத்துகின்றது. எனவே மேற்கண்ட அறிவிப்புகள் ஒருவேளை ஸஹீஹானதாக இருந்திருக்குமானால் அது ஹிஜ்ரி கமிட்டியினருக்கு ஆதாரமான செய்தியாகவே அமைந்திருக்கும். மேலும் அவர்கள் கூறுவது போல் மக்கள் தீர்மானத்தின்படி மாதத்தை ஆரம்பித்தோ பெருநாளை முடிவுசெய்தோ கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை அந்த அறிவிப்பில் எங்கிருந்து எடுத்தார்கள் என்பதை அவர்கள் தான் மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும். எனவே அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு மேற்கண்ட இந்த அறிவிப்பும் ஆதாரமாக அமையவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும்.


மேற்கண்ட பலவீனமான அறிவிப்புகளையும், பல விமர்சங்களைக் கொண்ட அறிவிப்பாளர்களின் செய்திகளையும் முன்னிறுத்திதான் மாதத்தைத் தீர்மானிக்க 30-வது நாள் இரவில் மேற்குத் திசையில் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களின் நிலைப்பாட்டிற்கு இவையே ஆதாரங்கள் என்று அவர்கள் கூறுவதிலிருந்து, அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு எந்தவிதமான தரமான, ஸஹீஹான ஹதீஸ்களும் இல்லை என்பது தௌ;ளத் தெளிவாக நிரூபணம் ஆகிவிட்டது. இன்னும் பிறை பார்த்தல் சம்பந்தமாக மாற்றுக் கருத்துடையோர் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் ஒன்று பலவீனமான செய்தியாக இருக்கும், அல்லது அவர்களின் நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக அவை அமையாது என்ற நிலையில்தான் உள்ளன.


மேலும் அவர்களுடைய புறக்கண்பார்வை அடிப்படையில், 29-வது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்வதுதான் நபிவழி என்று நம்பியுள்ளனர். முப்பதாம் இரவு என்ற அந்த நாளில் மேகம் மூட்டம் பிறையை மறைத்தால், அந்த நாளை முப்பதாம் நாளாக முழுமைப்படுத்தி அடுத்துவரும் மஃரிபு முதல், புதிய மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என்றும் நம்பியுள்ளனர். நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்ற மாற்றுக் கருத்துடையோரின் இந்த நம்பிக்கைக்கும், நிலைப்பாட்டிற்கும் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் உள்ள ஒரு ஸஹீஹான ஹதீஸ் கூட ஆதாரமாக இல்லை. மாற்றுக் கருத்துடையவர்களால் தங்கள் பிறை நிலைப்பாட்டிற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து ஒரு ஆதாரத்தைக்கூட இதுவரை காட்டிட முடியவில்லை என்பதை பகிரங்கமாக தெரிவிக்கிறோம்.


மாற்றுக் கருத்துடையோரின் மேற்படி நம்பிக்கைக்கும், அவர்களின் பிறை நிலைப்பாட்டிற்கும் குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரங்கள் இல்லவே இல்லை என்பதை இவர்களை கண்ணியமாக அணுகி, குர்ஆன் சுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகளை சமர்ப்பித்து, சுட்டிக்காட்டி, பல விளக்கங்களை அளித்தும் அவற்றை எல்லாம் கொஞ்சம்கூட ஏறிட்டு பார்க்காமல் 'பிறந்த பிறையைப் புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டும், பிறை படித்தரங்களை கணக்கிடக்கூடாது' என்று இன்றும் அடம்பிடித்து வருவதை பார்க்கிறோம். இவ்வாறு அடம்பிடித்து, மார்க்கத்தின் பெயரில் மக்களையும் தவறான வழியின்பால் இட்டுச் செல்வோர் பிறைவிஷயத்தில் தங்கள் மனோ இச்சையைத்தான் மார்க்கமாக பின்பற்றுகின்றனர்.


தாங்கள் மக்களிடம் இதுநாள்வரை கூறிவந்த பிறை கோட்பாடுகளை தற்போது எப்படி மாற்றிக் கொள்வது என்ற பரிதவிப்பில் சிலர் இருக்கலாம். அல்லது நமது சமுதாய மக்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கத்திலும்கூட இருக்கலாம். சத்தியத்தை உளப்பூர்வமாக உணர்ந்து மேற்படி சிந்தனையிலுள்ள உலமா பெருமக்கள் தாங்கள் நிதர்சனமாக விளங்கிக் கொண்ட சத்தியத்தை துணிந்து உரைக்க வேண்டுகிறோம். மக்களுக்கு நேரான வழியை போதிப்பதற்கு தயங்கிடவே கூடாது என்கிறோம். உண்மையை உணர்ந்து வெளிப்படுத்துவோரும், தவறை திறுத்திக் கொள்வோரும்தான் உத்தமர்கள், உயர்ந்தவர்கள், இறை உவப்பைப் பெற்றவர்கள் ஆவர்.

15. F பிறை பார்த்தலும் இரண்டு சாட்சிகளும்.

பிறைகளை புறக்கண்களால் பார்ப்பது சம்பந்தமான ஆய்வறிக்கையில் சாட்சி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என்ற ஐயம் எழலாம். இருப்பினும் சாட்சி விஷயங்களிலும் புறக்கண்பார்வை உள்ளடங்கியுள்ளது என்றும், தங்கள் நிலைப்பாட்டிற்கு இதுவும் ஆதாரம் என்றும் மாற்றுக்கருத்தினர் கூறுகின்றனர். மேலும் இரண்டு சாட்சிகள் மூலம் பிறை பார்க்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நபி (ஸல்) செயல்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே இப்பிறைசாட்சி சம்பந்தமான செய்திகள் பற்றியும் விரிவாகக் காண்போம்.


இரு சாட்சிகள் (ஷாஹிதானி) குறித்த இத்தகைய பலவீனமான அறிவிப்புகள் அஹமத் (18510), நஸாயி (2395), தாரகுத்னீ (1920), மஹாரிபத்து ஸஹாபா (6626) போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன.


29-பின்னேரம் 30-வது இரவில் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பதே மாற்றுக்கருத்தினரின் பிறை கொள்கை. இதற்கு ஆதாரங்கள் என்று கூறிவந்த பல செய்திகள் அவர்களுடைய பிறை நிலைப்பாட்டிற்கு எதிரானதாக ஆகிவிட்டன. மேலும் அவர்களின் ஆதாரங்கள் பெரும்பாலும் பலவீனமான, இட்டுக்கட்டபட்ட செய்திகளாகத்தான் இருப்பதை 'பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா?' என்ற இந்த தலைப்பின்கீழ் தொடர்ந்து படித்து வருகிறோம்.


• பிறை பார்த்த சாட்சியை ஏற்றுக் கொள்ளலாமா?

• பிறை பார்த்ததற்கு ஒரு சாட்சி மட்டும் போதுமா? அல்லது

• பிறை பார்த்ததற்கு இரண்டு சாட்சிகள் அவசியம் தேவையா?


போன்ற சர்ச்சைகள் சமுதாயத்தில் நிலவிக் கொண்டே இருக்கின்றன. எனவே பிறை சாட்சி சம்பந்தப்பட்ட அத்தகைய செய்திகளையும் நாம் ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். பிறைசாட்சி சம்பந்;தமாகக்கூட மாற்றுக் கருத்துடையோர் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை சமர்ப்பிக்க வில்லை. இவர்கள் ஆதாரமாக நம்பியுள்ள ஒரு சாட்சியைக் கொண்டு பிறைத் தகவலை செயல்படுத்தியதாக வரும் அனைத்து செய்திகளும் பலவீனமாகவே உள்ளன. இந்நிலையில், நபி (ஸல்) அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து தகவல் பெற்று செயல்பட்டதாக வரும் செய்திகளும் 'முர்ஸலான', 'மவ்கூஃபான' செய்தியாகவே உள்ளன என்பதுதான் வேதனையிலும் வேதனை. இரு சாட்சிகள் (ஷாஹிதானி) குறித்த அறிவிப்புகளின் நிலையைப் பாரீர்.


حدثنا يحيى بن زكريا ، قال : أخبرنا حجاج ، عن حسين بن الحارث الجدلي ، قال : خطب عبد الرحمن بن زيد بن الخطاب في اليوم الذي يشك فيه ،فقال : ألا إني قد جالست أصحاب رسول الله صلى الله عليه وسلم ، وسألتهم ، ألا وإنهم حدثوني ، أن رسول الله صلى الله عليه وسلم قال : " صوموا لرؤيته ، وأفطروا لرؤيته ، وأنسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، وإن شهد شاهدان مسلمان ، فصوموا وأفطروا" .


مسند أحمد بن حنبل - أول مسند الكوفيين حديث أصحاب رسول الله صلى الله عليه وسلم - حديث : ‏18510‏


அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் சந்தேகப்படக்கூடிய நாளில் உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். 'நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது 'நிச்சயமாக நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையிலே அறுத்துப் பலியிடுங்கள். அது உங்கள் மீது மறைக்கப்படும் போது நீங்கள் முப்பதை முழுமையாக்குங்கள் (முழுமைப் படுத்துங்கள்). மேலும் இரண்டு முஸ்லிம்கள் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள், நோன்பை நிறைவு செய்யுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அவர்களின் தோழர்கள் என்னிடம் அறிவித்தார்கள். அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ, நூல்: அஹ்மத் - 18510.


أخبرنا إبراهيم بن يعقوب ، قال : حدثنا سعيد بن شبيب أبو عثمان ، وكان شيخا صالحا بطرسوس ، قال : أخبرنا ابن أبي زائدة ، عن حسين بن الحارث الجدلي ، عن عبد الرحمن بن زيد بن الخطاب ، أنه خطب الناس في اليوم الذي يشك فيه فقال : ألا إني جالست أصحاب رسول الله صلى الله عليه وسلم وسألتهم ، وإنهم حدثوني أن رسول الله صلى الله عليه وسلم قال : " صوموا لرؤيته وأفطروا لرؤيته ، وانسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، وإن شهد شاهدان فصوموا وأفطروا " *. السنن الكبرى للنسائي - كتاب الصيام ذكر الاختلاف على سفيان في حديث سماك - حديث : ‏2395‏


அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் சந்தேகப்படக்கூடிய நாளில் மக்களுக்கு உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது 'நிச்சயமாக நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையிலே அறுத்துப் பலியிடுங்கள். அது உங்கள் மீது மறைக்கப்படும் போது நீங்கள் முப்பதை முழுமையாக்குங்கள் (முழுமைபடுத்துங்கள்). மேலும் இரண்டு சாட்சியாளர்கள் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள், நோன்பை நிறைவு செய்யுங்கள்'.

அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல்: நஸாயி - 2395.


حدثنا أبو بكر , ثنا أبو الأزهر , ثنا يزيد بن هارون , ثنا الحجاج , عن الحسين بن الحارث , قال : سمعت عبد الرحمن بن زيد بن الخطاب , يقول : إنا صحبنا أصحاب النبي صلى الله عليه وسلم وتعلمنا منهم وإنهم حدثونا أن رسول الله صلى الله عليه وسلم , قال : " صوموا لرؤيته وأفطروا لرؤيته , فإن أغمي عليكم فعدوا ثلاثين , فإن شهد ذوا عدل فصوموا وأفطروا وأنسكوا " *. سنن الدارقطني - كتاب الصيام باب الشهادة على رؤية الهلال - حديث : ‏1920‏


நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் நாம் தோழமை கொன்டோம் மேலும் நாம் அவர்களிடமிருந்து கற்றோம். மேலும் நிச்சயமாக நாம்மிடம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். உங்கள் மீது அது மங்கும் போது நீங்கள் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள். மேலும் நீதமானவர்களில் இருவர் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள் மேலும் நீங்கள் நோன்பை நிறைவு செய்யுங்கள் மேலும் நீங்கள் அறுத்து பலியிடுங்கள்''.

அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல்: தாரகுத்னீ - 1920


حدثنا أبو بكر بن مالك ، ثنا عبد الله بن أحمد بن حنبل ، حدثني أبي ، ثنا يحيى بن زكريا ، ثنا حجاج يعني ابن أرطأة ، عن حسين بن الحارث الجدلي ، قال : خطب عبد الرحمن بن زيد بن الخطاب في اليوم الذي يشك فيه من رمضان ، قال : ألا إني قد جالست أصحاب النبي صلى الله عليه وسلم وساءلتهم ، ألا وإنهم حدثوني أن النبي صلى الله عليه وسلم ، قال : " صوموا لرؤيته ، وأفطروا لرؤيته ، وأمسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، فإن شهد شاهدان مسلمان فصوموا وأفطروا " *. معرفة الصحابة لأبي نعيم الأصبهاني - باب العين عبد الرحمن بن زيد بن الخطاب - حديث : ‏6626‏.


அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் ரமழான் மாதத்தின் சந்தேகப்படக்கூடிய நாளில் உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். 'நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது 'நிச்சயமாக நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். மேலும் அதன் காட்சியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது மறைக்கப்படும் போது நீங்கள் முப்பதை முழுமையாக்குங்கள் (முழுமைபடுத்துங்கள்). மேலும் இரண்டு முஸ்லிம்கள் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள், நோன்பை நிறைவு செய்யுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அவர்களின் தோழர்கள் என்னிடம் அறிவித்தார்கள்.

அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல் : மஹாரிபத்து ஸஹாபா – 6626.


மேற்கண்ட நான்கு அறிவிப்புகளையும் ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ என்ற தாபிஈயீதான் அறிவிக்கின்றார். மேற்படி தாபிஈ அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் என்ற மற்றொரு தாபிஈ இடமிருந்து அறிவிப்பதாகவே செய்தியில் உள்ளது. அந்தத் தாபிஈ கூட நபித்தோழர்களான ஸஹாபாக்களிடம் இருந்தே அவர் அறிந்ததாகக் கூறுகின்றார். இதை முதலாவதாக கவனத்தில் கொள்க.


• இச்செய்தியை அவருக்கு அறிவித்த நபித்தோழர் யார்? அந்த ஸஹாபியின் பெயர் என்ன? போன்ற விபரங்களை அவர் கூறவில்லை. இதை இரண்டாவதாக கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும்.


ஹூசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ என்பவர் தாபிஈயீ என்று அறியப்பட்டாலும் அவருக்கு தெளிவான வரலாறுகள் இல்லை. அவர் அப்துர் ரஹ்மான் அவர்களிடமிருந்து மாணவர் என்ற ரீதியில் கேட்காமல், ஏதோ உரை நிகழ்த்தும் போது கேட்டதாகவே இச்செய்தி பதியப்பட்டுள்ளது. இது மூன்றாவது விஷயம்.


மேலும் இச்செய்தியை வேறு எந்த ஸஹாபியும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக எந்த ஹதீஸூம் இல்லை. மேலும் இதுபோன்ற ஒரு செய்தியை இவர் அல்லாத மற்ற எந்த தாபிஈயும் அறிவிக்க வில்லை. மேற்கண்ட இச்செய்தி 'முர்ஸல்' என்னும் 'முன்கதீ' (தாபிஈயீன் தரத்தில் உள்ளவரின்) அறிவிப்பேயாகும்.


நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அவர்கள் இரண்டு வயதுடைய குழந்தையாக இருந்தார்கள் என்ற செய்தி வரலாறுகளில் காணக் கிடைக்கிறது. அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்ற ஸஹாபி அல்ல. மேலும் இவர்களுக்கு இரண்டு வயது இருக்கும்போதே நபி (ஸல்) அவர்கள் மரணித்தும் விட்டதால், இவர் ஸஹாபிகளிடம் இருந்தே ஹதீஸ்களை அறிவிப்பவராக இருந்தார்கள். இவரை நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தார் என்று சொல்லலாமே அல்லாமல் நபி (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்ட நபித்தோழர் என்று கூறவியலாது.(பார்க்க ஜாமிவுல் ஹதீஸ்).


அதில் 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடமிருந்து கேட்டேன். நிச்சயமாக அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக' என்ற வாசகங்கள் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்களின் சொற்பொழிவின் கருத்துக்களாகும்.


ஸஹீஹான ஹதீஸ்கள் கூட குர்ஆனுக்கு முரணாக இருப்பதாக தாங்கள் கருதினால் அவற்றை பின்பற்றக் கூடாது என வாதிடும் சிலர், தற்போது ஸஹாபாக்களின் கூற்றையும் விட அடுத்த நிலையில் உள்ள தாபிஈயீன்களின் கூற்றையும் ஏற்கத் தயாராகி விட்டது வியப்பில் ஆழ்த்துகிறது.


மேற்படி நான்கு நூற்களில் வரும் அறிவிப்புகளையும் ஹூசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ என்ற ஒரே நபர்தான் இந்த செய்தியை அறிவித்துள்ளார். மேற்படி அறிவிப்புகளில்


• 'இரண்டு முஸ்லிம்களின் சாட்சி வேண்டும்' என்றும்,


• 'இருவரின் சாட்சி ' என்றும்,


அதன் பிறகு 'நீதமான இரு சாட்சிகள்' என்றும்,


கருத்துக்களில் வார்த்தைகளை மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். ஒரு அறிவிப்பில் இரண்டு முஸ்லிம்களின் சாட்சி வேண்டும் என பதியப்பட்டுள்ளது. அதே நபர் அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் இருவரின் சாட்சி இருந்தாலே போதுமானது என பதியப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் அல்லாதவர்களின் சாட்சியை ஏற்றுக்கொள்ளலாம் என இரண்டாவது அறிவிப்பு கூறுகின்றது என நாம் விளங்கிக் கொள்ளலாமா? என்ற கேள்வி எழுவது நியாயம்தான். மேலும் அதே நபர் அறிவிக்கும் அடுத்த அறிவிப்பில் நீதமான இரு சாட்சிகள் என கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் கணிசமானோர் நீதமாக இல்லாமல் இருக்கும் போது நீதமான பிற மதத்தவர்கள் கூறும் சாட்சியை ஏற்றுக் கொள்ளலாம் என்று இந்த அறிவிப்பு கூறுகின்றதா? இந்த அறிவிப்பை பலமானது என்று கூறுவோர்தான் இவை போன்ற கேள்விகளுக்கு பதில் தர கடமைப்பட்டுள்ளனர்.


இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெரும் ஹஜ்ஜாஜ் பலவீனமானவர் ஆவார்.


قال الذهبي في الكاشف : أحد الأعلام ، على لين فيه ... قال أحمد : كان من حفاظ الحديث ... وقال أبو حاتم : صدوق يدلس ، فإذا قال حدثنا فهو صالح ...


قال أبو حاتم : صدوق ، يدلس عن الضعفاء يكتب حديثه ، فإذا قال : حدثنا ، فهو صالح لا يرتاب فى صدقه و حفظه إذا بين السماع ، لا يحتج بحديثه


قال إبن حجر في التقريب : صدوق كثير الخطأ و التدليس ، أحد الفقهاء


قال أبو زرعة : صدوق يدلس


قال يحي بن معين : قال أبو بكر بن أبى خيثمة ، عن يحيى بن معين : صدوق ، ليس بالقوى ، يدلس عن محمد بن عبيد الله العرزمى ، عن عمرو بن شعيب


قال عبد الله بن المبارك : كان الحجاج يدلس


قال النسائي : ليس بالقوي


قال يعقوب بن شيبة : واهى الحديث ، فى حديثه اضطراب كثير ، و هو صدوق ، و كان أحد الفقهاء


காஷிப் என்ற கிரந்தத்தில் மேற்கண்ட ஹஜ்ஜாஜ் என்பவரைப்பற்றி அறிஞர்கள் கூறுவதாக இமாம் தஹபி அவர்கள் கூறும்போது, இவர் அறிஞர்களில் ஒருவராவார். அவர் மீது சில பலவீனங்கள் உள்ளன. இமாம் அஹமது அவர்கள் கூறும் போது இவர் ஹதீஸ் மனனம் செய்தவர்களில் இருந்தார் மேலும் அபூஹாதிம் அவர்கள் இவரை ஒப்புக்கொள்ளப்பட்டவர், இருட்டடிப்பு செய்பவர் என்ற கூறியுள்ளார்கள்.


அவர் நம்மிடம் அறிவித்தார் (ஹத்தஃதனா) எனக்கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர்.


யாகூப் பின் ஷைபா அவர்கள் ஹஜ்ஜாஜைப் பற்றிக் கூறும்போது ஹதீஸில் பொய்யுரைப்பவர், அவரின் ஹதீஸில் அதிகமான முரண்பாடுகள் இருக்கும், அவர் ஒப்புக்கொள்ளப்பட்டவர், அறிஞர்களில் ஒருவராக இருந்தார் என்கின்றனர்.


இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் இவரை பலமில்லாதவர் எனக் கூறியுள்ளார்கள்.


அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கூறும்போது: ஹஜ்ஜாஜ் அவர்கள் இருட்டடிப்பு செய்பவர்களில் ஒருவராக இருந்தார் என்று விமர்சித்துள்ளார்கள்.


யஹ்யா பின் முயீன் (ரஹ்) அவர்கள் கூறும்போது : ஒப்புக்கொள்ளப்பட்டவர், பலமில்லாதவர், அவர் முகமது பின் உபைதுல்லாஹ் விடமிருந்து அமர் பின் ஷூயைப்பிடமிருந்தும் இருட்டடிப்பு செய்பவர் என்று விமர்சித்துள்ளார்கள்.


அபூஹாதிம் அல் ராஸி (ரஹ்) கூறுகின்றார்கள் : ஒப்புக்கொள்ளப்பட்டவர், இவர் பலவீனமான நபர்களிடமிருந்து இருட்டடிப்பு செய்து அறிவிப்பவர். அவர் நம்மிடம் அறிவித்தார் (ஹத்தஸனா) எனக்கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம் அதை எழுதியும் கொள்ளலாம். அந்த செய்தி உண்மையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் செவியுற்று தெளிவு பெற்றாலே தவிர. இல்லையெனில் அந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படாது.


தக்ரீபில் இப்னு ஹஜர் (ரஹ்) கூறும்போது, அதிகத் தவறு செய்யக் கூடியவர் இருட்டடிப்பு செய்பவர், அறிஞர்களில் ஒருவர்.


அபூ சுர்ஆ கூறும் போது: ஒப்புக் கொள்ளப்பட்டவர், இருட்டடிப்பு செய்பவர்


• மேற்காணும் அறிவிப்புகளில் ஹஜ்ஜாஜ் என்ற அந்த அறிவிப்பாளர் ' حدثنا - ஹத்தஸனா' என அறிவிக்காமல் ' عن- அன்' என்ற பதத்தை கொண்டே அறிவித்துள்ளார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.


• இன்னும் இந்த செய்தியை அறிவிக்கும் ஹூசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ அவர்கள்கூட நம்பகமானவர் என்பதற்கு உறுதியான சான்றுகள் ஏதுமில்லை. ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரை நல்லவராக இருக்கலாம் என்ற சந்தேக வார்த்தையை கொண்டே குறிப்பிடப்படுகின்றார்.


பிறை பார்த்த தகவலை இரண்டு சாட்சிகள் வந்து சொன்னால் ஏற்றுக் கொள்ள வேண்டும் இதுதான் மார்க்கம் என்று கூறுபவர்களின் ஆதாரங்களின் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக உள்ளதை நீங்களே காணுங்கள். இந்நிலையில் நஸாயி கிரந்தத்தின் 2395-வது இடம்பெறும் மேற்காணும் அறிவிப்பில் ஹஜ்ஜாஜ் இடம்பெறவில்லை எனவே இது பலம் வாய்ந்த நபிமொழி என சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். எனவே நஸாயி (2395)-வது அறிவிப்பு பற்றிய கூடுதலான தகவல்களையும் பார்ப்போம்.


1. நபி (ஸல்) அவர்கள் கூறியதை ஒரு நபித்தோழர் அறிவித்தால்தான் அதை நபிமொழி என்போம். நஸாஈயின் மேற்படி அறிவிப்பு ஸஹீஹான ஹதீஸ்தான் என்றால் இதை அறிவித்த ஸஹாபி யார்? அந்நபித்தோழரின் பெயர் என்ன? முதலில் இதற்கு விடை கூற வேண்டும். இதற்கு விடைகூற முடியாதவர்களுக்கு இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள குழறுபடிகளையும், முரண்பாடுகளையும், பலவீனங்களையும் பட்டியலிட்டு என்ன பயனும் இருக்கப் போவதில்லை? முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்களே அதுபோல இந்த முதல் கேள்வியிலேயே நஸாஈயின் (2395)-வது அறிவிப்பு பலவீனம் என்று அடிபட்டு விடுகிறது. இரண்டு கால்களும் இல்லாத ஒருவர், தான் எந்த கம்பெனியின் செருப்பை அணியவேண்டும் என்ற ஆய்வில் இறங்குவது அறிவுடமையாகாது. எனவே அறிவித்த ஸஹாபி யார்? அவருடைய பெயர் என்ன? என்ற இக்கேள்விக்கு பதிலளிக்கப்படாமல் இதை ஸஹீஹான ஹதீஸ் என்று வாதம் வைப்பது அறிவுடமையாகாது.


2. இந்த அறிவிப்பில், ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ இடமிருந்து ஹஜ்ஜாஜ் என்ற பலவீனமான அறிவிப்பாளர் அறிவிக்கவில்லை. அவருக்குப் பதிலாக இப்னு அபீ ஜாயிதா என்பவர் இடம்பெறுகிறார் என்று நினைக்கலாம். இப்படி வாதம் வைக்க இருப்பவர்களுக்கு பதிலாக ஹதீஸ் கலை நூலான தஹ்தீபுல் கமாலில் இடம்பெறும் இக்குறிப்பை முதலில் தருகிறோம்.


تهذيب الكمال - (17 / 122)


رَوَاهُ عَنْ إِبْرَاهِيمَ بْنِ يَعْقُوبَ الْجَوْزَجَانِيِّ، عَنْ سعيد بْن شبيب الحضرمي، عَنْ يحيى بْن زكريا بْن أَبِي زائدة، عَنْ حسين بْن الحارث الجدلي، ولم يذكر حجاج بْن أرطاة فِي إسناده، والصواب ذكره، كما فِي روايتنا هذه، وقد رواه يَزِيد بْن هارون، أيضا عَنْ حجاج بْن أرطاة *


ஹூஸைன் பின் அல்ஹாரிஸில் ஜத்லீ வாயிலாக இடம் பெறும் இந்த அறிவிப்பில் ஹஜ்ஜாஜ் பின் அர்த்தா இடம்பெறவில்லை. சரியான அறிவிப்பு ஹஜ்ஜாஜ் பின் அர்த்தா இடம் பெறுவதே ஆகும்.


தாரகுத்னி நஸாயில் இடம் பெறும் அறிவிப்பாளர் பட்டியலில் ஹூஸைன் பின் ஹாரிஸுக்கு பிறகு தாரகுத்னியின் ஹதீஸில் இடம் பெறும் ஹஜ்ஜாஜ் இப்னு அர்த்தா மரணம் அடைந்த காலம் ஹிஜ்ரி 145. நஸாயியில் இடம் பெறும் இப்னு ஸாயிதா ஹிஜ்ரி 183ல் மரணம் அடைந்தார் ஆக நஸாஈயில் இடம்பெறும் ஹதீஸில் ஹஜ்ஜாஜ் நடுவில் இடம் பெறவில்லை.


அதாவது நஸாஈயில் இடம்பெறும் (2395)-வது அறிவிப்பிலும் ஹஜ்ஜாஜ் இடம்பெற வேண்டும். அவர் பெயரை தவறுதலாக குறிப்பிடவில்லை என்று தஹ்தீபுல் கமால் தெளிவாகக் கூறுகிறது. நஸாஈயில் இடம்பெறும் (2395)-வது அறிவிப்பில் ஹஜ்ஜாஜ் விடுபட்டுள்ளார் என்பதுதான் தெளிவு.


அஹமத் (18510), தாரகுத்னீ (1920), மஹாரிபத்து ஸஹாபா (6626) போன்றவற்றில் இடம்பெறும் அறிவிப்புகளிலாவது ஹஜ்ஜாஜ் என்ற பலவீனமானவர் இடம்பெற்று அறிவிப்பாளர் வரிசை தாபியி வரை உடையாமல் சென்று முற்றுப் பெற்றது. ஆனால் நஸாஈயின் அறிவிப்பாளர் வரிசையிலோ ஹஜ்ஜாஜ் விடுபட்டு உள்ளதால் முழுமை பெறாத அறிவிப்பாளர் வரிசையாக அமைந்து விட்டது. எனவே ஹஜ்ஜாஜ் விடுபட்டுள்ளதால் கூடுதல் பலவீனமாக இந்த ரிவாயத் அமையுமே அல்லாமல் இது ஸஹீஹ் என்ற வாடையைக் கூட இந்த அறிவிப்பு நுகர முடியாது.


3. மேற்படி நஸாஈயின் அறிவிப்பில் '' وانسكوا لها'' என்ற ஒரு சொல் இடம்பெறுகிறது. இது அரபுச் சொல்தானா? அப்படி என்றால் இதன் பொருள் என்ன?.


4. நஸாஈயின் அறிவிப்பில் இடம்பெறும் '' وانسكوا لها'' என்ற இந்தச் சொல்


அஹ்மதில் '' وأنسكوا لها'' என்றும்,


தாரகுத்னீயில் ''وأنسكوا'' என்றும்,


மஹாரிபத்து ஸஹாபாவில் '' وأمسكوا لها''


இடம்பெற்றுள்ளனவே ஏன் இந்த முரண்பாடு? இதில் எந்தச் சொல்லை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? இவற்றின் பொருள் என்ன?


5. இல்லை இது அரபுச் சொல்லே இல்லை. ஹதீஸை எழுதியவர்கள் தவறாக எழுதியிருக்கலாம் என்று நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால், தப்பும் தவறுமாக எழுதப்பட்ட ஒன்றை ஹதீஸ் என்று நீங்கள் ஏன் தூக்கிப் பிடிக்கிறீர்கள்?


இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத, பலவீனமான அறிவிப்பாளர்கள் வரிசை கொண்ட, குழப்பமான வார்த்தைகளை உள்ளடக்கிய மேற்கண்ட இந்த அறிவிப்பு எப்படி நபிமொழியாக அமையும்? என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர்கள் அறிவித்தார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறி, அவ்வாறு அறிவித்த நபித்தோழர்கள் யார் யார்? என்று அடையாளம் காட்டாமல் வந்துள்ள இந்த அறிவிப்பு 'ஷாஹிதானி' என்ற இரண்டு சாட்சிகளின் விஷயத்திற்கோ, பிறை பார்த்தலுக்கோ, பிறை பார்த்த தகவல்களுக்கோ ஒரு போதும் ஆதாரமாக அமையாது.


மாற்றுக் கருத்துடையோரின் நிலைப்பாட்டின்படி தத்தமது பகுதியில் அல்லது சர்வதேச நாடுகளில், ஒரு மாதத்தின் 30-ஆம் நாளுக்குரிய பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் (மாற்றுக் கருத்தினரின் கூற்றுப்படி 29-வது நாளின் பின்னேரம் 30-வது நாளின் இரவில்) புறக்கண்ணால் பார்க்க வேண்டும். அல்லது அவ்வாறு பார்த்தவர்களின் சாட்சியைப் பெறவேண்டும், அல்லது முப்பது நாட்களாக முழுமை செய்து அந்த மாதத்தை முடிக்க வேண்டும். இதுதான் அவர்களின் பிறை நிலைப்பாடு.


ஒரு மாதத்தின் இறுதி வாரத்தில் தென்படும் பிறைகள் தேய்பிறைகள் (றுயniபெ ஊசநளஉநவெள) எனப்படும். மேற்படி தேய்பிறைகள் மஃரிபு நேரத்தில் தெரியாது. பிறையை 29-ஆம் நாளில் மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் பார்க்கலாம் என்று இவர்கள் நம்பியுள்ளதே இவர்களுக்கு சந்திரன் எந்த திசையில் உதிக்கிறது எந்த திசையில் மறைகிறது என்ற அடிப்படை அறிவுகூட இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.


நடப்பு மாதத்தின் 30-ஆம் நாளையோ, அல்லது புதிய மாதத்தின் முதல் நாளையோ தீர்மானிப்பதற்கு பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் புறக்கண்ணால் பார்க்க வேண்டுமாம். அல்லது அவ்வாறு பார்த்தவர்களின் சாட்சியைப் பெறவேண்டுமாம். இதுதான் இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறை என்பதற்கு இதுவரை ஒரு குர்ஆன் வசனத்தையோ, ஆதாரப்பூர்வமான ஒரு நபிமொழியையோ மாற்றுக் கருத்துடையோரால் சமர்ப்பிக்க இயலவில்லையே அது ஏன்? சிந்திக்கக் கூடாதா?.


ஒரு மாதத்தின் 30-ஆம் நாளை தீர்மானிப்பதற்கு பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையிலும், 29-ஆம் நாளுக்குரிய பிறையை 28-ஆம் நாளிலும் புறக்கண்ணால் பார்க்கவேண்டும் என்றால் அந்த மாதத்தின் முதல்நாளுக்குரிய பிறையை எந்த நாளில் பார்க்க வேண்டும்? அவர்கள் கூற்றுப்படி 29 நாளின் பின்னேரம் 30 நாளின் இரவு என்பதற்கு எந்த மார்க்க ஆதாரமும் இல்லை.


தேய்பிறைகள் மஃரிபு வேளையிலோ, மேற்குத்திசையிலோ காட்சியளிப்பதில்லை மாறாக அவை ஃபஜ்ரு நேரத்தில், கிழக்குத் திசையில்தான் காட்சியளிக்கும். பிறைகள் குறித்து இந்த சாதாரண அடிப்படை விஷயத்திற்கு மாற்றமாக 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குக் கட்டளை இட்டிருப்பார்களா? மக்களே சற்று சிந்தியுங்கள்.

15. G ரமழானை முன்கூட்டியே ஆரம்பிப்பது சம்பந்தமான அறிவிப்பு :

صحيح البخاري - (2 / 676) 1815 - حدثنا مسلم بن إبراهيم حدثنا هشام حدثنا يحيى بن أبي كثير عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم صومه فليصم ذلك اليوم )


ரமழானை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம். வழக்கமாக நோன்பு வைக்கும் மனிதரைத்தவிர. எனவே அந்த நாட்களில் அவர் நோன்பு நோற்றுக் கொள்ளலாம். அறிவித்தவர் : அபூஹூரைரா (ரழி) அறிவித்தார். நூல்: புகாரி 1815 (தமிழ் மொழிபெயர்ப்பில் : 1914)


மேற்காணும் இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி பிறந்த பிறையைப் பார்க்கும் முன்பே மாதத்தை ஆரம்பித்து மாதத்தை முற்படுத்தித் தவறிழைக்கின்றனர் என ஹிஜ்ரி கமிட்டியினராகிய நம் மீது மாற்றுக் கருத்துடையோர் குற்றம் சாட்டுகின்றனர்.


இந்த ஹதீஸ் சம்பந்தமாக 'யவ்முஷ் ஷக் என்ற வாதம் எடுபடுமா?' என்ற தலைப்பில் ஏற்கனவே நாம் விளக்கியிருக்கிறாம். ஒருவர் ரமழான் மாத நோன்புகளை மட்டும் நோற்பவராக இருந்தால், அவர் ரமழானின் முந்தைய மாதங்களின் கணக்கையும், தேதியையும் அறியாமல் நோன்பு வைக்கக் கூடாது. அவர் சந்திரனின் படித்தரங்களைக் கவனித்து அறிந்த பின்னரே நோன்பை ஆரம்பிக்க வேண்டும் அல்லது முடிக்க வேண்டும். இவைதான் மேற்படி ஹதீஸ் கூறும் நிபந்தனையாக உள்ளது.


மேற்படி ஹதீஸோ ரமழான் துவங்குவதற்கு ஒரு நாளோ இரு நாளோ மீதி இருக்கும் போது நோன்பு வைக்காதீர்கள் என்று திட்டவட்டமாகக் கூறுகின்றது. எனவே அன்றைய சமுதாயம் ரமழான் மாதத்தின் பிறைகளை பார்க்கும் முன்பே ஷஃஅபான் மாதம் 29 தினங்களில் முடிந்துவிடும், அல்லது 30 தினங்களில் முடிந்து விடும் என்பதை முற்கூட்டியே அறிந்து கொள்ளும் நிலையிலும், பிறை படித்தரங்களை முறையாகக் கணக்கிட்டுக் கொள்ளும் ஞானம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. மாதம் முடிவதை முற்கூட்டியே அறிந்து கொள்ளும் நிலை (ஞானம்) இருந்திருந்தால் மட்டுமே நபி (ஸல்) அவர்கள் 'ரமழானை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம் என்ற உத்தரவைப் பிறப்பித்திருக்க முடியும் என்பதை அறிவுடையோர் யாரும் மறுக்க மாட்டார்கள்.


இன்னும் இந்த ஹதீஸை நாம் அலசும் போது ரமழான் மாதம் எப்போது துவங்கும்? என்பதை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் துல்லியமாக அறிந்திருந்தது விளங்குகிறது. பேணுதலுக்காக முந்தைய மாத நாட்களையும் ரமழானில் சேர்த்து நோன்புகள் வைக்கும் பழக்கத்தை ஒருவேளை கொண்டிருந்திருக்கலாம். ஆகையால் மேற்படி உத்தரவின் மூலம் அச்செயலை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்கலாம். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் ரமழான் துவங்கும் சரியாக தினத்தில், ரமழான் நோன்பை ஆரம்பித்தே ஆக வேண்டும் என்ற இந்தக் கட்டளையைக் கொடுத்துள்ளார்கள் என சிந்திக்கத் தோன்றுகின்றது.


நபி (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அந்த முஸ்லிம் சமுதாயம் பிறைகளைக் கவனிப்பதில் மிகுந்த அக்கரை கொண்டிருந்துள்ளார்கள். எவ்வித விஞ்ஞான முன்னேற்றங்களும் இல்லாத அக்காலத்தில் ஒவ்வொரு மாதத்தையும் மிகத்துல்லியமாக அறிந்து, ரமழான் நோன்பை நோற்பதில் மிகச் சரியாக செயல்பட்டு முன்னணியில் இருந்துள்ளார்கள். இவற்றை மேற்படி ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.


அதே வேளையில் இன்றைய மாநில, தேசிய மற்றும் சர்வதேசப் பிறை நிலைப்பாடுகளில் உள்ளவர்கள் நாங்களும் நபி (ஸல்) அவர்களைத்தான் முன்மாதிரியாகக் கருதுகிறோம் என்கின்றனர். ஆனாலும் அவர்கள் பிறைகளைத் தொடர்ந்து கவனிப்பதிலும், மாதத்தைத் துல்லியமாக அறிந்து சரியான நாளில் நோன்பை நோற்பதிலும் மிகவும் பின்தங்கியே உள்ளனர். ரமழான் மாதத்தில் கூட கடமையான இரண்டு நோன்புகளையோ அல்லது ஒரு நோன்பையோ சர்வசாதாரணமாக இழக்கும் நிலையில் இருப்பதைப் பார்த்துப் பரிதாபப்படுகிறோம், கவலையும் அடைகிறோம். மூன்றாம் பிறையைத்தான் நபி(ஸல்) அவர்கள் முதல் பிறையாக எடுத்துக் கொள்ளக் கட்டளையிட்டுள்ளார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை அவர்கள் கூறியதாக அவதூறாகப் பிரச்சாரம் செய்கின்றனர். அத்தகையோர் தயவுசெய்து மேற்படி ஹதீஸை நிதானமாகப் படித்து தங்களின் தவறான நிலைப்பாட்டைத் திருத்திக் கொள்ள கடமைப் பட்டுள்ளார்கள்.


பொதுவாக ரமழானின் ஃபர்ளான நோன்பை ரமழான் மாதத்தில்தான் நோற்க வேண்டும். ஒருவர் ரமழான் மாதம் எனக்கு தவறி விடக் கூடாது என்பதற்காக ஷஃஅபானின் இறுதி நாளிலோ அல்லது இறுதி இரு நாட்களிலோ நோன்பை ஆரம்பித்து முந்த வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். அதே சமயம் வழக்கமாக ஒருவர் திங்கள், வியாழன் போன்ற கிழமைகளில் உபரியான (நஃபிலான) நோன்பு வைக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் அவருக்கு இந்த சட்டம் பொருந்தாது என்பதையும் நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.


மேலே பதியப்பட்டுள்ள ஹதீஸை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் மாதத்தை முற்படுத்தக் கூடாது என கூறி விட்டதால், நாங்கள் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்க்காமல் நோன்பு வைக்க மாட்டோம். காரணம் முற்படுத்துவதைத்தான் நபி (ஸல்) தடை விதித்துள்ளார்கள், எனவே நாங்கள் நோன்பு நோற்கும் நாளை முடிந்தவரை பிற்படுத்துவோம் என்கின்றனர். ரமழான் மாதம் ஆரம்பித்து ஒரு நாளோ இரண்டு நாட்களோ கழிந்து விட்டதை நாங்கள் தெளிவாக அறிந்து கொண்டாலும் கூட பரவாயில்லை காரணம் பிறையை புறக்கண்களால் பார்ப்பதே முக்கியம் என்றும் கூறி வருகின்றனர். என்ன வேடிக்கை விபரீதம் இது! ரமழான் மாதம் ஆரம்பித்தும் நோன்பு வைக்காமல் இருப்பதுதான் அவர்கள் புரிந்துவைத்துள்ள இஸ்லாமிய மார்க்க சட்டமா? இது கைசேதத்துக்குரியதே!


شَهْرُ‌ رَ‌مَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْ‌آنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْ‌قَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ‌ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِ‌يضًا أَوْ عَلَىٰ سَفَرٍ‌ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ‌ ۗ يُرِ‌يدُ اللَّـهُ بِكُمُ الْيُسْرَ‌ وَلَا يُرِ‌يدُ بِكُمُ الْعُسْرَ‌ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُ‌وا اللَّـهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُ‌ونَ


ரமழான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, எவர் உங்களில் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கட்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ அவர் மற்ற நாட்களில் நோற்கட்டும்;. உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காகக் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பூர்த்தி செய்து, அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துவதற்காக அல்லாஹ் இலகுவை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல்குர்ஆன் 2:185)


யார் அம்மாதத்தை அடைகின்றாறோ அவர் நோன்பு நோற்கட்டும் என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இவ்வசனம் மூலம் ரமழான் மாதத்தை நாம் எப்போது அடையப் போகின்றோம் என்பதை முற்கூட்டியே அறிந்து வைத்திருந்தால் தான் நாம் சரியாக அடைய முடியும். இதைக் கூட சிந்திக்காமல், யார் அம்மாதத்தை அடைகின்றாறோ என்ற வாசகத்தைத் தவறாக விளங்கி, உலக முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் ரமழானை அடைவார்கள் என்று மாற்றுக்கருத்தினர் பிரச்சாரம் செய்வது வேடிக்கைதான்.


إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَالِهِمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ


மாற்றுவது நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதன்முலம் நிராகரிப்பவர்களே வழிகெடுக்கப் படுகின்றனர், அவர்கள் அதை ஒரு வருடத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் கொள்கின்றனர். அல்லாஹ் தடுத்திருக்கும் எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக மேலும் ஒரு வருடத்தில் அதைத் தடுத்துக் கொள்கின்றனர். எனவே, அல்லாஹ் எதைத் தடுத்தானோ (அதை) அவர்கள் ஆகுமாக்கிக் கொண்டார்கள். அவர்களின் தீச்செயல்கள் அவர்களுக்கே அழகாக்கப் பட்டுவிட்டன. மேலும் அல்லாஹ், நிராகரிப்பவர்களை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் (9:37)


மேலும், மாதத்தை முன்னும் பின்னும் மாற்றுவது இறை நிராகரிப்பு என்பதையும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் மேற்கண்டவாறு கூறுகின்றான். எனவே மாதத்தை முற்படுத்துவதும், பிற்படுத்துவதும் அல்லாஹ் அனுமதிக்காத ஒன்று என்பதை நாம் தெளிவாக விளங்க முடிகின்றது.


நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ் ரமழான் மாதத்தைச் சரியாக அதற்குரிய நாளில் கண்டிப்பாகத் துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஹதீஸ் ஆகும்.


அதில் 29-வது நாளின் மாலை, 30-வது நாளின் மஃரிபில் (இப்படி சொல்வதே மார்க்க அடிப்படையில் தவறானதாகும்), பிறந்த பிறையை மறையும் நேரத்தில் பார்த்து விட்டு அடுத்த நாள் மாதத்தை துவங்குங்கள் என்பதற்கு ஆதாரமில்லை.


பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்காமல் மாதத்தை துவங்காதீர்கள் என்ற எந்த வாசகமும் மேற்படி ஹதீஸில் இடம் பெறவில்லை.


இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் ரமழானை முற்கூட்டியே அறிந்து சரியான நாளில் துவங்க வேண்டும் என்பதை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தும் ஹதீஸ் இது என்றால் அது மிகையில்லை.


ரமழானை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம் என்று சொன்னால் தாராளமாக பின்தங்கலாம் என்றா பொருள் கொள்வது? சற்று சிந்தியுங்கள் மக்களே. மேற்கண்ட ஹதீஸ் வாசகத்தைப் படித்துப் பார்த்தாலே இன்று நடைமுறையில் மாற்றுக் கருத்துடையோர் பிரச்சாரம் செய்வதைப் போல 'பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்துவிட்டு (ஒரு நாள் கழித்தோ, இரண்டு நாட்களை கழித்தோ, மூன்று நாட்களை கழித்தோ) அவரவர்கள் தத்தமது பகுதியில் தங்களது மாதத்தை ஆரம்பிக்கலாம், காரணம் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற சொற்றொடர் இதைத்தான் கூறுகிறது. எனவே மாதத்தின் துவக்கத்தை அவரவர்கள் வௌ;வேறு கிழமைகளில் துவக்குவது ஒன்றும் குற்றமில்லை' என்ற தவறான கருத்தைத் தடை செய்யும் ஒரு ஹதீஸாகவும் இது இருக்கின்றது.


ஆகவே, எவர்கள் மாதத்தைச் சரியான நாட்களில் ஆரம்பிக்கின்றார்களோ அவர்களைப் பார்த்து மாதத்தை முன்கூட்டியே நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள் எனவே இந்த ஹதீஸிற்கு மாற்றம் செய்து விட்டீர்கள் என்று கூறுவது நகைப்பிற்குரிய விஷயமாகும். ஏனென்றால், அவர்களுடைய பிறை நிலைப்பாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிந்த விரக்தியில் இது போன்ற அவதூறுகளைக் கூறி சரியாக மாதத்தைத் துவங்குபவர்களைக் குழப்பி விடலாம் என முடிவு செய்துள்ளார்கள் போலும்.


இதுபோன்ற குழப்பங்களை இஸ்லாமிய விரோத சக்திகள் மார்க்கத்தின் பெயரால் ஏராளமாகவும், தாராளமாகவும் செய்துள்ள நிலையில் நம்மைப் பொய்பிப்பதற்காக வேண்டி சிலர் அந்தத் தீய சக்திகளின் பணியைக் கையில் எடுத்து வேலை செய்யுமளவிற்கு துணிந்து விட்டார்களோ என்ற அச்சமும், ஐயமும் ஏற்படுகிறது - அல்லாஹ்வே அறிந்தவன்.


மேலும், முன்பு அவர்களாகவே தள்ளுபடி செய்த பல பலஹீனமான அறிவிப்புகளையும் தற்போது தூசி தட்டி எடுத்து மக்கள் மன்றத்தில் வைத்து ஏமாற்றியும், குழப்பியும் வருகின்றார்கள். இது போன்று குழப்பம் விளைவிப்பவர்களால் மக்கள் ஏமாற்றப் படாமல் இருப்பதற்காகவே அவர்கள் எடுத்து வைக்கும் இந்த தலைப்புச் சம்பந்தப்பட்ட அனைத்துச் செய்திகளையும் தற்போது நாம் விளக்கிக் கொண்டு வருகிறோம்.


أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ بَعْضِ، أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ تَقَدَّمُوا الشَّهْرَ حَتَّى تُكْمِلُوا الْعِدَّةَ أَوْ تَرَوُا الْهِلاَلَ ثُمَّ صُومُوا وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوُا الْهِلاَلَ أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ ثَلاَثِينَ ‏"‏ ‏.‏ أَرْسَلَهُ الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ.‏ السنن الكبرى للنسائي - كتاب الصيام , ذكر الاختلاف على منصور في حديث ربعي فيه - حديث : ‏2406‏.


நீங்கள் எண்ணிக்கையை முழுமையாக்கும் வரை, அல்லது பிறையைக் கவனிக்கும் வரை மாதத்தை முற்படுத்தாதீர்கள் பிறகு நீங்கள் நோன்பு வையுங்கள். இன்னும் நீங்கள் பிறையைக் கவனிக்கும் வரை அல்லது எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்தும் வரை நீங்கள் நோன்பை விடாதீர்கள். ஹஜ்ஜாஜ் பின் அர்தாஹ் அவர்கள் இந்த செய்தியை இர்ஸாலாக அறிவிக்கின்றார்கள். (அறிவித்தவர் : ரிப்யீ பின் ஹிராஷ் நூல்: நஸாயீ 2406)


மேற்கண்ட செய்தியை அறிவிக்கும் ரிப்யீ பின் ஹிராஷ் என்பவர் நபித்தோழரல்ல என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம். நபி (ஸல்) அவர்களைக் காண்பதற்காக பிரயாணம் செய்து வந்த ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள், நபி (ஸல்) அவர்களை மதீனாவில் அடக்கம் செய்த பின்பே மதீனா வந்தடைந்தார்கள் என்றும் எனவே அவரை 'மஹ்ஸர்மி' என்றும் இப்னு ஹஜர் (ரஹ்) போன்ற ஹதீஸ் கலை அறிஞர்களும் மற்றும் வரலாற்று அறிஞர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் ரிப்யீ பின் ஹிராஷ் எந்த நபித்தோழரிடமிருந்து மேற்படி செய்தியை கேட்டார் என்பதற்கும் இதில் விடையில்லை. இதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம்.


தாபிஈயீன்களிடமிருந்தும், ஸஹாபாக்களிடமிருந்தும் ஒருவர் ஹதீஸை அறிவித்தால், அவர் இன்னாரிடமிருந்து அறிவித்தேன் என்று அன்னாரது பெயரைக் குறிப்பிட்டு தெளிவாகக் கூறினால்தான் அவர் யாரிடம் இருந்து அறிவித்தார் என்பதை உறுதிபடக் கூற முடியும். அவர் ஒரு நபரிடம் இருந்து கேட்டேன், அல்லது ஒரு ஸஹாபியிடமிருந்து கேட்டேன் என்று பொத்தாம் பொதுவாக அறிவித்தால் அவர் எந்த ஸஹாபியிடம் இருந்து கேட்டார் என்பதைத் தெளிவு படுத்தாதவரை அக்கூற்று முர்ஸலாகவே கருதப்படும். மேலும் ஒரு தாபிஈயீடமிருந்து அதே நபர் அறிவிக்கும் போதுகூட அந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையானது நபி(ஸல்) அவர்கள் வரை தொடர் முறியாமல் சென்றடைந்தால்தான் அதை ஹதீஸ் என்ற தரத்தில் சேர்க்க முடியும்.


இந்நிலையில் மேற்படி ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் தாபிஈயீகளிடமிருந்தும், ஸஹாபிகளிடமிருந்தும் பல செய்திகளை அறிவித்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது. எனவே அவர் யாரிடம் இருந்து மேற்படிச் செய்தியை அறிவித்தார் என்பதை பெயர்கூறி அறிவிக்காத வரை, ஹதீஸ் கலையின் விதியின் அடிப்படையில் அச்செய்தியை ஸஹீஹான தரத்தில் அமைந்த நபிமொழியாகக் கருதிடவே இயலாது என்பதே நிதர்சனமான உண்மையாகும், விதியுமாகும்.


இதுபோன்ற அறிவிப்புகளை முர்ஸல் வகை அறிவிப்பு எனப்படும். முர்ஸல் என்றால் இடையில் விடுபட்டது என்பது இதன் சொற்பொருளாகும். ரிப்யீ பின் ஹிராஷ் அறிவித்த இரண்டு கிராமவாசிகளின் பிறை செய்தியில் முர்ஸல் பற்றிய குறிப்பை முன்னரே தெரிவித்துள்ளோம். முர்ஸலான அறிவிப்புகள் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கும் நிலையில் மேற்படி இந்த அறிவிப்புகளுக்கு மட்டும் அது விதிவிலக்காகி விட்டதா? என்று இவற்றை ஆதாரமாகக் கருதுபவர்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம். தங்களது பிறை நிலைப்பாட்டை நிலை நிறுத்துவதற்காக முர்ஸலான, ழயீபான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக்கூட ஸஹீஹான ஹதீஸ் என்று பிரச்சாரம் செய்பவர்களிடம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இதுவே மார்க்கத்தில் வளைத்தல், திரித்தல், திணித்தல், நுழைத்தல் என்பதாகும்.


மேலும் மேற்கண்ட அறிவிப்பின் இறுதியில் இடம் பெறும் குறிப்பில், ஹஜ்ஜாஜ் பின் அர்தாஹ் அவர்கள் இதை இர்ஸால் செய்து அறிவித்துள்ளதாக இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இந்த அறிவிப்பாளர் தொடரில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாஹ் என்பவர் பலஹீனமானவர் ஆவார். இவரை இருட்டடிப்பு செய்பவர், ஹதீஸில் பொய்யுரைப்பவர், அவரின் ஹதீஸில் அதிகமான முரண்பாடுகள் உள்ளன என்றும் அவரை பலமில்லாதவர், இருட்டடிப்பு செய்பவர்களில் ஒருவராக இருந்தார், அதிகத் தவறு செய்யக் கூடியவர் என்றெல்லாம் மேற்படி ஹஜ்ஜாஜ் அவர்களை ஹதீஸ் கலை வல்லுனர்கள் விமர்சித்துள்ளதை பிறை பார்த்தலும் இரண்டு சாட்சிகளும் என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே படித்தோம்.


இன்னும் இப்னு ஹிப்பான், அபூதாவூத், நஸாயீ, தாரகுத்னீ, அல் பஹ்ரு அஸ் ஸுஹார் எனும் முஸ்னத் பஸ்ஸார், அல் இர்ஷாத் ஃபீ மஃரிபஃத்தி உலமாவுல் ஹதீஸ், முஜமஅல் அவுஸத், முஸ்னத் அஹ்மத், சுனன் குப்ரா மற்றும் மஃரிபதுல் ஸூனன் வல் அஸார் போன்ற நூல்களில் வரும் அறிவிப்பில் ரிப்யீ பின் ஹிராஷ் அறிவிக்கும் இந்த முர்ஸலான செய்தியை ஜரீர் இப்னு அப்துல் ஹமீத் அழ்ழாபி என்பவர் அறிவிக்கும் போது மட்டும் ரிப்யீ பின் ஹிராஷ் என்பவர் ஹுதைபா (ரழி) அவர்களிடம் கேட்டதாக அறிவித்துள்ளார்.


ரிப்யீ பின் ஹிராஷின் மாணவரான மன்ஸூர் என்பவர் இந்த செய்தியைத் தனிநபராகவே தனித்து அறிவிக்கின்றார். மேற்படி மன்ஸூருக்கு பல மாணவர்கள் இருந்துள்ளனர். அம்மாணவர்களில் ஜரீர் இப்னு அப்துல் ஹமீத் அழ்ழாபி என்பவர் மட்டும் இச்செய்தியை அறிவிக்கும் போது மேற்படி ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் ஹுதைபா (ரழி) அவர்களிடம் கேட்டதாகவும், ஹதீஸ் கலை அடிப்படையில் அது 'ஷாத்' ஆகவும் அறிவிக்கின்றார். ஆனால் அதே மன்ஸூரின் மற்ற மாணவர்கள் அனைவரும் ரிப்யீ பின் ஹிராஷ் முர்ஸலாக அறிவிப்பதாகவே அறிவித்துள்ளனர். இப்படி ஒரே ஆசிரியரின் கீழ் பாடம் பயின்ற பல மாணவர்கள் ஒருவிதமாக அறிவிக்க, அதில் ஒரேயொரு மாணவர் மட்டும் அதற்கு மாற்றமாக அறிவித்து முரண்படும் அறிவிப்புகள் ஹதீஸ்கலையில் 'ஷாத்' எனக் கூறப்படும். 'ஷாத்' ஆன செய்திகள் ழயீபான வகையைச் சார்ந்த நிராகரிக்கப்படும் செய்தியாகும்.


இன்னும் இதில் வேடிக்கை என்னவென்றால், அதே மன்ஸூரின் மாணவர்கள் இடம்பெறும் பட்டியலில் ஹஜ்ஜாஜ் என்பவரும் ஒன்று. அவரோ ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் நேரடியாக இந்த செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் பெற்றதாகக் கூறுகிறார். ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் சந்தித்ததுமில்லை, கண்டதுமில்லை என்ற நிலையில் ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் நேரடியாக இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்களிடமிருந்து பெற்று அறிவிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?. நபி(ஸல்) அவர்ளை ரிப்யீ பின் ஹிராஷ் காண செல்லும் போது நபி(ஸல்) அவர்கள் மரணித்திருந்தார்கள் என்ற செய்தியை நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளோம். எனவே இந்தச் செய்தியை எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் இச்செய்தி முர்ஸல் என்ற நிலையையும் தாண்டி, பல குழப்பங்களும், பலஹீனங்களும் இணைந்துள்ளதை அறியலாம்.


حدثنا الحسن بن علي ، حدثنا حسين ، عن زائدة ، عن سماك ، عن عكرمة ، عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لا تقدموا الشهر بصيام يوم ، ولا يومين إلا أن يكون شيء يصومه أحدكم ، ولا تصوموا حتى تروه ، ثم صوموا حتى تروه ، فإن حال دونه غمامة ، فأتموا العدة ثلاثين ، ثم أفطروا والشهر تسع وعشرون " ، قال أبو داود : رواه حاتم بن أبي صغيرة ، وشعبة ، والحسن بن صالح ، عن سماك بمعناه لم يقولوا : " ثم أفطروا " ، قال أبو داود : " وهو حاتم بن مسلم ابن أبي صغيرة ، وأبو صغيرة زوج أمه " *. سنن أبي داود - كتاب الصوم باب من قال : فإن غم عليكم فصوموا ثلاثين - حديث : ‏1995‏


மாதத்தை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம். வழக்கமாக நோன்பு வைக்கும் மனிதரைத் தவிர. இன்னும் அதை கவனிக்கும் வரை நீங்கள் நோன்பு வைக்காதீர்கள். பிறகு அதை கவனிக்கும் வரை நோன்பை வையுங்கள். எனவே உங்களுக்கு மத்தியில் மேகம் திரையிட்டால் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்யுங்கள். பிறகு நோன்பை விடுங்கள். மேலும் மாதம் என்பது 29 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இமாம் அபூதாவூத் அவர்கள் கூறுகின்றார்கள் அதை ஹாதிம் பின் அபூ ஸஹீரா அவர்கள் ஷுஃபா அவர்களிடம் இருந்தும் ஷுஃபா ஹஸனிடமிருந்தும் ஹஸன் ஸிமாக்கிடமிருந்தும் இதே அர்த்தமுள்ள அறிவிப்பை அறிவித்துள்ளார்கள். ஆனால் அதில் பிறகு நீங்கள் நோன்பு வையுங்கள் (சும்ம அஃப்திரு) எனும் வார்த்தையை அவர்கள் கூறவில்லை. அறிவித்தவர் : இப்னு அப்பாஸ் (ரழி), நூல் : அபூதாவூத் 1995


صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ سَحَابٌ فَأَكْمِلُوا الْعِدَّةَ وَلاَ تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالاً ‏"‏.‏ السنن الكبرى للنسائي - حديث : ‏2408‏


صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ سَحَابَةٌ أَوْ ظُلْمَةٌ فَأَكْمِلُوا الْعِدَّةَ عِدَّةَ شَعْبَانَ وَلاَ تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالاً وَلاَ تَصِلُوا رَمَضَانَ بِيَوْمٍ مِنْ شَعْبَانَ ‏"‏‏.‏ السنن الكبرى للنسائي - حديث : ‏2468‏.


لا تستقبلوا الشهر استقبالا ، صوموا لرؤيته وأفطروا لرؤيته ، فإن حال بينك وبين منظره سحاب أو قترة فأكملوا العدة ثلاثين " * صحيح ابن خزيمة -حديث : ‏1795‏


لا تستقبلوا الشهر استقبالا ، صوموا لرؤيته ، وأفطروا لرؤيته ، فإن حال بينكم وبينه غبرة سحاب ، أو قترة فأكملوا العدة ثلاثين " *صحيح ابن حبان -حديث : ‏3649‏2


இந்த அனைத்து அறிவிப்புகளிலும் ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறும்போது 'ழயீஃபுல் ஹதீஸ்'இ 'முள்தரபுல் ஹதீஸ்'இ 'மனன ஆற்றலில் மோசமானவர்' என்று விமர்சிக்கின்றனர். மேலும் குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அவரைப் பற்றி கூறும்போது இக்ரிமா இடமிருந்து இவர் கூறும் ஹதீஸ்களில் அதிக 'முள்தரபுகள்' (அதாவது மாற்றியும், திரித்தும் கூறியவை) இடம் பெற்றிருக்கும். மேலும், இவரின் மனன ஆற்றல் கடைசி காலத்தில் மோசமாகி விட்டது. ஆகையினால் இக்ரிமாவிடமிருந்து இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப் படாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்கள்.


எனவே நாம் ஆதாரப் பூர்வமான செய்தியாகப் புகாரியில் இருந்து இந்த தலைப்பில் பதிந்த முதல் ஹதீஸைத் தவிர்த்து மற்ற அனைத்தும் பலஹீனமானவைகளே என்பது இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் கூறுவதைப் போல மேகம் என்ற பதம் இடம்பெறும் அறிவிப்பு ஆதாரப்பூர்வமான ஹதீஸாகவும் இல்லை. இவர்கள் கூறிவருவது போல் அது போன்ற செய்தி புகாரி, முஸ்லிம் கிதாபுகளிலும் இல்லை.


ஸஹீஹான ஒரு ஹதீஸின் வாசகத்தை எடுத்துக் கொண்டு அதை பலஹீனமான அறிவிப்போடு கலந்து, அதன் வார்த்தைகளை வெட்டி ஒட்டி இதோ பாருங்கள் நபி (ஸல்) இப்படி கூறியுள்ளார்கள் என்று கூறி இதுவும் ஆதாரம் என்று யூத முரப்பிகளைப் போல இன்று சிலர் செய்யத் துணிந்துள்ளதை எண்ணி உண்மையிலேயே அதிர்ச்சி அடைகிறோம்.


அல்லாஹ்வின் பெரும் கிருபையால் நூற்றுக்கணக்கான ஹதீஸ் புத்தகங்களை இருந்த இடத்தில் இருந்து கொண்டே புரட்டிப் படிக்கும் கணிப்பொறி யுகத்தில் கூட இத்தகைய தில்லுமுல்லு ஆசாமிகள் இருக்கின்றனர் என்றால், பண்டையக் காலங்களில் இவர்களின் வகையறாக்கள் ஹதீஸ்களில் என்னென்ன விளையாட்டுகளைப் புரிந்திருப்பார்கள்? என்பதை எண்ணி கவலையுறுகிறோம்.


மக்களே உங்களை ஏமாற்றுவதற்காக இந்த பலஹீனமான செய்தியை பதிந்து புகாரி கிரந்தத்திலும், முஸ்லிம் கிரந்தத்திலும் உள்ளன என ஒரு எண்ணையும் குறிப்பிட்டு ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருபவர்களை நீங்களே இனங்கண்டு கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பேருதவியால் சத்தியத்தை அசத்தியத்திலிருந்து பிரித்தறிவிக்கும் முகமாக பிறைகள் குறித்த இந்த விரிவான ஆய்வுப் புத்தகத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி மேற்படி தில்லுமுல்லு ஆசாமிகளின் தீய செயல்களை வெளிக்கொண்டு வர வேண்டுகிறோம்.


பிறையைப் புறக்கண்ணால் பார்த்துத்தான் அமல்செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரமாகக் கருதப்படும் அறிவிப்புகள் யாவும் மிகவும் பலவீனமான செய்திகளாக இருப்பதையும், இவர்களின் பிறை நிலைப்பாடுகள் அந்த அறிவிப்புகளின் மூலம் நிரூபணமாகவில்லை என்பதையும் தெளிவாக நாம் காண்கிறோம்.


ஒரு ரிவாயத்து பலஹீனம் என்று தெரிந்து விட்டால் அதை மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிப்பதுதானே தூய்மையான எண்ணம் கொண்ட எந்த ஒரு அறிஞரின் கடமையாக இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துடையோர் பலஹீனமான ரிவாயத்துகளையே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதை பார்க்கையில், இவர்களின் நிலைப்பாட்டிற்கு ஒரு ஸஹீஹான ரிவாயத்துகூட தேறவில்லையா? மேலும், இவர்களின் இன்றைய பிறை பார்க்கும் நிலைப்பாட்டிற்கு நேரடியாக ஒரு ஆதாரம் கூட இல்லையா? இட்டுக்கட்டப்பட்ட, பலஹீனமான செய்திகளை வைத்துக் கொண்டுதான் இவ்வளவு காலம் மக்களை வழிநடத்தினார்களா? என்றே கேட்கத் தோன்றுகிறது.

16.குரைப் சம்பவம் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா?

மக்கள் மத்தியில் 'குரைப் ஹதீஸ்' என்று போதிக்கப்பட்டுள்ள 'குரைப் சம்பவம்' நபிமொழி என்ற தரத்தில் அமைந்த ஹதீஸே அல்ல. இது நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவமே இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம். 'ஹதீஸ்' – நபிமொழி என்பது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்று அதில் இருக்க வேண்டும். அவற்றில் ஒன்றுகூட மேற்படி குரைப் சம்பவத்தில் இல்லை என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இருப்பினும் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' அதாவது இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளை இட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக ஒரு வாசகம் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகத்தை வைத்துதான் இதை ஸஹீஹான ஹதீஸ் என்றும், தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டிற்கு இது பிரதான ஆதாரம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இன்னும் பிறையை புறக்கண்ணால் பார்ப்பதற்கும், பிறை பார்த்த தகவலுக்கும் மேற்படி குரைப் சம்பவத்தை ஆதாரமாகக் கருதுகின்றனர்.


இந்த குரைப் சம்பவத்தில் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கட்டளையிட்டார்;கள்? என்ற விபரம் இல்லை. என்ன செய்தியைக் குறித்து கட்டளையிட்டார்;கள்? அக்கட்டளையின் வாசகங்கள் என்னென்ன? போன்ற விளக்கங்கள் இடம்பெறவில்லை. இவற்றை இரண்டாவதாக கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.


அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கத்தின் அடிப்படையாகும். இவை இரண்டையும் தவிர்த்து வேறு எதுவும் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது. இதுவே தத்தமது பகுதி பிறை நிலைப்பாடு கொண்ட தவ்ஹீது இயக்கத்தினரின் கருத்து. பிறை சம்பந்தமாக நாம் தொடர்ந்து எழுப்பிவரும் அடிப்படையான கேள்விகளுக்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து அவர்கள் பதிலைக் கூறாமல் நம்மை தூற்றுவது வருந்தத் தக்கதே. இந்நிலையில் இந்த குரைப் சம்பவத்தை ஹதீஸ் என ஒப்புக் கொள்ளாதவர்கள் 'காஃபிர்கள்' (நவ்வூதுபில்லாஹ்) என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.


'ஸஹீஹான ஹதீஸ்களாக இருந்தாலும் எங்களின் சிந்தனைக்கு ஒத்துவரவில்லை, அவை குர்ஆனின் கருத்துக்கு முரண்படுகின்றன' - இப்படிகூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட நபிமொழிகளை அவர்கள்; மறுத்து வருகின்றனர். குரைப் சம்பவம் என்ற இந்த ஒருவிஷயத்தை ஹதீஸ் என ஒப்புக்கொள்ளாதவர்கள் காஃபிர்கள் என்று விமர்சித்தால், சுமார் 50-க்கும் மேற்பட்ட ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கு என்ன பெயர்? சற்று சிந்தியுங்கள்.


குர்ஆன், சுன்னா இந்த இரண்டு மட்டுமே மார்க்க ஆதாரமாகும் என்று அழுத்திக் கூறுபவர்கள் பிறை விஷயங்களுக்கு மட்டும் ஸஹாபாக்களின் கூற்றையும், தாபிஈயீன்களின் கூற்றையும் ஆதாரமாகக் காட்டுவது இரட்டை நிலையே ஆகும்.


ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈயீன்கள் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை ஏற்றால்தான் தவறான பிறைக் கொள்கையை பல பலஹீனமான சம்பவங்களை வைத்து விவாதிக்க முடியும். இதை அறிந்தே பிறை விஷயத்தில் ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈயீன்களின் கூற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் இக்குரைப் சம்பவத்தை ஸஹீஹான ஹதீஸ்தான் என்று தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்வதின் நிதர்சனமான, உண்மையான பின்னணியாகும். இதை மூன்றாவதாக கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.


மக்களே! தத்தமதுபகுதி பிறை மற்றும் பிறைத் தகவலைப் பெறுவது போன்ற பிறை நிலைப்பாடுகளுக்குப் பலமான ஆதாரமாகக் கருதப்படும் இந்த குரைப் சம்பவத்தின் உண்மை நிலையை நீங்கள் தெளிவாக அறிந்திட வேண்டும். இதற்காகத்தான் நாம் இந்த ஆய்வுகளை உளத்தூய்மையோடு சமர்ப்பிக்கிறோம். ஹாகதா அமரனா ரசூல் (ஸல்) – 'இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்;கள்' என்ற வாசகத்தை எப்படி எல்லாம் விளங்க முடியும் என்பதை இந்த ஆய்வின் பிற்பகுதியில் காணலாம்.


நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஹிஜ்ரி 40-வது ஆண்டு வரை நேர்வழி நின்ற நான்கு கலீஃபாக்கள் ஒருவர் பின் ஒருவராக இஸ்லாமிய கிலாஃபத்தை வழி நடத்தினர். நேர்வழி நின்ற அந்த நான்கு கலீஃபாக்கள் மரணத்திற்கும் பிறகுதான் இந்த குரைப் சம்பவம் நடை பெற்றுள்ளது. தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டிற்கு இந்த குரைப் சம்பவம்தான் பிரதான ஆதாரமா? அல்லது இன்னும் பல ஆதாரங்கள் இருக்கின்றனவா? என்பதை மாற்றுக் கருத்துடையோர் முதலில் தெளிவாக விளக்கிட வேண்டும்.


காரணம் தத்தமது பகுதி பிறைக்கு இந்த குரைப் சம்பவம்தான் தக்க ஆதாரம் என்றால் நபி (ஸல்) அவர்கள் முதல் நபித்தோழர்கள் உட்பட ஹிஜ்ரி 40-வது ஆண்டுவரை வாழ்ந்து மரணித்த அனைத்து முஸ்லிம்களும் தத்தமது பிறை என்ற நிலைபாட்டை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று பொருள்படும். ஹிஜ்ரி நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஒரு சம்பவம்தான் தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டிற்கு பிரதான ஆதாரம் என்றால் அதற்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கும், ஏனைய ஸஹாபாக்களுக்கும் ஆதாரமாக அமைந்தது எது?. அவர்கள் எந்த பிறை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள்?. இக்கேள்விகளுக்கு தத்தமது பகுதி பிறை கருத்துடையோர்தான் விளக்கமளிக்க வேண்டும்.


இக்குரைப் சம்பவம் போல ஹதீஸ் என்னும் தரத்தில் அமையாத ஸஹாபாக்களின் கூற்றுக்கள் அல்லது தாபிஈயீன்களின் கூற்றுக்களை மார்க்க ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளலாமா?. பிறை விஷயத்தில் இப்படி ஒரு புதிய நிலைப்பாட்டை எடுத்து மக்களை அதன் பக்கம் மாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சியா இது? என்ற சிந்தனை எழுவது இயற்கையே. எனவே இந்த குரைப் சம்பவத்தின் உண்மை நிலையைத் தெளிவாக புரிந்து கொள்ள இந்த ஆய்வை இறுதிவரை பொறுமையாகப் படித்தறிய வேண்டுகிறோம். நமது விளக்கங்களை கீழ்க்காணும் துணைத் தலைப்புகளில் முறைபடுத்தி விளக்குகிறோம்.


1. குரைப் சம்பவமும், அந்நிகழ்வின் வரலாற்றுக் குறிப்பும்.

2. குரைப் சம்பவத்தில் இடம்பெறும் முரண்பாடுகளும் குழப்பங்களும்.

3. குரைப் சம்பவம் நமக்கு உணர்த்தும் படிப்பினைகள்.

4. மேற்படி சம்பவத்தில் எழும் கேள்விகள்.


1.குரைப் சம்பவமும், அந்நிகழ்வின் வரலாற்றுக் குறிப்பும்.


حدثنا موسى بن إسماعيل ، حدثنا إسماعيل يعني ابن جعفر ، أخبرني محمد بن أبي حرملة ، أخبرني كريب ، أن أم الفضل ابنة الحارث ، بعثته إلى معاوية ، بالشام ، قال : فقدمت الشام فقضيت حاجتها فاستهل رمضان وأنا بالشام ، فرأينا الهلال ليلة الجمعة ، ثم قدمت المدينة في آخر الشهر ، فسألني ابن عباس ، ثم ذكر الهلال فقال : متى رأيتم الهلال ؟ قلت : رأيته ليلة الجمعة ، قال : أنت رأيته ؟ قلت : نعم ، ورآه الناس ، وصاموا ، وصام معاوية ، قال : لكنا رأيناه ليلة السبت ، فلا نزال نصومه حتى نكمل الثلاثين ، أو نراه ، فقلت : أفلا تكتفي برؤية معاوية وصيامه ، قال : لا ، ' هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم ' ழூ. (سنن أبي داود - كتاب الصوم باب إذا رئي الهلال في بلد قبل الآخرين بليلة - حديث : ‏1998‏).


[அபூதாவுத் அவர்கள் கூறுகின்றார்கள், நம்மிடம் மூஸா பின் இஸ்மாயில் அவர்கள் அறிவித்தார்கள், அவர்களிடம் இஸ்மாயில் அதாவது இப்னு ஜாபர் அவர்கள் அறிவித்ததாகவும், அவர்களிடம் முஹம்மத் பின் அபீ ஹுர்மலா அறிவித்ததாக அவரிடம் குரைப் அறிவித்ததாக] ஹாரிஸாவின் மகள் உம்முல் ஃபழ்ல் (ரழி) அவர்கள் சிரியாவில் இருந்த முஆவியா (ரழி) அவர்களிடம் அவரை அனுப்பி வைத்தார்கள். நான் அங்கே சென்று அவர்கள் தந்த காரியத்தை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமழானை அடைந்தேன். நாங்கள் வெள்ளிக்கிழமையன்று பிறையைக் கவனித்தோம். பின்னர் மாதத்தின் இறுதியில் மதீனாவிற்கு வந்தேன். அப்போது என்னிடம் இப்னு அப்பாஸ் (ரழி) விசாரித்தார்கள். பிறகு பிறையைப் பற்றி நினைவு படுத்தப் பட்டது. நீங்கள் எப்போது பிறையைக் கவனித்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை அதைக் கவனித்தோம் என்று கூறினேன். நீ பிறையைக் கவனித்தாயா? என்று கேட்டார்கள். ஆம்! நானும் கவனித்தேன். மக்களும் கவனித்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரழி) அவர்களும் நோன்பு நோற்றார்கள் எனக் கூறினேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், என்றாலும் நாங்கள் சனிக்கிழமை அதைக் கவனித்தோம். எனவே நாங்கள் நோன்பை தொடர்ந்து கொண்டேயிருப்போம் முப்பதாக பூர்த்தி செய்யும் வரை அல்லது அதை கவனிக்கும் வரை என்று கூறினார்கள். அப்போது நான், முஆவியா (ரழி) அவர்களுக்குக் காட்சியளித்ததும், அவரின் நோன்பும் உங்களுக்குப் போதாதா? எனக் கேட்டேன். அதற்கவர்கள், இல்லை இப்படித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று விடையளித்தார்கள். அறிவித்தவர்: குரைப் (நூல்: அபூதாவுத்)


இதுதான் குரைப் சம்பவம் சம்பந்தமாக அபூதாவுது கிரந்தத்தில் வரும் அறிவிப்பின் நேரடி மொழி பெயர்ப்பாகும். ஹிஜ்ரி ஐம்பதுகளில் நபித்தோழரான முஆவியா (ரழி) அவர்கள் சிரியாவில் கலீஃபாவாக ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள். அவர்களின் ஆளுமையின் கீழ் மதீனாவின் கவர்னர் பொறுப்பில் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இருந்தார்கள். சங்கைமிக்க அவ்விரு நபித்தோழர்களும் இரண்டு வௌ;வேறு நாட்களில் ரமழான் நோன்பைத் துவங்கியிருந்துள்ளனர் என்ற செய்தி இந்த குரைப் சம்பவத்தின் மூலம் வரலாறுகளில் பதிய வைக்கப்பட்டு விட்டது.


நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஸஹாபிகளான நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவமே இது. இருப்பினும் இச்சம்பவம் நடைபெற்ற காலத்தைப் பற்றி அறிந்து கொள்வது இச்சம்பத்தின் உண்மை நிலையை விளக்கும் இந்த ஆய்வுக்கு அவசியமானதாகும்.


ஹிஜ்ரி 11-ஆம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு கலிஃபா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் முதல் கலீஃபாவாக ஆட்சிப் பொறுப்பேற்றார்கள்.


பின்னர் ஹிஜ்ரி 13-ஆம் ஆண்டில் முதலாவது கலிஃபா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் மரணித்த பிறகு உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள்.


அதன்பின் ஹிஜ்ரி 23-ஆம் ஆண்டில் இரண்டாவது கலிஃபா உமர்பின் கத்தாப் (ரழி) அவர்கள் மரணித்த பிறகு உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள்.


பிறகு ஹிஜ்ரி 35-ஆம் ஆண்டில் மூன்றாவது கலிஃபா உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் மரணித்தபின் அலி பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள்.


பின்னர் ஹிஜ்ரி 40-ஆம் ஆண்டில் நான்காவது கலிஃபா அலி பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் மரணித்த பிறகு நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்கள் தொடர்ச்சியாக இஸ்லாமிய ஆட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்தனர்.


முஸ்லிம் உம்மத்தை பிரிவுக்குள்ளாக்கிய பல சதிவேலைகளும், குழப்பங்களும் தலை தூக்கியிருந்த ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றார்கள்.


நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களின் 20 வருட ஆட்சிகாலத்தில் ரமழான் மாதம் சனிக்கிழமை அன்று துவங்கியது ஹிஜ்ரி 42-வது மற்றும் ஹிஜ்ரி 50-வது ஆண்டுகளாகும். இவற்றை துல்லியமாகக் கணக்கிட முடியும்.


இன்னும் ஹிஜ்ரி 42-ஆம் ஆண்டின் காலப்பகுதியில் முஆவியா (ரழி) அவர்கள் தன்னுடைய பொறுப்பில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கான முழுமையான பணிகளை செய்துள்ளதை வரலாற்று சம்பவங்கள் மூலம் அறியமுடிகிறது. அச்சமயம் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மதீனாவுக்கு கவர்னராக இருந்தார்கள் என்பதற்கு எந்தச் சான்றுகளும் காணக்கிடைக்க வில்லை.


எனவே ஹிஜ்ரி 50-இல் ஸ்திரமடைந்த முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சியின் கீழ் மதீனாவின் கவர்னராக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேற்படி ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டின் ரமழான் மாதம் சனிக்கிழைமைதான் துவங்கியுள்ளது என்ற நிலையில், மூஆவியா (ரழி) அவர்களும் மக்களும் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தார்கள் என்று குரைப் கூறுவதை பிறை பற்றிய ஞானமுள்ளவர்கள் ஏற்க முடியாது.


காரணம் ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டு ஷஃஅபானின் இறுதி நாளான (புநழஉநவெசiஉ ஊழதெரnஉவழைn னுயல) புவிமைய சங்கமதினம் வெள்ளிக் கிழமையாகும். புவிமைய சங்கமதினம் என்ற அந்த 'கும்ம'வுடைய நாள் வெள்ளிக் கிழமையாக இருந்துள்ள நிலையில், அன்றைய தினம் சிரியா, மதீனா உட்பட அரபு உலகின் எப்பகுதியிலும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க இயலாது. அப்படி 'கும்ம'வுடைய நாளில் பிறையைப் புறக்கண்களால் பார்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்;லை என்பதே அறிவியலின் துல்லியமான, நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.


மேலும் மூஆவியா (ரழி) அவர்களின் 20 வருட ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 58-வது வருடத்தில் மட்டும்தான் ரமழான் மாதம் வெள்ளிக் கிழமையில் துவங்கியது என்பதை அறிய முடிகிறது. அப்படியானால் அந்த வருடத்தின் ஷஃஅபான் மாதத்தின் 'கும்ம'வுடைய நாள் வியாழக் கிழமையாக இருந்துள்ளது. வியாழக்கிழமை அன்று சிரியாவில் பிறை தெரிய வாய்ப்பில்லாத கும்ம உடைய தினமாகும் (Geocentric Conjunction Day – புவிமைய சங்கம நாள்). மேற்படி குரைப் செய்தியில் வியாழக்கிழமை பிறை கண்டதாக சர்ச்சை எழவில்லை என்றாலும் குரைபுடைய சம்பவம் ஹிஜ்ரி 50-ஆம் நடைபெற்றதற்கான அதிகப்படியான சாத்தியக் கூறுகளை அறிவதற்காக ஹிஜ்ரி 58-வது வருடத்தைப் பற்றிக் கூறுகிறோம்.


இன்னும் முஆவியா (ரழி) அவர்களின் தலைமையில் 'கூஃபா', 'பஸரா' பகுதிக்கு ஜியாத் என்பவர் கவர்னராக இருந்தார். அவர் ஹஜ்ரி 58-ஆம் ஆண்டின் காலப்பகுதியில் மரணித்தார். அவரின் மரணித்திற்குப் பிறகு, மூஆவியா (ரழி) அவர்கள் தனது மகன் யஜீதை தனக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தும் முயற்சியில் இறங்கினார்கள். அப்போது அதிகமான ஸஹாபாக்கள் மதீனாவை விட்டும் மக்காவிற்குச் சென்று விட்டனர். பின்னர் ஹிஜ்ரி 60-இல் முஆவியா (ரழி) அவர்கள் மரணித்தும் விட்டார்கள். எனவே ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டுதான் இந்த குரைப் சம்பவம் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதை அறியமுடிகிறது.


நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் மார்க்க ஞானத்திற்காக வேண்டி பிரத்தியேகமாக துஆ செய்யப்பட்டவர்கள். அவர்கள் குரைபிடம் கேட்டறிந்த பிறைத் தகவலை ஏற்றுப் பின்பற்ற மறுத்து விட்டார்கள். இதைக் கவனத்தில் கொண்டு, குரைப் அவர்கள் சிரியாவில் பிறை பார்த்ததாகச் சொல்லிய நாளில், பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்ததற்கு வாய்ப்புகள் இருந்தனவா என்பதை அலசியுள்ளோம். இச்சம்பவம் எந்த ஆண்டில் நடைபெற்றது என்பதைப் பற்றியும் அறிந்து கொண்டோம்.


மேலும் நபி (ஸல்) அவர்களும், நான்கு கலீஃபாக்களும், இன்னும் நபி (ஸல்) அவர்களோடு தோழமையைப் பெற்றிருந்த மூத்த ஸஹாபாக்களில் பலரும் மரணித்த பிற்காலத்தில்தான் இந்த குரைப் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் அக்காலத்தில் முஸ்லிம் உம்மத்தை பிரிவுக்குள்ளாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை எதிர்த்தோரின் பல சதிவேலைகளும், ஷியாக்களின் பிரிவினை குழப்பங்களும் தலை தூக்கியிருந்தன. குரைப் சம்பவம் சம்பந்தமாக இந்த ஆய்வின் நோக்கம் வரலாற்று பதிவுகளை நினைவு படுத்துவதல்ல என்றாலும் அவற்றை விளங்கிக் கொள்வதற்காகவே சுருக்கமாக விளக்கியுள்ளோம்.


2.குரைப் சம்பவத்தில் இடம்பெறும் முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள்


சிரியாவில் முஆவியா (ரழி) அவர்கள் உட்பட மக்கள் பிறை பார்த்ததாகக் குரைப் கூறியதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். இச்செய்தியின் அரபு மூலத்தில் மூஆவியா (ரழி) அவர்கள் கவனித்ததும் நோன்பு நோற்றதும் உங்களுக்குப் போதாதா என்று குரைப் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் கேட்டதாக வாசகம் அமைந்துள்ளது. அவ்வாக்கியத்தில் 'குல்து' – 'நான் கேட்டேன்' என்ற பதம் இடம் பெறுகின்றது. 'குல்து' என்ற இச்சொல்லை குரைப் கூறியதாகவே அனைத்து மொழி பெயர்ப்பாளர்களும் மொழியாக்கம் செய்கின்றனர்.


ஆனால் அதற்கு முன்னர் இடம்பெறும் வார்த்தைகளில், 'அவரை அவள் அனுப்பினாள்' என்ற பொருள்படும் بعثته – பஹஃதத்ஹுஎன்ற பதம் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இதில் 'அவரை' என்று குறிக்கும் அப்பதம் 'குரைபைக்' குறிக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது.


இந்த சம்பவத்தை அறிவித்தவர் குரைப் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இதை அறிவிப்பவர் உண்மையிலேயே குரைபாக இருந்திருந்தால் அவர் தன்னிலையாகவே இச்செய்தியை அறிவித்திருக்க வேண்டும். மாறாக இங்கு படர்க்கையான சொல் கையாளப் பட்டுள்ளது.


புரியும்படி சொல்வதென்றால் 'என்னை' உம்முல் பழ்ல் அவர்கள் அனுப்பினார்கள் என்று பொருள்படும் ' بعثتني ' - 'பஹஃதத்னீ' என்ற பதமே இடம் பெற்றிருக்க வேண்டும். மாறாக இங்கே 'அவரை' உம்முல் பழ்ல் அனுப்பினார்கள் என்று மூன்றாம் நபரைக் குறித்து சொல்வதைப் போன்ற வாசகங்கள் உள்ளன.


முஸ்லிம் கிரந்தத்தில் வரும் இதே செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா இப்னு யஹ்யா என்பவர் 'நமக்குப் போதாதா' அல்லது 'உங்களுக்குப் போதாதா' என்று குரைப் கூறியதாக சந்தேகப்படுவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற குறைபாடுகள் இல்லாத ரிவாயத்து என்று மாற்றுக் கருத்துடையோர் கூறும் அபூதாவுதின் அறிவிப்பையே நாமும் இங்கு ஆய்வுக்கு எடுத்துள்ளோம்.


இன்னும் அக்காலத்தில் சிரியாவுக்கும் மதீனாவுக்கும் இடையே வணிகத் தொடர்புகள் அதிகம் இருந்தன. அதனால் அவ்விரு நகரங்களுகிடையே மக்கள் பிரயாணம் செய்துவற்றையும், வாகனத் தொடர்புகள் இருந்துள்ளதையும் நாம் அறிந்ததே. சிரியாவிலிருந்து பயணமாகி பலர் மதீனாவுக்கு வந்திருக்க அதிக வாய்ப்புள்ள நிலையில் குரைப் என்ற ஒருவரிடம் தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மேற்கண்ட விஷயத்தைக் கேட்டதாகத் தெரிகின்றது.


லைலஹ் (லைலத்) என்ற அரபுப் பதத்தை தவறாக இரவு என்று மொழி பெயர்த்துள்ளனர். லைலஹ் என்ற பதம் எண்ணிக்கை மற்றும் கிழமைகள் குறித்த சொற்களுடன் சேர்ந்து வரும் போது, பகலும் இரவும் கொண்ட ஒரு முழுமையான நாளையே குறிக்கும். இன்னும் லைலஹ் என்ற பதம் யவ்ம் என்ற பதத்துடன் இணைந்து வரும் இடங்களில் மட்டும்தான் லைலஹ் என்பதற்கு இரவு என்றும், யவ்ம் என்ற பதத்திற்கு பகல் என்றும் பொருள் கொள்ளப்படும். பொதுவாக அரபு மொழி வழக்கில் 'இரவு' என்பதற்கு 'லைல்' என்ற பதமே பயன்படுத்தப்படும். லைலஹ் பற்றிய மேலதிக விளக்கங்களை அறிய ஹிஜ்ரி கமிட்டியின் 'ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா? மஃரிபா?' என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.


குறிப்பாக மேற்கண்ட நிகழ்வில் சிரியாவின் மக்கள், பிறையை மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் பார்த்தார்கள் என்பதற்கான எந்த வாசகங்களும் அங்கு இடம் பெறவில்லை. எனவே மேற்படி செய்தியை ஆதாரமாக வைத்து சிரியாவின் மக்கள் பிறையை இரவில்தான் பார்த்தார்கள் என்று சிலர் பிரச்சாரம் செய்வதும் பிழையானதாகும்.


மேலும் மேற்படி சம்பவத்தில் உள்ளவற்றை இங்கே மீண்டும் நினைவு படுத்துகின்றோம். அதாவது 'நாங்கள் வெள்ளிக்கிழமை அதை கவனித்தோம் என்று கூறினேன். நீ பிறையைக் கவனித்தாயா? என்று கேட்டார்கள். ஆம்! நானும் கவனித்தேன். மக்களும் கவனித்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரழி) அவர்களும் நோன்பு நோற்றார்கள் எனக் கூறினேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், என்றாலும் நாங்கள் சனிக்கிழமை அதைக் கவனித்தோம். எனவே நாங்கள் நோன்பைத் தொடர்ந்து கொண்டேயிருப்போம் முப்பதாக பூர்த்தி செய்யும் வரை அல்லது அதை கவனிக்கும் வரை என்று கூறினார்கள்.'


இதில் மூஆவியா (ரழி) அவர்களும், குரைபும், சிரியா மக்களும் சிரியாவில் இருந்தனர்.இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும், மதீனத்து மக்களும் மதீனாவில் இருந்தனர். மேற்படி இருசாராரும் எந்தக் கிழமையில் தங்களுடைய ரமழான் மாதத்தின் முதல் நோன்பை ஆரம்பித்தார்கள் என்பதற்கும் மேற்கண்ட செய்தியில் எந்த வாசகமும் இல்லை.


மேற்படி குரைபு சம்பவம் ரமழானின் முதல் பிறையைப் பற்றிய தகவல்தான் என்று பொதுவாக மக்கள் புரிந்து வைத்துள்ளனர். எனினும் சிரியாவின் மக்கள் பிறை பார்த்ததாக குரைபு தெரிவித்த தகவல் 'உர்ஜூஃனில் கதீம்' என்ற பிறைப் படித்தரத்தின் கடைசி நிலையை அவதானித்ததை கூறுகின்றதா? அல்லது வளர்பிறையின் முதல் படித்தரத்தைப் பற்றி கூறுகின்றதா? என்பதற்கும் இதில் உறுதியான எந்தத் தெளிவும் இல்லை.


ஏனெனில், ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டில் ஷஃஅபான் மாதத்தின் 'உர்ஜூஃனில் கதீம்' அம்மாதத்தின் இறுதி வியாழக் கிழமையன்று ஏற்பட்டது. குரைப் உர்ஜூஃனில் கதீமை பார்த்ததாக வைத்துக் கொண்டாலும் அதை நிச்சயமாக வெள்ளிக்கிழமை பார்த்திருக்கவே முடியாது.


மேலும் சிரியாவில் இருந்தவர்கள் வெள்ளிக் கிழமை பிறை பார்த்து சனிக்கிழமை நோன்பை துவங்கியதாக அந்தச் செய்தியில் கூறப்பட வில்லை. அதே போல் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் சனிக் கிழமை பார்த்து ஞாயிற்றுக் கிழமை நோன்பைத் துவங்கியதாகவும் அந்தச் செய்தியில் எங்கும் குறிப்பிடப்பட வில்லை. இவற்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


இப்படி தீர்வுகாண இயலாத பல குழப்பமான நிலைகள் மேற்காணும் செய்தியில் புதைந்துள்ளன. அவைகளைப் பற்றி அலசத் துவங்கினால் பல பக்கங்களில் விவரிக்க வேண்டிவரும். எனவே பிறைத் தகவலைப் பெறுவதற்கு குரைபு சம்பவத்தை ஆதாரமாகக் கருதுபவர்களும், அச்சம்பவத்தை அறிவித்தவர் குரைப்தான் என்று கூறுபவர்களும் இக்குளறுபடிகளைத் தெளிவுபடுத்த வேண்டும். அல்லது தாபிஈயீன்களுக்குப் பிறகு வரும் நபர்களின் கூற்றுகளும் மார்க்க ஆதாரம்தான் என்று அவர்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.


நம்மைப் பொருத்தவரையில் மேற்காணும் நிகழ்வு நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஹதீஸாக இல்லை. மேலும் ஒரு ஸஹாபியின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை குரைப் என்பவர் அறிவித்திருக்கலாம் என்ற உறுதியற்ற நிலையே அதில் உள்ளது. இச்சம்பவம் ஹதீஸ் என்ற தரத்தை அடையவே முடியாது என்பதற்கு இந்த விளக்கங்களே போதுமானதாகும் எனக் கருதுகின்றோம்.


3.குரைப் சம்பவம் உணர்த்தும் படிப்பினைகள்


கலீஃபாவான முஆவியா (ரழி) அவர்களுடைய தலைமையின் கீழிருந்த நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், முஆவியா(ரழி) அவர்கள் நோன்பு வைத்ததாக குரைபால் தெரிவிக்கப்பட்டத் தகவலை ஏற்று பின்பற்ற மறுத்துள்ளதை அறியமுடிகிறது. இன்னும் அவர்கள் சுய ஆய்வோடு நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியபடி பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் அவதானிப்போம் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளதையும் மேற்கண்ட செய்தி தெரிவிக்கிறது. இதனடிப்படையில் பிறர் கூறும் பிறைத் தகவலை வைத்து செயல்படாமல் பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் (அஹில்லாஹ்) நாம் சுயமாகக் கவனித்தே செயல்பட வேண்டும் என்ற மார்க்க சட்ட விளக்கத்தைதான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கூற்றிலிருந்து அறியமுடிகிறது.


மேற்கண்ட சம்பவத்தில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' என்று கூறிவிட்டதால் இதை ஹதீஸ்தான் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்ட பிறை சம்பந்தப்பட்ட எந்த ஹதீஸ்களிலும் ''எனவே நாங்கள் நோன்பை தொடர்ந்து கொண்டேயிருப்போம் முப்பதாக பூர்த்தி செய்யும் வரை அல்லது அதை கவனிக்கும் வரை' என்ற இந்த வாசகங்கள் இடம்பெற வில்லை. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களால் அறிவிக்கப்படவுமில்லை. பிறை சம்பந்தமான வேறு எந்த அறிவிப்புகளிலும் இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவித்ததாக இது போன்ற வாசகங்கள் காணப்படவும் இல்லை.


எனவே 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' என்ற வாக்கியத்தை இப்னு அப்பாஸ் அவர்கள் இணைத்துக் கூறியதாக குரைப் சம்பவம் கூறுகிறது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகப் பாடம் பயின்றவர்கள். நபி(ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களிலிருந்து அவர்கள் ஆய்வு செய்து புரிந்தவற்றை அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாகக் கூறியுள்ளார்கள். இப்படித்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' என்ற வாசகங்களை விளங்க வேண்டும்.


ஹதீஸ்கள் என்றால் அதை அறிவிப்பவர்கள் ஸஹாபியாகவே (நபித்தோழர்களாகவே) இருப்பார்கள். இது ஹதீஸ் என்ற தரத்தில் வரமுடியாத நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறாத ஒரு சம்பவமேயாகும். இன்னும் இரு ஸஹாபிகளை இணைத்து குரைப் என்பவர் அறிவித்ததாக வரும் சம்பவமே இது. எனவேதான் அபூதாவுதில் வரும் இச்செய்தியை அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் எனக் கூறாமல் அறிவிப்பவர் குரைப் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இனிமேலும் குரைப் சம்பவத்தை ஸஹீஹான ஹதீஸ் என்று யாராவது நம்பினால் அவர்கள் நமது மேற்கண்ட விளக்கங்களை திறந்த மனதோடு அறிய முற்படுமாறு வேண்டுகிறோம். இன்னும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக ரிவாயத்து செய்யப்பட்ட பிறை சம்பந்தமான மற்ற ஸஹீஹான ஹதீஸ்களோடு மேற்படி அவ்வாசங்கள் பொருந்தி போகின்றதா என்று ஆய்வு செய்வதே சிறந்த தீர்வைத் தரும். அவ்வாறு பல்வேறு ஸஹீஹான ஹதீஸ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்த குரைப் சம்பவம் ஹதீஸ் என்ற தரத்திற்குள் வரவில்லை என்பதை நிதர்சனமாக அறிந்து கொள்ளலாம். எனவேதான் அந்நிகழ்வை குரைப் ஹதீஸ் என்று கூறாமல் குரைப் சம்பவம் என்று நாம் கூறுகிறோம்.


மேலும் குரைப் அவர்கள், தான் தெரிவிக்கும் பிறைத் தகவல் சரியானது என்று கருதித்தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் இத்தகவலை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தினார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களோ குரைபுடைய பிறைத் தகவலை ஏற்க மறுத்து விட்டார்கள். இவ்வாறு எதிர்மறையான இருவேறு கருத்துகள் இந்த நிகழ்வில் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் மேற்படி குரைப் சம்பவத்தை ஒரு கருத்துடையோர் மட்டும் தங்களுக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைபுடைய பிறைத் தகவலை ஏற்க மறுத்து 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' என்று கூறிவிட்டதால் இது தத்தமதுபகுதி பிறைக்கு தனித்த ஆதாரம்தான் என்று கூறுவது அடிப்படையிலேயே தவறாகும்.


பொதுவாக குர்ஆனும் சுன்னாவும் சாட்சி பகரும் விஷயத்தில் குறைந்த பட்சம் இரண்டு நேர்மையான நபர்கள் (சாட்சியாளர்களாக) இருக்க வேண்டும் என்கிறது. இந்நிலையில் இந்த குரைப் சம்பவத்தை முன்னிருத்தி ஒரு நபர் சாட்சியை ஏற்பதற்கு இது ஆதாரம் எனவும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் சில முற்கால ஆய்வாளர்களோ இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் குரைப் மட்டுமே தனித்து சாட்சி சொன்னதால்தான் குரைபுடைய பிறைத் தகவலை அவர்கள் நிராகரித்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஏனென்றால், சாட்சிய சட்டம் என்பது இரு சாட்சிகளைக் கொண்டதே ஆகும். அதற்கு மாற்றமாக ஒரு சாட்சியை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பெற்றதாலேயே குரைபுடைய பிறை சாட்சியத்தை நிராகரித்து விட்டார்கள் என்ற தகவல்களும் ஆய்வு நூல்களில் காணக் கிடைக்கின்றன.


இன்னும் குரைபின் தகவல் உறுதியான தகவலாக இருந்தும், அது மாதத்தின் இறுதியில் தாமதமாக வருகிறது. அத்தகவலை ஏற்று எவ்வாறு நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதற்கு நபிவழி எதுவும் இல்லை. எனவே மாதத்தை தன் ஆய்வின் அடிப்படையில் நிறைவு செய்வதற்குத் தீர்மானித்து, அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இவ்வாறு முடிவெடுக்கத்தான் கட்டளையிட்டுள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்படிப் பட்ட கருத்துக்களையும் நாம் அறியமுடிகிறது.


சர்வதேசப் பிறை கருத்துடையோர் குரைப் சம்பவத்தை அவர்களுக்குரிய ஆதாரமாகக் கருதுகின்றனர். அதாவது 'குரைப் ஷவ்வால் பிறையைப் பார்க்காமல் ரமழானின் பிறை பார்த்தத் தகவலின் அடிப்படையில் ஷவ்வால் பிறைக்கு சாட்சி சொல்ல வந்ததால்தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அதை மறுத்து விட்டார்கள்' என்று கூறுகின்றனர். இதுவும் தவறான கருத்தாகும். ஏனெனில் குரைப் அவர்கள் சுயமாக முன்வந்து இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் இந்த பிறைத் தகவலை அளிக்கவில்லை, மாறாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்தான் தாமாக முன்வந்து குரைபை அழைத்து பிறைபற்றி விசாரிக்கிறார்கள். இதை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.


இச்சம்பவம் ரமழானின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்தது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது. இந்நிலையில் 'ரமழானின் பிறையை வைத்து ஷவ்வால் பிறைக்கு சாட்சி சொல்ல வந்ததால்தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைப் சம்பவத்தை மறுத்து விட்டார்கள்' என்று சர்வதேசப்பிறை கருத்துடையோர் கூறுகின்றனர்.


இது உண்மையானால், ஷவ்வால் பிறை பற்றி ரமழானில் விசாரிக்கக் கூடாது என்பதை சர்வதேசப்பிறை நிலைப்பாடு கொண்ட நமதூர் அறிஞர்களே அறிந்திருக்கும் ஒரு விஷயத்தை நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா என்ன?. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு இந்த நவீன பிறைச் சட்டம் தெரியும் என்றால் குரைபை அழைத்து ரமழான் பிறைபற்றி ஏன் விசாரிக்க வேண்டும்? சிந்திக்க வேண்டாமா?.


இல்லை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு இந்த நவீன பிறைச் சட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று இவர்கள் கூறினால், மார்க்க அறிவிற்காக நபி (ஸல்) அவர்களின் சிறப்புப் பிரார்த்தனையைப் பெற்ற நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குத் தெரியாத மார்க்க சட்டம் இன்றைய சர்வதேசப்பிறை நிலைப்பாட்டு முல்லாக்களுக்கு எப்படித் தெரிய வந்தது?. அரபுப் புலமை தங்களுக்கே இருப்பதாக ஆர்ப்பரிக்கும் சர்வதேசப் பிறை முல்லாக்கள் இதற்கு பதில் சொல்வார்களா?


ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தென்படும் பிறைகளின் இறுதி படித்தரமான 'உர்ஜூஃனில் கதீம்' என்ற நிலைபற்றி அல்குர்ஆன் (36:39) கூறுகிறது. இன்னும் பிறைகளை கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்களே கட்டளையிட்டு விட்டனர். இன்னும் ரமழானில் பிறைகளின் படித்தரங்களைத் துல்லியமாக வைத்து ஷவ்வாலின் துவக்கத்தை அறிந்திடக் கூடாது என்பதற்கு இந்த குரைப் சம்பவத்தில் எந்தத் தடையுமில்லை. மேலும் ரமழானின் இறுதியில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைபை தாமே அழைத்து ரமழான் பிறைபற்றி விசாரித்துள்ளார்கள். இவற்றை சிந்தித்தால் அடுத்து வரும் மாதத்தின் துவக்கத்தை முற்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் இச்சம்பவம் உணர்த்துகிறது என்பதை விளங்கலாம்.


இந்நிலையில் மேற்படி குரைப் சம்பவம் தத்தமது பகுதி பிறைக்கு தான் ஆதாரம், சர்வதேச பிறைக்கு எதிரான நிகழ்வு என்று தத்தமதுபகுதி பிறை கருத்துடையோர் கூறுகின்றனர். ஏனென்றால், 'மூஆவியா (ரழி) அவர்கள் நோன்பு நோற்றதையும், அவர்கள் பிறையை பார்த்ததையும் குரைப் சாட்சி பகர்ந்தார். இருப்பினும் மதீனா மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடைப்பட்ட தூரத்தை கணக்கில் கொண்டே, இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நிராகரித்தார்கள்' என அவர்கள் வாதிடுகின்றனர்.


இது சரியான வாதமென்றால், இக்காலத்தில் வௌ;வேறு நாடுகளாக அமைந்திருக்கும் சிரியாவும், மதீனாவும் அன்று முஆவியா (ரழி) அவர்களின் ஒரே ஆட்சியின் கீழ் இருந்த இரு ஊர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரே ஆட்சியின் கீழ் இருந்த இரு ஊர்களில் இருவேறு தினங்களில் பிறை பார்க்கப்பட்டாலும், அதை மற்ற ஊரில் உள்ளவர்கள் பொருட்படுத்தக் கூடாது என்பதே இச்செய்தியில் இருந்து புலனாகின்றது. அப்படியிருக்க இந்த நிகழ்வை வைத்து தங்கள் பிறை நிலைப்பாட்டை தத்தமது பகுதி என்று அமைத்து கொண்டவர்கள் தற்போது தமிழகப்பகுதி என பல ஊர்களையும் ஒன்றிணைத்து எந்த ஆதாரத்தின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள் என்பதை விளக்க வேண்டும்.


'இல்லை இல்லை சிரியாவில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த கலீஃபா முஆவியாவின் (ரழி) தலைமையிலான இஸ்லாமிய ராஜ்ஜியத்தில், மதீனா என்பது ஒருஊர் அளவிற்குள்ள பகுதியல்ல அது தமிழ்நாட்டைப் போன்ற ஒரு மாநிலப் பகுதியாகும். அங்கு கவர்னராக இருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அவ்வாறு பிறைத் தகவலை மறுத்ததைப் போல நாங்கள் இந்தியா என்ற நாட்டில் மத்திய அரசு இருப்பினும், தமிழகம் என்ற மாநில அரசு அளவுக்குட்பட்ட இடங்களை எல்கையாக தீர்மானித்துள்ளோம். எனவே தமிழகம் தவிர்த்து எங்கு பிறை காணப்பட்ட தகவல் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்' என்றும் அவர்கள் வாதிக்கலாம். மேற்படி வாதம் புரிவர்கள் சர்வலோகத்திற்கும் அரசனான அல்லாஹ்வின் ஆட்சியின் கீழ் இருக்கும் இப்பூமியில் வல்ல அல்லாஹ் பிறை பார்ப்பதற்கென்று எந்தவித தூர எல்லையையும் நிர்ணயிக்கவில்லை என்பதை உறுதியாக உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.


முஆவியா (ரழி) அவர்களின் ஒரே ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மதீனா இருந்தும் சிரியா மற்றும் மதீனாவாசிகள் தனித்தனியாக செயல்பட்டதாகவே குரைப் நிகழ்வு கூறுகிறது. மதீனா நகரை தமிழ்நாட்டின் எல்கை பரப்பளவோடு ஒப்பிட்டுக் கூறிடவே இயலாது. இந்நிலையில், ஒரே ஆட்சியின் கீழ் இருப்பதால் தமிழ்நாடு என்பதை ஒரு பகுதியாக முடிவெடுத்துள்ளோம். என்று கூறினால் அதற்கும் குரைப் நிகழ்வு ஆதாரமாக அமையாது மாறாக எதிராகவே அமையும் என்பதே உண்மை. தத்தமது பகுதி பிறை அல்லது தமிழக அளவு பிறை என்ற எல்லைக்கு ஆதாரமாக வரும் ஒரு ஹதீஸையாவது மாற்றுக் கருத்துடையவர்கள் எடுத்துக் காட்ட வேண்டுகிறோம்.


தூரமான பகுதியில் இருந்து உறுதியான பிறைத் தகவல் கிடைத்தாலும் அதை ஏற்றுச் செயல்படுவதற்கு குரைப் சம்பவம் தடையாக இருக்கின்றது என்று தத்தமது பகுதி ஃ தமிழகப் பிறை கருத்துடையோர் கூறுகின்றனர். இப்படி கூறுகின்றவர்கள் பிறைத் தகவலை எவ்வளவு தூர எல்கைவரை ஏற்றுக் கொள்ளலாம் என்ற விஷயத்தில் இன்னும் உறுதியில்லாத நிலைமையிலே இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சில சமயம் தூரமான பகுதியில் இருந்து தகவல் வந்தால் எடுக்கக் கூடாது என்று கூறும் அவர்களே மற்றொரு சந்தர்ப்பத்தில் தூரத்தையோ எல்கையையோ நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்து தரவில்லை என்றும் கூறுகின்றார்கள். ஏன் இந்த முரண்பாடு?


மேலும், மேற்படி குரைப் நிகழ்விலிருந்து நமக்கு ஒரு முக்கியப் படிப்பினை இருக்கிறது. அது என்னவெனில், ஒரு ஆட்சியாளாரின் (கலீஃபாவின்) அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், நம்மை அந்த ஆட்சியாளர் (கலீஃபா) இன்னொரு ஊருக்குக் கவர்னராக (அமீராக) நியமித்து, அவருக்காக நாம் ஆட்சிப் பொறுப்பை அந்த ஊரில் நிர்வகிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்படி அவர் ஆட்சிக்கு நாம் கட்டுப்பட்டவர்களாக இருந்தாலும் மார்க்க சட்டத்தில் நாம் சுயமாக சிந்தித்து முயற்சி செய்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் அந்த ஆட்சியாளர் மார்க்;கம் என்று கூறி செயல் படுத்தும் அனைத்து செயல்பாடுகளையும் நாமும் அப்படியே கண்மூடி பின்பற்ற வேண்டியதில்லை என்பது புலனாகிறது. இவைதான் குரைபு சம்பவத்திலிருந்து தெளிவாகியுள்ள மாபெரும் உண்மையாகும்.


ஏனென்றால், மார்க்க சட்டமான பிறை விஷயத்தில் ஆட்சியாளர் மூஆவியா (ரழி) அவர்கள் பிறை பார்த்ததாக குரைப் சொன்னதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து தன்னுடைய பிறை நிலைப்பாடுதான் சரியென்று செயல்பட்டு உள்ளார்கள். மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் கட்டளையிட்டதை மட்டும் சிந்தித்துக் கட்டுப்பட்டு நடந்தால் போதுமானதாகும். பிறருடைய மார்க்க நிலைப்பாட்டை நாம் தக்லீத் செய்து அமுல்படுத்த வேண்டியதில்லை. இவையும் மேற்படி குரைபுடைய செய்தியிலிருந்து தெளிவாகியுள்ளது.


இந்நிலையில் தத்தமது பகுதியில் பிறை பார்ப்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் மேற்படி குரைபுடைய செய்தியின் அடிப்படையில் ஒருவருடைய பிறை நிலைப்பாடு, அவருடைய கலீஃபா, அமீர், ஜமாஅத், இயக்கத் தலைமைகளின் பிறை நிலைப்பாட்டிற்கு எதிராக இருக்கலாம். அவ்வாறு இருந்தாலும், தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறி தவறான பிறை நிலைப்பாட்டை நிர்பந்தமாக பின்பற்றக் கூடாது என்பதற்குத் தக்க ஆதாரமாக இது அமைகிறது. மேற்படி கலீஃபா, அமீர், ஜமாஅத், காஜி, முதவல்லி மற்றும் இயக்க தலைமைகளின் பிறை முடிவுகளை தக்லீத் செய்து ஏற்றுக் கொள்ளாமல் சுயமாக சிந்திக்க வேண்டும் என்பதைத்தான் மேற்படி குரைப் சம்பவம் தெரிவிக்கும் கருத்தாகும். இந்த நிதர்சனமான உண்மையை மாற்றுக் கருத்துடையோர் நிதானமாக சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.


4.மேற்படி குரைப் சம்பவத்தில் எழும் கேள்விகள்.


தூரமான பகுதியிலிருந்து பெறப்பட்ட பிறைத் தகவலின் அடிப்படையில் அனைத்து ஊர் மக்களும் செயல்படக் கூடாது என்பது குரைப் நிகழ்வில் இருந்து பெறும் சட்டம் என்று கூறுபவர்களிடம் சிந்திப்பதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்கின்றோம்.


அதாவது வேறு ஊர் பிறையையோ, பிறபகுதியின் பிறைத் தகவலையோ பின்பற்றக் கூடாது என்ற நிலைப்பாடுதான் மார்க்கம் என்றால், சிரியாவிலிருந்து வந்த குரைபிடம் அங்கு பிறை பார்க்கப்பட்டது பற்றி மதீனாவிலிருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஏன் விசாரிக்க வேண்டும்?. அவசியமில்லாத செயலை நபித்தோழர்கள் செய்வார்களா?. இன்னும் மூஆவியா (ரழி) அவர்களும், சிரியாவின் மக்களும் நோன்பு வைத்தது போதாதா? என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் குரைப் அவர்கள் வலியுறுத்த வேண்டிய அவசியம்தான் என்ன?. தத்தமது பகுதி ஃ தமிழகப் பிறை கருத்துடையோர் இவற்றை சிந்திக்க வேண்டாமா?


மாற்றுக் கருத்துடையவர்களின் வாதப்படி ஒரு ஊரில் பிறை பார்க்கப்படா விட்டால்தானே வேறு பகுதியின் பார்த்தத் தகவலை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படியிருக்க பிறையை உறுதியாக பார்த்துவிட்ட பிறகு ஒருவர் வேறு இடங்களில் பார்க்கப்பட்ட பிறைத் தகவலை ஏன் எதிர்பார்க்க வேண்டும்?. ஒருவர் அனைத்துப் பிறைகளையும் தொடர்ந்து கவனித்து மாதத்தைச் சரியாக துவங்கிய பின்னரும் வேறு இடத்தில் இருந்து (அது எந்தப் பகுதியானாலும் சரி) தகவல் கிடைத்தால், தான் உறுதியாக கவனித்து மாதத்தை ஆரம்பித்ததை விட்டுவிட்டு கிடைத்தத் தகவலைத்தான் எடுத்து அமல்செய்ய வேண்டும் என்று சொல்ல வருகின்றார்களா?. மாற்றுக் கருத்துடையோர் இதனையும் தெளிவுபடுத்த வேண்டும்.


இன்னும் மாற்றுக் கருத்துடையோரின் புறக்கண்பார்வை நிலைப்பாடு என்பது அவர்கள் விளங்கியுள்ளபடி ஒரு மாதத்தின் 29-வது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு பிறையைப் பார்ப்பதுதான். இதைத் தெளிவாக சொல்வதென்றால் அந்த 29-வது நாள் மாலை மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்வதே. மேலும் இப்படி பிறை பார்ப்பதுதான் நபிவழி என்று நம்பியுள்ள அவர்கள் அன்றைய முப்பதாம் இரவு மேகம் மூட்டம் பிறையை மறைத்தால், அந்த நாளை முப்பதாம் நாளாக முழுமைப்படுத்தி அடுத்துவரும் மஃரிபு முதல், புதிய மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என்பதும்தான்.


அப்படியானால் மேற்படி குரைப் நிகழ்வில் 29-வது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு பிறையைப் புறக்கண்ணால் பார்த்தார்கள் என்பதற்கான வாசகங்கள் அதில் எங்குமே இடம் பெறவில்லை. இது பிறை பார்த்த தகவலைக் குறிக்கும் ஆதாரம் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் நம்பினாலும் அவர்களின் பிறை நிலைப்பாடு இச்சம்பவத்தின் மூலம் எங்கே நிரூபணமாகிறது?


மேலும் ''நாங்கள் நோன்பை தொடர்ந்து கொண்டேயிருப்போம் முப்பதாக பூர்த்தி செய்யும் வரை அல்லது அதை கவனிக்கும் வரை'' என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக வாகங்கள் இடம்பெற்றுள்ளன. மேற்படி வாசகங்களிலிருந்தே,


ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு 29-வது நாள் மஃரிபுக்குப் பின் பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும்,


அல்லது பிறை பார்த்த தகவலைப் பெறவேண்டும்,


அல்லது மேகமூட்டம் ஏற்பட்டால் மாதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்


போன்ற மாற்றுக் கருத்துடையவர்களின் எத்தகைய பிறை நிலைப்பாட்டிற்கும் இந்த குரைப் சம்பவத்தில் எந்த ஆதாரங்களும் இல்லை.


மேற்படி குரைப் சம்பவத்தை நபிமொழி என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைபுடைய பிறைத் தகவலை நேரத்தையோ, தூரத்தையோ அளவு கோலாக வைத்து மறுக்கவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்கள் கூறியபடி பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் நாங்கள் கவனிப்போம் என்ற கருத்தில்தான் தெளிவு படுத்தியுள்ளார்கள்.


எனவே எத்தகைய பிறை கருத்துடையோரும் இதை ஏற்றுக் கொண்டு, பிறை விஷயத்தில் இனிமேலும் நேரம் மற்றும் தூர வித்தியாசங்களை முன்னிலைப் படுத்தக் கூடாது. இன்னும் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வழி நின்று பிறைகள் அனைத்தையும் நாள் தவறாமல் தாங்களே சுயமாக கவனிக்க வேண்டும். டவுண் காஜிகள் முதல் ஜமாஅத் தலைவர்கள் உட்பட மாற்றுக் கருத்துடைய அனைவரும் இதை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைத் தவிர ஸஹாபாக்களின் கூற்றுகள், தாபிஈயீன்களின் கூற்றுகள் மார்க்க ஆதாரமாகாது. இதை ஒப்புக்கொள்ளும் மாற்றுக் கருத்துடையவர்கள் இந்தக் குரைப் சம்பவத்திற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாக தெரியும் நிலையிலும் உண்மையை மறுப்பது முறைதானா?. தங்களின் தத்தமதுபகுதி பிறை, தமிழகப் பிறை மற்றும் பிறைத் தகவலைப் பெறும் நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக கருதிக்கொண்டு இந்த குரைப் சம்பவத்தை தூக்கிப்பிடிப்பது சரிதானா?. இவ்வாறு பிறை விஷயத்திற்கு மட்டும் ஸஹாபியையும், தாபிஈயீயையும் ஆதாரமாகக் கொள்வது ஏன்? என்று மீண்டும் கேட்கிறோம்.


குரைப் சம்பவம் நிகழ்ந்திருப்பதற்கு அதிக வாய்ப்புள்ள ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டில் ஷஃஅபானின் இறுதிநாள் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமதினம் வெள்ளிக் கிழமையாகும். அன்றைய தினம் சிரியாவிலோ அல்லது மதீனாவிலோ, இன்னும் அரபு உலகின் எப்பகுதியிலும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க எந்த முகாந்திரமும் இல்;லை. இந்தப் பேருண்மையை நபி (ஸல்) அவர்களால் மார்க்க ஞானத்திற்காக வேண்டி பிரத்தியேகமாக துஆ செய்யப்பட்ட நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருக்கலாம். அதன் அடிப்படையில்கூட குரைபுடைய அப்பிறைத் தகவலை அவர்கள் ஏற்க மறுத்திருக்கலாம்.


இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பிறைகளைத் தொடர்ந்து அவதானித்து வந்ததின் அடிப்படையில் ரமழானின் முதல் பிறையின் காட்சியை ரமழானின் முதல் தினமான சனிக்கிழமையன்று மதினாவில் கவனித்துள்ளார்கள். அந்த சனிக்கிழமைக்கு முந்திய நாள் வெள்ளிக்கிழமை கும்மவுடைய நாளில் பிறையை புறக்கண்களால் பொதுவாகப் பார்க்க முடியாது என்பதைத் தெளிவாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருந்தார்கள். அதுவும் அரபு தீபகற்பத்தில் இப்படி அமாவாசைப் பிறை! தெரியும் என்று கற்பனையில்கூட சொல்ல முடியாது என்பதை நாம் அறிவோம். இந்நிலையில்தான் அந்த (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமதினம் என்னும் 'கும்ம'வுடைய நாளான வெள்ளிக்கிழமையில் குரைப் பிறை பார்த்ததாகச் சொல்கிறார். எனவேதான் அத் தகவலை நபிவழியில் நின்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மறுத்தார்கள்.


இக்கருத்தை இல்லை என்று மறுத்து நபித்தோழர் இப்னுஅப்பாஸ் (ரழி) அவர்களின் அறிவுத் திறமைக்கும் புவிமைய சங்கமதின பிறை மறைதலுக்கும் சம்பந்தமில்லை என்று யாரும் கூறலாம். அப்படி எவரும் வாதித்தால் அவர்கள் கடந்த 1400 ஆண்டுகளில் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமதினத்தில் சிரியா, சவுதிஅரேபியா உட்பட அரபு தீபகற்பத்தில் என்றாவது பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்ததாகவோ, பார்க்க வாய்ப்பு இருந்ததாகவோ அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முன் வரவேண்டும். அவ்வாறு நிரூபிக்க முடியுமா?


மேற்படி குரைப் சம்பவத்தின் மூலம் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பிறைகளைக் கவனித்தே செயல் பட்டார்கள் என்பதை மாற்றுக் கருத்துடையோரும் ஒப்புக் கொள்கின்றனர். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் செயல்பட்டதற்கு மாற்றமான தகவலை குரைப் தெரிவித்துள்ளார். அப்போது உறுதியாக பிறையை கவனித்து செயல்பட்ட இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.


மேலும் இந்த நிகழ்வை முற்கால ஆய்வாளர்கள் அலசும் போது ஒருவர் 31 நாட்கள் நோன்பு வைக்கலாமா? என்பது பற்றிய சர்ச்சையும் நடைபெற்றுள்ளது. அத்துடன் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு ஒருவர் பயணித்து சென்று விட்டால், அவர் எந்த ஊர் பிறையின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்ய வேண்டும்? அல்லது எந்த ஊர் பிறையின் அடிப்படையில் பெருநாளைக் கொண்டாட வேண்டும்? என்பது பற்றியும் விவாதிக்கப் பட்டுள்ளது. மேலும் அவர் பயணித்துச் சென்ற ஊரின் அடிப்படையில் நோன்பை முழுமையாக நிறைவு செய்ய வேண்டுமா? என்ற சர்ச்சையும் நடைபெற்றுள்ளது. சிலருக்கு நோன்பு குறைந்ததாகவும், மேலும், சிலருக்கு நோன்பு அதிகமாகவும் நோற்க வேண்டி வந்துவிட்டால் என்ன செய்வது போன்றவற்றையும் ஆய்வாளர்கள் அலசியுள்ளனர்.


ஏனெனில், சிரியாவில் பிறை பார்த்ததாக சாட்சி சொன்ன குரைப் அவர்கள், மதீனாவிலிருந்த மக்களைவிட ஒருநாள் அதிகமாக நோன்பை பிடித்திருந்தாரா? அல்லது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் முடிவெடுத்தபடி செயல்பட்டாரா?. முக்கியத்துவம் வாய்ந்த இக்கேள்விக்கு இந்த குரைப் சம்பவத்தில் தெளிவு இல்லை.


அதாவது மாதத்தின் இறுதியில் சிரியாவிலிருந்து பயணம் செய்து மதீனா வந்த குரைப் அவர்கள் மதீனா வாசிகளின் நோன்பின் அடிப்படையில் தன்னுடைய நோன்பை நிறைவு செய்து விட்டு பெருநாள் கொண்டாடினாரா?. அல்லது சிரியாவில் நோன்பை தான் ஆரம்பித்ததின் அடிப்படையில் நோன்பு நோற்க ஹராமான தினமான அவருடைய பெருநாள் தினத்திலும் ஒரு நோன்பை அதிகப்படியாக நோற்றாரா?. இவ்வாறு குரைப் அவர்கள் தன்னுடைய பிறைத் தகவலின் அடிப்படையில் செயல்பட்டாரா? அல்லது தனது தவறை உணர்ந்து கொண்டாரா?. உணர்ந்து கொண்டார் என்றால் அவர்கள் நோன்பு நோற்றது ரமழானின் முதல் தினத்தில் அல்ல என்பதை உணர்ந்து 31-வது நாள் நோன்பு நோற்றாரா?


அவ்வாறு குரைப் 31-வது நாள் நோன்பை நோற்றிருந்தால் முஆவியா (ரழி) அவர்களும், சிரியா மக்களும் அன்றைய ரமழான் மாதத்தை தவறுதலாக ஒருநாள் முற்கூட்டியே துவங்கிவிட்டார்கள் என்றல்லவா பொருள்படும்? இன்னும் மேற்படி சம்பவத்தில் ''நானும் கவனித்தேன். மக்களும் கவனித்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரழி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்'' என்று குரைப் கூறியதாக வாசங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ''முஆவியா (ரழி) அவர்களுக்குக் காட்சியளித்ததும், அவரின் நோன்பும் உங்களுக்குப் போதாதா?'' என்று மேற்படி குரைப் கேள்வி எழுப்பியுள்ளதைப் போலவும் வாசகங்கள் இடம்பெருகின்றன. இந்நிலையில் குரைப் 31-வது நாள் நோன்பை நோற்றிருந்தால் மேற்படி குரைப் சம்பவத்தில் குரைப் கூறியதைப்போல இடம்பெறும் வாசகங்களின் நிலை என்ன? இவை போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இச்சம்பவத்தை சரிகாண்பவர்களே விளக்கம் தரவேண்டும்.


இக்குரைப் சம்பவத்தை பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகக் காட்டுபவர்கள் மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள்தான் என்ற நபி (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதலுக்கு மாற்றமான கருத்தை சொல்லப் போகிறார்களா? யாமறியோம்.


மேற்படி குரைப் சம்பவம் பிறை பார்த்தலுக்கும், தகவலைப் பெறும் நிலைப்பாட்டிற்கும் எவ்வகையிலும் ஆதாரமாக அமையாது என்பதை விளங்கிட வேண்டுகிறோம். 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக குரைப் சம்பவம் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கட்டளையிட்டார்கள்? என்ன செய்தியைக் குறித்து கட்டளையிட்டார்கள்? அக்கட்டளையின் வாசகங்கள் என்னென்ன? போன்ற விளக்கங்கள் இடம் பெறவில்லை என்பதையும் முன்னர் கூறினோம்.


'நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள்' என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு இதுவும் ஹதீஸ்தான் என்பவர்கள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளட்டும். மேலும் தத்தமதுபகுதி பிறை நிலைப்பாட்டிற்கு இதுவே பிரதான ஆதாரம் என கூறுபவர்களிடம் கீழ்க்காணும் கேள்விகளை அவர்கள் சிந்திப்பதற்காக முன் வைக்கின்றோம்.


1.அவர்களின் அமீரான முஆவியா (ரழி) அவர்களுடைய தலைமையின் கீழிருந்துதான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், பணியாற்றினார்கள். இருப்பினும் முஆவியா (ரழி) அவர்களின் பிறை நிலைப்பாட்டை ஏற்க மறுத்து சுய சிந்தனையோடு செயல் பட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியபடி பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் அவதானிப்போம் என்ற நிலைப்பாட்டில்தான் அவர்கள் இருந்துள்ளார்கள். இதைத்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் புரிந்து கொள்ளக் கூடாது?


2.பிறை மறைக்கப்படும் கும்மவுடைய நாள் வெள்ளிக் கிழமையாக இருந்துள்ள நிலையில் அன்றைய தினம் சிரியாவிலோ அல்லது மதீனாவிலோ, இன்னும் அரபு உலகின் எப்பகுதியிலும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க இயலாது. இந்த பேருண்மையை நபி (ஸல்) அவர்களால் மார்க்க ஞானத்திற்காக வேண்டி பிரத்தியேகமாக துஆ செய்யப்பட்ட நபித்தோழர் இப்னுஅப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால்தான் குரைபுடைய அப்பிறைத் தகவலை ஏற்க மறுத்து 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் ஒப்புக் கொள்ளக் கூடாது?


3.ஒருவருடைய பிறை நிலைபாடு, அவருடைய அமீர், ஜமாஅத், இயக்கத் தலைமைகளின் பிறை நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தாலும், தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறி தவறான பிறை நிலைப்பாட்டை நிர்பந்தமாக பின்பற்றக் கூடாது. மேலும் மேற்படி அமீர், ஜமாஅத், இயக்கத் தலைமைகளின் பிறை முடிவுகளை தக்லீத் செய்து ஏற்றுக் கொள்ளாமல் சுயமாக சிந்திக்க வேண்டும். இதைத்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் முடிவெடுக்கக் கூடாது?


4.ஒரு ஆட்சியாளாரின் ஆட்சிக்கு நாம் கட்டுப்பட்டவர்களாக இருந்தாலும் மார்க்க சட்டத்தில் நாம் சுயமாக சிந்தித்து முயற்சி செய்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் அந்த ஆட்சியாளர் மார்க்;கம் என்று கூறி செயல்படுத்தும் அனைத்து செயல்பாடுகளையும் நாமும் அப்படியே கண்மூடி பின்பற்ற வேண்டியது இல்லை. இக்கருத்தைத்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் புரிந்து கொள்ள கூடாது?


5.முஆவியா (ரழி) அவர்கள் அன்றை இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாக இருந்தார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கலீஃபாவின் ஆளுமையின் கீழ் மதீனாவின் கவர்னர் பொறுப்பிலிருந்தார்கள். இவ்விருவருமே சங்கைமிக்க நபித்தோழர்கள் ஆவார்கள். குரைப் சம்பவம் குறிப்பிடுவதுபோல கண்ணியமிக்க அவ்விரு நபித்தோழர்களும் இரண்டு வௌ;வேறு நாட்களில் ரமழான் நோன்பை முரண்பட்டுத் துவங்கினார்கள் என்ற செய்தி சரியானதல்ல. முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கிழமையில்தான் மாதத்தைத் துவங்க வேண்டும் என்பதைத்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் பிரச்சாரம் செய்யக் கூடாது?


6.ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தென்படும் பிறைகளின் இறுதி படித்தரமான 'உர்ஜூஃனில் கதீம்' என்ற நிலைபற்றி அல்குர்ஆன் (36:39) கூறுகிறது. இன்னும் பிறைகளைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளையிட்டும் விட்டார்கள். ஷவ்வால் மாதத்தின் துவக்கத்தை எதிர் நோக்கி இருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ரமழானின் இறுதியில் குரைபை அழைத்து ரமழான் துவக்கத்தைப் பற்றி விசாரித்துள்ளார்கள். இதன் அடிப்படையில், ஷஃஅபானின் பிறைகளை வைத்து ரமழானின் துவக்கத்தையும், ரமழானில் பிறைகளின் படித்தரங்களை துல்லியமாக வைத்து ஷவ்வாலின் துவக்கத்தையும் முற்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் முடிவெடுக்கக் கூடாது? என்ற ரீதியில் நடுநிலையோடு சிந்திப்பார்களாக.


ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டிற்கு பல்வேறு குர்ஆன் வசனங்களும், நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுமே ஆதாரங்களாகும். அவற்றைத்தான் மக்கள் மத்தியில் நேரடியாகவும், பகிரங்கமாகவும் தெரிவித்து வருகிறோம்-அல்ஹம்துலில்லாஹ். இந்நிலையில் பிறைகள் விஷயத்தில் நாம் என்ன சொல்கிறோம் என்பதை மாற்றுக் கருத்துடையவர்கள் கொஞ்சம்கூட அறியமுற்படாதது வேதனைக்குரியதே.


நபி (ஸல்) அவர்களும், நான்கு கலீஃபாக்களும், இன்னும் நபி (ஸல்) அவர்களோடு தோழமையைப் பெற்றிருந்த மூத்த ஸஹாபாக்களில் பலரும் மரணித்த பிற்காலத்தில்தான் மேற்படி குரைப் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் அக்காலத்தில் முஸ்லிம் உம்மத்தை பிரிவுக்குள்ளாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை எதிர்த்தோரின் பல சதிவேலைகளும், ஷியாக்களின் பிரிவினை குழப்பங்களும் தலை தூக்கியிருந்தன. அப்படிப்பட்ட காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மாற்றுக்கருத்தினர் தங்களது பிறை நிலைப்பாட்டிற்கு தக்க ஆதாரமாகத் துணிந்து பிரச்சாரம் செய்வது அனுதாபத்திற்குரியதே. அத்தகையோர்;களை மக்களே நீங்கள்தான்; அடையாளம் கண்டு திருத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


'ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி' என்ற வாசகங்கள் வரும் பிரபலமான ஹதீஸ்கள் இருபத்தொன்பதாவது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்பதற்கு எவ்விதத்திலும் ஆதாரமாகாது. மாறாக பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் துல்லியமாகக் கவனித்தே செயல்பட வேண்டும் என்பதைத்தான் அவை விளக்குகின்றன. 'ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி' ஹதீஸ் சம்பந்தமாக உண்மை விஷயங்கள் தெளிவாக நிரூபணமாகிவிட்டன. இவற்றை மக்கள் தெளிவாக விளங்கி வருகின்றனர் - அல்ஹம்துலில்லாஹ்.


இந்நிலையில், இருபத்தொன்பதாவது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டம் என்ற தவறான நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கருதப்பட்ட


1) ஒரு கிராமவாசியின் பிறை அறிவிப்பு,

2) பிறையை பார்த்துதும் ஓதும் துஆ சம்மந்தப்பட்ட அறிவிப்பு,

3) ரிப்யீ பின் ஹிராஷ் அறிவிக்கும் இரண்டு கிராமவாசிகளின் பிறைச் செய்தி அறிவிப்பு,

4) இரண்டு கிராமவாசிகள் சம்பந்தமாக வரும் மேலும் ஒரு அறிவிப்பு,

5) நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை அவரவர் முடிவு செய்யலாம் என்று தவறாக மக்களிடம் புரிய வைக்கப்பட்ட அறிவிப்பு,

6) பிறை பார்த்தலுக்கு இரண்டு சாட்சிகள் பற்றிய செய்தி,

7) ரமழானை முன்கூட்டியே ஆரம்பிப்பது சம்பந்தமான அறிவிப்பு,

8) யவ்முஷ்ஷக் என்று பிறை பார்த்தல் சம்பந்தமாக பதிவுசெய்யப்பட்டுள்ள செய்தி


போன்ற அனைத்து செய்திகளும் பலவீனமானவையாகவே உள்ளன. அவற்றில் பல தத்தமதுபகுதி பிறை, தமிழகப்பிறை, சர்வதேசப்பிறை, பிறையைப் புறக்கண்களால் பார்த்தல் போன்ற பிறை நிலைப்பாடுகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளன.


இன்னும் பிறை பார்த்துத் தகவல் அளிப்பதற்கு மிகப்பெரும் ஆதாரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட வாகனக்கூட்டம் சம்பந்தமான அறிவிப்பும் அடிப்படையற்றது, தொடர்பு அறுந்த செய்தி என நிரூபனமாகி விட்டது. மேலும் அந்த அறிவிப்பு இனங்காணப்படாத அபூஉமைர் என்பவரால் அறிவிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்தியே அது. இவை தௌ;ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் நபிமொழி என்ற தரத்தில் அமையாத இந்த குரைப் சம்பவத்தை நிலைநிறுத்த வேண்டிய சூழல் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.


இன்றைய அறிவியல் யுகத்தில் கணிணியின் மூலம் அனைத்து அறிவிப்புகளையும், செய்திகளையும் தேடி எடுத்து, அனல் பறக்க விவாதங்கள் புரியும் அரபுப்புலமை(!) வாய்ந்தவர்களால் கூட இந்தக் குரைப் சம்பவம் பற்றிய உண்மை நிலையை உலகிற்கு உணர்த்த முடியாமல் போனது ஏன்?.


அவர்கள் அறிந்து கொண்டேதான் இருட்டடிப்பு செய்கிறார்களா? அல்லது அவர்களின் அரபு மொழியறிவில் உள்ள குறைபாட்டினால் இவை அவர்களுக்கு புரியாமல் ஆகிவிட்டதா? அல்லது இவர்கள் எதையும் ஆய்வு செய்யாமல் அறியாமையிலே உழன்று வருபவர்களா? என அடுக்கடுக்கான சந்தேகங்கள் நமக்கு எழுகின்றன.


இன்னும் தவ்ஹீது கொள்கையைப் பின்பற்றுபவர்கள் எனப்படுவோர் திருக்குர்ஆன், ஸஹீஹான சுன்னா, ஆகிய இவ்விரண்டு மட்டும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் என்றும், இந்த இரண்டில் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்பதையும் கொள்கையாகக் கொண்டவர்கள் என மக்கள் நம்பியுள்ளனர். நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் ஸஹீஹானதை மட்டும்தான் ஏற்று நடப்போம் என்று பிரசாரம் செய்யும் தவ்ஹீது கொள்கை கருத்துடையோர், இந்த குரைப் சம்பவம் சம்பந்தமாக நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தைச் சொல்லிடக் கடமைப் பட்டுள்ளார்கள். தத்தமது பகுதிபிறை, தமிழகப்பிறை, சர்வதேசப்பிறை அல்லது பிறைத்தகவல் போன்ற பிறை நிலைப்பாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு இச்செய்தியை பலமான ஆதாரம் என நம்பி தாங்கள் பிரச்சாரமும் செய்துவிட்டதால், தற்போது இவ்விஷயங்களை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்று தயக்கம் காட்டுவார்களேயானால் அத்தகைய தவ்ஹீதுவாதிகளுக்கு இந்த ஆய்வுகள் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.


ஆக பல்வேறு முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்தவையே மேற்படி குரைப் சம்பவம் ஆகும். அச்சம்பவம் உணர்த்தும் படிப்பினைகளையும், அதில் எழும் பல கேள்விகளையும் மனதில் கொண்டு நிதானமாக, சிந்தித்து முடிவெடுக்க வேண்டுகிறோம். மேற்படி குரைப் சம்பவம் தத்தமதுபகுதி பிறைக்கோ, தமிழகப் பிறைக்கோ, சர்வதேசப் பிறையினரின் வாதத்திற்கோ அல்லது பிறந்த பிறையை 29-வது நாள் மாலை 30-வது நாள் இரவு, மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில், பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்பது போன்ற நிலைப்பாட்டிற்கோ எவ்வகையிலும், ஒருபோதும் ஆதாரமாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் கட்டளையிட்டார்கள் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு இதுவும் ஹதீஸ்தான் என்றும் இனி வாதிடவும் முடியாது என்பதையும் மக்களே நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

17.எந்தக் கிழமையில் கவனிக்கின்றோமோ அது அந்தக் கிழமைக்குரிய பிறையே

حدثنا أبو بكر بن أبي شيبة ، حدثنا محمد بن فضيل ، عن حصين ، عن عمرو بن مرة ، عن أبي البختري ، قال : خرجنا للعمرة ، فلما نزلنا ببطن نخلة قال : تراءينا الهلال ، فقال بعض القوم : هو ابن ثلاث ، وقال بعض القوم : هو ابن ليلتين ، قال : فلقينا ابن عباس ، فقلنا : إنا رأينا الهلال ، فقال بعض القوم : هو ابن ثلاث ، وقال بعض القوم : هو ابن ليلتين ، فقال : أي ليلة رأيتموه ؟ قال فقلنا : ليلة كذا وكذا ، فقال : إن رسول الله صلى الله عليه وسلم ، قال : " إن الله مده للرؤية ، فهو لليلة رأيتموه " *. (صحيح مسلم - كتاب الصيام باب بيان أنه لا اعتبار بكبر الهلال وصغره - حديث : ‏1885‏).


நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதுனுநக்லா என்ற இடத்தில் இறங்கினோம். அப்போது பிறையைக் கவனித்தோம்;. அக்கூட்டத்தில் சிலர் இது மூன்றாவது நாளுக்குரியது (இப்னு ஃதலாஃத்) என்றனர். மற்றும் அக்கூட்டத்தில் சிலர் இரண்டாவது நாளுக்குரியது (இப்னு லைலத்தைன்) என்றனர். அப்பொழுது நாங்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் நிச்சயமாக பிறையைக் கவனித்தோம் சில நபர்கள் அது மூன்றாம் நாளுக்குரியது என்றும் மேலும் சில நபர்கள் அது இரண்டாம் நாளுக்குரியது என்றும் கூறினோம். அதற்கவர்(இப்னு அப்பாஸ் ரழி) நீங்கள் எந்தக் கிழமையில் கவனித்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் இன்ன இன்ன கிழமைகளில் கவனித்தோம் என்று விடையளித்தோம். அதற்கவர்கள்(இப்னு அப்பாஸ் ரழி), நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள். அறிவித்தவர்: அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 1885)


2582-صحيح مسلم - (3 / 127)


- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا الْبَخْتَرِىِّ قَالَ أَهْلَلْنَا رَمَضَانَ وَنَحْنُ بِذَاتِ عِرْقٍ فَأَرْسَلْنَا رَجُلاً إِلَى ابْنِ عَبَّاسٍ - رضى الله عنهما - يَسْأَلُهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ - رضى الله عنهما - قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ اللَّهَ قَدْ أَمَدَّهُ لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِىَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ».


நாங்கள் தாதுஇரக் எனும் இடத்தில் ரமழான் பிறையைப் பார்த்தோம். அதுபற்றிய விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரழி) யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள். அறிவித்தவர்: அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 2582).


இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் மேற்கண்ட முதலாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்றும், இரண்டாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அது உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.


மேற்கண்ட இவ்விரு ஹதீஸ்களிலும் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பிறகே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றோ, 29-வது நாள் பின்னேரம் 30-வது இரவு என்ற ஒரு நாளில் மட்டும் பிறையை பார்க்க வேண்டும் என்றோ கூறப்படவில்லை என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுகிறோம்.


ஒவ்வொரு கிழமைக்குறிய பிறையும் அந்தந்த கிழமையின் தேதியைக் குறிக்கும் என்பதையும், இன்று மஃரிபு வேளையில் மேற்குத்திசையில் பார்க்கும் பிறை அடுத்த நாளுக்குறியது அல்ல என்பதையும் தெளிவாக விளக்கும் முகமாகத்தான் எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்ற இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் இரத்தினச் சுருக்கமான வார்த்தையிலிருந்து புலனாகிறது.


மேலும் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் கும்மவுடைய நாள் என்னும் புவிமைய சங்கமதினம் - (Geocentric Conjunction Day) இருபத்து ஒன்பதாவது நாளிலோ, முப்பதாவது நாளிலோ இருப்பின் பிறை புறக்கண்களுக்குத் தெரியாத அந்த 'கும்ம'வுடைய நாளையும் மாதத்தோடு சேர்த்து பூர்த்தி செய்ய வேண்டும் என்று நாம் முன்னர் கூறியுள்ளதை நினைவு படுத்தும் முகமாக நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்ற சொற்றொடர் அமைகிறது என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.


முஸ்லிம் கிரந்தத்தில் 1885-வது ஹதீஸாக வரும் பதுனுநக்லா என்ற இடத்தில் பிறை பார்க்கப் பட்டது சம்பந்தமாக அபுல்பக்தரீ அவர்கள் அறிவிக்கும் மேற்படி ஹதீஸ், நபி(ஸல்) அவர்கள் காலத்து மக்கள் அனைத்து நாட்;களும் பிறையைப் பார்க்கும் வழக்கத்தைத்தான் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மிகத் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.


இன்னும் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள் என்ற வாசகத்தை வைத்து, எந்தக் கிழமையில் பிறை பார்க்கப்படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்ற பிறைசார்ந்த விஞ்ஞான உண்மையையும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது பிறை முதல் தேதியைக் காட்டினால் மாதத்தின் முதல் நாளில் நாமும் இருக்க வேண்டும். பிறை ரமழானின் ஏழாவது நாளைக் காண்பித்தால் நாமும் ஏழாவது நோன்பை பிடித்திருக்க வேண்டும் என்று நாம் முன்னர் கூறியதை இங்கு நினைவு படுத்துகிறோம். இதைத்தான் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் மேற்காணும் ரிவாயத்தும் உறுதிப்படுத்துகிறது.


எனவே இவை பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் கவனித்துக் கணக்கிட்டு வரவேண்டும் என்ற ஹிஜ்ரி கமிட்டியின் பிறைநிலைப்பாட்டை தெரிவிக்கும் ஆதாரங்களே அல்லாமல் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்ப்பதற்கு ஆதாரமாக அமையவில்லை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல அறியலாம்.


'லைல்' என்ற அரபுச் சொல்தான் இரவு என்பதைத் தனித்துக் குறிக்கும் சொல்லாகும். 'லைலத்' (லைலஹ்) என்றால் இரவு பகல் கொண்ட ஒரு முழுநாளையும் குறிக்கும் அரபுப் பதமாகும். மேற்கண்ட பதுனுநக்லா சம்பவத்தில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் அந்த செய்தியில் 'ஃபஹூவ லி லைலதின் ரஅய்த்துமூஹூ' - (فهو لليلة رأيتموه) என்ற சொற்றொடருக்கு எந்தக் கிழமையில் பிறை பார்க்கப்படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்றதான் பொருள் கொள்ள முடியும். இதை விளங்கி பிரித்தறியாமல், அதிலுள்ள 'லைலத்' என்ற பதத்திற்கு 'கிழமை', 'நாள்' என்ற பொருள் இருக்க அதை 'இரவு' என்று தவறாக மொழிபெயர்த்து பிரச்சாரம் செய்கின்றனர்.




'லைலஹ்' (லைலத்) என்ற பதம் எண்ணிக்கை மற்றும் கிழமைகள் குறித்த சொற்களுடன் சேர்ந்து வரும் போது, பகலும் இரவும் கொண்ட முழுமையான நாளையே குறிக்கும். இன்னும் 'லைலஹ்' என்ற பதம் 'யவ்ம்' என்ற பதத்துடன் இணைந்து வரும் இடங்களில் மட்டும்தான் 'லைலஹ்' என்பதற்கு 'இரவு' என்றும், 'யவ்ம்' என்ற பதத்திற்கு 'பகல்' என்றும் மொழிபெயர்க்கப்படும். பொதுவாக அரபு மொழிவழக்கில் இரவிற்கு 'லைல்' என்ற பதமே பயன்படுத்தப்படும் என்பதையெல்லாம் குரைப் சம்பவத்தில் நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.


குரைபுடைய சம்பவத்திற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும், சம்பந்தமும் இல்லாத நிலையிலும், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் எங்களுக்குக் கட்டளை இட்டார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக வந்துள்ள வாசகத்தைப் பிடித்துக் கொண்டு அந்த குரைபு சம்பவத்தை ஹதீஸ்தான் என்று அடம்பிடிப்பவர்கள், ஸஹீஹூ முஸ்லிம் 1885-வது ஹதீஸாக இடம்பெற்றுள்ள மேற்படி நபிமொழியில் 'அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்' என்ற இந்த சொற்றொடரை கண்டும் காணாமல் இருப்பது ஏனோ? இதை மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டால் ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள் என்ற அச்சம்தான் காரணமா? யாமறியோம்.


இன்னும் முஸ்லிம் 1885-வது ஹதீஸில் இடம்பெறும் வாசகத்தை சற்று உன்னிப்பாக கவனியுங்கள். அதாவது ''சில நபர்கள் அது மூன்றாம் நாளுக்குரியது என்றும் மேலும் சில நபர்கள் அது இரண்டாம் நாளுக்குரியது என்றார்கள்'' என்று இடம்பெற்றுள்ளது. இதிலிருந்தே அன்றைய ஸஹாபாக்களிடம் தலைப்பிறை குறித்த சர்ச்சைகள் ஏதும் இருக்கவில்லை. மாறாக அந்த நாளில் தென்பட்ட பிறையின் வடிவநிலைiயும், அது காட்டும் தேதியையும் குறித்துதான் கேள்வி எழுந்துள்ளதே புலனாகிறது. மேலும் தலைப்பிறையைப் புறக்கண்களால் பார்த்த பின்னர் அடுத்தநாள் மாதத்தைத் துவங்கும் வழக்கம் அன்று இருக்கவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.


ஆனால் பிறையை புறக்கண்களால் பார்த்த பின்னர்தான் மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள மாநிலப்பிறை, தேசியப்பிறை மற்றும் சர்வதேசப்பிறை கருத்துடையோர் தலைப்பிறை குறித்தே தர்க்கங்களில் ஈடுபடுவதைக் இன்று காண்கிறோம். மேலும் அவர்கள் பிறையின் வடிவநிலைகளையோ, அவை காட்டும் தேதியையோ சிறிதளவேனும் பொருட்படுவதில்லை என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.


மேலும் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கியுள்ளான் என்பதை பிறையைப் பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று தவறான பொருளில் மாற்றுக் கருத்தடையோர் புரிந்து கொண்டனர். அதன் காரணமாக அவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். அதாவது, வானில் பிறை இருப்பதோ, கணிக்கப்படுவதோ, அல்லது வேறு எங்கோ பார்த்ததாகத் தகவல் கிடைப்பதோ பிறையைத் தீர்மானிக்க உதவாது. மாறாக நாளைத் தீர்மானிக்க நமது பார்வையில் தென்படுவது மட்டுமே ஒரே அளவு கோல் என்று இந்த ஹதீஸ் மிகத் தெளிவாகப் பறை சாற்றுகிறது. பிறையைப் பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்? என்ன அற்புதமான வாசகம் என்று பாருங்கள். இப்படி அவர்களின் வேடிக்கையான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.


'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' (إن الله مده للرؤية) என்பதற்கு மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று தவறான பொருளை மாற்றுக் கருத்துடையோர் தெரிவிக்கின்றனர். சரி 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்பதை நீட்டியுள்ளான் என்று ஒரு வாதத்திற்கு பொருள் கொள்வோம். மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று அவர்களே கூறும் சொற்றொடரின் உட்பொருள் என்ன என்பதையாவது மாற்றுக் கருத்துடையவர்கள் விளங்க முற்பட்டார்களா என்றால் அதுவுமில்லை.


இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், அல்லாஹ் நமக்கு பிறைகளின் படித்தரங்களை தேதிகளுக்காக நிர்ணயித்து விட்டான் என்பதையும், அவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ள நபி (ஸல்) அவர்கள் ஒருமாதம் என்பதற்கு 29 அல்லது 30 நாட்களே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தி விட்டார்கள். இந்நிலையில் அதற்கு நேர் எதிரான கருத்தில் பிறையைப் பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் பொத்தாம் பொதுவாகச் சொல்வார்களா? என்பதை சற்று சிந்திக்க வேண்டும். சரி நீட்டியுள்ளான் என்றால் ஒருமாதம் என்பதற்கு 29 அல்லது 30 நாட்களே இருக்கும் என்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், தனது தூதரை உண்மைப்படுத்திடும் வண்ணம் அந்த முப்பது நாட்களுக்கு அதிகமாக வல்ல அல்லாஹ் ஒரு மாதத்தின் நாட்களை நீட்டிடவே மாட்டான் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


இன்னும், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் இப்பூமியின் துணைக்கோளே சந்திரன். இந்த சந்திரன் என்னும் துணைக்கோள் பூமியைச் சுற்றிவருவதால்தான் ஒவ்வொரு நாளுக்குரிய பிறை தனித்தனியான வடிவநிலைகளில் பூமிக்குக் காட்சியளிக்கிறது. இதையே அந்தந்த கிழமைக்குரிய தேதிகளைக் காட்டும் பிறையின் படித்தரங்கள் என்கிறோம். அல்லாஹ் நமக்கு பிறைகளின் படித்தரங்களை தேதிகளுக்காக நிர்ணயித்து விட்டான். அவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளுமாறு மார்க்கம் நமக்குத் தெளிவாக வலியுறுத்துகிறது.


நமது பூமியானது தன்னைத்தானே ஒருமுறை சுற்றி முடிவதற்கு ஆகும் நேரமான 24 மணிநேரத்தைக் கணக்கிட்டு நாம் ஒரு நாள் என்கிறோம். இந்நிலையில் ஒரு மாதம் என்றால் என்ன என்பதற்கு அந்த சூரியனைச் சுற்றிவரும் பூமியும், பூமியைச் சுற்றிவரும் துணைக்கோளான சந்திரனும், இந்த பூமியும் ஒருநேர்க்கோட்டில் சங்கமித்து பின்னர் அதேபோல மற்றொருமுறை அம்மூன்றும் சந்திப்பதற்கு ஆகும் நாட்களின் கூட்டு எண்ணிக்கையே ஒரு மாதம் என்கிறோம். இவ்வாறு அந்த முக்கோளங்களின் சந்திப்பான சங்கம நிகழ்வு ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதி நாளிலும் கட்டாயமாக ஏற்படும். இவ்வாறு ஒரு வருடத்திற்கு 12 தடவைகள் சங்கம நிகழ்வு ஏற்பட்டு, இவ்வுலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டுதான் என்ற அல்குர்ஆன் வசனத்தை (9:36) நிரூபித்துக் கொண்டே உள்ளது.


ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியான வடிவநிலைகளை பூமிக்கு காட்சியளித்து அந்தந்த கிழமைக்குரிய தேதிகளைக் காட்டும் சந்திரன், மேற்படி புவிமைய சங்கம தினத்தில் மட்டும் பூமிக்கு காட்சியளிப்பதில்லை. காரணம் சூரியன் உதயமாகும் கோணவிகிதத்திற்கு சமமான அளவில் சந்திரனும் உதிப்பதால், சந்திரனின் மெல்லிய காட்சி சூரியனின் பிரம்மாண்டமான ஒளிச் சிதறலில் நம் புறக்கண்களுக்கு மறைக்கப்பட்டு விடுகிறது. அந்த நாளைத்தான் நாம் புவிமைய சங்கமம்(Geocentric Conjunction) என்கிறோம். இந்த புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நிகழ்வு ஒருமாதம் 30 நாட்களாக இருந்தால் அந்த இறுதி நாளான 30-வது நாளிலும், ஒருமாதம் 29 நாட்களாக இருந்தால் அந்த இறுதிநாளான 29-வது நாளிலும் தவறாமல் நடைபெறும் நிகழ்வாகும். புவிமைய சங்கமம் (புநழஉநவெசiஉ ஊழதெரnஉவழைn) நிகழ்வை நாம் எப்படி கணக்கிடுகிறோம் என்றால் சூரியன், சந்திரன், பூமி ஆகிய இவை மூன்றும் ஒருமுறை சங்கமித்து மறுபடியும் ஒரு கோட்டில் சங்கமித்து சந்திரனின் வடிவநிலை முற்றிலுமாக மறைக்கப்படும் நிலையை வைத்தே முடிவு செய்கிறோம். இதுவே நமது மார்க்கமும் விஞ்ஞானமும் கற்றுத்தரும் பாடமுமாகும்.


இப்படி சந்திரன் மறைக்கப்படும் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நிகழ்வை மையமாக வைத்து மாதத்தை அளவிடும் முறைக்கு சினோடிக் மாதம் (ளுலழெனiஉ ஆழவொ) என்று அழைக்கப்படுகிறது. இந்த சினோடிக் மாதமானது 29.53 நாட்களைக் கொண்டதாகும். அதாவது சூரியன், அந்த சூரியனைச் சுற்றிவரும் பூமி, மற்றும் நமது பூமியைச் சுற்றிவரும் துணைக் கோளான சந்திரன், இம்மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் சங்கமித்து பின்னர் அதேபோல அம்மூன்றும் மீண்டும் சந்திப்பதற்கு ஆகும் மொத்த நாட்களாகும். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்களே என்பதை வரையறுத்து விளக்கியுள்ளதை, வானவியல் (Astronomy) கூறும் சந்திரனை மையமாக வைத்து அளவிடப்படும் (Synodic Month) சினோடிக் மாதக்கணக்கீடு மிகத்துல்லியமாக நிரூபிப்பதை இதிலிருந்து அறியலாம்.


இதுவல்லாமல் சிடேரியல் மாதம் (Sidereal Month) என்ற பெயரில் மற்றொரு மாதக் கணக்கீட்டு முறையும் உள்ளது. அதாவது சூரியன், சந்திரன், பூமி ஆகிய இவை மூன்றும் ஒருமுறை சங்கமித்து மறுபடியும் ஒருகோட்டில் (அல்லது ஒரே நேர்க்கோட்டில்) சங்கமித்து சந்திரனின் வடிவநிலை முற்றிலுமாக மறைக்கப்படும் நிலையை வைத்து மாதத்தை கணக்கிட்டு முடிவுசெய்யாமல், அம்மூன்று கோள்களும் தொலைதூரத்திலுள்ள ஒரு நட்சத்திரத்திற்கு நேராக வரும் பட்சத்தில் ஒரு மாதத்தின் நாட்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கணக்கு முறையாகும். இவ்வாறு நட்சத்திரத்தை மையமாக வைத்து அளவிடப்படும் (Sidereal Month) சிடேரியல் மாதமானது 27 நாட்களை மட்டுமே கொண்டது. காரணம் சூரியன், சந்திரன், பூமி ஆகிய இவை மூன்றும் ஒருமுறை சங்கமித்து மறுபடியும் ஒரு கோட்டில் (அல்லது ஒரே நேர்க்கோட்டில்) சங்கமிக்கும் முன்னரே அந்த தொலைதூர நட்சத்திரத்திற்கு நேர்க்கோட்டில் வந்துவிடும். இது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஒருமாதம் 29 அல்லது 30 நாட்களாக இருக்கும் என்பதற்கு இது முரணானதாகும். இவ்வாறு பிறைகளின் படித்தரங்கள் அல்லாத, நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைந்த (நுஜூமிய்யா) சுமார் இரண்டு நாட்கள் வித்தியாசப்படும் (sidereal Month) இந்த சிடேரியல் மாதக்கணக்கை ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் புறக்கணிக்கிறோம், அந்த நுஜூமிய்யா கணக்கை எதிர்க்கிறோம்.


இந்நிலையில் சந்திரனை மையமாக வைத்து அளவிடப்படும் (sidereal Month) சினோடிக் மாதமானது 29.53 நாட்களைக் கொண்டது என்பதை அறிந்தோம். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்களே என்பதை வரையறுத்து விளக்கியுள்ளதை (sidereal Month) சினோடிக் மாதக் கணக்கீடு மிகத் துல்லியமாக நிரூபிப்பதை நிதர்சனமாகக் காண்கிறோம்.


நாம் ஆய்வுசெய்து கொண்டிருக்கும் மேற்படி நபிமொழிக்கும் (Sidereal Month) இந்த சிடேரியல்,(Synodic Month) சினோடிக் மாதக் கணக்கீட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். சம்பந்தம் இருக்கவே செய்கிறது. 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' (إن الله مده للرؤية) என்பதை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று பொருள் வைத்தால் கூட சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட (sidereal Month) சிடேரியல் மாதக்கணக்கீடு என்ற தவறான நிலையில் இருந்து, குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த 29.53 நாட்களைக் கொண்ட (sidereal Month) சினோடிக் மாதத்தை முஸ்லிம்கள் அறிந்து கொள்வதற்காகவே வல்ல அல்லாஹ் சிடேரியல் மாதத்திலிருந்து சுமார் இரண்டு நாட்களை நீட்டியுள்ளான் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


நபி (ஸல்) அவர்களைப் பொருத்தவரை 'ஜவாமிவுல் கலாம்' - அதாவது இரத்தினச் சுருக்கமான சொற்களைக் கொண்டு மிகப்பெரும் பொருளை தெரிவிக்கும் ஆற்றலை தனது தூதருக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான் என்று நாம் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். எனவே இன்னல்லாஹ மத்தஹூ லி ருஃயா (إن الله مده للرؤية) என்ற ரத்தினச் சுறுக்கமான சொற்களைக் கொண்டு இவ்வளவு அறிய விஞ்ஞான அறிவை இந்த முஸ்லிம் உம்மத்திற்கு வல்ல அல்லாஹ் தனது தூதர் மூலம் வழங்கியுள்ளான் என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.


சரி மேலே கூறியுள்ள விளக்கங்களின் படி மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்ற மாற்றுக் கருத்துடையோர் கொண்ட பொருள்தானே விஞ்ஞான உண்மையை பறைசாற்றுவதாக உள்ளது பிறகு நீங்கள் ஏன் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று பொருள் கொள்கின்றீர்கள்? என்ற கேள்வியும் எழலாம். நமது விளக்கங்களை சற்று நிதானமாக மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தால் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று நாம் பொருள் கொண்டது மிகவும் சரியானதாகவே தோன்றும்.


1. அதாவது ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் எனில் 'உர்ஜூனில் கதீம்' என்ற பிறையின் இறுதி வடிவம் 29-ஆம் நாளன்றும், ஒரு மாதத்திற்கு 29 நாட்கள்தான் என்றால் 28-ஆம் நாள் அன்றும் கிழக்குத் திசையில் ஃபஜ்ர் வேளையில் காட்சியளிக்கும்;. சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட தவறான (Sidereal Month)சிடேரியல் மாதக் கணக்கீட்டின்படி இறைவசனம் 36:39 கூறும் உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த பாளை எனும் 'உர்ஜூனில் கதீம்' என்ற இறுதி படித்தரத்தின் காட்சியை கவனிக்கும் வாய்ப்பை இழப்போம். இதைவிட்டும் நமக்கு உதவிசெய்யும் முகமாகத்தான் பிறைகளை மையமாக வைத்து மாதத்தை அளவிடும் சினோடிக் மாதத்தை (sidereal Month) அளித்து 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று பொருள் கொள்ள முடியும்.


2. 'உர்ஜூனில் கதீம்' என்ற இறுதிப் படித்தரத்திற்கு அடுத்தநாள் அம்மாதத்தின் இறுதிநாளான புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) உடைய தினமாகும். சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு கோட்டில் அல்லது ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் நிகழ்வாகும். அதாவது ஒரு மாதத்திற்கு 30 நாட்கள்தான் எனில் அந்த புவிமைய சங்கமதினம் இறுதிநாளான 30-வது நாளிலும், ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் எனில் 29-வது நாளிலும் ஏற்பட்டு அந்த மாதத்தின் முடிவை அறிவிக்கும் நிகழ்வாகும். அவ்வாறு சூரியன், சந்திரன், பூமி ஆகிய அம்மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சங்கமிக்கும் போது சூரியக்கிரகணம் ஏற்படும். சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட தவறான சிடேரியல் மாதக்கணக்கீட்டின்படி மாதத்தின் இறுதிநாளில் (Sidereal Month) புவிமைய சங்கமத்தை அறியும் வாய்ப்பையும், சூரியக்கிரகணத்தின் காட்சியை கவனிக்கும் வாய்ப்பையும் இழப்போம். எனவே அதைவிட்டும் நமக்கு உதவிசெய்யும் முகமாகத்தான் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்றும் பொருள் கொள்ள முடியும்.


3. அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் இறுதிநாள் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படுவதை மறைக்கப்படும்போது, மறைந்து இருக்கும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பதங்கள் பயன்படுத்தி விளக்கியுள்ளார்கள். சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட தவறான சிடேரியல் மாதக்கணக்கீட்டின்படி (Sidereal Month) பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் அந்தநாள் உட்பட வளர்பிறைகளின் நிலை (Waxing Crescents), முதல் கால் பகுதி நிலை (First Quarter), முழு நிலவை எதிர் நோக்கி வளரும் நிலை (Waxing Gibbous), முழு நிலவு நிலை (Full Moon), தேய் பிறையை எதிர் நோக்கி தேயும் நிலை (Waning Gibbous), இறுதி கால் பகுதி நிலை(Last Quarter), தேய் பிறைகளின் நிலை(Waning Cresents) போன்றவை அனைத்தும் ஒவ்வொரு மாதங்களுக்கும் வௌ;வேறு நாட்களில் அமைந்து பிறைகளின் சீரான படித்தரத்திற்கும் நாட்;காட்டியின் தேதிகளுக்கும் சம்பந்தமில்லாத நிலை ஏற்படும். இத்தகைய அவல நிலையை விட்டும் மனிதகுலத்திற்கு நேரான வழிகாட்டி உதவிடும் முகமாகத்தான் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று ஏன் பொருள் கொள்ள இயலாது?


4. இன்னும் புவிமைய சங்கமம் நாளுக்கு (Geocentric Conjunction Day) அடுத்த நாள் சூரியனுக்குப் பின்னால் சந்திரன் கிழக்குத் திசையில் தோன்றி (உதித்து) அந்தநாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்கு திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட தவறான சிடேரியல் மாதக்கணக்கீட்டின்படி (Sidereal Month) அந்த முதல்நாளின் காட்சியை கவனிப்பதில் குழப்பமே ஏற்படும். எனவே அக்குழப்பத்தைப் போக்கும் முகமாக நமக்கு உதவிசெய்யும் பொருட்டு 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று பொருள் கொள்ள முடியும்.


மேற்கண்ட இந்த ஐந்து விளக்கங்கள் திருப்தி அளிக்காமல் போனாலும் வல்ல அல்லாஹ்வின் வாக்கான கீழ்க்காணும் இறைவசனங்கள் இன்னல்லாஹ மத்தஹூ லி ருஃயா (إن الله مده للرؤية) என்ற ரத்தினச் சுறுக்கமான வார்த்தைக்கு மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்ற மாற்றுக் கருத்துடையோரின் பொருள் தவறானது என்பதற்கும் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று பொருளே சரியானது என்பதற்கும் சிறந்த ஆதாரமாக அமையும்.


وَاتَّقُوا الَّذِي أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ (26:132) أَمَدَّكُم بِأَنْعَامٍ وَبَنِينَ (26:133)


மேலும், நீங்கள் அறிந்தவற்றை (உங்களுக்கு) வழங்கியவனை அஞ்சுங்கள். அவன் உங்களுக்கு கால் நடைகளையும், பிள்ளைகளையும் வழங்கினான். (அல்குர்ஆன் 26 : 132, 133)


أَلَمْ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ وَلَوْ شَاءَ لَجَعَلَهُ سَاكِنًا ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيلًا (25:45)


உம்முடைய இரட்சகனை நீர் கவனிக்கவில்லையா? நிழலை எப்படி (உங்களுக்கு) வழங்கியுள்ளான் என்பதை! மேலும் அவன் நாடியிருந்திருந்தால் அதனை நிலைபெற்றிருக்க செய்திருப்பான். பிறகு சூரியனை - நாம்தாம் நிழலுக்கு காரணமாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 25:45)


எனவே மேற்கண்ட இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் முதலாவது அறிவிப்பில் நிச்சயமாக 'அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது' என்றும், இரண்டாவது அறிவிப்பில் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான் எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள்' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளன.


மேற்கண்ட நபிமொழிகள் ஒரு மாதத்தின் 29 நாள் மஃரிபுக்குப் பின்னர் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்கோ, மஃரிபில் பார்க்கப்படும் பிறை நாளைக்குரியது என்ற நம்பிக்கைக்கோ, அவரவர்கள் தங்களின் சுயவிருப்பப்படி, பல கிழமைகளிலும், தேதிகளிலும் மாதங்களைத் துவங்குவதற்கோ ஒருபோதும் ஆதாரமாகாது.


மாறாக எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள் என்ற வாசகத்தை வைத்து எந்தக் கிழமையில் பிறை பார்க்கப் படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்பதையும், பிறை முதல் தேதியைக் காட்டினால் மாதத்தின் முதல் நாளில் நாமும் இருக்க வேண்டும், பிறை ரழானின் ஏழாவது நாளைக் காண்பித்தால் நாமும் ஏழாவது நோன்பை பிடித்திருக்க வேண்டும் என்ற குர்ஆன் சுன்னாவின் கூற்றை மெய்ப்படுத்தும் ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டிற்கே தக்க ஆதாரமாக அமைகிறது என்பதையும் தௌ;ளத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.

18. பிறைகளைப் பார்த்து வருபவர்கள் யார்?

ஒரு மாதத்தின் 29-வது நாள் பின்னேரம் 30-வது இரவு என்ற ஒரு நாளில் பிறையைப் பார்க்க வேண்டும். பிறையை அது மறையும் வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்த்து அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும். இவை மாற்றுக்கருத்தினரின் நம்பிக்கை. இவ்வாறு அல்லாஹ்வோ, அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களோ இந்த உம்மத்திற்கு கூறிடவில்லை. ஒரு வருடத்தில் ஷஃஅபானின் இறுதிநாள், ரமழானின் இறுதிநாள் என அவரவர்கள் நினைக்கும் அந்த இருநாட்கள் மட்டும் பிறையை புறக்கண்களால் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதை மார்க்கம் கடமையாக வலியுறுத்தவில்லை என்பதைத் தௌ;ளத் தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறோம். அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் பிறைகளைப் பற்றி நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளதை இங்கு நினைவுபடுத்துகிறோம்.


பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்குக் காலம் காட்டியாகவும், இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)


''நிச்சயமாக அல்லாஹ் பிறை(யின் படித்தரங்)களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.'' அறிவித்தவர் இப்னு உமர் (ரழி). நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306)


பரிசுத்த இறை வேதம் திருக்குர்ஆன் பிறை பற்றிக் கூறும் போது 'அஹில்லாஹ் - பிறைகள்' என்று பன்மையில் (பார்க்க 2:189) கூறுகிறது. பிறைகளின் அனைத்து வடிவங்களையும் கவனித்தும், துல்லியமாகக் கணக்கிட்டும் வரவேண்டும் என்பதே குர்ஆன் சுன்னாவின் கட்டளை. அதன் அடிப்படையில் நோன்பையும், இரு பெருநாட்களையும் அந்த 'அஹில்லாஹ்''க்களின் (பிறைப் படித்தரங்களின்) அடிப்படையில்தான் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறையின் ஒரு வடிவ நிலையை மட்டும் கவனிக்காமல் அனைத்துப் பிறை படித்தரங்களையும் கவனிக்க வேண்டும் என்பது மார்க்கம் இட்டுள்ள கட்டளையைத்தான் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பல வருடங்களாகப் பின்பற்றுகிறோம். பிரச்சாரம் செய்தும் வருகிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதல்படி பிறைகளைத் துல்லியமாகக் கணக்கிடலாம் என்பதையும், பிறைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு இஸ்லாமிய நாட்காட்டியை இந்த மனித சமுதாயத்திற்கு வழங்கிடவும் வேண்டும் என்றும் நாம் கூறுகிறோம். இதற்கு குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் நேரடி ஆதாரங்களை எடுத்து வைத்துப் பிரச்சாரம் செய்கிறோம்.


அவன்தான் சூரியனை (சுடர்விடும் ஒளிப்பிளம்பால்) பிரகாசமானதாகவும், சந்திரனை (பிரதிபளிக்கும்) ஒளியாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அதற்கு மாறிமாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்லாஹ் உண்மை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் சமூகத்திற்காக அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (அல்குர்ஆன் 10:5)


இந்தப் பிறைக் கணக்கீட்டு முறையை மக்களிடம் நாம் எடுத்துச் சொல்லும்போது மாற்றுக் கருத்துடையோர், ஹிஜ்ரிகமிட்டியினர் பிறையைப் புறக்கண்களால் பார்க்கவே தேவையில்லை என வாதிடுகின்றார்கள் என்று சர்வ சாதாரணமாக நம்மை குறித்து அவதூறைப் பரப்பி வருகின்றனர்.


அந்தந்த நாளுக்குரிய பிறையைத்தான் அந்தந்த கிழமையில் பார்க்க முடியும், கடந்த காலப் பிறைகளையும், வருங்காலப் பிறைகளின் (மனாஜில்) படித்தரங்களையும் புறக்கண்களால் பார்க்க இயலாததின் காரணத்தால் அவற்றைக் கணக்கிட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு குர்ஆன் கூறும் பல ஆண்டுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதைத்தான் நாட்காட்டி (Calendar) என்கிறோம். இந்த அடிப்படை விஷயத்தைக் கூட விளங்காதவர்கள்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் பிறையைப் புறக்கண்களால் பார்ப்பதை மறுப்பதாக தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஒரு வருடத்தில் ஷஃபான், ரமழான் மாதங்களில் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மட்டும் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்கம் என்று நம்பியுள்ள பொதுமக்களும் மேற்படி நபர்களின் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாந்து நாம் சொல்லும் சத்தியத்தை உள்வாங்கிடத் தவறிவிடுகின்றனர். அதனால்தான் பிறைகைளைப் புறக்கண்ணால் பார்த்து வருபவர்கள் யார்? என்பதையும் விளக்க வேண்டியுள்ளது.


பிறைகளைக் கணக்கிடுங்கள் என்று நாம் சொல்வதை ஏதோ ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கணிப்பொறியைத் தட்டிச் சொல்வதாக நம்மை விமர்சிப்போர் நினைத்துக் கொண்டுள்ளார்கள் போலும். தமிழக வரலாற்றில் பல வருடங்களாகப் பிறைகளின் படித்தரங்களைப் புறக்கண்களால் பார்த்தும், கணக்கீட்டின் மூலமும் கவனமாக அவதானிப்பவர்கள் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவரும் இப்பணியில் இல்லை என்பதை அறியத் தருகிறோம். இதைப் பெருமைக்காக நாம் சொல்லவில்லை, மாறாக பிறை விஷயத்தில் அடிப்படை அறிவுகூட இல்லாத சிலர் பிறைகளைப் புறக்கண்ணால் மட்டுமே பார்க்கவேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் மக்களைத் தவறான வழியின்பால் இட்டுச்செல்வதை அறியத் தருகிறோம். இந்தப் பிறை விஷயத்தை மையமாக வைத்து முஸ்லிம் உம்மத்தை பிளவுபடுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியை விட்டும் மக்களை மீட்டெடுக்கத்தான் நாம் போராடி வருகிறோம். அப்படிப்பட்ட நம்மைப் பார்த்து, ஹிஜ்ரிகமிட்டியினர் பிறையைப் பார்க்கவே கூடாது என்கின்றனர் என்று அவதூறு பரப்புகின்றனர் என்றால் அதை என்னவென்று சொல்வது?


மக்களே! அந்தந்த நாட்களில் தெரியும் பிறை அந்தந்த கிழமைக்குரிய தேதியைத்தான் காட்டும். ஸஹீஹூல் முஸ்லிம் கிரந்தத்தில் 1885-வது நபிமொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் எந்தக் கிழமையில் பிறையைக் கவனிக்கின்றோமோ அது அந்த கிழமைக்குரியது, அடுத்த நாளுக்குரியது அல்ல என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கி விட்டார்கள் என்பதை இங்கு நினைவு படுத்துகிறோம்.


ஒரு மாதத்தின் முதல்நாளை நாம் சரியாகக் கணக்கிட வேண்டுமென்றால் முந்திய மாதத்தின் பிறையின் படித்தரங்களில் உள்ள தேய் பிறைகளையாவது கண்டிப்பாகக் பார்த்து, கணக்கிட்டு வந்திருக்க வேண்டும்.


உதாரணமாக நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு பிரயாணத்திற்குச் செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். விமானம் புறப்படும் அந்த நேரத்தில் நீங்கள் பிரயாணத்திற்குத் தயாராக மாட்டீர்கள். மாறாக பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே அதற்காக தயாராகுவீர்கள், விமானம் புறப்பட சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்தை அடைய முயலுவீPர்கள். அதுபோலத்தான் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை நீங்கள் தெரிந்து பெருநாளைச் சரியான தினத்தில் கொண்டாட வேண்டுமெனில் ரமழான் மாதத்தின் இறுதி நாட்களின் பிறைகளையாவது சரியாகக் கவனித்தும், கணக்கிட்டும் வந்திருக்க வேண்டும். எல்லா பிரயாணத்திற்கும், வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கும், குறித்து வைத்துக்கொள்வதற்கும் சந்திர நாட்காட்டி அவசியம் என்பதை உண்மையான முஸ்லிம்கள் மறுக்க மாட்டார்கள். இங்கு நாம் பிரயாணத்திற்கும் பிறைக்கும் முடிச்சுப் போடவில்லை, புரிந்து கொள்வதற்காகவே இந்த உதாரணத்தைக் கூறுகிறோம். மேற்படி உதாரணத்தை மறுத்தாலும் பிறைகளை அவதானித்து, சரியாகக் கணக்கிட்டு வருவதற்கு குர்ஆனும் சுன்னாவும் ஆதாரமாக இருக்கின்றன என்பதைச் சான்றுகளோடு நாம் விளக்கி வருகிறோம்.


சரி, அவ்வாறு நீங்கள் தேய்பிறைகளைக் கணக்கிடாமல் விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பார்க்கின்ற பிறை எந்த கிழமைக்குரிய தேதியைக் காட்டுகிறது? என்பதைத் தோராயமாக அறிந்து கொள்ளும் வழிமுறையையாவது தெரிந்திருக்க வேண்டும்.


நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதே. ஒரு மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது? என்பதை முற்கூட்டியே நாம் தோராயமாக அறிய வேண்டுமானால், மாலை சூரியன் முழுமையாக மேற்கு திசையில் மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறையானது பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90 டிகிரியில்) நிலைபெற்றிருந்தால் அந்தப்பிறை 7-வது அல்லது 8-வது தேதியைக் காட்டுகிறது. இது மாதத்தின் முதல் கால்பகுதி நிலை (First Quarter) ஆகும்.


மாலை சூரியன் முழுமையாக மேற்கில் மறையும் போது, பிறை முழுநிலவு அளவில் கிழக்குத் திசையில் உதித்துக் கொண்டிருந்தால் அந்தப்பிறை பௌர்ணமி என்னும் முழுநிலவு நாளின் தேதியைத் தெரிவிக்கிறது. ஒரு மாதத்தில் பௌர்ணமி பெரும்பாலும் 14 அல்லது 15-ஆம் நாட்களில் வரும். அந்நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனத்தையும் கிழக்கில் சந்திரன் உதிப்பதையும் காணலாம். இது மாதத்தின் முழு நிலவு நிலை ((Full Moon) ஆகும்.


அதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில், நாம் நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருந்தால் அந்தப் பிறை 21 அல்லது 22 வது தேதியைக் காட்டும் பிறையாகும். இது மாதத்தின் கடைசி கால் பகுதி நிலை (Last Quarter) ஆகும்.


இதில் முதல் கால் பாதி நிலை 6-வது நாளில் வருவதும், பவுர்ணமி 13 அல்லது 16-வது நாளில் ஏற்படுவதும், இறுதி கால்பகுதி 23-வது நாளில் ஏற்படுவதும் அரிதானதாகும். அதுபோல வளர்பிறைகளின் நிலை (Waxing Crescents), முதல் கால் பகுதி நிலை(First Quarter), முழு நிலவை எதிர் நோக்கி வளரும் நிலை(Waxing Gibbous), முழு நிலவு நிலை (Full Moon), தேய்பிறையை எதிர் நோக்கி தேயும் நிலை (Waning Gibbous), கடைசி கால் பகுதி நிலை (Last Quarter), தேய் பிறைகளின் நிலை(Waning Cresents) போன்றவை மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்களைப் பொருத்து தேதிகளால் மாறுபடும்.


நாம் மேலே குறிப்பிட்டுள்ள இவை பிறைகளைத் தோராயமாக அறிந்துகொள்ளும் முறைதான். பிறையானது எந்தக் கிழமையில், எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்தக் கோண விகிதத்தில் தற்போது உள்ளது என்பதையும், அது உதிப்பதையும், அதன் வளர்ச்சியையும், பின்னர் அது மறைவதையும், அதன் நிலைகளையும் துல்லியமானக் கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிந்த விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதையும் மீண்டும் நினைவு படுத்துகிறோம்.


மேலும் கடைசி கால் பகுதி நிலையிலிருந்து (Last Quarter), சந்திரனின் தேய்ந்து வரும் படித்தரங்(மன்ஸில்)களில் நாம் உற்று நோக்கிக்கொண்டு வந்தால், எந்தக் கிழமையில் சந்திரனின் ஒளி பிறையின் வடிவத்தை அடைகின்றதோ, அதே கிழமைதான் எதிர்வரும் சந்திர மாதத்தின் முதல் தினமாக இருக்கும்.


அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட படித்தரங்களை, வடிவநிலைகளைக் கொண்ட பிறைகளை நாம் தொடர்ந்து அவதானித்து வரும் வேளையில், ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்றால் 36:39 இறைவசனம் கூறும் உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த பாளை எனும் 'உர்ஜூஃனில் கதீம்' என்ற பிறையின் இறுதி வடிவம் 29-ஆம் நாளன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்கில் காட்சியளிக்கும். அதுபோல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள்தான் என்றால் உர்ஜூஃனில் கதீம் 28-ஆம் நாள் அன்று காட்சியளிக்கும்;.


உர்ஜூஃனில் கதீம் என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதிப் படித்தரத்திற்கு அடுத்தநாள் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) உடைய தினமாகும். சங்கமம் என்பது ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு கோட்டில் அல்லது ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் தினமாகும்.


அந்த புவிமைய சங்கம (Geocentric Conjunction day) தினத்தில் தேய்பிறை மற்றும் வளர்பிறையைப் பொதுவாக பார்க்க முடியாதவாறு புறக்கண்களுக்கு அது மறைக்கப்பட்டிருக்கும். இதற்குத்தான் கும்மிய, உஃமிய, கபி(கு)ய, க(பு)ம்மிய, ஹஃபிய, கும்ம, அல்லது குபிய உடைய நாள் என்கிறோம். அந்த கும்மவுடைய நாளுக்கு அடுத்த நாள் சூரியனுக்கு பின்னால் சந்திரன் கிழக்குத் திசையில் தோன்றி (உதித்து) அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்குச் சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்குத் திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். அந்தப் பிறை அந்த முதல் நாளின் (கிழமையின்) பாதிப் பகுதியை (சுமாராக 12 மணிநேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.


சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக. அல்குர்ஆன் (91:1-4)


பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டம் என்று கூறித் திரிவோர் சந்திரனில் ஏற்படும் பிறைகளின் படித்தரங்களான மனாஸிலை منازل புறக்கண்ணால் அறிந்து கொள்ளும் இதுபோன்ற முறையை என்றைக்காவது மக்களுக்குச் சொல்லி இருக்கிறார்களா? அல்லது அவர்களாவது மாதந்தோறும் பிறைகளை அவதானித்துக் கணக்கிட்டு வந்துள்ளார்களா?– சிந்தியுங்கள்


புறக்கண்ணால் பிறைகளைத் தோராயமாகக் கணக்கிடும் முறைதான் விஞ்ஞான வளர்ச்சியில்லாத காலத்தில் நடைமுறையில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த அந்த முஸ்லிம் உம்மத் மொழியை எழுதும் எழுத்தறிவும், அடிப்படைக் கணக்கறிவும் பெற்றிருந்த சமுதாயமாகத் திகழ்ந்தனர் என்றாலும், சூரியன் மற்றும் சந்திரனின் சுழற்சிகளைக் (முற்கூட்டியே) கணக்கீடு செய்து நாட்காட்டி தயாரிக்கும் வானியற்பௌதீகம் (Astrophysics) என்னும் விஞ்ஞான அறிவு பெற்றிராத உம்மி சமுதாயமாக இருந்தனர் (புகாரி 1913). பிறைகளைக் கணக்கிடுவதற்குப் புறக்கண்ணால் பார்ப்பது என்ற ஒருநிலை மட்டும்தான் அந்த உம்மி சமுதாய மக்களிடம் இருந்தது. எனவே பிறைகளைப் புறக்கண்ணால் பார்த்தே அவர்கள் ஒரு மாதஅளவிற்குக் கணக்கிட்டுக் கொண்டனர்.


தற்போதைய விஞ்ஞான முன்னேற்றத்தின் வாயிலாக பிறைகள் பற்றித் துல்லியமாகக் கணக்கீடு செய்ய முடிந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்குர்ஆன் வசனம் (10:5) வலியுறுத்துவது போல பல ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் அறிய முடிந்த காலத்தில் நாம் வாழ்கிறோம். பிறையைப் புறக்கண்ணால் பார்த்துத் தோராயமாக அறிந்து கொள்வதை விடத் துல்லியமான கணக்கீட்டின்படி ஒப்பிட்டு பார்த்துப் பின்பற்றுவதை நம் மார்க்கம் ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக கணக்கிடுவதை வலியுறுத்தியும் ஆர்வ மூட்டியும் இருப்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.


தற்போதைய விஞ்ஞான யுகத்தில் இருந்துகொண்டு பிறந்த பிறையைப் புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்று கூறுபவர்கள், இவ்வாறு பிறைகளைப் புறக்கண்ணால்தான் பார்க்கவேண்டும் என்பதிலாவது உண்மையாளர்களாக இருக்கின்றார்களா என்றால் அதுவுமில்லை. அவர்கள் பிறைகளைத் தொடர்ந்து மாதம் முழுவதும் பார்த்து வருவதுமில்லை, பிறைகளை ஒரு பொருட்டாகக் கூட கருதுவதில்லை. இதுதான் பிறையைப் பார்த்து நோன்பு வைப்போம் என கூறுபவர்களின் உண்மை நிலை மக்களே!.


ஆக ஹிஜ்ரிகமிட்டியினர் பிறையைப் பார்க்கக்கூடாது என்று சொல்கின்றனர் என்ற அவதூறு பிரச்சாரத்தின் நிலையையும், உண்மையிலேயே பிறைகளைத் தினந்தோறும் கவனித்தும் கணக்கிட்டும் வருபவர்கள் யார்? என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.


முஸ்லிம்கள் துல்லியமான நாட்காட்டியை தயாரிப்பதின் மூலம் இழந்த தலைமைத்துவத்தையும், வரலாற்றையும் மீண்டும் பெற்று விடக் கூடாது என்று கங்கணம் கட்டிச் செயல்பட்டுள்ள யூத, கிருத்துவ சக்திகளின் சூழ்ச்சி வலைகளைக் கிழித்தெறிந்து இந்த முஸ்லிம் உம்மத்தை எழுச்சிப் பாதையை நோக்கி முன்னேறுமாறு அறைகூவல் விடுத்து அதற்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஹிஜ்ரிகமிட்டியினராகிய எங்களைப் பார்த்து சக முஸ்லிம் சகோதரர்களே இதுபோன்ற தரம் தாழ்ந்த அவதூறுகளை அள்ளி வீசுவது மிகமிக வேதனைக்குரியதாகும்.

19. கணக்கிடுவதில் சூரியனுக்கு ஒரு நீதி, சந்திரனுக்கு ஒரு நீதியா?

அல்லாஹ்வின் பிரம்மாண்ட படைப்புகளான சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்கிறது திருக்குர்ஆன் (55:5). நேரத்தையும் காலத்தையும் மனிதர்கள் அறிந்து கொள்வதற்காகவே இவற்றைப் படைத்துள்ளதாக வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.


சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இவ்விரண்டு கோள்களின் தன்மைகளும், இயற்கை குணங்களும் வௌ;வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்றாலும் அவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்பதும், நேரத்தை அறிந்து கொள்ள சூரியனையும், தேதிகளை அறிந்துகொள்ள சந்திரனையும் வல்ல அல்லாஹ் நமக்கு வசப்படுத்தித் தந்துள்ளான் என்றும், அவை அல்லாஹ்வின் கட்டளைப்படி அதன் வரையறைக்குள் துல்லியமாக இயங்குகின்றன என்றும், நமது தினசரி நேரங்களுக்கும், தேதிகளுக்கும் இவ்விரண்டுமே அடிப்படையாகும் என்பதையும் அல்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் மூலம் நாம் தெளிவாக அறியலாம். (பார்க்க : 2:189, 6:96, 9:36-37, 10:5, 13:2, 17:, 21:33, 36:38-40)


முஸ்லிம்களின் இறை வணக்கமான தொழுகையையும், முஸ்லிம்களின் கிப்லாவையும் மையப்படுத்தியே சர்வதேசத் தேதிக்கோட்டுப் பகுதியில் கிழமை மாற்றம் நடைபெறுவதை இவ்வுலகிற்கு மறைத்த யூதர்களும், கிருஸ்துவர்களும் இவ்விஷயத்தை வரலாறுகளில் திட்டமிட்டு இருட்டடிப்பும் செய்து விட்டனர். அல்லாஹ்வுடைய மார்க்கமாம் தீனுல் இஸ்லாம் என்ற இந்த சத்திய மார்க்கம் மேலோங்கி விடக்கூடாது என்பதிலும், இஸ்லாமிய நாட்காட்டியை முஸ்லிம்கள் தயாரித்து உலகை வழி நடத்தி விடக் கூடாது என்பதற்காகவும் யூத கிருஸ்துவ மிஷினரிகள் நேர்த்தியான பல சதித் திட்டங்களையும் தீட்டிச் செயல்பட்டுள்ளதை நமது முஸ்லிம் உம்மத் இந்த நவீன யுகத்தில் கூட உணராமல் வாழ்ந்து வருவது வேதனையிலும் வேதனையே. இருப்பினும் அறிந்தோ அறியாமலோ கணக்கீட்டு முறையை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றது, அவற்றை நடைமுறையில் நாம் பின்பற்றித்தான் வருகிறோம்.


கடமையான ஐந்து வேளைத் தொழுகைகள் மற்றும் ஜூம்ஆ தொழுகை, இஃப்தார் முடிவு, சஹர் நேரம் போன்றவைகள் அனைத்தும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு குறித்த நேரத்தில் பின்பற்ற வேண்டியவை.


ரமழான் நோன்பின் துவக்கம், இருபெருநாட்கள், ஹஜ் மற்றும், ஆஷூரா நோன்பு, மாதமாதம் வெண்மை நாட்களின் மூன்று நோன்பு, அரஃபா நோன்பு, அனைத்து சந்திர மாதங்களையும் ஆரம்பித்தல், புனித மாதங்களைச் சரியாக ஆரம்பித்தல் ஆகிய வணக்கங்கள் சந்திரனை மையமாக வைத்துக் குறித்த தேதிகளில் பின்பற்ற வேண்டிய கடமைகளாகும்.


இங்கு சூரியனை அடிப்படையாக வைத்து செய்யவேண்டிய காரியங்களான தொழுகை நேரங்களை எவரும் சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்ணால் பார்த்து அறிந்து கொள்வதில்லை. அதுபோல ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் (2:187) என்ற இறைக் கட்டளையை எவரும் புறக்கண்ணால் பார்த்து நடைமுறைப் படுத்துவதில்லை. மாறாக விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ள நேரங்களின் அடிப்படையில்தான் அட்டவணையிட்டு நாம் அனைவரும் பின்பற்றுகிறோம். இதற்கு எவரும் ஆட்சேபனை தெரிவிப்பதில்லை.


ஆனால் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட அமல்களைச் செய்வதற்கு மட்டும் நிலவை புறக்கண்ணால்தான் பார்ப்போம் என்று பிடிவாதமாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்? சூரியனுக்கு ஒருநீதி, சந்திரனுக்கு ஒரு நீதியா? வல்ல அல்லாஹ் சூரியனைப் போலவே சந்திரனையும் சேர்த்துதான் துல்லியமாக இயங்குவதாகச் சொல்கிறான். சூரியனை நாங்கள் கணக்கிடுவோம், ஆனால் சந்திரனை கணக்கிட மாட்டோம் என்ற இரட்டை நீதியை நாம் எங்கு போய் சொல்வது? ஒருவேளை மாற்றுக் கருத்துடையோர் சந்திரன் துல்லியமாக இயங்கவில்லை என்கின்றனரா?. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.


இந்நிலையில், மேற்படி அறிஞர்களிடம் பிறைகளின் படித்தரங்களை துல்லியமாகக் கணக்கிட்டு வழங்கப்பட்டுள்ள சந்திர நாட்காட்டியை (ஹஜ்ரி காலண்டரை) எதிர்க்கும் நீங்கள் நாம் சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து கணக்கிடப்பட்டுள்ள தொழுகைக் கால அட்டவணையை மட்டும் ஏன் ஆட்சேபனை செய்யாமல் பின்பற்றி வருகிறீர்கள்? என்ற நமது கேள்விக்கு அவர்கள் விடையாக : 'சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின்தான் நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை என்றும் மேகமூட்டமான நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மஃரிபு தொழுங்கள் இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதை கருதிக் கொள்ளுங்கள் என சூரியன் குறித்து நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. ஆனால் பிறைக்குத்தான் இந்த நிபந்தனையைக் கூறினார்கள். மேகமூட்டமாக இருந்தால் 30-ஆக பூர்த்தி செய்யுங்கள் என்ற அளவுகோல் பிறைக்குத்தான் உள்ளது ' என விடையளிக்கின்றனர்.


ஒரு வாதத்திற்காக சூரியன் விஷயத்தில் இவர்களின் வாதம் சரிபோலத் தோன்றினாலும், மேற்படி மாற்றுக் கருத்துடையோர் கூற்றின்படியே துல்லியமான சூரியக் கணக்கீட்டை தொழுகை நேரத்திற்கு ஒப்புக்கொண்டது, நபி(ஸல்) அவர்களின் நேரடி வழிகாட்டுதலான சூரியனின் வெளிச்சத்தால் ஏற்படும் நிழலின் அளவை பார்த்து தொழுகை நேரத்தைக் கணக்கிட வேண்டும் என்பதற்கு எதிரானதா இல்லையா? இக்கேள்விக்கான பதிலை மக்கள் மன்றத்தில் அவர்களே தெளிவுபடுத்தட்டும்.


பிறை விஷயத்தில் மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்யுங்கள் என்ற கருத்திற்கு குர்ஆன், சுன்னாவில் எத்தகைய ஆதாரங்களும் இல்லை என்பதை ஃபஇன்கும்ம அலைக்கும் என்பதின் பொருள் என்ன? என்ற தலைப்பிலும், புறக்கண்களால் பார்த்தல் என்ற நிபந்தனை உண்மையிலேயே பிறைகளுக்கு உள்ளதா என்பதை ருஃயத் (காட்சி) என்றால் என்ன? என்ற தலைப்பிலும் விரிவாக விளக்கியுள்ளோம்.


அதுபோல நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும் போது தொழுகை நேரங்களைக் கணக்கிட்டுக் கொண்டார்கள். அதே நேரத்தில் சந்திரனை மேகம் மறைக்கும் போது கணக்கிடாமல் மாதத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்றார்கள். எனவேதான் சந்திரக் கணக்கீடு என்று ஒன்று மார்க்கத்தில் இல்லை என்கிறோம் என்ற மாற்றுக் கருத்துடையோரின் தவறான வாதத்திற்கு விமர்சனங்கள் பகுதியில் விளக்கம் அளிக்கப்படுள்ளது.


எனவே தொழுகை நேரங்களை அறிந்து கொள்ள சூரியனின் வெளிச்சத்தால் ஏற்படும் நிழலின் அளவை வைத்துக் கணக்கிடப்பட்டுள்ள தொழுகை அட்டவணையைப் பின்பற்றுவதைப் போல, தேதிகளை அறிந்து கொள்வதற்காகவே வல்ல அல்லாஹ்வால் வசப்படுத்தித் தரப்பட்டுள்ள பிறைகளையும் துல்லியமாகக் கணக்கிட்டு நாட்காட்டியைத் தயாரித்துப் பின்பற்றுவதும் தவறேதுமில்லை. அது மட்டுமல்ல மிகவும் அவசியமானதுமாகும் என்பதைத் தெளிவாக விளங்கலாம்.

20. நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள்?

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களில் பலர், அல்லாஹ்வின் பேருதவியால் நமது பிரச்சாரத்தை உன்னிப்பாகக் கவனித்து, விழிப்படைந்து இதுநாள் வரை பிறைகள் விஷயத்தில் தவறான நிலைப்பாடுகளைப் பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி தற்போது கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர் – அல்ஹம்து லில்லாஹ்.


அக்கேள்விகளுக்கு குர்ஆன் சுன்னா ஒளியில் பதிலளிக்க முடியாத மாற்றுக் கருத்துடையோர், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிறையைப் புறக்கண்களால் பார்க்கும் பழக்கம் மட்டுமே இருந்துள்ளதால்தான் நாங்களும் அவ்வாறு செய்கிறோம். நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள், இல்லையே? என்ற ஒரு மலிவான வாதத்தை முன்வைப்பதாக அறிகிறோம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபி (ஸல்) அவர்களும் அன்றைய உம்மத்தினரும், கணிப்பொறியையோ (Computer), இணைய தளங்களையோ (Websites), வலை பின்னல் இணைப்புகளையோ (Internet Connection) பயன்படுத்தாத நிலையில் இவற்றைப் பயன்படுத்தி மேற்கண்ட கேள்வியை மாற்றுக் கருத்துடையோர் மக்களிடையே பரப்புவது எந்த விதத்தில் நியாயம்? என்று அவர்கள் பாணியிலேயே கேட்கிறோம். நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள்? என்று மாற்றுக் கருத்துடையோர் தற்போது வாதிக்கின்றனர். மாற்றுக்கருத்தினரின் புறக்கண்பார்வை நிலைப்பாட்டிற்கு ஆதாரமில்லை என்பதை வேறு வார்த்தைகளால் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். மேற்கண்டவாறு அவர்கள் வாதிப்பதே அல்லாஹ்வும், தூதரும் வழிகாட்டியுள்ள சத்தியப்பிறை அத்தாட்சிகளை மக்களிடம் துணிந்து சொல்லும் ஹிஜ்ரி கமிட்டியின் பிறைநிலைப்பாட்டிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றே கருதுகிறோம்.


உலக ஆதாயத்திற்காக தங்கள் இயக்கங்கள் பெயரில் வருடத் துவக்கத்தில் ஒரு தவறான காலண்டரை வெளியிட்டு விட்டு அதில் 29 நாட்களையும் பார்த்து விட்டு, மாதத்தின் 29-ஆம் நாள் என்று அவர்கள் கருதும் ஒருநாளில் மஃரிபு நேரத்தில் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க முயற்சி செய்பவர்கள் இத்தகைய கேள்வியைக் கேட்பது நியாயம்தானா? காலண்டர் எதையும் வெளியிட்டு வியாபாரம் செய்யாதவர்கள் இந்தக் கேள்வியை கேட்டால் குறைந்த பட்ச நியாயம் அதில் இருக்கிறது என்று கூறலாம்.


பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பிறகே அமல் செய்ய வேண்டும் என்று கூறும் அறிஞர்களும், ஜமாஅத் தலைவர்களும் அவ்வாறு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுமில்லை, பிறைகளைப் புறக்கண்களால் பார்த்து அவதானித்து வருவதுமில்லை. எனினும் பிறைகளைப் புறக்கண்களால் பார்ப்பது ஃபர்ளான கடமையில்லை என்ற நிலையிலும், ஹிஜ்ரி கமிட்டியினாராகிய நாங்கள் அல்லாஹ்வின் கிருபையால் சற்றொப்ப 40 வருடங்களுக்கும் மேலாகப் பிறையின் அனைத்து படித்தரங்களையும் கவனமாகப் பார்த்தும், அவதானித்தும் வருகிறோம் - அல்ஹம்து லில்லாஹ்.


அவ்வாறு பிறைகளைப் புறக்கண்களால் அவதானித்து அப்பிறையின் படித்தரங்கள் காட்டும் தேதிகளை, துல்லியமாகக் கணக்கீடு செய்யப்பட்டு மக்கள் பின்பற்றிவரும் ஹிஜ்ரி கமிட்டியின் சந்திர நாட்காட்டியின் தேதிகளோடு ஒப்பிடுகையில், எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள் பிறையின் படித்தரங்களோடு மிகவும் நேர்த்தியாகவும் சரியாகவும் ஒத்துப் போவதைப் பல வருடங்களாக அவதானித்து உறுதியும் செய்துள்ளோம்.


'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற நபிமொழியைத் தவறாக விளங்கி ஒரு வருடத்திற்கு ஷஃபான், மற்றும் ரமழான் மாதங்களில் மட்டும், அதுவும் 29-வது நாள் என்று அவர்கள் தாங்களாக தீர்மானித்துக் கொண்ட ஒரு நாளில் மட்டும் தெரியாத பிறையைத் தேடிக் கொண்டு மேற்கு நோக்கி பார்க்கும் மாற்றுக் கருத்தினர் தாங்கள்தாம் 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற நபிமொழியை அமல் செய்கிறோம் என்று சொல்வார்களேயானால், சுமார் 40 வருடங்களுக்கும் மேலாகப் பிறையின் அனைத்துப் படித்தரங்களையும் (மனாஜில்) கவனமாகப் பார்த்தும், அவதானித்தும் வரும் ஹிஜ்ரி கமிட்டியினர்களே பரிசுத்தமான ஒரிஜினல் 'ஸூமூ லி ருஃயத்திஹி'யினர் என்பதை இங்கு ஆணித்தரமாகப் பதிவு செய்கிறோம். ஒரு வருடத்தில் இரண்டு தினங்கள் மட்டும் பிறை பார்க்க முயலும் இவர்கள் ஸூமூ லி ருஃயத்திஹி யினர் என்று சொல்வதற்கு எந்தத் தகுதியும் படைத்தவர்கள் அல்லர் என்பதையும் மக்களே நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.


இன்னும் நபி (ஸல்) காலண்டரையா பின்பற்றினார்கள் இல்லையே! என்று வாதம் புரிவோர், முதலில் ஒவ்வொரு பள்ளிவாயில் நிர்வாகத்திடமும் சென்று தொழுகை நேரங்களை அறிந்து கொள்ள நபி (ஸல்) தொழுகை அட்டவணையையா பின்பற்றினார்கள்? இல்லையே! எனவே அதை கழற்றி விடுங்கள் என்று வாதம் புரிந்துவிட்டு நம்மிடம் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பட்டும். எனவே பள்ளிவாயில்கள் தோரும் வைக்கப்பட்டு பின்பற்றப்படுகின்ற தொழுகை கணக்கீட்டு அட்டவணையை சரிகண்டு அதில் எந்தக் கேள்விகளும் கேட்காமல், அதை சந்தேகமின்றி நடைமுறைப் படுத்துவோர் நபி (ஸல்) அவர்கள் தேதிகளை முடிவு செய்ய காலண்டரையா பின்பற்றினார்கள்? என்று வினவுவது அறியாமை அல்லாமல் வேறென்ன?


இன்னும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இன்று இருப்பது போல விஞ்ஞான சாதனங்களும், அறிவியல் தொழில் நுட்பங்களும் நிறைந்திருந்து அவற்றையெல்லாம் ஹராம் என்று அவர்கள் புறக்கணித்து விட்டு பிறந்த பிறையைப் புறக்கண்களால் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நமக்குக் கட்டளையிட்டிருந்தால் ஒருவகைக்கு மேற்கண்ட இவர்கள் வாதத்தில் ஓர் அர்த்தம் இருக்கும்.


இந்த 21-ஆம் நூற்றாண்டின் அறிவியல் யுகத்தில் இருந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள் என்று நம்மை நோக்கி இவர்கள் வினா எழுப்புவது வேடிக்கையிலும் வேடிக்கையே, அறியாமையின் வெளிப்பாடே. காரணம் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களே அன்றிருந்த முஸ்லிம் உம்மத்தின் அன்றைய அறிவியல் நிலையைத் தெளிவுபடுத்தியும் விட்டார்கள். அதாவது...


حدثنا آدم ، حدثنا شعبة ، حدثنا الأسود بن قيس ، حدثنا سعيد بن عمرو ، أنه سمع ابن عمر رضي الله عنهما ، عن النبي صلى الله عليه وسلم ، أنه قال : " إنا أمة أمية ، لا نكتب ولا نحسب ، الشهر هكذا وهكذا " يعني مرة تسعة وعشرين ، ومرة ثلاثين *. (صحيح البخاري - كتاب الصوم باب قول النبي صلى الله عليه وسلم : " لا نكتب - حديث : ‏1827‏).


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக நாம் 'உம்மீ' கூட்டத்தார் (சமுதாயம்). நாம் எழுதுவது இல்லை மேலும் நாம் எண்ணுவதும் இல்லை. மாதம் என்பது இவ்வாறு இவ்வாறு இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சிலை வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும். அறிவித்தவர் : இப்னு உமர்(ரழி), நூல்:புகாரி(1913).


இப்படி நாம் கூறியவுடன் இன்னா உம்மத்துன் உம்மியத்துன். லா நக்துபு வலா நஹ்ஸிபு என்ற மேற்கண்ட ஹதீஸில் நஹ்ஸிபு என்ற பதம் ஹிஸாப் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும் ஹிஸாப் என்றால் கணக்குதான் அது விண்கலையல்ல என்று விவாதிக்கின்றனர். காரணம் இது நபி (ஸல்) எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபி என்ற செய்தியை வைத்தும், இந்த ஹதீஸில் பிற்பகுதியில் வரும் மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களாக இருக்கும் என்ற வாசகத்தை வைத்தும் ஹிஸாப் என்றால் பொதுவாக கணக்கு என்ற பொருள்தான் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். இதுவும் தவறான வாதமாகும்.


மேற்கண்ட ஹதீஸைப் பொருத்தவரையில் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு எழுதத் தெரியாது என்றோ, அவர்களுக்கு கணக்குத் தெரியாது என்றோ தனிப்பட்ட எந்த நபரையும் குறித்து ஒருமையில் சொல்லவில்லை. மாறாக 'இன்னா உம்மத்துன் உம்மியத்துன்' அதாவது 'உம்மத்' என்று அன்றிருந்த ஸஹாபாக்கள் அனைவரையும் சேர்த்து சொல்கிறார்கள். இது அன்றிருந்த உம்மத்தின் விண்ணியல் கல்வி சார்ந்த நிலையை இது தெளிவுபடுத்துகிறது தனிப்பட்ட எந்த நபரையும் குறித்த சொல்லாடல் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


வானியற் பௌதீகம் (Astrophysics) என்னும் விஞ்ஞானத்தின் அடிப்படையில் நாட்காட்டியை எழுதி பாதுகாப்பதையோ, அதற்காக கணக்கிடும் வான இயற்பியல் கலையையோ அந்த சமுதாயம் அறிந்திருக்கவில்லை என்று நாம் இந்த ஹதீஸூக்கு பொருள் கொள்கிறோம். இதுதான் சரியான, நியாயமான, அறிவுப்பூர்வமான பொருள் ஆகும். காரணம் நக்துபு என்ற சொல்லிற்குச் சாதாரண எழுத்து என்றும், நஹ்ஸிபு என்பதற்கு வெறும் கணக்கு என்றும் பொருள் கொண்டால் விபரீதமான முடிவிற்கு நாம் வரவேண்டியிருக்கும்.


உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் எழுத்தறிவில் சிறந்த நபித்தோழர்களை வஹியை எழுதும் பணிக்கு நியமித்தார்கள். அந்நபித்தோழர்கள் இறை வஹியை எழுதுவதில் ஒன்றில் கூட சிறு பிழையில்லாமல் தங்கள் எழுத்துப் பணியைச் சிறப்புடன் செய்தார்கள். இது போன்றே நபி (ஸல்) அவர்கள் அன்றைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிமல்லாத மன்னர்களுக்கு இஸ்லாமிய மார்க்த்தின் பக்கம் அழைப்பு விடுத்து கடிதங்கள் எழுதி அனுப்பினார்கள். ஹூதைபிய்யா போன்ற உடன்படிக்கைகள் எழுத்துப் பூர்வமாகவே நிறைவேற்றப்பட்டன. இன்னும் நபி (ஸல்) – அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் திருமணம் சம்பந்தமாகக் கூட எழுதிப் பதிவுச் செய்யப்பட்டதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. எழுத்தறிவுள்ள ஸஹாபாக்கள் அன்றைய உம்மத்தில் நிறைந்திருந்தனர். சல்மான் அல்ஃபாரிசி (ரழி) போன்ற வேற்று பாஷை தெரிந்தவர்கள் இருந்தனர். தவ்றாத்தை அதன் மூல மொழியிலேயே படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு வேற்று பாஷையின் எழுத்தறிவு படைத்த ஸஹாபாக்கள்கூட நபி (ஸல்) அவர்கள் அவையில் இருந்துள்ளனர். இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம்.


இப்படி எழுத்தறிவும், கணக்கறிவும் படைத்த உம்மத்தைப் பார்த்து, நபி (ஸல்) அவர்கள் அப்போதைய உம்மதினருக்கு மொழியை எழுதத் தெரியாது, கணக்கு பார்க்கவும் தெரியாது என்று சாதாரணமாகச் சொல்வார்களா?. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த அந்த முஸ்லிம் உம்மத் மொழியை எழுதும் எழுத்தறிவும், அடிப்படையான கணக்கறிவும் பெற்றிருந்த சமுதாயமாகத் திகழ்ந்திருந்தும் நபி (ஸல்) அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள்? அப்படிச் சொல்லியிருப்பதால் அந்த எழுத்து எந்த எழுத்து? அந்தக் கணக்கு எந்தக் கணக்கு? அதன் உட்கருத்து என்ன? என்பதை மாற்றுக் கருத்துடையோர் கொஞ்சம் கூட ஆய்வு செய்யாமல் இருப்பது ஏன்?


மேற்காணும் 'லாநக்துபு' என்ற சொல்லுக்கு வெறும் எழுத்து என்று பொருள் கொண்டால், ஸஹாபாக்களுக்கு எழுதத் தெரிந்திருக்கவில்லை என்று பொருள் வரும். வஹியை எழுதியது உட்பட அவர்களின் எழுத்தறிவு சம்பந்தப்பட்ட மேற்கண்ட அனைத்தையும் மறுக்கும் நிலை ஏற்படும் (நவ்வூதுபில்லாஹ்). எனவேதான் சொல்கிறோம் விஞ்ஞானத்தின் அடிப்படையில் நாட்காட்டியை எழுதிப் பாதுகாக்கும் அந்த எழுத்து முறையைத்தான் நக்துபு என்ற இச்சொல் கூறுகிறது. எனவே நாட்காட்டியைத் தயாரித்து எழுதிப் பாதுகாக்கும் முறையை அப்போதைய அந்த உம்மத்தினர் தெரிந்திருக்க வில்லை என்பதைத்தான் நபி (ஸல்) அவர்கள் 'லாநக்துபு' என்று கூறியுள்ளதை நாம் தெளிவாக அறிய முடிகிறது.


இன்னும் நபி (ஸல்) அவர்கள் செல்வந்தர்களிடமிருந்து 2.5 சதவிகிதம் ஜக்காத்தை முறையாகக் கணக்கிட்டு வசூலித்தார்கள். ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப் பின்னர் 33 தடவைகள் என்று கணக்கின் அடிப்படையிலான தஸ்பீஹை இந்த உம்மத்திற்கு சொல்லிக் கொடுத்தார்கள். வியாபாரிகள் எடையை சரியான அளவில் கொடுக்கக் கட்டளையிட்டார்;கள். நபி (ஸல்) அவர்களே ஒரு தலைசிறந்த வியாபாரியாகத் திகழ்ந்தார்கள். அவ்வளவு ஏன்? பத்ரு யுத்தத்தின் போது குறைஷிகள் தங்கள் உணவிற்காக அறுத்த ஒட்டகங்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டு அதை வைத்தே படை திரட்டி வந்த குறைஷிகள் எத்தனை பேர் என்று கணக்குப் பார்த்தது என்று பல்வேறு நிகழ்வுகளை வைத்துச் சீர்தூக்கிப் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்கள் கணக்கில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றே தோன்றுகிறது. மேலும், இன்றைய முஸ்லிம் அறிஞர்கள் கூட கணக்கிட முடியாமல் தவிக்கும் வாரிசுரிமைச் சட்டக் கணக்கை நபி(ஸல்) அவர்கள் அறிந்திருந்ததே அவர்கள் கணக்கில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதற்கு மாபெரும் ஆதாரமாக உள்ளது.


ஆகையால் 'நஹ்ஸிபு' என்ற சொல்லிற்கு வெறும் கணக்கு என்று பொருள் கொண்டால், நபி (ஸல்) அவர்களுக்கும், ஸஹாபாக்களுக்கும் கணக்குப் பார்க்கத் தெரிந்திருக்கவில்லை என்று பொருள் வரும். ஜக்காத்தை வசூலித்தது உட்பட அவர்கள் கணக்கின் அடிப்படையில் செயல்பட்ட மேற்கண்ட அனைத்தையும் மறுக்கும் நிலை ஏற்படும் (நவூதுபில்லாஹ்). எனவேதான் விஞ்ஞானத்தின் அடிப்படையில் நாட்காட்டியை அமைத்திட உதவும் வானியல் பௌதீகம் (Astrophysics)என்னும் விண் கலையைத்தான் அந்த சமுதாயம் அறிந்திருக்கவில்லை என்பதையே 'லா நஹ்ஸிபு' என்ற சொல் கூறுகிறது என்கிறோம்.


லாநக்துபு, லாநஹ்ஸிபு என்று மட்டும் தனியாக கூறியிருந்தால், அவர்களுக்கு எழுதவும் தெரியாது, கணக்கிடவும் தெரியாது என நாம் பொதுவாக பொருள் கொள்ளலாம். ஆனால் நபி(ஸல்) அவர்களோ மாதத்தின் மொத்த நாட்கள் எத்தனை வரும் என்ற கணக்கை கூறும்போது இவ்வாறு 'லா நக்துபு', 'லா நஹ்ஸிபு' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளார்கள். எனவே மாதத்தை கணக்கிடுவது சம்மந்தமான வானியல் பௌதீகக் கணக்கில் அவர்கள் உம்மி சமுதாயமாக இருந்தார்கள் என்பதையே அவர்கள் விளக்கினார்கள் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.


மாற்றுக் கருத்துடையோர் வாதிப்பதைப் போல நபி (ஸல்) அவர்களுக்கும், அந்த உம்மத்திற்கும் தெரியவில்லை என்று சொன்னது சாதாரண கணிதம்தான் என ஒரு பேச்சிற்காக வைத்துக் கொண்டாலும், பிறை மறைக்கப்படும் போது நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு இந்த உம்மத்திற்குப் பிறைகளைக் கணக்கிடும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள் அல்லவா? அதனால் நாம்தான் கணக்கிட வேண்டும் என்பதை நாட்காட்டியை மறுப்பவர்கள் இப்போதாவது ஏற்றுக் கொள்வார்களா?.


இன்னும் நாம் உம்மி சமுதாயமாவோம் என்ற மேற்கூறிய ஹதீஸூக்கு, நவீன அரபுவிற்பனர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் சிலர், மேற்படி ஹதீஸின் உண்மையான பொருளை மக்கள் அறிந்தால் அவர்கள் ஹிஜ்ரி நாட்காட்டியை விளங்கி பின்பற்றுவதை யாரும் தடுக்க முடியாமல் ஆகிவிடும் என்பதை தற்போது உணர்ந்து விட்டனர்.


அதனால் இனிவரும் காலங்களில் மேற்படி ஹதீஸூக்கு நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதும் கூடாது, எண்ணுவதும் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் பிறைகளைக் கணக்கிடுவதைத் தடை செய்து விட்டார்கள் என்று திரித்துக்கூறி மக்கள் மத்தியில் ஒரு மோசடியான, அபாயகரமான, அறிவீனமான ஒரு புதிய பிரச்சாரத்தையும் துவங்கிட அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி பிறைகள் குறித்து மார்க்கம் சொல்லாத வற்றை மார்க்கமாக மக்களிடம் போதிக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள எச்சரிக்கிறோம். தோற்றத்திலும், ஆடையிலும் அரபுநாட்டு முஸ்லிம்களைப் போல காட்டிக் கொண்டு பிறைகள் குறித்து தெளிவான ஞானமில்லாமல் தொடர்ந்து உளறிவருபவர்களை மக்கள் தெளிவாக அடையாளம் காண்கின்றனர் அல்ஹம்துலில்லாஹ்.


இவர்கள் கூறுவது போல் கணக்கிடுவதும் கூடாது எழுதுவதும் கூடாது என மொழிபெயர்த்தால், முஸ்லிம் சமுதாயத்திற்கு எழுதும் முறைகளும், கணக்கும் ஹராம் என்ற நிலை ஏற்படும் என்பதை இவர்கள் கொஞ்சம் கூட சிந்திக்க வில்லையா? அல்லது துல்லியமாகக் கணக்கிடுவது ஹராம், ஆனால் வியாபார நோக்கில் தோராயமான நாட்காட்டியை வெளிடக் கணக்கிடுவது மட்டும் ஹலால் என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா? – யாமறியோம்.


அல்லாஹ் நமக்கு பிறைகளின் படித்தரங்களைத் தேதிகளுக்காக நிர்ணயித்து விட்டான். அவற்றை கணக்கிட்டுக் கொள்ளுமாறு மார்க்கம் தெளிவாக வலியுறுத்துகிறது. பிறைகளின் படித்தரங்கள் அல்லாத, நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைந்த (நுஜூமிய்யா) கணக்கை நாம் வன்மையாக மறுக்கிறோம், எதிர்க்கிறோம். காரணம் நட்சத்திரத்தை மையமாக வைத்து அளவிடப்படும் (Sidereal Month) சிடேரியல் மாதமானது 27 நாட்களை மட்டுமே கொண்டது. இது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களாக இருக்கும் என்பதற்கு முரணானதாகும். அதனாலேயே சிடேரியல் (Sidereal Month) மாதக் கணக்கீட்டை நாமும் மறுக்கிறோம்.


மேலும் இன்று மக்கள் பரவலாகப் பயன்படுதிவரும் 'ஆங்கில நாட்காட்டி' என்ற 'கிரிகோரியன் நாட்காட்டியும்' முழுமையான நுஜூமிய்யா என்னும் நட்சத்திரக் கணக்கில் ஆனாது என்பதையும் நம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளனர். இதைப் போல வானசாஸ்திரம் (Astrology), ஜோதிட பால்கிதாபு பஞ்சாங்கங்கள் முதலிய அடிப்படையற்ற மூடக் கருத்துக்களையும் முன்வரிசையில் நின்று நாம் எதிர்த்து வருகிறோம். அத்தகைய பஞ்சாங்க கணக்கை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறோம். காரணம் இவை நபி (ஸல்) அவர்கள் கணக்கிடச் சொல்லி காட்டித் தந்த வழி முறைக்கு நேர் எதிரானதாகும். ஆனால் துல்லியமாகக் கணக்கிடுவதை திட்ட வட்டமாக எதிர்த்து வரும் நபர்களும், இயக்கங்களும் தங்களின் தோராயமான நாட்காட்டியை பஞ்சாங்கங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அமைத்து வருகின்றார்கள் என்ற இரகசியத்தை பகிரங்கமாகத் தெரிவிக்கிறோம்.


இந்நிலையில் சந்திரனை மையமாக வைத்து அளவிடப்படும் (Synodic Month) சினோடிக் மாதமானது 29.53 நாட்களைக் கொண்டது. அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்களே என்பதை வரையறுத்து விளக்கிவிட்டார்கள். இதை வானவியல் (Astronomy) கூறும் சந்திரனை மையமாக வைத்து அளவிடப்படும் (Synodic Month) சினோடிக் மாதக் கணக்கீடு மிகத்துல்லியமாக நிரூபித்தும் விட்டது. இந்த கணக்கீட்டைத்தான் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் ஏற்று நடைமுறைப் படுத்துகின்றோம்.


நிரூபிக்கப்பட்ட வானவியல் (Astronomy) என்னும் அறிவியலின் பேருண்மையும், வானசாஸ்திரம் (Astrology)என்ற மூட நம்பிக்கையும் வௌ;வேறானவை என்பதை உணராதவர்கள் இரண்டையும் குழப்பி ஹிஜ்ரி கமிட்டியினர் நுஜூம் கணக்கைச் சொல்கின்றனர் என்று அறியாமல் கூறுகின்றனர். அவர்களுக்கு அல்லாஹ்தான் தெளிவைக் கொடுக்க வேண்டும்.


ஒரு மாதத்திற்குள் இருக்கும் நாட்களின் எண்ணிக்கை விஷயத்தில் கூட்டிக் குறைத்து நம் சுய விருப்பப்படி செயல்பட முடியாது. இதை உறுதி செய்யும் முகமாக வல்ல அல்லாஹ், தன்னுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் மூலம் மாதம் என்பது 29 நாட்களைக் கொண்டதாகவும், 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்று அறிவித்து விட்டான். அத்தோடு கிருஸ்துவ நாட்காட்டியில் தற்போது மாதத்தின் எண்ணிக்கையை 28 ஆகவும் 31 ஆகவும் வைத்துள்ளது போல் உங்கள் இஷ்டப்படி மாற்றினால் அது இறை நிராகரிப்பு (9:37) என்றும் எச்சரித்து விட்டான். சந்திரனின் படித்தரங்களை அல்லாஹ் உங்களுக்குத் தேதிகளாக ஆக்கியுள்ளான் என்பதையும் அல்குர்ஆன் (2:189) வசனம் மூலம் நபி(ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி விட்டார்கள்.


எனவே ஒரு மாதத்தின் நாட்களின் எண்ணிக்கையை 29 அல்லது 30 என்னு சந்திரனின் படித்தரங்களைக் கொண்டே அமைகிறது. இதில் 29 நாட்கள் கொண்ட மாதத்தை 30 நாட்கள் என்றும், 30 நாட்கள் கொண்ட மாதத்தை 29 நாட்கள் என்றும் மாற்றுவது இறை நிராகரிப்பைச் சாரும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். தேதிகளுக்குப் பிறை படித்தரங்களே அடிப்படை என்ற அல்குர்ஆனின் வழிகாட்டுதல் படியே நபி (ஸல்) அவர்களும் மிகச் சரியாகக் கணக்கிட்டார்கள். வல்ல அல்லாஹ் தனது தூதர் நபி (ஸல்) அவர்களின் செயல்பாடுகளைக் கவனித்தவனாகவே இருந்தான்.


அல்லாஹ்வும், அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் இட்ட பல கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும் மாற்றமாக, யூதர்களும், கிருஸ்துவர்களும் 'கிரிகோரியன்' நாட்காட்டி என்ற ஒன்றைத் தயாரித்து அதில் பல குளறுபடிகளைச் செய்து, மாதங்களிலும் நாட்களிலும் பல இடைச் செறுகல்களை ஏற்படுத்தி, அந்த 'கிரிகோரியன்' நாட்காட்டிதான் மிகச் சரியான நாட்காட்டி என்பதாகப் பிரச்சாரமும் செய்து, அவர்களுடைய நாட்காட்டிக்கு முஸ்லிம்களையும், முழு உலக மக்களையும் நம்ப வைத்து அடிமைகளாக ஆக்கிவிட்டனர். அல்லாஹ்வுடைய நாட்காட்டியை முழுமையாகப் புறக்கணிக்க வைத்து விட்டனர். அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.


இஸ்லாம் காட்டித்தந்த நாட்காட்டி முறைகளை ஆய்வு செய்து அதற்கு எதிராக அவர்கள் 'கிரிகோரியன்' காலண்டர் என்ற கற்பனை நாட்காட்டியைத் தயாரித்து உலகை ஏமாற்றியதோடு அல்லாமல், அவர்களுடைய கிப்லாவை உலகில் உள்ள அனைவரும் பின்பற்றும்படிச் செய்துவிட்டதின் சூழ்ச்சிகளை நம்மில் எத்தனை பேர் ஆராய்ந்து அறிந்துள்ளனர்;;?


அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு மாற்றமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 'கிரிகோரியன்' நாட்காட்டிக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்ய வேண்டிய இஸ்லாமிய அறிஞர்கள் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, அல்லாஹ்வின் அத்தாட்சியான ஹிஜ்ரி நாட்காட்டியை ஒன்று சேர்ந்து எதிர்க்கும் முகமாக 'நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள்?' என்று கேள்வி எழுப்பியும், 'எழுதுவதும் கூடாது, எண்ணுவதும் கூடாது' என்று பிரச்சாரமும் செய்கிறார்கள் என்றால் இந்த அறியாமையை எங்கே போய்ச் சொல்வது?


ஹிஜ்ரி நாட்காட்டியை மக்கள் பின்பற்றிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக கிரிகோரியன் நாட்காட்டியைப் பின்பற்றினால் தவறில்லை என்று முஸ்லிம் அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். அல்லாஹ் கூறும் பிறைப் படித்தரத்தின் கணக்கீட்டை நடைமுறைக்கு வராமல் அம்முஸ்லிம் அறிஞர்கள் தடுக்கவும் துணிந்துள்ளனர்.


இன்னும் பிறந்த பிறையை மஃரிபு வேளையில் மேற்கு திசையில் அது மறையும் நேரத்தில் புறக்கண்களால் பார்த்த பின்னரே அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்ளவேண்டும் என்று நம்பியுள்ள அறிஞர் பெருமக்களை வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் நாட்காட்டியை இந்த முஸ்லிம் உம்மத்தில் எப்படி நிலைநிறுத்தப் போகிறோம்? சற்று சிந்தியுங்கள் மக்களே!.

21.பிரபல தவ்ஹீது(!) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம்

வாதம் புரிவதையே வாழ்க்கையாக்கி விட்ட பிரபல தவ்ஹீது அறிஞர்(!) அவர்கள் கீழக்காணும் கேள்விகளை அவரது 'பிறை ஓர் ஆய்வு' என்ற புத்தகத்தின் வாயிலாகவும், பல பொதுமேடைகளிலும் எழுப்பியுள்ளார். அவர் ஆய்வு செய்து சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரது இயக்கத்திலுள்ள பலர் அவரின் கூற்றை சரிகண்டு பின்பற்றுகின்றனர். அத்தகையோர் ஹிஜ்ரிகமிட்டியின் மீதான வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு இறுதிவரை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கிரகணத் தொழுகை சம்பந்தமாக எடுத்து வைக்கப்பட்ட வாதத்திற்குரிய உண்மையான விளக்கத்தை உணர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். மக்களுக்கு சத்தியத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமையை உணர்ந்தே இவ்விளக்கங்களை நாம் வெளியிடுகிறோம்.


அவருடைய கேள்விகள் : இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இப்போது நமது கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா? சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத் தனம் என்றுதான் அதைக் கூற வேண்டும். கிரகணம் ஏற்படுவதாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா? இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது. லண்டனில் சூரிய கிரகணம் தோன்ற ஆரம்பித்து முழுமையாக விலகும் வரை அங்குள்ள மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். தங்களுடைய நாட்டில் எப்போது கிரகணம் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் துருக்கி, ஈரான் மக்கள் தொழுது கொள்வார்கள். கிரகணமே ஏற்படாத பகுதியில் உள்ள மக்கள் எப்போது தொழ வேண்டும்? லண்டனுடைய கிரகண நேரத்திலா? துருக்கியுடைய கிரகண நேரத்திலா? அல்லது லண்டனிலிருந்து சென்னை வரை கிரகணம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரமும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று கூறப் போகிறார்களா?


நமது விளக்கம்


கிரகணத் தொழுகை தொழுவதையும், நோன்பு என்ற இபாதத்தையும் பிரித்தறியாமல் அவை இரண்டும் ஒரே தரத்தில் அமைந்தவை என்று நினைத்துக் கொண்டதால் ஏற்பட்ட ஐயமே இது. ரமழான் முதல் நோன்பை முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வௌ;வேறான நாட்களில் துவங்கினாலும் அது தவறல்ல என்பது மேற்படி அறிஞரின் பிறை நிலைப்பாடுகளில் ஒன்றாகும். அதாவது உலகில் பல்வேறு பகுதிகளுக்கும் ரமழான் முதல்நாள் என்பது வெள்ளி, சனி, ஞாயிறு என்று வௌ;வேறு கிழமைகளால் வித்தியாசப் படலாம், அதில் ஒன்றும் தவறில்லை என்றும் கூறிவருகிறார். ரமழான் உட்பட அனைத்து மாதங்களின் முதல் நாளை சரியாகத் துவங்க சந்திரனின் அனைத்துப் படித்தரங்களையும் கவனிக்க வேண்டும். இதுதான் மார்க்கத்தின் கட்டளை.


சந்திர மாதத்தின் இறுதிநாள் என்ற தனித்த ஒரேயொரு நாளில் ஏற்படும் சூரியக் கிரகணம் என்ற அந்த நிகழ்வு அந்த மாதத்தின் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று மூன்று வௌ;வேறு நாட்களில் ஏற்படுவதில்லை. இதுபோல பவுர்ணமிநாள் என்ற ஒற்றை நாளில் ஏற்படும் சந்திரக் கிரகணமும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று மூன்று வௌ;வேறு நாட்களில் ஏற்படுவதில்லை. இன்னும் இந்த சூரிய, சந்திரக் கிரகணங்கள் ஒவ்வொரு மாதமும் ஏற்படுவதில்லை. பல மாதங்கள் கிரகணங்கள் நிகழாமலும் போகும். இவையே அறிவியல் கூறும் அடிப்படை உண்மைகள்.


ரமழான் முதல் நோன்பை முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வௌ;வேறான நாட்களில் துவங்கினாலும் அது தவறல்ல என்பது மேற்படி அறிஞரின் நம்பிக்கை. இத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ள மேற்படி அறிஞருக்குக் கிரகணத் தொழுகையை மையப்படுத்தி வாதம் எழுப்புவதற்கு உரிமையில்லை.


காரணம் சந்திரனும், சூரியனும் கிழக்கில் உதித்து மேற்கே மறைகிறது என்பது இன்றைக்கு பாலர் பாடமாகி விட்டது. இந்நிலையில், மேற்படி அறிஞர் அவர்கள் சந்திரன் மேற்கே உதித்து கிழக்குத் திசையில் மறைகிறது என்று அழுத்தமாகக் கூறுகிறார். சந்திரன் உதிக்கும் திசையைக்கூட அறிந்திடாத மேற்படி அறிஞருக்கு சந்திரக் கிரகணத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? மேலும் பிறை என்றாலே கிறுக்குப் பிடிப்பது போன்று அவருக்கு உள்ளதாம். பிறைகளைப் பற்றிய அடிப்படை ஞானமில்லாத இவர் இப்பிறை விஷயத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்யவதற்கு என்ன உரிமை இருக்கிறது? நீங்கள் சற்று புரிந்து கொள்ள வேண்டும்.


மேலும், சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று அறிஞர் அழுத்தமாகக் கூறுகிறார். இது மிகமிகத் தவறான வாதமேயாகும். காரணம் கிரகணம் என்பது ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டு வருவதில்லை. தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டினர் ரமழான் நோன்பைத் துவங்குவது போல மூன்று கிழமைகளில் கிரகணங்கள் ஏற்படுவதுமில்லை. இதை பிற்பகுதியில் இன்னும் தெளிவாக விளக்குவோம்.


எனினும் கிரகணத் தொழுகையைப் பொருத்தவரை குறிப்பிட்ட ஒரு கிழமைக்குள்ளாகவோ, அல்லது குறிப்பிட்ட ஒரு எல்கையை மையமாக வைத்தோ கிரகணத் தொழுகையை தொழும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட வில்லை. மாறாக கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்பதே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும்.


வெள்ளிக்கிழமை என்ற ஒரு கிழமையில் மட்டுமே ஜூம்ஆ தொழுகையை தொழ வேண்டும். வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகை என்பது அந்தக் கிழமைக்குள், அந்த ஜூம்ஆவுடைய வக்துக்குள் தொழுது முடிக்க வேண்டிய இரண்டு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகையாகும்.


அந்தந்த நாட்களுக்குரிய பர்ளான தொழுகைகள் தொழப்படுவதைப் போல (கிரகணம் நமக்குக் காட்சியளிக்கா விட்டாலும்) அந்தக் கிரகணம் தோன்றும் கிழமையன்றுதான் நாம் தொழ வேண்டும் என்று கிழமையைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடவுமில்லை. இவற்றை அறியாமல் அறிஞர் வாதம் வைத்திருப்பதின் பிழைகளை பின்னர் ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டுவோம் - இன்ஷா அல்லாஹ்.


இந்நிலையில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளது அறிவியல் ஆய்விலும், மார்க்கத்தின் முக்கிய அடிப்படைகளுள் ஒன்றான தொழுகை விஷயத்தை விளங்குவதிலும் அவர் மிகுந்த பின்னடைவில் இருப்பதைக் காட்டுகிறது. எனவேதான் கிரகணத்தைப் புரியாத இவர், பிறை எந்தத் திசையில் உதிக்கிறது என்பதை அறியாத இவர்;, கிரகணத் தொழுகையின் அடிப்படையை விளங்காத இவர்; மேற்கண்டவாறு கேள்வி எழுப்புவதற்கு தகுதியற்றவர் என்று நாம் சொல்கிறோம். பிறை சம்பந்தமான ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளன என்றும் அவர் கூறுகிறார். அதே நேரத்தில் அந்த பிறை தொடர்பான கிரகணத் தொழுகை பற்றி அழுத்தமாகப் பேசுகிறார். எனவே கிரகணம் சம்பந்தமாக வரும் ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் தற்போது ஒருங்கிணைக்கும் அளவுக்கு ஆகிவிட்டதா என்பதையும் அவர் சொல்ல வேண்டும்.


எனினும் அவரது கேள்விகளுக்குரிய விளக்கங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக கீழ்க்காணும் தலைப்புகளில் முறைப்படுத்தி விளக்குகிறோம்.


1. கிரகணம் சம்பந்தமாக வரும் நபிமொழிகள்.

2. கிரகணத் தொழுகை கடமையான தொழுகையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

3. அவரவர் 'வக்தில்' தொழுவதைப் போல மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்யலாமா?

4. அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்கலாமா?

5. கிரகணத் தொழுகையையும், நோன்பு நோற்பதையும் ஒப்பிடுவது தவறானதே!


1. கிரகணம் சம்பந்தமாக வரும் நபிமொழிகள்.


சூரியனுக்கும், பூமிக்குமிடையே சந்திரன் குறுக்கிட்டு ஒரே நேர்க்கோட்டில் அம்மூன்றும் அமைந்தால் அது சூரியக் கிரகணமாகும். இஸ்லாமிய சந்திர மாதத்தின் இறுதி நாளான புவிமைய சங்கம தினத்தில்தான் (Geocentric Conjunction Day) சூரியக் கிரகணம் நடைபெறும்.


இதுபோல, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி தன் சுழற்சிப் பாதையில் வரும். இப்படி சூரியன், பூமி, சந்திரன் ஆகிய இம்மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்து, சூரியனின் வெளிச்சத்தால் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுந்து சந்திரனை மறைப்பதை சந்திரக் கிரகணம் என்கிறோம். இஸ்லாமிய சந்திர மாதத்தின் பவுர்ணமி நாளன்றே சந்திரக் கிரகணம் நடைபெறும்.


சூரியன் சந்திரன் அல்லாத மற்ற கோள்கள் நாம் வசிக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் நேர்க்கோட்டில் அமைந்து அவை சூரியனின் ஒளியை மறைத்தாலும் அவற்றை நாம் கிரகணம் என்று அழைப்பதில்லை. உதாரணமாக சூரியக் குடும்பத்தில் பூமிக்கு முன்னர் இருக்கும் இரு கோள்களான புதனும் (Mercury), வெள்ளி (Venus) என்ற சுக்கிரனும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நேர்க்கோட்டில் வந்து கடந்து செல்வதை 'புதன் கோளின் சூரியக் கடப்பு' (Mercury Transit) 'வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பு' (Venus Transit) என்றே அழைக்கிறோம்.


அதுபோல நமது சூரியக் குடும்பத்திலுள்ள சூரியன், சந்திரன் மற்றும் பூமி அல்லாத பிற கோள்கள் அவற்றின் சுழற்சிப் பாதையில் நேர்கேட்டிற்கு வந்து அவற்றிற்குக் கிரகணம் ஏற்பட்டால் அதற்காக நாம் தொழத் தேவையில்லை. சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இவ்விரண்டும் பூமியின் நேர்க்கோட்டில் அமைந்து அவ்விரண்டும் பங்குபெறுவதால் ஏற்படும் நிகழ்வையே நாம் பொதுவாக கிரகணம் என்கிறோம். இத்தகைய கிரகணத்தை நாம் கவனிக்கும் போதுதான் தொழவேண்டும் என்று மார்க்கமும் கூறியுள்ளது. எனவே கிரகணத் தொழுகை சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ்களை முதலில் அறிந்து கொள்வதற்காக அவற்றை கீழே தொகுத்துள்ளோம்.


حدثنا عمرو بن عون ، قال : حدثنا خالد ، عن يونس ، عن الحسن ، عن أبي بكرة ، قال : كنا عند رسول الله صلى الله عليه وسلم فانكسفت الشمس ، فقام النبي صلى الله عليه وسلم يجر رداءه حتى دخل المسجد ، فدخلنا ، فصلى بنا ركعتين حتى انجلت الشمس، فقال صلى الله عليه وسلم : " إن الشمس والقمر لا ينكسفان لموت أحد ، فإذا رأيتموهما ، فصلوا ، وادعوا حتى يكشف ما بكم " *.(


صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الصلاة في كسوف الشمس حديث : ‏1006).


'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம் அப்போது சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் நின்று மஸ்ஜிதில் நுழையும் வரை தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டவர்களாக சென்றார்கள். எனவே நாங்களும் நுழைந்தோம். சூரியன் தெளிவாகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்'. பிறகு 'நிச்சயமாக எவருடைய மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆகவே நீங்கள் அவற்றை கவனிக்கும்போது நீங்கள் தொழுங்கள். மேலும் உங்கள் மீது இருப்பவை வெளிப்படும் வரை நீங்கள் பிரார்த்தியுங்கள' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ பக்ராஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்: புகாரி-1006.


حدثنا شهاب بن عباد ، قال : حدثنا إبراهيم بن حميد ، عن إسماعيل ، عن قيس ، قال : سمعت أبا مسعود ، يقول : قال النبي صلى الله عليه وسلم : " إن الشمس والقمر لا ينكسفان لموت أحد من الناس ، ولكنهما آيتان من آيات الله ، فإذا رأيتموهما ، فقوموا ، فصلوا " *.( صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الصلاة في كسوف الشمس حديث : ‏1007‏).


'நிச்சயமாக மனிதர்களில் எவருடைய மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆனால் அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். ஆகவே நீங்கள் அவற்றை கவனிக்கும்போது நீங்கள் எழுங்கள் தொழுங்கள்'. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மஸ்வூத் கூறியதை நான் செவியுற்றேன் என கைஸ் அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரி-1007.


حدثنا أصبغ ، قال : أخبرني ابن وهب ، قال : أخبرني عمرو ، عن عبد الرحمن بن القاسم ، حدثه عن أبيه ، عن ابن عمر رضي الله عنهما، أنه كان يخبر عن النبي صلى الله عليه وسلم : " إن الشمس والقمر لا يخسفان لموت أحد ولا لحياته ، ولكنهما آيتان من آيات الله ، فإذا رأيتموها فصلوا " *.( صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الصلاة في كسوف الشمس حديث : ‏1008‏).


'நிச்சயமாக எவருடைய மரணத்திற்காகவும் மேலும் அவரின் வாழ்விற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆனால் அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். ஆகவே நீங்கள் அவற்றை கவனிக்கும்போது நீங்கள் தொழுங்கள்' என நபி ஸல் அவர்களிடமிருந்த இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவித்தவர்களாக இருந்தார்கள். நூல்: புகாரி-1008.


حدثنا عبد الله بن مسلمة ، عن مالك ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عائشة ، أنها قالت : خسفت الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم ، فصلى رسول الله صلى الله عليه وسلم بالناس ، فقام ، فأطال القيام ، ثم ركع ، فأطال الركوع ، ثم قام فأطال القيام وهو دون القيام الأول ، ثم ركع فأطال الركوع وهو دون الركوع الأول ، ثم سجد فأطال السجود ، ثم فعل في الركعة الثانية مثل ما فعل في الأولى ، ثم انصرف وقد انجلت الشمس ، فخطب الناس ، فحمد الله وأثنى عليه ، ثم قال : " إن الشمس والقمر آيتان من آيات الله ، لا يخسفان لموت أحد ولا لحياته ، فإذا رأيتم ذلك ، فادعوا الله ، وكبروا وصلوا وتصدقوا " *. (صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الصدقة في الكسوف حديث : ‏1010‏).


ஆயிஷா (ரழி) கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரியனுக்குக் கிரகணம் ஏற்பட்டது. மக்களுடன் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அப்போது நின்றார்கள் அத்தோடு நிற்பதை நீட்டினார்கள். பிறகு ருகூவுச் செய்தார்கள். அத்தோடு ருகூவை நீட்டினார்கள். பிறகு எழுந்தார்கள், அதிகமாக நின்றார்கள். மேலும் இது முதல் கியாமை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் ருகூவுச் செய்தார்கள். அத்தோடு ருகூவை நீட்டினார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் ஸஜ்தாச் செய்தார்கள். அத்தோடு ஸஜ்தாவை நீட்டினார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். பின்னர் திரும்பினார்கள். அப்போது சூரியன் விலகியிருந்தது. பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்விற்காகவோ சூரியனும் சந்திரனும் கிரகணம் ஆகுவதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே அதைக் கவனிக்கும்போது அல்லாஹ்வை அழையுங்கள். நீங்கள் தக்பீர் கூறுங்கள். மேலும் நீங்கள் தொழுங்கள். மேலும் நீங்கள் தர்மம் செய்யுங்கள்' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள். நூல் : புகாரி-1010


حدثنا عبد الله بن مسلمة ، عن مالك ، عن زيد بن أسلم ، عن عطاء بن يسار ، عن عبد الله بن عباس ، قال : انخسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم ، فصلى رسول الله صلى الله عليه وسلم ، فقام قياما طويلا نحوا من قراءة سورة البقرة ، ثم ركع ركوعا طويلا ، ثم رفع ، فقام قياما طويلا وهو دون القيام الأول ، ثم ركع ركوعا طويلا وهو دون الركوع الأول ، ثم سجد ، ثم قام قياما طويلا وهو دون القيام الأول ، ثم ركع ركوعا طويلا وهو دون الركوع الأول ، ثم رفع ، فقام قياما طويلا وهو دون القيام الأول ، ثم ركع ركوعا طويلا وهو دون الركوع الأول ، ثم سجد ، ثم انصرف وقد تجلت الشمس ، فقال صلى الله عليه وسلم : " إن الشمس والقمر آيتان من آيات الله ، لا يخسفان لموت أحد ولا لحياته ، فإذا رأيتم ذلك ، فاذكروا الله " *.( صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب صلاة الكسوف جماعة حديث : ‏1018‏).


'நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அப்போது பகரா அத்தியாயம் ஓதுமளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு எழுந்தார்கள். பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். மேலும் இது முதல் கியாமை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் நீண்ட நேரம் நின்றார்கள். மேலும் இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு எழுந்தார்கள். பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். மேலும் இது முதல் கியாமை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். சூரியன் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள். பின்னர் எந்த மனிதனின்மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ சூரியனும் சந்திரனும் கிரகணம் ஆகுவதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே அதைக் கவனிக்கும்போது அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.' என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி-1018.


حدثنا عبد الله بن محمد ، قال : حدثنا هاشم بن القاسم ، قال : حدثنا شيبان أبو معاوية ، عن زياد بن علاقة ، عن المغيرة بن شعبة ، قال : كسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم يوم مات إبراهيم ، فقال الناس : كسفت الشمس لموت إبراهيم ، فقال رسول الله صلى الله عليه وسلم : " إن الشمس والقمر لا ينكسفان لموت أحد ولا لحياته ، فإذا رأيتم فصلوا ، وادعوا الله " *.( صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الصلاة في كسوف الشمس حديث : ‏1009‏).


நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இப்ராஹீம் (ரழி) மரணித்த அன்று சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். எந்த மனிதனின் மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரியனும் சந்திரனும் கிரகணம் ஆகுவதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் அதைக் கவனிக்கும்போது நீங்கள் தொழுங்கள் மேலும் அல்லாஹ்வை அழையுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அல்முகீரா பின் ஷூஹ்பா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்: புகாரி-1009.


حدثنا محمد بن العلاء ، قال : حدثنا أبو أسامة ، عن بريد بن عبد الله ، عن أبي بردة ، عن أبي موسى ، قال : خسفت الشمس ، فقام النبي صلى الله عليه وسلم فزعا ، يخشى أن تكون الساعة ، فأتى المسجد ، فصلى بأطول قيام وركوع وسجود رأيته قط يفعله ، وقال : " هذه الآيات التي يرسل الله ، لا تكون لموت أحد ولا لحياته ، ولكن يخوف الله به عباده ، فإذا رأيتم شيئا من ذلك ، فافزعوا إلى ذكره ودعائه واستغفاره " *. (صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الذكر في الكسوف حديث : ‏1025‏).


சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே மஸ்ஜிதிற்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். பின்னர் 'இந்த அத்தாட்சிகள் எவற்றை அல்லாஹ் அனுப்புகிறானோ எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் அதன் மூலம் தன்னுடைய அடியார்களை பயத்தை ஏற்படுத்துகின்றான். ஆகவே இவற்றில் எதையேனும் நீங்கள் கவனிக்கும்போது அவனின் நினைவிற்கும், அவனிடம் பிரார்த்திக்கவும் மேலும் அவனிடம் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல் : புகாரி-1025.


2. கிரகணத் தொழுகை கடமையான தொழுகையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழி தமிழில் உண்டு. ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது ஆத்திரப்படாமல் நிதானமாக, உளத்தூய்மையோடு, நல்லெண்ணத்துடன் ஆய்வு செய்தால்தான் அறிவுப்பூர்வமான, உண்மையான கருத்துக்கள் ஆய்வின் வெளிப்பாடாக அமையும். ஆனால் மேற்கண்ட அறிஞர் அவர்களோ, நமக்குத் தேதிகளைத் தெரிவிக்கும் சந்திரனைப் பற்றி நாம் கூறினால், அவர் நேரத்தைக் தெரிவிக்கும் சூரியனைப் பற்றி நம்மிடம் கேள்வி கேட்டு விட்டு அறிவார்ந்த கேள்வியை கேட்டு விட்டதாக நினைத்துக் கொள்வார் என்பதை அவரது எழுத்தில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.


மக்களே! முதலில் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அமையப் பெற்ற தொழுகையைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பிறைகளின் காட்சியால் அமைவது தேதிகளாகும். 29 அல்லது 30 தேதிகளை உள்ளடக்கியதே ஒரு மாதமாகும். இவ்வாறு ஒவ்வொரு மாதத்தையும், அந்த மாதத்தின் துவக்கம் மற்றும் முடிவின் அடிப்படைகளையும் பிரித்தறிந்து, பிறையின் படித்தரங்களை (மனாஜிலை) கவனிப்பது என்பது தொழுகை வக்திலிருந்து எவ்வாறு தனித்து விளங்குகிறது என்பதையும் விளங்க வேண்டும்.


வக்து என்பது அந்தந்த பகுதியின் நேரத்தைப் பொறுத்ததுதான். நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது (4:103) என்ற குர்ஆனின் கூற்றை நிதானமாக சிந்தித்தறிய ஏன் இவர்கள் தவறுகிறார்கள்?. வெள்ளிக்கிழமை ஜூம்ஆநாளில் உலக முஸ்லிம்கள் அனைவரும் அவரவர் ஜூம்ஆ நேரத்தில் ஜூம்ஆ தொழுகையை அவரவர்கள் ஜமாஅத்தோடு தொழுவதைப் போல, ஒருநாளின் லுஹருடைய வேளை வந்துவிட்டால் அந்த நாளின் லுஹர் தொழுகையை அந்த லுஹர் வக்தில் தொழுதே


ஆக வேண்டும். அதுபோல நோன்பு வைத்திருப்பவர் அவரவர் மஃரிபில் சூரியன் மறையும் போதும் அவரவர் நோன்பை முடித்து விட்டு மஃரிபு தொழுகையைத் தொழ வேண்டும். இவ்வாறான தொழுகைகள் அந்தந்த கிழமைகளுக்குள் அந்தந்த வக்துக்குள் தொழ வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். கடமையான ஐந்து வேளைத் தொழுகைகள் அதற்குரிய நேரங்களின் அடிப்படையில் அமையப் பெற்ற அமல்களாகும். ஒரு கிழமைக்குரிய ஐந்து கடமையான தொழுகைகளையும், சுன்னத்தான உபரியான தொழுகைகளையும் 24 மணிநேரம் கொண்ட அந்தந்த கிழமைக்குள் தொழுது முடித்து விடுகிறோம். இதுவே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் ஆகும்.


அதாவது வியாழக்கிழமை தொழ வேண்டிய லுஹர் தொழுகையை, வெள்ளிக்கிழமை அன்று நாம் தொழ மாட்டோம். அதுபோல வெள்ளிக்கிழமை தொழ வேண்டிய ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக்கிழமை அல்லாத மற்ற நாட்களில் தொழக் கூடாது. ஆக வல்ல அல்லாஹ் முஸ்லிம்களாகிய நமக்கு விதியாக்கியுள்ள தொழுகை என்பது அவரவர்களின் 'வக்து' அடிப்படையில் அமைந்த, ஒரு கிழமைக்குள் தொழுது முடிக்க வேண்டிய, நேரம் குறிப்பிடப்பட்ட ஃபர்ளான கடமையாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரங்கள் கொண்ட அந்த நாள், ஐந்து கடமையான தொழுகையை உள்ளடக்கிய உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சிறப்பான ஒரு நாளாகும். இந்த வெள்ளிக்கிழமை என்பது ஒரு வருடத்தின் அனைத்து மாதங்களிலும், அந்தந்த மாதங்களின் ஒவ்வொரு வாரங்களிலும் உள்ள 7 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வெள்ளிக்கிழமை நாளில் ஜூம்ஆ என்ற இரண்டு ரக்அத்துகள் கொண்ட ஃபர்ளானத் தொழுகையை முஸ்லிம்கள் அனைவரும் 24 மணிநேரம் கொண்ட அந்த வெள்ளிக்கிழமைக்குள், ஜூம்ஆவுடைய வக்திற்குள் தொழதிட வேண்டும். ஜூம்ஆ தொழுகை உட்பட பர்ளான தொழுகைகளை தொழாமல் விட்டுவிட்டால் கடமையாக்கப்பட்ட வணக்கத்தைச் செய்யாத குற்றமும் பாவம் ஆகும்.


ஆனால் கிரகணத் தொழுகை என்பது இத்தகைய நிபந்தனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.


1. ஒரு வாரத்தின் எல்லா நாட்களிலும் சூரிய, சந்திரக் கிரகணங்கள் ஏற்படுவதில்லை.


2. சூரிய, சந்திரக் கிரகணத் தொழுகைகளை குறிப்பிட்ட கிழமைக்குள்தான் தொழுது முடிக்க வேண்டும் என்ற அளவுகோல் இல்லை.


3. வருடத்தின் எல்லா மாதங்களிலும் இக்கிரகணங்கள் ஏற்படுவதுமில்லை.


4. கிரகணத் தொழுகை என்பது முஸ்லிம்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட ஃபர்ளான கடமையுமல்ல.


5. கிரகணம் என்பது பொதுவாக உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரே நாளுக்குள் காட்சியளிபதுமில்லை. (அதாவது ஜூம்ஆ தொழுகை உட்பட பர்ளான தொழுகைகள் கிழக்குத் திசையின் துவக்கத்தில் வசிக்கும் முஸ்லிம்களிலிருந்து ஆரம்பித்து மேற்குத் திசையின் முடிவு வரை வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஒரே நாளுக்குள் தொழுது முடிப்பதைப்போல கிரகணம் அனைத்து மக்களையும் உள்ளடக்கும் வகையில் இல்லை.)


இவற்றை தெளிவாக பிரித்தறிந்து விளங்கி முஸ்லிம்களாகிய நம்மீது கடமையான ஐங்கால தொழுகைகளிருந்து கூட இந்தக் கிரகணத் தொழுகை இவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதைப் புரிய வேண்டும். இவ்வாறு கடமையான பிற தொழுகையுடனேயே இந்தக் கிரகணத் தொழுகையை ஒப்பிட இயலாது என்ற நிலையில் மனிதர்களுக்குத் தேதியை அறிவிக்கும் பிறையின் காட்சியையும், ரமழான் மாதத்தைத் துவங்குவதையும், இந்தக் கிரகணத் தொழுகைகளை வைத்து எவ்வாறு ஒப்பிட முடியும்?. மக்களே சிந்தியுங்கள்.


இன்னும் உலக முஸ்லிம்களாகிய நாம் வெள்ளிக்கிழமை என்ற 24 மணி நேரங்கொண்ட ஒரு நாளுக்குள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி விடுகிறோம். அதுபோல 24 மணிநேரம் கொண்ட ஒரு முழு நாளுக்குள் பெருநாள் தொழுகைளை தொழ முடியும், தொழவும் வேண்டும். அதுபோல 24 மணிநேரம் கொண்ட ஒரு முழு நாளுக்குள் நோன்பையும் துவங்க இயலும். குர்ஆனும் சுன்னாவின் தெளிவான வழிகாட்டுதல் இதுதான். இப்படி நாம் கூறினால், அமெரிக்காவில் முஸ்லிம்கள் லுஹர் தொழுதால் அந்த நேரத்தில் நீங்களும் லுஹர் தொழுவீர்களா? இன்னும் சவுதிஅரேபியா தொலைக்காட்சியில் நோன்பு திறக்கும் காட்சி ஒளிபரப்பாகும் வேளையில்தான் நீங்களும் நோன்பைத் திறப்பீர்களோ? இன்னும் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா? என்று கேள்விகளை அடுக்கிவிட்டு, ஒற்றுமை கோஷம் போட வந்து விட்டார்கள் பாருங்கள் என்று அறிஞர் வினா எழுப்புகிறார்.


உலக மக்கள் 'ஒரே நாளில்' பெருநாள் கொண்டாட முடியும் என்பதை 24 மணிநேரம் கொண்ட ஒரு முழுமையான நாளைக் குறிக்கிறது என்பதை அறியாமல் 'ஒரே நேரத்தில்' நாம் பெருநாள் கொண்டாடச் சொன்னதாக அவதூறை பரப்புவது நியாயமா?.


இவ்வாறு நாள்ஃகிழமை (Day/Date) என்பதையும், நேரம் (Time) என்பதையும் பிரித்தறியாமல் வாதம் புரிவதே அறிஞரின்(!) வாடிக்கையாகி விட்டது. அவரை பேரறிஞராக ஏற்றுள்ள அவரது இயக்கத்தினரும் 'ஆஹா எப்படிப்பட்ட கேள்வி இது? குறுக்கை நொறுக்கும் அளவிற்கு அல்லவா அண்ணனின் வாதம் உள்ளது? மாஷா அல்லாஹ்! தபாரக்கல்லாஹ்!' என்று நினைத்து புளங்காகிதம் அடைகின்றனர்.


இன்னும் ஒரு வருடத்திற்கு ஷஃஅபான் 29-வது நாள் மற்றும் ரமழான் 29-வது நாள் என்ற அந்த இரண்டு நாட்கள் மட்டும், பிறையைப் பார்க்க வேண்டுமாம்! அதுவும் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்கச் சட்டமாம்! பிறை பார்க்க வேண்டியதே 'யவ்முஷ்ஷக்' என்ற சந்தேகத்திற்குரிய நாளில் மட்டும்தானாம்! இவ்வாறு மார்க்கத்தின் பெயரால் அவரது இயக்கத்தினர் தவறாக விளங்கியுள்ளதற்கும் மேற்படி அறிஞர்களே காரணம்.


லூனார் (Lunar) என்றாலே கிறுக்கு என்று பொருள் என்றும் பிறை என்றாலே கிறுக்குப் பிடிப்பது போன்றுதான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளதை இங்கு மீண்டும் நினைவு கூறுகிறோம். பிறை விஷயத்தில் மேற்படி அறிஞரைப் போன்ற ஞானமில்லாதவர்கள் செய்த பிரச்சாரத்தினால்தான் நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்களில் பலர் நோன்பை நோற்கின்றனர். ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் என பிளவுபட்டு பெருநாள் கொண்டாடுகின்றனர். இவற்றை யாரும் மறுக்க இயலுமா?.


எனவே மேற்கூறிய விளக்கங்களை மனதில் நிறுத்தி, முதலில் கிரகணத் தொழுகை என்பது கடமையான ஐவேளைத் தொழுகையிலிருந்தும் எவ்வாறெல்லாம் வேறுபடுகிறது என்பதை அறிந்து மனதில் உள்வாங்கிக் கொள்ள வேண்டுகிறோம்.


3. அவரவர் 'வக்தில்' தொழுவதைப் போல மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்யலாமா?


அவரவர் வக்தில் தொழுகையை நிறைவேற்றுவதைப் போல ஒரு மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்யலாம் என்பது மிகமிகத் தவறான வாதமாகும்.


சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்ற இறைவசனத்தின் அடிப்படையில் இரண்டையும் துல்லியமாகக் கணக்கிடலாம் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். இந்நிலையில் ஒரு மாதம் எந்தக் கிழமையில் ஆரம்பமாகிறது என்பதை வரையறுக்கும் சந்திரனை, தொழுகை நேரத்தை வரையறுக்கும் சூரியனின் விதிகளோடும், தன்மைகளோடும் ஒப்பிட்டு இணைத்துக் கூறுவது அறிவுடைமையாகாது.


சந்திரனின் படித்தரங்கள் (மனாஸில்) மனிதர்களுக்குத் தேதியைக் காட்டக் கூடியது. சூரியன் அந்தந்த நாளின் நேரத்தைக் தெரிவிக்கக் கூடியது. ரமழான் நோன்பு என்பது இவ்விரண்டையும் அடிப்படையாக வைத்து குறித்த தேதியில், நேரம் குறிக்கப்பட்ட ஃபஜ்ரு முதல் மஃரிபு வரையுள்ள வக்திற்குள் நிறைவேற்ற வேண்டிய கடமை என்பதை விளங்க வேண்டும்.


சூரியனின் சுழற்சியை மையமாக வைத்து அளவிடப்படும் தொழுகை நேரங்கள் அவரவர் 'வக்தின்' அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவதைப் போல, சந்திரனின் படித்தரங்களில் (மனாஜில்) முதல் படித்தரமான பிறந்த பிறையையும் அவரவர்கள் தத்தமது பகுதியில் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற கூற்று மிகவும் பிழையானதாகும். இந்தத் தவறான கூற்றுக்கு கிரகணத் தொழுகையை மையப்படுத்தி அதுதான் இதற்கு ஆதாரம் என்று கூறுவது அபத்தமானதே! மக்களின் சிந்தனையைத் திசை திருப்புவதே!. இப்படி குழப்பமான கருத்துக்களை பரப்பிவரும் அறிஞரும், அக்கூற்றை சரிகாண்பவர்களும் தங்களது சிந்தனையை சீர்தூக்கிப் பார்த்து சீர்திருத்தம் செய்ய வேண்டுகிறோம்.


சூரிய, சந்திரக் கிரகணங்கள் ஒரு மாதத்தின் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று மூன்று வௌ;வேறு நாட்களில் ஏற்படுவதில்லை. இந்நிலையில் கிரகணத்தை மையமாக வைத்து ரமழான் முதல் நோன்பை முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வௌ;வேறான நாட்களில் துவங்கினாலும் அது தவறல்ல என்று மேற்படி அறிஞர் வாதிப்பது மிகவும் பிழையானதாகும். இதை மீண்டும் இங்கு நினைவு படுத்துகிறோம்.


சந்திரனும், சூரியனும் தன்மைகளால் வௌ;வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்பதை நாம் பலமுறை தெளிவாக விளக்கியுள்ளோம். புரியும்படி சொல்வதென்றால், ஒரு மாதத்தின் முதல்நாளின் சூரியனில் துவங்கி 7-வது நாளின் சூரியன், 14-வது நாளின் சூரியன் உட்பட அந்த மாதத்தின் இறுதிநாள்வரை தென்படும் சூரியன் வரை அனைத்து நாட்களில் தென்படும் சூரியனையும் நாம் கண்காணித்தால் அதன் காட்சிகளில் எந்த வித்தியாசங்களும் காணப்படுவதில்லை. அதன் வடிவத்திலும், அதன் வெளிச்சத்திலும், புறக்கண்களுக்குத் தெரியும் கால அளவிலும் பெரும் வித்தியாசங்கள் எதுவும் தெரிவதில்லை. ஆனால் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு அளவிலான மாற்றங்களை நாம் சந்திரனில் காணலாம்.


மேலும் ஒரு மாதத்தின் அனைத்து நாட்களிலும் தென்படும் சூரியனானது, பூமியில் மனிதர்கள் வாழும் (துருவப்பகுதி தவிர்த்து) அனைத்து பகுதிகளிலும் எவ்வித பாரபட்சமும் இன்றி காலை முதல் மாலை வரை, சுமார் 12 மணி நேரங்கள் அனைத்து மனிதர்களும் புறக்கண்களால் பார்க்கும் அளவிற்கு முழுவதுமாக காட்சியளிக்கிறது. அதாவது மாதத்தின் முதல் நாளிலிருந்து இறுதிநாள் வரை கிழக்கில் துவங்கி மேற்குத் திசை வரையுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரே சீராக சுமார் 12 மணி நேரங்கள் எவ்வித மாறுதல்களுமின்றி காட்சி அளிப்பதைக் காண்கிறோம். ஆனால் சந்திரனோ காட்சியளிப்பதிலும்கூட சூரியனைப் போன்ற தன்மை வாய்ந்தது அல்ல.


சந்திரனின் படித்தரங்களில் தலைப்பிறை என்று மக்கள் விளங்கியுள்ள முதல் நாளுக்குரிய பிறை உலகின் ஏதாவது ஒரு நாட்டில் முந்தைய மாதத்தின் கடைசி நாளான புவிமைய சங்கம நாளில் (Geocentric Conjunction Day) பிறக்கும். அவ்வாறு பிறந்த அந்தப்பிறை, அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல்நாளில், மஃரிபு நேரத்தில், உலகில் சில பகுதிகளில் மட்டும், சில நிமிடங்களுக்கு மட்டுமே புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும். அவ்வாறு காட்சியளித்த முதல் நாளின் பிறை குறிப்பிட்ட சில நிமிடங்களில் மறைந்தும் விடும். இவ்வாறு தெரிந்த முதல் நாளின் பிறையை விட இரண்டாவது நாளின் பிறை, மூன்றாவது நாளின் பிறை என்று அடுத்தடுத்து வரும் நாட்களின் பிறைகள் அது பிறக்கும்நேரம், மறையும் நேரம், பிறையின் வடிவம், அது காட்சியளிக்கும் நேரம் என்று வித்தியாசப்படும். இப்படி ஒவ்வொரு நாட்களிலும் வித்தியாசப்படும் அளவில்தான் வல்ல அல்லாஹ் பிறைகளின் படித்தரங்களை (அஹில்லாஹ்) வடிவமைத்து உள்ளான். அந்த வித்தியாசமான வடிவங்களே நமக்குத் தேதிகளை அறிவிக்கின்றன (2:189, 10:5, 36:39).


நேரத்தையும், காலத்தையும் கணக்கிடுவதற்காக சூரியனையும் சந்திரனையும் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். சூரியனால் ஏற்படும் நிழலை மையமாக வைத்து தொழுகை நேரங்கள் கணக்கிடப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்வோம். அதே நேரத்தில் சந்திரனின் (அஹில்லாஹ்) படித்தரங்களால் அமைந்த தேதிகளை கணக்கிட மாட்டோம், அதை எதிர்ப்போம் என்பவர்கள் இப்படிப்பட்ட வாதத்தை முன்வைப்பது நியாயம்தானா?.


சூரியனின் சுழற்சியை மையமாக வைத்து அளவிடப்படும் தொழுகை நேரங்கள் அவரவர் 'வக்தின்' அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதைப்போல, சந்திரனின் படித்தரங்களில் முதல் படித்தரமான பிறந்த பிறையையும் அவரவர்கள் தத்தமது பகுதியில் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்று சூரியன் மற்றும் சந்திரனின் தன்மைகளை, காட்சியளிப்பதையும் சம அளவில் வைத்து வாதம் வைத்துள்ளார். அதனாலேயே சந்திரனும் சூரியனும், தன்மைகளாலும் காட்சியளிப்பதிலும் வௌ;வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்பதை விளக்கியுள்ளோம். அதே நேரத்தில் சூரியனை வைத்து நேரங்களையும், சந்திரனை மையமாக வைத்து நாட்களையும் கணக்கிட வேண்டும் என்ற வல்ல அல்லாஹ்வின் கட்டளையையும் இங்கு நினைவு படுத்துகிறோம்.


சரி, சூரியக்கிரகணத்தை விட்டுவிடுகிறோம் காரணம் சூரியனும் சந்திரனும் தன்மைகளால் வௌ;வேறானவை என்று ஒப்புக் கொள்கிறோம். ஆனால் சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படத்தானே செய்கிறது. எனவே அந்த சந்திரக் கிரகணத்தை அவரவர்கள் தத்தமது பகுதியில் தொழுவதைப் போல அவரவர்கள் தத்தமது பகுதிகளில் பிறையை புறக்கண்களால் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் என்று அறிஞர் வாதம் வைத்தாலும் வைக்கலாம்.


முதலில் அவர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வைத்து கிரகணத் தொழுகைகளில் சூரியக் கிரகணத்தை சொல்லவில்லை, அந்த உதாரணம் தத்தமது பகுதியில் நோன்பு நோற்றலுக்குப் பொருந்தாது என்று அறிஞர் முதலில் ஒப்புக் கொள்ளத் தயாரா? இன்னும் சந்திரக் கிரகணத்தை அவரவர்கள் தத்தமது பகுதியில் தொழுவதைப் போல அவரவர்கள் தத்தமது பகுதிகளில் பிறையை புறக்கண்களால் பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தும் மிகவும் தவறானது என்பதையும் பிற்பகுதியில் விளங்கலாம்.


சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் குறுக்கிடுவதால் சூரியக்கிரகணம் ஏற்படுகிறது. சூரியக்கிரகணம் ஏற்படுவதற்கு சந்திரன் முக்கியப் பங்காற்றுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி குறுக்கிட்டு, அதன் நிழல் சந்திரனில் பட்டு சந்திரன் மறைக்கப்படுவதே சந்திரக் கிரகணமாகும். இன்னும் பவுர்ணமி நாளில்தான் சந்திரக் கிரகணம் ஏற்படும். பவுர்ணமி நாளில் சந்திரனின் உதயத்தையும், அதன் அஸ்தமனத்தையும் பொதுவாக உலக மக்கள் அனைவரும் கவனிக்கும் அளவில் சந்திரனின் காட்சி அமையும். அப்படி அமைந்தும் அன்று ஏற்படும் சந்திரக் கிரகணம் பொதுவாக உலகமக்கள் அனைவருக்கும் காட்சியளிப்பதில்லை. ஆக இந்த சந்திரக் கிரகணத்தையும், அந்த சந்திரக் கிரகணத் தொழுகையை மையப்படுத்தி சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்று விவாதிப்பது அறிவுடைமையாகாது. இதுபோன்ற தவறான செய்திகளை மற்றவர்கள் அறியாமல் சொல்லிவிட்டால் அவற்றை விளக்குவதற்குப் பதிலாக 'மடமைத்தனம்', 'கிறுக்குத்தனம்', 'கூமுட்டை' போன்ற சொற்களைப் பயன்படுத்தி மற்றவர்களை கேவலப்படுத்துவது அவருடைய வாடிக்கை. எனவே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்று மேற்கண்டவாறு வாதம் வைப்பதை அவருடைய பாஷையில் சொல்வதென்றால் 'கிறுக்கத்தனமான வாதம்' என்றே சொல்ல வேண்டும்.


சூரியனின் வெளிச்சத்தால் அமையும் நிழலின் அளவைக் கொண்டு நேரத்தைக் கணக்கிடுகிறோம். அந்த சூரியன் கிழக்கில் துவங்கி மேற்கு வரையுள்ள அனைத்து மக்களுக்கும் தினமும் சுமார் 12 மணிநேரங்கள் எவ்வித வடிவ மாறுதல்களுமின்றி காட்சியளிக்கிறது. சூரியன் காட்சியளிப்பதைப் போல சந்திரனும் ஒவ்வொரு நாளும் ஒரே சீராக சுமார் 12 மணி நேரங்கள் எவ்வித வடிவ மாறுதல்களுமின்றி காட்சியளிப்பதில்லை. அவ்வாறு காட்சியளித்தால் மட்டும்தான் தொழுகை நேரங்களை அவரவர் வக்தை வைத்து முடிவு செய்வதைப் போல நோன்பையும் முடிவு செய்யலாம் என்ற வாதத்தில் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். சூரியக்கிரகணம் ஏற்படுவதற்கு சந்திரன் முக்கியப் பங்காற்றுகிறது என்பதால் சூரியக் கிரகணமும் சந்திரனை அடிப்படையாக்க கொண்டதுதான்.


இன்னும் 24 மணி நேரங்கொண்ட வெள்ளிக்கிழமை என்ற ஒருநாளுக்குள் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி முடிக்கிறோம். அதைப் போல 24 மணிநேரம் கொண்ட ஒரே நாளில் பெருநாளையும், ஒரே நாளில் நோன்பையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு சந்திர நாட்காட்டியின் மூலமாக நாம் தீர்வைச் சொல்லி இருக்கிறோம். இவ்வாறு தீர்வை நாம் சொல்லி இருக்கையில், அமெரிக்காவில் முஸ்லிம்கள் லுஹர் தொழுதால் நீங்களும் லுஹர் தொழுவீர்களா? இன்னும் சவுதிஅரேபியா தொலைக்காட்சியில் நோன்பு நோற்கும் காட்சி ஒளிபரப்பாகும் வேளையில்தான் நீங்களும் நோன்பை திறப்பீர்களோ? என்று இவர் எழுப்பியுள்ள கேள்விகளின் தரத்தை சற்று நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.


சூரியனின் அம்சங்களைப் போலவா சந்திரனின் அம்சங்கள் இருக்கின்றன? பிறந்த தலைப் பிறையானது உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் 12 மணி நேரங்கள் சூரியனைப் போல காட்சியளித்துக் கொண்டேதான் கடந்து செல்கிறதா? முதல் நாளின் சூரியனைப் போலத்தான், முதல்நாளின் தலைப் பிறையும் நம்மிடையே உருண்டோடி வரும் என்று நினைத்துக் கொண்டதால்தான் மேற்கண்ட கேள்விகளும், முன்னர் கூறியுள்ள பல்வேறு பிறை நிலைப்பாடுகளும் எழுந்துள்ளன. மேற்படி அறிஞர் அவர்கள் இவற்றை அறிந்து கொள்ளாதது ஏனோ?.


சூரியனையும், சந்திரனையும் நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று நாம் சுயமாகச் சொல்லவில்லை. மாறாக சூரியனை வைத்து நேரத்தையும், சந்திரனை மையமாக வைத்து காலத்தையும் கணக்கிட வேண்டும் என்பது வல்ல அல்லாஹ்வின் கட்டளை என்பதாலே இரண்டையுமே கணக்கிடத்தான் வேண்டும் என்கிறோம். அதே நேரத்தில் இவ்விரண்டு கோள்களின் தன்மைகளும், இயற்கை குணங்களும் வௌ;வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம்.


எனவே உலக மக்கள் 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளுக்குள் அமைந்த கடமையான தொழுகைகளை அவரவர்கள் தத்தமது 'வக்தில்' தொழுகின்றனர். அதேபோல பிறையின் படித்தரங்களால் அமையப்பெற்ற மாதத்தின் துவக்கத்தையும் அவரவர்களே தத்தமது பகதியில் முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் வைப்பது மிகமிக பிழையானதாகும் என்பதை அறிஞர் அவர்கள் விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு புறிந்து கொள்ள வேண்டுகிறோம்.


4.அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்கலாமா?


பிறையானது மனிதர்களுக்கு அந்தந்தக் கிழமைகளுக்கான தேதிகளைக் காட்டுவதேயன்றி, கிரகணத் தொழுகையின் வக்தோடு அதை முடிச்சு போடுவது அறிவுடைமையாகாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஒருபுறமிருக்க, நமக்கு கிரகணம் ஏற்படாத வேளையில் மற்ற பகுதியில் தோன்றும் கிரகணத்திற்காக நீங்கள் தொழுவீர்களா என்று மேற்படி அறிஞர் கேட்டுள்ளார். நிச்சயமாக நாம் அவ்வாறு தொழ மாட்டோம், தொழத் தேவையில்லை என்பதே அதற்கான பதிலாகும்.


உதாரணமாக நாம் லுஹர் தொழுகையை நிறைவேற்றுகிறோம் என்றால் அதற்காக சூரியனால் ஏற்படும் நிழலைக் கணக்கிட்டு அது லுஹர் நேரம்தானா என்பதை அறிந்து லுஹர் தொழுவதைப் போல, நமக்குக் கிரகணம் ஏற்படுவதை கவனித்து அது எற்படும் பட்சத்தில்தான் நாம் தொழ வேண்டும்.


தொழுகை என்ற வணக்கம் அவரவரின் நேரத்தை பொறுத்ததே என்பதையும் மற்ற தொழுகைகளோடு இந்தக் கிரகணத் தொழுகை என்பது எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் முன்னர் கண்டோம். கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி கிரகணத் தொழுகையானது ஒரு கிழமையை மையமாக வைத்தோ, அல்லது ஒரு இடத்தை மையமாக வைத்தோ தொழும் தொழுகை அல்ல.


புரியும் படி சொன்னால், அமெரிக்கசமோவா (American Samoa)மற்றும் ஃபிஜி (Fiji) தீவுகளைப் பிரிக்கும் சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியில் கிரகணம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஃபிஜியைவிட சுமார் 23 மணி நேரங்கள் பின் தங்கியிருக்கும் அமெரிக்கசமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், ஃபிஜி நாட்டு மக்கள் வெள்ளிக் கிழமையிலும் இருப்பர். இந்த வேளையில் சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியில் நடைபெறும் அந்த கிரகணத்தை இரு நாட்டு மக்களும் ஒரே நேரத்தில் வௌ;வேறு கிழமைகளில் பார்க்க நேரிடும். கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் போதனைபடி இரு நாட்டு மக்களுமே கிரகணத் தொழுகையைத் தொழலாம். இவ்வாறு ஃபர்ளான கடமையில்லாத இக்கிரகணத் தொழுகையை தொழுவதற்குத் தவறினால் அவர்கள் மீது குற்றமில்லை. இதுதான் கிரகணத் தொழுகையின் இலகுவான சட்டமாகும்.


குறிப்பாக ஃபிஜியைவிட சுமார் 23 மணி நேரங்கள் பின் தங்கியிருக்கும் அதே அமெரிக்கசமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், அதே பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருப்பதை அறிந்தோம். அவ்விரு நாட்டு மக்களும் நண்பகலில் ஒரே சூரியனுக்குக் கீழ் இருந்தாலும் அமெரிக்கசமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையின் நான்கு ரத்அத்துக்கள் கொண்ட லுஹர் தொழுகையைத் தொழவேண்டும், ஃபிஜி தீவின் மக்கள் வெள்ளிக்கிழமையின் இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையைத் தொழ வேண்டும். இவ்வாறு விதியாக்கப்பட்ட ஃபர்ளான கடமையான ஐங்காலத் தொழுகையைக் குறித்த நேரத்தில் தொழுவதற்குத் தவறினால் குற்றமாகும், தண்டனைக்கு உரியதுமாகும். இதுதான் கடமையான தொழுகையின் சட்டமாகும்.


பின்னர் 23 மணிநேரங்கள் கழித்து அமெரிக்கசமோவா நாட்டு மக்களுக்கு வெள்ளிக் கிழமையுடைய ஜூம்ஆவின் வக்து வரும் வேளையில், அவர்களும் ஃபிஜி நாட்டு மக்கள் தொழுததைப் போல இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையை அவர்களும் தொழுவார்கள். அந்த நேரத்தில் ஃபிஜி நாட்டு மக்களோ சனிக்கிழமையின் லுஹர் தொழுகையைத் தொழுது கொண்டிருப்பார்கள். இவ்வாறு கிரகணத் தொழுகையின் சட்டங்கள் பர்ளான தொழுகையோடுகூட ஒப்பிடும்படியாக இல்லை.


ஆக இந்தக் கிரகணத் தொழுகையை அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழ வேண்டும் என்பதை வைத்துக் கொண்டு, அவரவர்கள் பிறையை பார்த்து நோன்பை நோற்கட்டும் என்று வாதம் வைப்பது வழிகேட்டில்தான் கொண்டு சேர்க்கும். இப்படி கேள்வி கேட்டு குழப்பி விட்டால் அவற்றை தெளிவுபடுத்தி மக்களுக்கு விளக்கிட ஹிஜ்ரி கமிட்டியினருக்கு சிரமம் ஏற்படலாம் என்றெண்ணி அறிஞர் பெருமகனார்(!) இதுபோன்ற வறட்டு வாதங்களை நம்மை நோக்கி அள்ளி வீசுகிறாரா? – யாமறியோம்.


எனவே அவரவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிரகணம் ஏற்பட்டால் அந்த மக்கள் கிரகணத் தொழுகை தொழுவதைப் போல, அவரவர்கள் பிறையையும் அவரவர்கள் பகுதியில் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் நோன்பைத் துவங்கலாம் என்று வாதிப்பது மிகவும் தவறானதாகும்.


இருகிழமைகள் இருந்து கொண்டே இருக்கும் உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் கிரகணம் நடைபெறும் போது அப்பகுதியில் இரண்டு வௌ;வேறு கிழமைகளால் பிரிந்து இருக்கும் நாட்டவர்கள் கிரகணத்தைக் கவனிக்கும் வாய்ப்பு ஏற்படலாம். அப்போது அவர்கள் அனைவரும் கிரகணத் தொழுகைiயை தொழலாம் என்று நாம் கூறுகிறோம். இப்படி நாம் கூறுவதை வைத்துக் கொண்டு சங்கம தினத்தில்தான் சூரியக்கிரகணம் ஏற்படுகிறது எனவே புவிமைய சங்கமமும் இரண்டு நாட்கள் என்று புரிந்து கொள்ளலாமா? என்ற ஒரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். அதாவது இருவேறு கிழமைகள் கொண்ட அந்தப் பகுதியினர் கிரகணத் தொழகையை ஒரே நேரத்தில் தொழலாம் என்பதால் புவிமைய சங்கம நாள் என்பதும் அவர்களுக்கு இருவேறு தினங்களாகுமா? என்ற ஐயமே இது.


அதுபோல பௌர்ணமி நாளில்தான் சந்திரக் கிரகணம் ஏற்படும். இருகிழமைகள் இருந்து கொண்டே இருக்கும் உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் இந்த சந்திரக் கிரகணம் ஏற்பட்டு அவ்விரு நாட்டவரும் ஒரே நேரத்தில் சந்திரக் கிரகணத்தை பார்க்கவும் நேரிடும். அப்போது சந்திரக் கிரகணத் தொழகையையும் அந்தப் பகுதியினர் ஒரே நேரத்தில் தொழலாம். அப்படித் தொழுவதால் பௌர்ணமி தினம் அவர்களுக்கு இரண்டு நாட்களில் வரும் என முடிவு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளும் எழலாம். இவற்றிற்கான விடைகளையும் தெளிவாக விளங்கிடக் கடமைப்பட்டுள்ளோம்.


இரண்டு வௌ;வேறு கிழமைகளைக் கொண்ட உலகத் தேதிக் கோட்டுப் பகுதிகளில் அருகருகே வசிக்கும் அந்நாட்டு மக்களுக்குத்தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்படும். இந்த இடம் தவிர்த்து பூமியில் மிகப் பெரும்பான்மையாக மக்கள் வசிக்கும் வேறு எந்த நாடுகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு இரண்டு வௌ;வேறு கிழமைகளில் கிரகணத் தொழுகை தொழும் வாய்ப்புகள் ஏற்படுவதே இல்லை. இது முதலாவது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.


இது உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் இருவேறு கிழமைகளிலுள்ள நாடுகளில் கிரகணங்கள் ஏற்பட்டு, அக்கிரகணத்தை அவ்விரு நாட்டு மக்களும் ஒரே நேரத்தில் பார்க்கும்போது மட்டும் ஏற்படும் ஒரு விஷயமாகும். இது இரண்டாவது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.


மேலும் அங்கு இருவேறு கிழமைகளிலுள்ள மக்கள் பார்க்கும் அளவிற்கு கிரகணங்கள் அடிக்கடி ஏற்படுவதுமில்லை. எனவே பூமியிலுள்ள பிற நாட்டு மக்கள் இதுபற்றி எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. இது மூன்றாவது விஷயமாகும்.


உலகத் தேதிக் கோட்டுப் பகுதியின் இருவேறு கிழமைகளிலுள்ள பகுதிகளில் அருகருகே வசிக்கும் நாட்டு மக்கள்கூட இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காரணம் சுன்னத்தான கிரகணத் தொழுகையைப் பொருத்தவரை குறிப்பிட்ட ஒரு கிழமைக்குள்ளாகவோ, அல்லது குறிப்பிட்ட ஒரு எல்கையை மையமாக வைத்தோ கிரகணத் தொழுகையை தொழும்படி நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாக கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்பதே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும் என்பதை முன்னரே அறிந்தோம்.


கடமையான தொழுகைகள், நோன்புப் பொருநாள் தொழுகை, ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை, நோன்பு நோற்பது, ஹஜ்ஜூவுடைய கிரியைகளைச் செய்வது போன்றவை குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட வக்திற்குள் செய்து முடிக்க வேண்டிய கடமைகளாகும். ஆனால் சுன்னத்தான கிரகணத் தொழுகை என்பது அப்படி அல்ல. நபி (ஸல்) அவர்கள் கிரகணம் நடைபெரும் கிழமையை மையப்படுத்தியோ அல்லது கிரகணம் நடைபெறும் இடத்தை மையப்படுத்தியோ கிரகணத் தொழுகை தொழும் படி கட்டளையிட்டிருந்தால் நாமும் அவ்வாறுதான் தொழவேண்டும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் நாம் கிரகணத்தைப் கவனிக்கும் போது தொழுது கொள்ளுங்கள் என்றே கூறியுள்ளார்கள். இது முக்கியமாக கவனிக்க வேண்டிய நான்காவது அம்சமாகும்.


இரண்டு கிழமைகள் அருகருகே பிரியும் உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கசமோவா (American Samoa) மக்கள் வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையையும் மற்றும் ஃபிஜி (Fiji) தீவுகளின் மக்கள் வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையையும் தொழுவதை சற்று முன்னர் படித்தோம். அவ்விரு நாட்டவரும் ஒரே சூரியனை ஒரே நேரத்தில் காண்பதால் தங்கள் கடமையான தொழுகைகளை மாற்றித் தொழுவதில்லை. காரணம் நேரம் குறிக்கப்பட்டுவிட்ட கடமையான தொழுகைகளில் ஒன்றான ஜூம்ஆ தொழுகை என்பதை வெள்ளிக்கிழமை என்ற ஜூம்ஆ நாளுக்குள்தான் தொழ வேண்டும் என்பதே நிபந்தனை. இதுபோன்ற நிபந்தனை சூரியக் கிரகணத் தொழுகைக்கோ, சந்திரக் கிரகணத் தொழுகைக்கோ இல்லை.


இதை இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் சூரியக் கிரகணம் நடைபெற்று மேற்படி இருநாட்டு மக்களும் அந்த கிரகணத்தின் காட்சியை பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்கசமோவா (American Samoa) மக்கள் வியாழக் கிழமையின் லுஹர் தொழுகையையும், சூரியக் கிரகணத் தொழுகையையும் தொழுவார்கள். ஃபிஜி (Fiji) தீவுகளின் மக்களோ வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையையும், சூரியக் கிரகணத் தொழகையையும் தொழுவார்கள். இவ்விரு நாட்டு மக்களும் ஒரு சூரியக்கிரகணத் தொழுகையைத் தொழுவதை வைத்து இவ்விரு நாட்டு மக்களுக்கும் ஒரே கிழமைக்கு உரியவர்கள் என்று யாரும் கூறிவிட முடியாது.


அதுபோல அமெரிக்கசமோவா மக்கள் வியாழக் கிழமை இஷாவிலும், ஃபிஜி (Fiji) தீவுகளின் மக்கள் வெள்ளிக் கிழமையின் இஷாவிலும் இருக்கும்போது சந்திரக் கிரகணத்தை பார்க்க நேரிடலாம். அவ்வாறு பார்க்க நேரிட்டால் அவ்விரு நாட்டவரும் அந்தந்த கிழமைகளின் இஷாத் தொழுகையைத் தொழுதுவிட்டு கிரகணத் தொழுகையையும் தொழுவார்கள். அப்படி கிரகணத் தொழுகையை தொழுவதை வைத்துக் கொண்டு அவ்விரு நாட்டு மக்களும் ஒரே கிழமையில் உள்ளார்கள் என்று யாரும் கருதிட மாட்டோம்.


மேலும் இவ்விரு நாட்டுமக்களும் ஒரு சூரியக்கிரகணத் தொழுகையை வியாழன், வெள்ளி என்ற இரு கிழமைகளில் தொழுவதை வைத்துக் கொண்டு இரண்டு கிழமைகளில் சூரியக் கிரகணம் நடைபெறுகின்றது என்றும் கூற முடியாது. காரணம் சூரியக் கிரகணம் என்ற அந்த நிகழ்வின் துவக்கம் வியாழன் அல்லது வெள்ளிக் கிழமை என்ற அந்த இரு கிழமைகளில் ஏதேனும் ஒரு கிழமையில் தான் இருக்கும்.


இன்னும் வெள்ளிக் கிழமை ஏற்படும் கிரகணத்தை வியாழக் கிழமையிலுள்ள அமெரிக்கசமோவா (American Samoa) மக்கள் இடமாற்றத் தோற்றப் பிழையாகத்தான் (Parallax Error) வியாழன் அன்று காண்கிறார்கள். இதுதான் உண்மையாகும். எனினும் கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி அவர் தொழுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


சூரியக்கிரகணம் மாதத்தின் இறுதிநாளான புவிமைய சங்கம தினத்தில்தான் ஏற்படும் என்பதை அறிந்துள்ளோம். சூரியக் கிரகணம் நடைபெறும் போது இரண்டு கிழமைகளில் இருக்கும் நாட்டவர்களும் தொழலாம் என்கிறோம். இப்படி நாம் கூறுவதை வைத்து புவிமைய சங்கமமும் இரண்டு நாட்கள் ஏற்படுமா? என்று கேட்பது அடிப்படையிலேயே தவறான கேள்வியாகும். காரணம்


புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) என்பது பூமியிலுள்ள குறிப்பிட்ட கிழமைக்குள், ஒரு குறிப்பிட்ட பகுதியை மையமாகக் கொண்ட ஒரு நிகழ்வாகும். சூரியக் கிரகணம் அப்படி அல்ல.


இந்த சங்கம நிகழ்வு என்பது சில நொடிப் பொழுதுகள் நடைபெறும் நிகழ்வாகும். மாறாக சூரியக் கிரகணத்தைப் போல மணிக்கணக்கில் நிகழும் நிகழ்வல்ல.


புவிமைய சங்கமம் என்பது ஒவ்வொரு மாத இறுதியிலும் தவறாமல் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். கிரகணங்கள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் நடைபெறுவதில்லை.


குறிப்பாக இந்த புவிமைய சங்கம தினத்தை அமாவாசை என்று பிற மதத்தினர் பொதுவாக அழைக்கின்றனர். பிற மதத்தவர்கள் தங்களின் மத வழிபாடுகளை குறிப்பிட்ட அந்த அமாவாசை தினத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட (அதாவது இரண்டு நாட்கள்கூட) அமாவாசை தினங்களாகக் கருதி நடைமுறைப் படுத்துகின்றனர். ஆனால் நாம் குறிப்பிடும் இந்த புவிமைய சங்கமம் என்பது சந்திர மாதத்தின் இறுதி நாளான 'தனித்த ஒருநாளில்' – 'ஒரு கிழமையில்' -'ஒரு தேதியில் மட்டுமே நடைபெறும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. புவிமைய சங்கம நாள் என்பது முழுமையான ஒருநாள் மட்டுமே. ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் அல்ல. எனவேதான் புவிமைய சங்கம நாளை அமாவாசை தினம் என்றுகூட அழைப்பதை நாம் பெரும்பாலும் தவிர்த்து வருகிறோம்.


எனவே மேற்கூறிய விளக்கங்களை திறந்த மனதோடு உள்வாங்கிட வேண்டுகிறோம். உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் இரு கிழமைகளில் கிரகணத் தொழுகை நடைபெறும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இருப்பினும் இது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பவம் அல்ல. காரணம் அனைத்து கிரகணங்களும் அவ்விடத்தில் நடைபெறுவதில்லை. எனவே மேற்படி கிரகணங்களை மையப்படுத்தி இரண்டு தினங்களில் சங்கமநாள் என்றோ, பௌர்ணமி தினம் இரண்டு நாட்களில் வரலாம் என்றோ முடிவு செய்வது தவறானதாகும்.


கடமையான தொழுகைகள், நோன்புப் பொருநாள் தொழுகை, ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை, நோன்பு நோற்பது, ஹஜ்ஜூவுடைய கிரியைகளைச் செய்வது போன்றவை குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட வக்திற்குள் செய்து முடிக்க வேண்டிய கடமைகளாகும். ஆனால் சுன்னத்தான கிரகணத் தொழுகை என்பது அப்படி அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறோம். நாம் கிரகணத்தை எப்போது கவனிக்கின்றோமோ அப்போது தொழ வேண்டிய ஒரு சுன்னத்தான தொழுகையாகும். இதை புரிந்து கொண்டால் எந்தக் குழப்பங்களும் வராது.


5.கிரகணத் தொழுகையையும், நோன்பு நோற்பதையும் ஒப்பிடுவது தவறானதே!


கிரகணத் தொழுகையை மையப்படுத்தி நோன்பு நோற்பதை ஒப்பிட்டுக் கூறவியலாது. அதுபோல இந்தக் கிரகணத் தொழுகையை வைத்து பிறைகளைக் கவனித்து மாதங்களைத் துவங்கும் ஒரு விஷயத்தோடும் ஒப்பிட்டுக்கூற முடியாது. இவற்றை அடுக்கடுக்கான உதாரணங்களை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.


1. கிரகணம் என்பதே உலகின் சில பகுதிகளில், குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மட்டுமே தெரியும் நிகழ்வாகும். கிரகணமானது உலகில் ஒரு நாட்டில் துவங்கி, பின்னர் அனைத்து நாடுகளையும் கடந்து, அது ஆரம்பித்த நாட்டிற்கே திரும்பிச் சென்று முடியாது, இதுவே அறிவியலின் நிரூபிக்கப்பட்ட உண்மை. இதை உணர்ந்துதான் இந்தக் கேள்வியை தைரியமாக அறிஞர் எழுப்பியுள்ளார். இப்படி கேள்வி எழுப்பியதிலிருந்தே கிரகணம் என்ற அந்த நிகழ்வும், 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு கிழமைக்குள் அனைத்து முஸ்லிம்களும் நோன்பு பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் ஒன்றில்லை என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.


2. இன்னும் ஒரு வருடத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் எப்போதாவது நடைபெறுவதுதான் இந்தக் கிரகணத் தொழுகை. இக்கிரகணத் தொழுகை சுன்னத்தான ஒரு அமல்தான் என்பதைத் தெரிந்த நிலையிலும், அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு நோற்றலோடு ஒப்பிட்டு அறிஞர் வாதம் புரிந்துள்ளதை என்னவென்று சொல்வது?.


3. இந்தக் கிரகணத் தொழுகையை வைத்து அவரவர்கள் ரமழானைத் துவங்க அவரவர்கள் பகுதிகளில் பிறையைப் பார்த்து முடிவு செய்யட்டும் என்ற வாதம், அறிஞரின் நிலைப்பாட்டின் படியும் தவறான வாதமல்லவா?. உதாரணமாக தமிழகத்தில் சூரிய சந்திரக் கிரகணம் தெரிகின்றது என்று வைத்துக் கொள்வோம். முதலில் அந்தக் கிரகணம் புறக்கண்களுக்குத் தெரிய ஆரம்பித்த பகுதியிலிருந்து துவங்கும். பிறகு தமிழகம் முழுவதும் அது காட்சியளிக்கும். பின்னர் அது முடியும் வரையுள்ள பல்வேறு நாடுகளிலுள்ள பலகோடி மக்களையும் சென்றடைந்து முடியும். கிரகணம் தெரிந்த அனைத்து நாட்டு முஸ்லிம்களும் கிரகணத் தொழுகையை அவர்களுக்கு தெரிகின்ற அந்தந்த நேரத்தில்தான் தொழுவார்கள்.


இப்படியிருக்க இந்தக் கிரகணத் தொழுகையை வைத்து தத்தமது பகுதிகளில் பிறை பார்க்கும் நிலைப்பாட்டை எவ்வாறு நிலைநாட்ட முடியும்? தத்தமதுபகுதி பிறை நிலைப்பாடு என்பதே கேரளாவில் பார்க்கும் பிறை தமிழகத்தை கட்டுப்படுத்தாது, தமிழகத்தில் பார்க்கப்பட்ட பிறை இலங்கை முஸ்லிம்களை கட்டுப்படுத்தாது என்பதுதானே? தமிழகத்திற்குள்ளேயே ஒரு ஊரில் பார்க்கப்படும் பிறை மற்ற ஊர்களுக்குப் பொருந்தாது என்று பலவாதங்கள் புரிந்துவிட்டு தமிழக எல்லை என்ற அளவுக்கு சமீபத்தில்தானே வந்துள்ளார்கள்.


4. ஆனால் சூரிய,சந்திரக் கிரகணங்கள் அப்படி அல்லவே? தமிழகத்தில் கிரகணம் நடைபெறுகிறது என்றால் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும், அல்லது சில ஊர்களில் மட்டும் என்ற பாகுபாடு வைத்தா கிரகணம் ஏற்படுகிறது? அல்லது இலங்கையில் கிரகணம் தெரிந்து, தமிழ்நாட்டில் தெரியாமல் மறைந்து, பின்னர் கேரளாவில் தெரிந்து, இப்படியா கிரகணம் நடக்கிறது? இல்லையே. பிறகு கிரகணத் தொழுகையை வைத்து தத்தமது பகுதி பிறை அல்லது தமிழகப்பிறை நிலைப்பாடுகளை எவ்வாறு நிலைநாட்டிட முடியும்?


5. இலங்கையில் ரமழான் முதல் நோன்பாக இருக்கும், அதேநாளில் தமிழகத்தில் ஷஃஅபான் முப்பதாகவும், கேரளாவில் ரமழான் முதல் நோன்பாகவும் இருக்கலாம் என்பதே தத்தம்பகுதி பிறை அல்லது தமிழகப்பிறை நிலைப்பாட்டின் மையக் கருத்தாகும். கிரகணத் தொழுகையை வைத்து கேள்வி எழுப்பியது மாபெரும் தவறு என்பதை கிரகணம் தெரியும் பாதையின் அளவை அறிந்து கூடவா புரிந்து கொள்ள முடியவில்லை?


இதில் ஒரு நகைச்சுவை என்ன தெரியுமா? அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத்தனம் என்றுதான் அதைக் கூற வேண்டும் என்று வாதம் வைக்கிறார். இப்படி ஒரு வாதத்தை வைத்தவர் இறுதியில் அவராகவே சந்திரன் அடிப்படையில் மாதத்தைத் தீர்மானிக்கும் போது சூரியக் கணக்கில் உள்ள நேர வித்தியாசத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்று அதே பிறை ஆய்வு புத்தகத்தில் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வாக்குமூலமும் தந்துள்ளார். சத்தியத்தை இப்படித்தான் அல்லாஹ் நிலைநாட்டுவான் போலும்.


மேலும், 'ஃபஇன்கும்ம அலைக்கும்' என்பதற்கு உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்றும் பிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்றும் மேற்படி அறிஞர் அவர்கள் சர்வ சாதாரணமாக எழுதி புத்தகமும் வெளியிட்டுள்ளார்.


அவருடைய வாதப்படியே நாமும் கேட்கிறோம், தமிழகத்திலோ அல்லது தத்தமது பகுதியிலோ ஒருநாளில் முழு சந்திரக்கிரணம் (Total Lunar Eclipse) ஏற்பட்டு அது முடியும் வரை அதைப் புறக்கண்ணால் யாரும் பார்க்க முடியாத அளவிற்கு (ஃபஇன்கும்ம அலைக்கும் ஆக உள்ளது, அதாவது அவருடைய மொழியாக்கத்தின்படி) மேகமூட்டமாக இருக்கும் நிலை ஏற்பட்டால், இப்போது தவ்ஹீது(!) அறிஞர் கிரகணத் தொழுகையை தொழுவாரா மாட்டாரா? இக்கேள்விக்கு என்ன ஃபத்வா கொடுக்கப் போகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.


மக்களே இனி மேற்படி அறிஞர் கிரகணத்தைப் பற்றி பேசி உங்களை மயக்கினால், சந்திரக்கிரகணம் நாளில் மேகமூட்டமாக ஆகி தமிழகம் முழுவதும் சந்திரனை புறக்கண்ணால் பார்க்க முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது? கிரகணத் தொழுகையை தொழலாமா? அல்லது வேண்டாமா? என்று நீங்கள் அவரிடம் எதிர் கேள்வி எழுப்புங்கள்.


மேலும் சந்திரக்கிரகணம் பற்றி சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும் என்று வாதம் எழுப்பியுள்ளார்.


முழுசந்திரக் கிரகணம் ஏற்படும் போது உலகின் பாதி பகுதியில் சுமார் 50 சதவிகித மக்கள் வரை சந்திரக் கிரகணத்தை புறக்கண்களால் பார்க்க முடியும் என்பதை அவரும் அறிந்திருப்பார். இப்போது அறிஞர் கூறும் கிரகண நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உலகிலுள்ள 50 சதவீத மக்களும் அதே சந்திரனை அடிப்படையாக வைத்து மாதத்தை ஆரம்பிக்கலாம், அதன் அடிப்படையிலேயே உலகிலுள்ள 50 சதவீத மக்களும் ஒரே நாளில் நோன்பையும் பிடிக்கலாம் என்று கூறத் தயாரா? என்று அறிஞர் அவர்களிடம் கேள்வி எழுப்புகிறோம். தத்தமது பகுதி (தமிழக அளவு) பிறைக் கருத்தே சரியானது என்று பிடிவாதமாக இருக்கும் அவர், தனது மனசாட்சியைத் தொட்டு, பிதற்றாமல் உண்மையை உரைப்பாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்?


மேலும் சந்திரக் கிரகணத்தைப் பற்றி தெளிவாக சிந்தித்தால் உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம்தான் நிரூபணமாகிறது. மாறாக அது அடிபட்டுப் போகவில்லை. அதே நேரத்தில் அதே சந்திரக் கிரகணம் பற்றி சிந்தித்தாலே தத்தமது பகுதி (தமிழக அளவு) பிறையே சரியானது என்ற தவறான வாதம் அடிபட்டு விழுந்து இறந்து விடுகிறது.


சந்திரக் கிரகணம் பற்றி சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும் என்று வாதம் எழுப்பியவர், குறைந்த பட்சம் அதே சந்திரக் கிரகணத்தை அடிப்படையாக வைத்து உலகிலுள்ள 50 சதவீத மக்களும் ஒரே நாளில் நோன்பையும் பிடிக்கலாம் என்றும் நிச்சயமாக ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி இவர் ஒப்புக் கொண்டாலும் நாம் ஆச்சரியப் படுவதற்கில்லை.


காரணம் தத்தமது பகுதி பிறையிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று தற்போது தமிழகப் பிறையில் நின்று கொண்டிருக்கும் அவர், சர்வதேசப் பிறை நிலைப்பாட்டை நோக்கிச் செல்கிறார் என்று நாமும் புரிந்து கொள்வோம். இறுதியில் பிறை குழப்பத்திற்குத் பிறைகளின் துல்லிய கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்த சந்திர நாட்காட்டியின் தீர்வை நோக்கி பயணித்தே ஆக வேண்டி கட்டாயத்திற்கு அவரையும், அவரது இயக்கத்தையும் அப்பயணம் கொண்டு வந்து சேர்க்கும் - இன்ஷா அல்லாஹ்.


கிரகணத் தொழுகை சம்பந்தமாக அறிஞர் அவர்கள் மிகப் பெரும் ஆய்வுகளைச் செய்துள்ளதைப் போல பேசிய வீடியோ பதிவுகள் நம்மிடம் உள்ளன. அதில் சந்திரக் கிரகணத் தொழுகையைப் பற்றி பேசும் போது, 'நபி (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி நிமிர்ந்து சந்திரக் கிரகணத்தைப் பார்த்துப் பார்த்து கிரகணம் முடியும் வரை தொழுததாக' அறிஞர் குறிப்பிடுகிறார். மேலும் 'மற்ற தொழுகையின் போது வானத்தைப் பார்க்கக் கூடாது, ஆனால் சந்திரக் கிரகணத் தொழுகையின் போது கிரகணம் முடிந்து விட்டதா என்பதை உறுதிபடுத்த தொழுகையிலேயே வானத்தைப் பார்க்கலாம்' என்பதற்கு இது ஆதாரம் என்றும் பேசியுள்ளார்.


பிறை சம்பந்தமாக எந்த ஒரு நிலைப்பாட்டிலும் நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மிச்சமிருக்கும் என்பது அவரது நிலைப்பாடு. எனினும் கிரகணத் தொழுகை விஷயத்தை ஆணித்தரமாக வாதிக்கிறார். எனவே கிரகணத் தொழுகை விஷயத்தில் அனைத்துக் கேள்விகளுக்கும் அறிஞரிடம்(!) பதில் உண்டு என்றே தெரிகிறது. ஆகையால் அவருடைய கிரகணத் தொழுகை ஆய்வை மேலும் மெருகூட்டுவதற்காக கீழ்க்காணும் கேள்விகளை அவரின் ஆய்வுக்காக வைக்கிறோம். அறிஞர் அவர்கள் இவற்றை கருத்தில் கொண்டு தனது கிரகணத் தொழுகை ஆராய்ச்சியை மீளாய்வு செய்வார் என்றும் எதிர்பார்க்கிறோம்.


1. நபி (ஸல்) அவர்கள் சந்திரக் கிரகணத் தொழுகையைத் தொழுதார்கள் என்றும், அப்போது சந்திரக் கிரகணம் முடிந்து விட்டதா என உறுதி செய்வதற்கு வானத்தைப் பார்த்தார்கள் என்பதையும் தெரிவிக்கும் ஸஹீஹான ஹதீஸ் எந்தக் கிரந்தத்தில் உள்ளது? குறிப்பு : இங்கு ஸஹீஹான ஹதீஸைத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறோம்.


2. கிரகணத் தொழுகை சம்பந்தமாக வரும் ஹதீஸ்களில்'...ஃபஇதா ரஅய்த்து மூஹூமா' என்று வரும் சொற்றொடர்கள் அவ்விரண்டிற்கும் கிரகணம் ஏற்படுவதை கவனித்தால் என்று சூரியனையும், சந்திரனையும் தனித்தனியாக குறித்து வருகிறதா? அல்லது கிரகணம் என்ற நிகழ்வில் சூரியனும், சந்திரனும் ஒருசேர பங்கு பெற்றிருக்க வேண்டும் என்ற பொருளில் அமைந்துள்ளதா?


3. நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகை தொழுததாக வரும் ஸஹீஹான ஹதீஸ்களில் எந்தந்த நபிமொழிகள் சூரியக் கிரகணத் தொழுகையை குறிப்பிடுகின்றன, எந்தெந்த ரிவாயத்துகள் சந்திக்கிரகணத் தொழுகையைக் குறித்து வந்துள்ளன. அவற்றை அறிஞர் மக்களுக்கு வேறுபடுத்தி பிரித்து விளக்க வேண்டும்.


பிறை சம்பந்தமான ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளன என்பது அவரது பிறை நிலைப்பாடு. பிறை சம்பந்தமான ஹதீஸ்கள் ஒருங்கிணைந்து இல்லை என்ற அவரின் கருத்து அவை பிரிந்து பிரிந்து தனித்தனியாகத் உள்ளது என அவர் புரிந்திருப்பதை உறுதி செய்கிறது. எனவே அவ்வாறு பிரிந்து கிடக்கும் அத்தகைய ஹதீஸ்களில் சந்திரக் கிரகணத் தொழுகை பற்றிய ஹதீஸ்களை வேறுபடுத்தி பிரிப்பது மேற்படி 'தவ்ஹீது அறிஞருக்கு' மிக இலகுவானதுதான். பிரித்து மேய்வதிலும், பிரித்து பிரித்து பிரிவினையை உண்டாக்குவதிலும் 'தவ்ஹீது அண்ணனை' யார் விஞ்ச இயலும்?


அல்லது சூரியக்கிரகணம் மற்றும் சந்திரக்கிரகணம் தொடர்பான ஹதீஸ்கள் என்று தனித்தனியாக பிரித்து மக்களுக்கு விளக்கிட 'அண்ணனுக்கு' இயலவில்லை என்றால் பிறை சம்பந்தமாக வரும் ஹதீஸ்களை ஒருங்கிணைக்கவும் முடியவில்லை, பிரிக்கவும் முடியவில்லை என்று அறிஞர் ஒப்புக் கொள்வதாக அது அமையும். ஆக ஒரு விஷயத்தில் ஹதீஸ்களை ஒருங்கிணைக்கவோ, பிரிக்கவோ இயலாத ஒரு மனிதர் அந்த விஷயத்தில் எத்தகைய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டிருப்பார் என்பதை மக்களே விளங்கிக் கொள்ளுங்கள்.


பிறை விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன என்பதும் பிறை சம்பந்தமாக எந்த ஒரு நிலைப்பாட்டிலும் நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மிச்சமிருக்கும் என்பதும் அவரது நிலைப்பாடு. எனவே நாம் இதுவரை எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளையும் குழப்பம் என்றோ, பதில் சொல்ல முடியாமல் மிச்சியிருக்கும் கேள்வி பட்டியலிலோ சேர்த்து விடாமல் ஆய்வு செய்து அவர் அறிவிப்பார் என்று நம்புகிறோம். ஹிஜ்ரி கமிட்டி கூறும் சத்தியமான பிறை நிலைப்பாட்டிற்கு சான்று பகர அறிஞர் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.


எனவே கிரகணத் தொழுகையின் சட்டம் கடமையான தொழுகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். அவரவர் 'வக்தில்' தொழுவதைப் போல மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்ய முடியாது என்பதையும் தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்பது தவறான முடிவாகும். மேலும் கிரகணத் தொழுகையையும், நோன்பு நோற்பதையும் ஒப்பிட்டுக் கூறிடவே இயலாது என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.


தவ்ஹீது பெயர் இயக்கத்தின் மேற்படி தலைமை அறிஞர் பிறை தொடர்பாக பல தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பதிந்துள்ளார். அவருடைய தவறான வாதங்கள் அனைத்திற்கும் தக்க பதில்களை www.mooncalendar.in இணையதளத்தில் வீடியோ பதிவுகளாக வெளியிட்டு வருகிறோம். மேற்படி அறிஞர் அவர்களின் தவறான பல பிறை வாதங்களில் ஒருசில...


1. சந்திரன் மேற்கில் உதிக்கிறது. மேற்கு திசையில்தான் சந்திரனை பார்ப்பீர்கள். சந்திரன் (பிறை) மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது.


2. நாம் கண்ணால் பார்ப்பது மூன்றாவது பிறைதான். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது பிறையைத்தான் முதல் பிறை என்று சொல்லியுள்ளார்கள்.


3. பிறை விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன. காரணம் பிறை சம்பந்தமான ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளன.


4. லூனார் (Lunar) என்றாலே கிறுக்கு என்று பொருள். பிறை என்றாலே கிறுக்குப் பிடிப்பது போன்றுதான் உள்ளது. எனவே யாராலும் நூறு சதவிகிதம் நிலை நாட்ட முடியாது.


5. தலைப்பிறை சவுதியில் உதிக்கிறது என்றால் சவுதியிலிருந்து பிறை ரிவேஸ்ல வராது. காரணம் அது மேற்கு உதிப்பதால் நம் தலைக்கு நேராக வருவதற்கு 21:30 மணிநேரம் ஆகும்.


6. பிறை பிறந்தால்தான் இரவு ஆரம்பிக்கிறது. இரவில்தான் நாள் ஆரம்பிக்கிறது.


7. முதல் பிறை சிலநேரம் 20 நிமிடம் தெரியும், சில நாளில் 35 நிமிடங்கள் தெரியும், சில வேளை 5 நிமிடங்கள்கூட தெரியும்.


8. இலங்கையில் பிறை பார்க்கப்பட்டதால் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பிறை பார்க்கப்பட்ட அந்த நேரத்தில் வேறு நாடுகள் லுஹர் நேரத்தில் இருப்பார்கள். அவர் எப்படி நோன்பு வைப்பார்கள்.


9. நீங்கள் என்று தீர்மானிக்கிறீர்களோ அன்றுதான் நோன்பு, பெருநாள். அதை முடிவு செய்தை நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் தள்ளிவிட்டுட்டு போய்விட்டார்கள்.


10. பிறை சம்பந்தமாக எந்த ஒரு நிலைப்பாட்டிலும் 4 கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மிச்சமிருக்கும். எந்த நிலைப்பாட்டில் குறைந்த கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் இருக்கிறதோ அந்த நிலைப்பாட்டிற்கு சென்றுவிடுவது சிறந்தது.


11. உமர் (ரழி) அவர்களும் ஸஹாபாக்களும் இஸ்லாமிய ஆண்டு கணக்கீட்டை ஹிஜ்ரத்திலிருந்து ஆரம்பித்தது பொருத்தமில்லாதது. நபி (ஸல்) அவர்களின் நுபூவத்திலிருந்துதான் ஆரம்பித்திருக்க வேண்டும்.


12. சூரியக் (ஆங்கிலக்) காலண்டர் அடிப்படையில் வரும் 365 என்ற வருடக் கணக்குதான் சரியானது. சந்திரக் கணக்கீடு மாதத்தைத்தான் அளவிட முடியும்.


13. கிரிகோரியன் காலண்டர் இது கிருஸ்தவக் காலண்டர் அல்ல இது சூரியக் காலண்டர். ஹிஜ்ரி காலண்டரைவிட ஆங்கிலக்காலண்டர் பின்பற்றுவதற்கு லேசானாது. லேசானாதுதான் மார்க்கம்.


நவ்வூதுபில்லாஹ்! இத்தகைய அடிப்படையற்ற, மடமையான வாதங்களை விட்டும் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தை பாதுகாத்திடப் பிராத்திக்கிறோம்.


22. தத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற்கு எங்கே ஆதாரம்?

பிறை பார்க்கப்படும் எல்கையை தத்தம்பகுதி என்ற நிலையிலிருந்து சற்று விரிவாக்கி தமிழக அளவு எல்கையை அமைத்து இதைத்தான் மார்க்கம் வலியுறுத்துகிறது என்று பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு தமிழக அளவில் மட்டும் பார்க்கப்படும் பிறையைச் சரிகண்டுள்ள இவர்களின் பிறை நிலைப்பாடுகள் வித்தியாசமானதாகும். அவர்களின் பிறை நிலைப்பாடுகளை வார்த்தை மாற்றங்கள் ஏதும் செய்யாமல் அடைப்புக் குறியில் கீழே தந்துள்ளோம். படித்துப் பார்க்கவும்.


(நமக்குப் பிறை தெரியாமல் வேறு ஊர்களில் பிறை காணப்பட்ட தகவல் நமக்குக் கிடைக்கிறது. எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது என்று பார்க்க வேண்டும். அலட்சியப்படுத்தி ஒதுக்கி விடும் அளவுக்குக் குறைந்த நேரம் இரண்டு ஊர்களுக்கும் வித்தியாசம் இருந்தால் அத்தகவலை ஏற்றுக் கொண்டு, அதுவும் நமது பகுதியைச் சேர்ந்தது தான் என்று முடிவு செய்ய வேண்டும். அலட்சியப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமான நிமிடங்கள் அல்லது மணிகள் இரண்டு ஊர்களுக்கும் இடையே வித்தியாசம் இருந்தால் அந்தத் தகவலை அலட்சியம் செய்து விட்டு, அதை முப்பதாம் நாளாக முடிவு செய்ய வேண்டும். மறுநாள் அடுத்த மாதம் பிறந்து விட்டதாக முடிவு செய்ய வேண்டும். எத்தனை நிமிடம் அல்லது எத்தனை மைல் வித்தியாசத்தை அலட்சியப்படுத்தலாம்? என்பதற்கு அல்லாஹ்வோ, அவனது தூதரோ எந்த வரையறையும் செய்யவில்லை. அந்த அதிகாரம் நம்மிடம் தான் உள்ளது.


கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும். எனவே நகரத்தில் காணப்படும் பிறை சுற்றியுள்ள கிராமங்களையும், சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிறை நகரத்தையும் கட்டுப்படுத்தும். ஓர் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள் என்றால் எத்தனை கிலோமீட்டர் தொலைவு என்று கேட்கலாம். கிலோ மீட்டரில் அளந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அதை நாமே தீர்மானம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஊர் என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு? என்றெல்லாம் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அதை நாம் தான் தீர்மானம் செய்கிறோம்.


சிரியாவை விட அருகில் உள்ள ஊரிலிருந்து வந்த பயணக் கூட்டத்தின் தகவலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்கவில்லை. குரைப் அறிவிக்கும் ஹதீஸின் அடிப்படையிலும் ஓர் ஊரில் காணப்பட்ட பிறை மற்றொரு ஊரின் நோன்பைத் தீர்மானிக்காது. நாம் பிறை பார்த்து விட்டதால் நாம் ரமழானை அடைந்து விட்டோம். சிங்கப்பூர் வாசிகள் பிறை பார்க்காமலே அந்த இரவைக் கடந்ததால் அவர்கள் ரமழானை அடையவில்லை. மறுநாள் தான் அவர்கள் பிறையைப் பார்க்க முடியும். எனவே மறுநாள்தான் அவர்கள் ரமழானை அடைகிறார்கள். இப்படி இரண்டு ஊரைச் சேர்ந்தவர்களும் இரு வேறு நாட்களில் ரமலானை அடைகிறார்கள்.


மேகமூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். பிறை பார்க்க வேண்டும் என்பதே சந்தேகத்திற்குரிய 30-ஆம் இரவில் தான். அன்று பிறை தெரியவில்லை என்றால் முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என முடிவு செய்து அடுத்த நாளை தலைப்பிறையைத் தீர்மானிக்க வேண்டும். உண்மையில் பிறை பிறந்திருக்கலாம்; ஏதோ காரணத்தால் அதைப் பார்க்க முடியாமல் இருக்கலாம். அவ்வாறு பார்க்காததால் மாதம் பிறந்தும் அதைத் தவற விட்டு விட்டோமே என்று யாரும் எண்ணக் கூடாது. பிறை பிறந்தது உண்மையாகவே இருந்தாலும் அது தெரியாவிட்டால் முதல் மாதத்திற்கு ஒரு நாளை அல்லாஹ் நீடித்து விடுகிறான். உண்மையில் அடுத்த மாதத்தின் தலைப்பிறை தோன்றியிருந்தால் கூட அல்லாஹ் நம் மீது கருணை கொண்டு, நம் சிரமத்தைக் குறைப்பதற்காகவும், குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவும் அம்மாதத்தின் ஒரு நாளை நீட்டித்து சலுகை அளித்து விடுகிறான்.)


மேற்படி கருத்தானது 'பிறை ஓர் விளக்கம்' என்ற நூலில் வெளியிடப்பட்ட கருத்தை அப்படியே வெளியிட்டுளோம். மேற்படி நூலை வெளியிட்டவர்களின் பிறை நிலைப்பாடும் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்க்கவேண்டும், அப்படி புறக்கண்களால் பார்த்த பின்னரே புதிய மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற நம்பிக்கையின் விளைவாக ஏற்பட்டதே.


மேற்படி தத்தம் பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டு அறிஞரின் பிறை ஆய்வுகளிலிருந்து நாம் கேள்வி எழுப்பத் துவங்கினால் இப்புத்தகத்தின் பக்கங்கள் காணாது என்பதால் அவரின் சிறுபிள்ளைத்தனமான பிற வாதங்களை அலட்சியம் செய்கிறோம். அன்னாரது கிரகண ஆராட்சியை சிலர் தற்போது தூக்கிப் பிடிப்பதால் அதிலுள்ள குளறுபடிகளை விரிவாக விளக்கினோம் - அல்ஹம்துலில்லாஹ். மேற்படி அறிஞரின் விசித்திர பிறை நிலைப்பாட்டை சற்று முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அதை மீண்டும் படித்துவிட்டு மார்க்கத்தில் எவ்வித ஆதாரங்களுமற்ற அவருடைய நிலைப்பாட்டின் உண்மை நிலையையும் சற்று கவனிக்குமாறு வேண்டுகிறோம்.


1. தூரத்திலுள்ள ஊரிலிருந்து வரும் பிறைத்தகவலை அலட்சியப்படுத்தி ஒதுக்கலாம் என்பதும் அவ்வாறு அலட்சியப்படுத்துவதற்கு இரு ஊர்களுக்குமிடையேயுள்ள அதிகத்தூரம்தான் அடிப்படை என்பதும் மேற்படி அறிஞரின் பிறை நிலைப்பாடாகும். இந்த நிலைபாட்டிற்கு குர்ஆனிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் நேரடியான சொல், செயல், அங்கீகாரத்தோடு கூடிய ஸஹீஹான ஹதீஸிருந்தும் முதலில் அவர் ஆதாரம் தரவேண்டும். குரைப் விஷயத்தை வைத்து இனியும் மக்களை அவர் ஏமாற்ற முடியாது நிலை ஏற்பட்டள்ளதையும் நினைவூட்டுகிறோம்.


2. அருகிலுள்ள ஊரின் பிறைத்தகவலை அலட்சியப்படுத்தி ஒதுக்கக்கூடாது என்றும், அவ்வாறு அலட்சியப்படுத்துவதற்கு இரு ஊர்களுக்குமிடையேயுள்ள குறைந்ததூரம்தான் காரணம், என்றும் மேற்படி அறிஞர் கூறுகிறார். இதுதான் நாம் பிறைத் தகவலை ஏற்றுக் கொள்வதற்கு நிபந்தனை என்பதற்கும் குர்ஆனிலிருந்தும், ஸஹீஹான ஹதீஸிருந்தும் நேரடியான ஆதாரம் தரவேண்டும். முர்ஸலான, இட்டுக்கட்டப் பட்ட வாகனக்கூட்ட அறிவிப்பையோ, கிரமப்புற வாசிகள் பிறை பார்த்த பலவீனமான செய்திகளையோ இனி தூக்கி நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.


3. எத்தனை நிமிடம் அல்லது எத்தனை மைல் வித்தியாசத்தை அலட்சியப்படுத்தலாம்? என்பதற்கு அல்லாஹ்வோ, அவனது தூதரோ எந்த வரையறையும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் வரையறை செய்யாத ஒரு விஷயத்தை மார்க்கத்தின் பெயரால் வரையறை செய்வதற்கு இவருக்கோ, இவரது இயக்கத்திற்கோ என்ன உரிமை இருக்கிறது? மேலும் அப்படி வரையறை செய்யும் அதிகாரம் நம்மிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். அந்த அதிகாரத்தை வழங்கிய நேரடியான குர்ஆன் ஆயத்துகளையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகத் தர வேண்டுகிறோம்.


4. அடுத்ததாக கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும். எனவே நகரத்தில் காணப்படும் பிறை சுற்றியுள்ள கிராமங்களையும், சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிறை நகரத்தையும் கட்டுப்படுத்தும் என்பதும் இவரின் பிறைநிலைப்பாடு. இதற்கும் நேரடியான குர்ஆன் ஆயத்துகளையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் ஆதாரமாகத் தந்துவிட்டு இவ்வாறு பிரச்சாரம் செய்யட்டும்.


தத்தமதுபகுதி பிறையிலிருந்து தமிழக அளவு பிறை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ள இவர், தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஒரு நகர்ப்புறம், தமிழகத்தின் தென்கோடியுள்ள கன்னியாகுமரி சென்னையை ஒப்பிடுகையில் ஒரு கிராமம். கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும் என்ற விதிப்படி சென்னையின் பிறைத்தகவல் கன்னியாகுமரியையும், கன்னியாகுமரியின் பிறைத்தகவல் சென்னையையும் கட்டுப்படுத்தும். அதனாலேயே இந்த தமிழகப்பிறை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என்று கூறவருகிறாரா? யாமறியோம்.


5. இன்னும் ஓர் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள் என்றால் எத்தனை கிலோமீட்டர் தொலைவு என்று கேட்கலாம். கிலோ மீட்டரில் அளந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அதை நாமே தீர்மானம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஊர் என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு? என்றெல்லாம் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அதை நாம் தான் தீர்மானம் செய்கிறோம். என்று எழுதியுள்ளார். இப்படி எல்கையை நாமே தீர்மானிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக வரும் குர்ஆன் ஆயத்து எது? இதற்கு ஆதாரமான ஸஹீஹான ஹதீஸ் எந்தக் கிரந்தத்தில் அது உள்ளது? (பார்க்க : நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை அவரவர் முடிவு செய்து கொள்ளலாமா?)


அறிஞர் அவர்கள் தத்தமதுபகுதி பிறை நிலைப்பாட்டை தான் சரிகாணுவதற்கு சிரியாவை விட அருகில் உள்ள ஊரிலிருந்து வந்த பயணக் கூட்டத்தின் தகவலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்கவில்லை என்பதுவும் ஒரு காரணம் என்று தமது பிறை ஆய்வு புத்தகத்தில் எழுதியுள்ளார்.




6. சென்னையிலிருந்து கன்னியாகுமரிவரையுள்ள தூரம் சுமார் 700 கிலோ மீட்டர்களாகும். சிரியாவைவிட மதீனாவின் அருகிலிருந்த கிராமத்திலிருந்து வந்த வாகனக் கூட்டத்தின் தகவலையே நபி (ஸல்) அவர்கள் ஏற்கவில்லை என்ற நிலையில், 700 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சென்னையிலிருந்து பிறை பார்த்து தகவல் அறிவித்தால் கன்னியாகுமரியிலுள்ள இவரது இயக்கத்தினர் அதை ஏன் ஏற்கவேண்டும்? என்பதற்கு அறிஞர் பதில் சொல்லியாக வேண்டும். இவரது ஆய்வின்படி சென்னையின் பிறைத்தகவலை கன்னியாகுமரி மக்கள் நிராகரிக்கத்தானே வேண்டும். 'சிரியாவை விட அருகில் உள்ள ஊரிலிருந்து வந்த தகவலை ஏற்கவில்லை ' என்பதற்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறார்? ஒருவேளை 700 கிலோ மீட்டர் தூரம் என்பது நபி (ஸல்) அவர்கள் தூரம் என்று நிராகரித்த அளவைவிட மிக அருகாமை என்று சொல்லப் போகிறாரா? முதலில் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான வாகனக்கூட்டம் அறிவிப்பை ஸஹீஹான செய்திதான் என்று மேற்படி அறிஞர் நிரூபிக்கட்டும் அதன்பிறகு வாகனக்கூட்டத்தைப் பற்றி பேசட்டும்.


7. சிரியாவிலிருந்து மதீனாவரையுள்ள தூரம் சுமார் 1050 கிலோமீட்டர்களாகும். நிச்சயமாக சிரியா மதீனாவிற்கு இடைப்பட்ட தூரத்தைவிட சென்னை கன்னியாகுமரிக்கு இடைப்பட்ட தூரம் குறைவானதுதான். இருந்தாலும் 'குரைப் அறிவிக்கும் ஹதீஸின் அடிப்படையிலும் ஓர் ஊரில் காணப்பட்ட பிறை மற்றொரு ஊரின் நோன்பைத் தீர்மானிக்காது நாம் பிறை பார்த்து விட்டதால் நாம் ரமழானை அடைந்து விட்டோம் ' என்று இவர் கூறுவதாலும் மேற்கண்ட கேள்வியை கேட்டுள்ளோம். இன்னும் குரைபுடைய அறிவிப்பைப் போன்று ஹதீஸ் அல்லாத சம்பவங்களும் மார்க்க ஆதாரமாகுமா? என்பதையும் அறிஞர் அவர்களே விளக்கி விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


8. இன்னும், மேகமூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். பிறை பார்க்க வேண்டும் என்பதே சந்தேகத்திற்குரிய 30-ஆம் இரவில் தான். என்றும் கூறியுள்ளார். ஒரு மாதத்தின் 30-வது இரவு சந்தேகத்திற்குரிய இரவு என்பதற்கும், அந்த 30-வது இரவில்தான் பிறையை பார்க்க வேண்டும் என்பதற்கும் வளைக்காமல் திரிக்காமல் நேரடியான குர்ஆன் ஆயத்துகளையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டிவிட்டு மக்களிடையே அவர் பிரச்சாரம் செய்யட்டும். (பார்க்க : யவ்முஷ்ஷக் என்ற வாதம் எடுபடுமா?)




இவ்வாறு அறிஞர் அவர்கள் தமது நிலைப்பாடு என்று கூறியுள்ளதிலேயே பல ஆதாரமற்ற செய்திகள் நிறைந்து காணப்படுகின்றன. இப்படிப்பட்ட செய்திகளைத் தொகுத்தே பிறை ஓர் ஆய்வு என்று புத்தகம் வெளியிட்டுள்ளார். புத்தகம் முழுவதும் பிறைபற்றிய அபத்தங்களாகவே உள்ளன, உருப்படியான ஆய்வுகள் ஏதும் அதில் இல்லை.


இறுதியாக ஹானலுலு நாட்டில் வியாழக்கிழமை அன்று சுபஹூ தொழுதுவிட்டு அன்றைய லுஹருக்கு நியூசிலாந்து நாட்டிற்குச் சென்று விடுகின்றோம். ஆனால் அங்கே வெள்ளிக்கிழமை. இப்போது நாம் ஜும்ஆ தொழவேண்டுமா? வியாழக்கிழமையின் லுஹர் அஸர் மக்ரிப் இஷா மறுநாள் சுபுஹூ ஆகிய தொழுகைகளைக் களாச் செய்ய வேண்டுமா? என்று பயங்கரமான ஒரு கேள்வியை கேட்டுவிட்டதாகக் காட்டியுள்ளார். கேள்வி கேட்பதுதான் அவரது உரிமை, அதற்கு பதில் சொல்வது ஹிஜ்ரி கமிட்டியினரின் கடமை என்று நினைத்துக் கொண்டார் போலும். அதனால்தான் பிறைக்கும் பிரயாணத்திற்கும் முடிச்சு போட்டுள்ளார்.


ஹானலுலு தீவானது நீயூசிலாந்து நாட்டிலிருந்து சுமார் 22 மணிநேரங்கள் பின்தங்கிய ஒரு தீவாகும். இப்பூமிப்பந்தில் நியூசிலாந்து கிழக்குத் திசையின் ஆரம்பப் பகுதியில் இருக்கிறது என்றால் மேற்கு திசையின் முடிவில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றுதான் ஹானலுலு. சர்வதேசத்தேதிக் கோட்டிற்கு அருகாமையிலுள்ள நாடுகளான ஹானாலுலு தீவிலிருந்து நியூசிலாந்து நாட்டிற்கு பிரயாணம் செய்வது என்பது ஏதோ சென்னையிலிருந்து மும்பைக்கு விமானத்தில் பறப்பதைப் போன்றுதான் இருக்கும் என்ற அறிஞரின் வீன் கற்பனையால் விளைந்த கேள்வியே இது.


சுமார் 7500 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இவ்விரு நாடுகளுக்கும் விமானத்தில் பிரயாணம் செய்வதென்றால் குறைந்த பட்சம் 11 மணிநேரங்களாவது வேண்டும். 11 மணிநேரம் என்பது கூட மிகமிகக் குறைந்த அளவு பிரயாண நேரமாகும். பொதுவாக சொல்வதென்றால் பூமியின் நேர்-எதிர் சுழற்சிகளை மையப்படுத்தி சர்வதேசத்தேதிக் கோட்டிற்கு அருகாமையிலுள்ள இவ்விருநாடுகளை இணைக்கும் விமான சேவைக்கான பாதை 12 மணிநேரத்திலிருந்து 18 மணிநேர கால அவகாசங்கள் எடுக்கக்கூடிய கடினமான பயணமாகும் அது. இதில் ஒரு மனிதன் பிரயாணத்திற்காக வேண்டி முன் ஏற்பாடாக எடுத்துக் கொள்ளும் கால அவகாசங்கள் தனி. இப்படி இருக்க அறிஞர் சொல்வதைப் போல 'ஹானலுலு நாட்டில் வியாழக்கிழமை அன்று சுபுஹூ தொழுதுவிட்டு அன்றைய லுஹருக்கு நியூசிலாந்து நாட்டிற்குச் சென்று விடுகின்றோம். ஆனால் அங்கே வெள்ளிக்கிழமை' என்று வாதம் வைப்பதற்கு முன்னர் அவ்வாறு பயணம் செல்ல முடியுமா என்பதை அறிஞர் பெருமகனார் முதலில் கவனித்திருக்க வேண்டுமல்லவா?


மேற்படி அறிஞர் அவர்கள் பிறை பற்றி பேசும்போதும் எழுதும் போதும், பேச்சு வழக்கில் உள்ளவைகளையும் குத்துமதிப்பான விஷயங்களையுமே முன்னிலைப் படுத்துவதைக் காண்கிறோம். எனவே ஒரு பேச்சிற்காக அவ்வாறு செல்ல முடியும் என்றே வைத்துக்கொண்டு அவரது கேள்வியை அனுகுவோம்.


பிரயாணத்தின் சட்டம் என்ன? பிரயாணத்தின்போது நோன்பு நோற்பது கடமையா? பிரயாணத்தின்போது 'ஜம்மு', 'கஸ்ரு' என்று தொழுகைகளுக்கு சலுகைகள் உள்ளதே. சரி ஒருபர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்டமுறை உபரியாகத் தொழுது விட்டால் அதில் ஏதும் குற்றமா? என்பதைப்பற்றி இஸ்லாமிய சட்டம் தெரியாதவர்கள் எழுப்பும் கேள்வி போலத்தான் மேற்படி தவ்ஹீது அறிஞரின் கேள்வியும் உள்ளது.


குறிப்பிட்ட வக்தில் தொழும் தொழுகையின் நேரங்களையும், நோன்பு நோற்றலையும் ஒப்பிடவே இயலாது என்பதை முன்னரே விளக்கி விட்டோம். இருப்பினும் மேற்கண்ட அக்கேள்வியின் பதிலை அவராகவே விளங்கும் வண்ணம் அதே கேள்வியை திருப்பி நாம் அவரைப் பார்த்துக் கேட்கிறோம்.


அதாவது ஹானலுலு நாட்டில் தத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிலுள்ள மேற்படி அறிஞரின் இயக்கத்தைச் சார்ந்த ஒருவர் வியாழக்கிழமை ரமழானின் 29-வது நோன்பை நோற்றுக் கொண்டு சுப்ஹூம் தொழுவிட்டு நியூசிலாந்து நாட்டிற்குச் சென்று விடுகிறார். ஆனால் நியூசிலாந்து நாட்டிலோ ஷவ்வால் முதல்நாள் வெள்ளிக்கிழமை. முஸ்லிம்கள் ஈத்பெருநாளை கொண்டாடி விருந்தோம்பலில் இருக்கின்றனர். இப்போது அறிஞரின் இயக்கத்தைச் சார்ந்த அவர், தத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டின்படி நோன்பை தொடர வேண்டுமா? அல்லது நோன்பை பாதியிலேயே துறந்துவிட்டு (முறித்துவிட்டு) பெருநாள் கொண்டாட வேண்டுமா?


நோன்பைத் தொடர வேண்டும் என்றால் அதற்கு மார்க்க ஆதாரம் என்ன? இல்லை நோன்பை பாதியிலேயே துறந்துவிட்டு (முறித்துவிட்டு) பெருநாள்தான் கொண்டாட வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் என்ன?


மேற்படி நபர் நோன்பை முறித்தால் ரமழான் மாதத்தில் 28 நோன்புகள்தான் அவருக்குக் கிடைத்திருக்கும். எனவே அவர் கிடைக்காத ஒரு நோன்பை அவர் பின்னர் களாச் செய்ய வேண்டுமா? அல்லது அந்த நபர் விடுபட்ட அந்த நோன்பை களாச் செய்யத் தேவையில்லையா? களாச் செய்யத்தான் வேண்டும் என்றால் அதற்கு குர்ஆள் சுன்னாவின் ஆதாரம் என்ன? களாச்செய்யத் தேவையில்லை என்றால் அவருடைய ரமழான் மாதத்திற்கு 28 நாட்கள்தானா? இவற்றிற்கு அறிஞர் முதலில் பதில் சொல்லட்டும்.


நாம் நோன்பைப் பற்றி பேசும்போது தொழுகை நேரத்தை இழுக்கும் இவர், நம்மிடம் தொழுகையை பற்றி பேசினால் நாம் நோன்பை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினால் அதில் என்ன தவறு இருக்கிறது?. இன்னும் இவை அவரது இயக்கத்தின் கூற்று மட்டுமல்ல. தத்தம்பகுதி பிறையை பிரச்சாரம் செய்யும் அனைவரும் கருத்தும் இவையாகத்தான் உள்ளன. எனவே இவ்விளக்கங்கள் தத்தம்பகுதி பிறை Local Sighting உள்ள அனைவருக்கும் பொருந்தும். இன்னும் தத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டால் எழும் பல்வேறு கேள்விகளை தனித் தலைப்பில் பிற்பகுதியில் வரிசைப் படுத்தியுள்ளோம்.

23. விடையே இல்லாத வினாக்களா இவை?

முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக வைத்து குறித்த கிழமைகளில் பின்பற்றப்பட வேண்டும். இதுதான் படைத்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வின் கட்டளை. ஆம்! பிறைகளை வைத்தே மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். அதாவது


1. ரமழான் மாதத்தின் (பர்ளு) கடமையான நோன்பைச் சரியான தினத்தில் துவங்குவது,

2. ஈதுல்ஃபித்ர், ஈதுல் அழ்ஹா ஆகிய இருபெருநாட்களை சரியான தினத்தில் கொண்டாடுவது,

3. துல் ஹஜ்ஜூ 8-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள் வரை ஹஜ்ஜூவுடைய கிரியைகளை நிறைவேற்றுவது,

4. முஹர்ரம் மாதத்தின் 9-வது மற்றும் 10-வது நாட்களில் ஆஷூரா நோன்புகளை நோற்பது,

5. அய்யாமுல் பீழ் என்னும் மாதந்தோரும் வெண்மை நாட்களின் சுன்னத்தான மூன்று நோன்புகள்,

6. ஹஜ்ஜூக்கு செல்லாதோர் துல்ஹஜ்ஜூ மாதம் 9-வது நாள் அரஃபா நோன்பு நோற்பது,

7. அனைத்து இஸ்லாமிய மாதங்களையும் ஆரம்பித்தல்,

8. குர்ஆன் கூறும் புனித மாதங்களைச் சரியாகத் துவங்குதல்,

9. ஒரு தாய் தனது குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய காலம்,

10. தலாக் சொல்லப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்ணுடைய இத்தாவின் மாதக் கணக்கு,

11. கடன் கொடுக்கல் வாங்கள் பற்றிய தவணை பத்திர காலங்களை குறித்தல்,


உட்பட ஒரு முஸ்லிமின் அனைத்து வணக்கங்களும், வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையிலும், குறித்த கிழமைகளிலும் பின்பற்றப்பட வேண்டும்.


பிறைகளின் அனைத்து வடிவநிலைகளையும் கவனித்தும், கணக்கிட்டும் வரவேண்டும் என்பதே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் கட்டளையும், வழிமுறையும் ஆகும் (ஆதாரம் முஸன்னஃப் அப்துர்ரஸாக் 7306). நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே தெரிந்து வைத்துள்ளார்கள் (பைஹகீ-8018, இப்னு குஜைமாஹ்-2024). துல்கஃதா மாதத்தின் இறுதி ஐந்து நாட்கள் மீதம் இருந்த போது ஹஜ்ஜூக்கு சென்றோம் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் (புஹாரி 1633). அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஷஃஅபானுடைய பிறைகளை மனனம் செய்யும் அளவுக்கு கவனித்து வருவார்கள் (அபூதாவூத் 1993) என்பதையும் அறிகிறோம். நபி (ஸல்) அவர்களின் அன்றைய கால நடைமுறையும், இன்றைய நவீனகால அறிவியல் முறையும் பிறைக் கணக்கீட்டில் முரண்பாடில்லாமல் அமைந்திருப்பது மிகப் பெரும் அற்புதமாகும்.


முஸ்லிம்களில் பலர் 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற சொற்றொடர் வரும் நபிமொழியை பிறையை பார்த்த பின்னரே மாதத்தைத் துவங்க வேண்டும், நோன்பு வைக்க வேண்டும் எனத் தவறாக விளங்கியுள்ளனர். அதனால் ஒரு வருடத்திற்கு ஷஃபான், மற்றும் ரமழான் மாதங்களில் மட்டும் பிறைகள் குறித்து பேசுகின்றனர். மேலும் மாதத்தின் 29-வது நாள் என்று அவரவர்கள் தாங்களாகவே தீர்மானித்துக் கொண்ட ஒரு நாளில் தெரியாத பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்கின்றனர். இச்செயலையோ, பிறையை பார்த்த பின் நோன்பு வைக்க வேண்டும் என்றோ மார்க்கம் நமக்குக் கற்றுத் தரவில்லை.


இன்னும் 30-நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் தேய்பிறைகளின் இறுதி நாட்களான 27, 28, 29 ஆகிய நாட்களில் பிறையை மேற்கு திசையில் மஃரிபு வேளையில் பார்க்க இயலாது. மாறாக அவற்றை சூரியன் உதயத்திற்கு முன்னர் ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில்தான் பார்க்க முடியும். நாம் எந்தக் கிழமையில் பிறையைக் கவனிக்கின்றோமோ அது அந்த கிழமைக்குரியது, அடுத்த நாளுக்குரியது அல்ல (முஸ்லிம் - 1885) என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.


சந்திரனின் அனைத்து படித்தரங்களையும், அதற்குரிய மனாஜிலையும் தொடர்ந்து கவனமாக அவதானித்து வரும் ஹிஜ்ரி கமிட்டியினர்களாகிய நாம் தான் அப்பழுக்கற்ற ஒரிஜினல் 'ஸூமூ லி ருஃயத்திஹி'யினர். ஒரு வருடத்திற்கு இரண்டு தினங்கள் மட்டுமே பிறைபற்றி சிந்திப்பவர்கள் 'ஸூமூ லி ருஃயத்திஹி'யினர் ஆகவே மாட்டார்கள். இதை முன்னரே விளக்கி விட்டோம்.


இவ்வளவு விளங்கங்களுக்குப் பிறகும் 'ஸூமூ லி ருஃயத்திஹி ' என்ற ஹதீஸ் வாசகத்தை வைத்துக் கொண்டு 29-வது நாள் என்று அவரவர்கள் தாங்களாகவே தீர்மானித்துக் கொண்ட ஒரு நாளில் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்த நாள்தான் புதிய மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என்பது மார்க்கக் கட்டளையில்லை. மேலும் பிறைகள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் நடைமுறை எவ்வாறு இருந்தது என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். மாதத்தின் 29-வது நாள் அன்று மஃரிபு வேளையில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து பின்புதான் அமல் செய்ய வேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் மக்களுக்கு போதிப்பது மிகவும் தவறாகும். அவ்வாறு பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி கீழ்க்காணும் கேள்விகளை மிகமிக கண்ணியத்தோடு வினவுகிறோம். இதற்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் தயவுசெய்து நேர்மையான முறையில் சிந்தித்து பதில் தாருங்கள் என்று கேட்கிறோம்.


1. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தங்களது வாழ்நாளில் என்றாவது ரமழான் அல்லது ஷவ்வால் மாதத்தில் 29-வது நாள் என்று நீங்கள் தீர்மானிப்பதுபோல தீர்மானித்துக் கொண்டு அந்த ஒரு நாளில் மட்டும் பிறையை அவர்களின் புறக்கண்ணால் பார்த்து அறிவித்துள்ளார்களா? பிறர் பிறையை பார்த்தால் அதை என்னிடம் வந்து அறிவியுங்கள் என்று என்றாவது கூறினார்களா? ஸஹாபாக்களில் யாரையாவது பிறைக் கமிட்டியினராக நியமித்தார்களா? (இப்படி நாம் கேட்பதால் நாம் பிறை பார்ப்பதை எதிர்க்கிறோம் என்று திசை திருப்ப வேண்டாம். மாறாக அனைத்து நாட்களின் பிறைகளையும் கவனமாக பார்த்து அவதானிக்க நீங்கள் தவறுவதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். நீங்கள் இன்று செய்து கொண்டிருப்பதை போல நபி (ஸல்) அவர்கள் ஒருகாலும் செய்திடவில்லை என்கிறோம்).


2. நபி (ஸல்) அவர்கள் எந்தத் திசையில்? எந்த வேளையில்? எந்தெந்த நாட்களில்? பிறையைப் புறக்கண்களால் பார்க்க நமக்கு கட்டளை இட்டுள்ளார்கள்? மாதத்தின் 29-வது நாள் என்று நீங்கள் தீர்மானிப்பது போன்றுதான் அவர்களும் தீர்மானித்துக் கொண்டார்களா? அப்படியானால் பிறைகளின் படித்தரங்களைப் பற்றிய (2:189, 10:5, 36:39) அல்லாஹ்வின் அறிவிப்புகளையும், கட்டளைகளையும் அவர்கள் எப்படி புரிந்து நடைமுறைப் படுத்தினார்கள்?


3. வளர்பிறைகள், தேய்பிறைகள், பவுர்ணமி என்று அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் புறக்கண்ணால் பார்த்து வந்தார்களா? அவர்கள் தினமும் பிறந்த பிறையை அவதானித்தார்களா? அல்லது மாதத்தின் 29-வது நாள் மட்டும் பிறையை பார்த்தார்களா? இதற்கு நேரடியான ஹதீஸ் ஆதாரத்தைத் தரமுடியமா? இவ்வாறு கேட்பதற்குக் காரணம் மாதத்தின் 29-வது நாள் மாட்டும்தான் பிறையை பார்க்க வேண்டும் என்று மார்க்கம் கட்டளை இட்டுள்ளதாக நீங்கள் பிரச்சாரம் செய்வதால்தான் இதற்கு நேரடியான ஹதீஸ் ஆதாரத்தைக் கேட்கிறோம்.


4. ஷஃஅபான் 29 மற்றும் ரமழான் 29-வது நாள் என்று நினைத்துக் கொண்டு அன்று மஃரிபு வேளையில் மேற்கு திசையை நோக்கி நின்று கொண்டு பிறையைப் பார்ப்பதை கற்றுக் கொடுத்தது யார்? நபி (ஸல்) அவர்கள் மேற்படி இரு தினங்களில் மட்டும் மேற்குத் திசையில் மஃரிபு நேரத்தில் பிறையைப் பாருங்கள் என்று சொல்லி உள்ளார்களா? அன்று 29-வது நாள்தான் என்ற முடிவிற்கு எப்படி நீங்கள் வந்தீர்கள்? மாதத்தின் 28, 27, 26 போன்ற மாதத்தின் தேய்பிறையின் இறுதி நாட்களிலும் பிறையானது மேற்கு திசையில் மஃரிபு வேளையில்தான் தெரிகிறதா?


5. 'ஸூமூ லி ருஃயத்திஹி ' என்றால் பிறந்த பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று பொருள் என மேடையில் முழங்கும் எந்த ஆலிம்களும் பிறைகளை புறக்கண்ணால் பார்த்து வருவதில்லை என்பதே உண்மை. இந்நிலையில் அத்தகைய ஆலிம்களின் தவறான பிரச்சாரத்தினால்தான் மூன்று வௌ;வேறான நாட்களில் பெருநாள் உட்பட முஸ்லிம்களுக்கு ஒரு கிழமைக்கு மூன்று தேதிகள் மற்றும் மூன்று கிழமைக்கு ஒரு தேதியும் வருகிறது. இதைத்தான் குர்ஆனும் சுன்னாவும் போதிக்கிறதா? இதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் பிறந்த பிறையை சரியாக கணக்கிடாமலும், பிறந்த பிறையை பார்க்காமலும் இருந்து விட்டால் சம்பந்தப்பட்ட அந்த மாதம் துவங்காமல் இருந்துவிடுமா என்ன?


6. ஷஃஅபான் மாதத்தின் 29-வது நாள் என்று நீங்களாக எண்ணிக் கொள்ளும் அந்த ஒரு நாளில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்துவிட்டு, அதன் பின்புதான் ரமழானின் முதல் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள். அதுபோல ரமழானின் 29-வது நாள் என்று நீங்கள் முடிவுசெய்துள்ள ஒருநாளில் மஃரிபு வேளையில் 'பெருநாள் பிறையை பாருங்கள்' என்று மக்களைத் தூண்டுகிறீர்கள். பொதுவாக ஒரு மாதத்தின் 29-வது நாளன்று பிறை புறக்க்கண்களுக்கு மேற்குத் திசையில் தெரியுமா? தெரியாதல்லவா?


இக்கேள்வி ஒருபுறம் இருக்கட்டும், ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும் துருவப் பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் நிலை என்ன? 6 மாத பகல் காலங்களில் ரமழான் மாதம் வரும் பட்சத்தில் அவர்கள் அந்த 6 மாதங்களும் பட்டினி கிடக்க வேண்டுமா? அல்லது அந்த ரமழான் முழுவதும் பிறை தெரியவில்லை என்றால் அம்மக்களுக்கு நோன்பே கடமை இல்லையா? இன்னும் அத்துருவ பிரதேச நாடுகளிலுள்ள பல ஊர்களில், ஒரு மாதத்திற்கு சுமார் 10 நாட்கள் வரை சந்திரன் உதயமாகாமல் இருக்கும். அதுபோல சந்திரன் மறைவும் சுமார் 10 நாட்கள் வரை இருக்காது. அப்பகுதி மக்களுக்கு சட்டம் என்ன?. பக்கத்து நாடுகளை வைத்து கணக்கிட்டுக் கொள்வோம், இதற்கு தஜ்ஜால் சம்பந்தமாக வரும் ஹதீஸில் கணக்கிட்டுக் கொள்வதற்கு ஆதாரம் இருக்கிறது என்று கூற வேண்டாம். பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்புதான் அமல்செய்ய வேண்டும் என்றும், பிறையை கண்களால் பார்க்காமல் நோன்பை தொடங்கக் கூடாது என்றும் நீங்கள் கூறுகிற உங்களிள் சட்ட விதியின் அடிப்படையில் இதற்கு பதில் கூறுங்கள்.


7. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்தார்களா? ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே பார்த்தார்களா? காரணம் ஒரு வருடத்தின் பன்னிரண்டு மாதங்களில் ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் மாதங்களைத் துவங்க மட்டுமே பிறந்த பிறையை தேடி அலையும் படலத்தை நடத்துகிறீர்கள். ஏனைய 9 மாதங்களிலும் நீங்கள் காலண்டரைதான் பின்பற்றுகிறீர்கள் அல்லது பிறைகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இப்படித்தான் மார்க்கம் நமக்குக் கற்றுத் தருகிறதா?


இப்படி நாம் கேள்வி எழுப்பி வருவதால், பிரபல தமிழக இயக்கம் தற்போது மாதக் கடைசியில் பிறை அறிவிப்பு தங்கள் இணையதளத்தில் வெளியிடுகிறது. அதில் பெரும்பாலும் மேகமூட்டம் என்ற வேடிக்கையும், தமிழக எல்கைக்குள்தான் பிறை பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் காட்சியளிக்கிறதே தவிர, உருப்படியான தகவல்கள் இடம் பெறுவதில்லை.


8. விஞ்ஞானத்தின் துணைகொண்டு துல்லிய கணக்கீட்டின் அடிப்படையில் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction), பவுர்ணமி (Full Moon), தலைப்பிறை (First Waxing Crescent) போன்றவற்றை அறிவிக்கிறோம். அப்போது நாங்கள் என்ன சொல்கிறோம் என்று கூட விளங்க முற்படாமல் நபி (ஸல்) அவர்கள் பிறந்த பிறையை புறக் கண்ணால்தான் பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள் என்று கூறி, அல்லாஹ்வின் செயலாக உள்ள அறிவியல் உண்மையை அலட்சியம் செய்றீர்கள். அப்படி அறிவியின் துல்லியமான கணக்கீட்டை மறுக்கும் நீங்கள் தலைப் பிறையை இரவு 10 மணிக்கு பார்த்ததாகவோ, அல்லது நன்பகல் வேளையில் பார்த்ததாகவோ ஒருவர் அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது அந்த அறிவிப்பை மறுப்பீர்களா? விஞ்ஞானத்தின் துணையின்றி அப்பிறை அறிவிப்பை நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்? அல்லது எப்படி மறுப்பீர்கள்?


9. தலைப்பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதாக வரும் தகவலை மாநில, தேசிய அல்லது சர்வதேச எல்லைக் கோட்டை வைத்து வரையறுக்க ஆதாரம் என்ன? அத்தகைய எல்லை கோட்டிற்கு மார்க்கம் தரும் முக்கியத்துவம்தான் என்ன? அவ்வாறு மாநில, தேசிய அல்லது சர்வதேசத் தகவலை வைத்து ரமழான் அல்லது பெருநாள் என்று அறிவிப்பு வெளியிடுபவர்கள் சாட்சி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் நடைமுறைபடுத்திய இறை நம்பிக்கையாளர்களின் இரண்டு சாட்சிகளை முன்னிறுத்திதான் அறிவிக்கிறார்களா? அல்லது இனம் காணாத நபர்களின் அறிவிப்புகளை ஏற்றுக் கொண்டு அறிவிக்கின்றனரா? அப்பிறை அறிவிப்புக்கு சாட்சியளித்தவர்களை பற்றி முறையாக அறிவிப்பு செய்யப்படுகிறதா? அவர்களின் சாட்சியத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையிலேயே அக்கரை எடுக்கின்றனரா?


10. பிறையை 29-வது நாள் மாலை 30-வது நாள் இரவு, மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில், புறக்கண்ணால் பார்க்க வேண்டும். அப்படி பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்புதான் ரமழான் மாதத்தைத் துவங்குவோம் என்று மார்தட்டுபவர்கள், தத்தமது இயக்கங்கள், அமைப்புகள் பெயரில் முற்கூட்டியே காலண்டர் அச்சிட்டு வியாபாரம் செய்வதேன்? இதுமட்டும் நபிவழிக்கு முரணானது இல்லையா?.


இவர்களின் வாதப்படி 29-வது நாளின் மாலையில் மேகம் மூட்டமாகி வானத்தை மேகம் சூழ்ந்து பிறையை மறைத்திருந்தால்தான் அந்த மாதத்திற்கு 30 நாட்களாக முடிவு செய்ய வேண்டும். இத்தகைய கருத்துடைய இயக்கத்தினர் தயாரித்து வெளியிடும் நாட்காட்டிகளில் இன்னின்ன மாதங்கள் 29 நாட்களில் முடிகின்றது என்றும், இன்னின்ன மாதங்கள் 30 நாட்களில் முடிகின்றது என்றும் எவ்வாறு முற்கூட்டியே அச்சிட முடிகிறது? ஒவ்வொரு மாதத்தின் 29-வது நாள் பின்னேரம் வரவேண்டிய மேகக் கூட்டங்கள் இவர்கள் காலண்டர் தயாரிப்பதற்காக வருட துவக்கத்தில் மொத்தமாக வந்து விட்டனவா? ஹிஜ்ரி நாட்காட்டியை எதிர்ப்பதற்கு வரிந்து கட்டிக்கொண்டு நிற்பவர்கள் இவற்றை சிந்திக்க மறந்ததேன்? முதலில் அவர்களின் பிறை நிலைப்பாடு சரியானதுதானா? அதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரமுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய தவறுவதேன்?


பிறைகளின் அனைத்து வடிவநிலைகளையும் கவனித்தும், கணக்கிட்டும் வரவேண்டும் என்பதே அல்லாஹ்வுடைய கட்டளையும், தூதர் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் ஆகும். இவற்றை நாம் பவ்வேறு ஆதாரங்களையும் நிறுவி குறிப்பிட்டுள்ளோம். மேற்படி இக்கேள்விகளை நாம் கேட்பது சம்பந்தப்பட்டவர்களின் அறியாமையை வெளிக்கொண்டு வந்து மக்கள் மத்தியில் அவர்களைக் இழிவு படுத்துவதற்காக அல்ல. நிச்சயமாக அப்படிப்பட்ட எத்தகைய எண்ணமும் எங்களுக்கு இல்லை. மாறாக மாதத்தில் 29-வது நாள் என்று ஒருநாளை தீர்மானித்துக் கொண்டு அந்த ஒரு நாளில் மட்டும் பிறையை பார்க்க வேண்டும் என்று நம்புபவர்கள் சிந்திப்பதற்காகத்தான் இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளோம். எதிர்மறையான பொருளில் உண்மையை விளக்குவதற்காகதான் நாம் மேற்படி கேள்விகளை கேட்டுள்ளோம்.

24. சர்வதேசப் பிறைக்கு ஆதாரமுள்ளதா? இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா?

சர்வதேசப்பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும் என்று அக்கருத் துடையோர் கூறி வருகின்றனர். தத்தமதுபகுதி பிறை மற்றும் மண்டல, மாநில, தேசியப் பிறை நிலைப்பாடு களிலிருந்து முன்னேற்றம் அடைந்து நாங்கள் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கவே சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம் என்றும் கூறுகின்றனர்.


எனவே மேற்படி சர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்க ஆதாரம் இருக்கிறதா? இந்நிலைப்பாடு சரியானதுதானா? அறிவுப்பூர்வமானதுதானா? என்பதை உணர்த்துவதற்காக சர்வதேசப்பிறை கருத்துடையோரை நோக்கி கீழ்க்காணும் கேள்விகளை மிகமிக கண்ணியத்தோடு வினவுகிறோம். இக்கேள்விகளில் பல, மாநில மற்றும் தேசியப் பிறை நிலைப்பாட்டை பின்பற்றுபவர்களுக்கும் பொருந்தும். இதற்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் நேரடியான விடைகளைக் கண்டறிய முற்படுங்கள் என்றும் வேண்டுகிறோம்.


1. இன்று உலகில் சுமார் 150 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு கிழமைக்கு மூன்று தேதிகளும், ஒரு தேதிக்கு மூன்று கிழமைகளும் ஏற்படுத்தப்பட்டு நாட்காட்டியின் அடிப்படையே தகர்க்கப்பட்டு விட்டது. இதனால் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளை சுட்டிக்காட்டி மேற்படி நாளில் வருகை தாருங்கள் என்று யாரையும் அழைக்கக்கூட இயலாத துர்பாக்கிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாம் கேட்பது என்னவெனில் இத்தகைய அவல நிலையைப் போக்கிட முரண்பாடற்ற, துல்லியமான, குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த ஒரு இஸ்லாமிய சந்திர நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றா இல்லையா?


2. அவ்வாறு துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசர அவசியம்தான் என்றால், மஃரிபு வேளையில் மறையும் பிறையை புறக்கண்களால் பார்த்து விட்டு அடுத்த நாளை முதல் நாளாகக் கொள்ளும் பிறை நிலைப்பாட்டின் மூலம் அத்தகைய நாட்காட்டியை ஏற்படுத்திட இயலுமா?


3. துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமில்லை என்று நீங்கள் கருதினால், நாட்காட்டியையும், அதை கணக்கிடுவதையும் வலியுறுத்தும் 2:189, 10:5, 55:5, 17:12, 9:36,37, 36:39,40, 6:96 போன்ற இறை வசனங்கள் வலியுறுத்துவது என்ன?


4. சர்வதேச அளவில் பிறையைப் பார்க்க வேண்டும் என்ற நிலைப்பாடு உலகின் அனைத்து நாடுக ளையும், அதன் மக்களையும் 24 மணிநேரம் என்ற ஒருநாளுக்குள் உள்ளடக்கிய ஒன்றா? புரியும்படி சொல்வதென்றால் சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின் எல்கை என்ன? சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின் எல்கையானது தூரத்தை அடிப்படையாகக் கொண்டதா? அல்லது நேரத்தை அடிப்படையாகக் கொண்டதா? அதை வலியுறுத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்கள் எங்கே உள்ளது?


5. உலக நேரம் 16 மணிக்குப் பின்னர் (அதாவது அமெரிக்கப் பகுதியில்) ஒரு வெள்ளிக் கிழமையில் முதல் நாளின் பிறை அது அஸ்தமிக்கும் மஃரிபு வேளையில் புறக்கண்களுக்குத் தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். சர்வதேசப்பிறை நிலைப்பாட்டின் படி அது ரமழான் தலைப்பிறை என்றே ஒரு வாதத்திற்காக கொள்வோம். அவ்வாறு அந்த வெள்ளிக்கிழமை மஃரிபு வேளையில் அமெரிக்காவில் பிறை பார்க்கப்படும்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனிஷியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்குப் பகுதியிலுள்ள நாட்டு மக்கள் அடுத்த நாளான சனிக்கிழமையின் பகல் பொழுதில் இருப்பார்கள். அப்போது அந்நாடுகளிலுள்ள முஸ்லிம்களின் நிலைமை என்ன? அந்நாட்வர்கள் ஞாயிற்றுக் கிழமைதான் ரமழானின் முதல் நோன்பைத் துவங்க முடியும். எனவே அங்குள்ள முஸ்லிம்கள் ரமழான் மாதத்தின் முதல் நோன்பை சர்வதேச அமெரிக்க முஸ்லிம்களைப் போல சனிக்கிழமை அன்று துவங்க இயலாமல் போகிறதே இதற்கு சர்வதேசப்பிறை நிலைப்பாடு கூறும் தீர்வு என்ன?


6. மேற்படி கிழக்கத்திய நாடுகளிலுள்ள மக்கள் ஞாயிற்றுக் கிழமையைத்தான் ரமழான் முதல் நாளாகக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு கொண்டால் சர்வதேச முஸ்லிம்களுக்கு ரமழான் முதல் நாள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று இரண்டு வௌ;வேறு கிழமைகளில் வருகிறதே? இப்படி வருவது சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின்படி சரியானதுதானா? இதற்கு குர்ஆன் சுன்னா ஆதாரங்கள் எங்கே?


7. அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை மஃரிபில் பிறை தென்படும்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனிஷியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் சனிக்கிழமை என்ற அடுத்த நாளுக்குள் சென்று விட்டதால், பெருநாள் முடிந்த பின்னர் அந்நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் நோற்க இயலாது போன அந்த முதல் நாளின் நோன்பை களாச் செய்ய வேண்டுமா? அவ்வாறு களாச் செய்ய வேண்டு மென்றால் அதற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன் ஆயத்து எது? இதற்கு சுன்னாவின் நேரடி வழிகாட்டல் எங்கே உள்ளது?


8. சர்வதேசப்பிறை நிலைப்பாட்டின்படி சில நாடுகளிலுள்ள மக்கள் நோற்க இயலாது போகும் ரமழான் முதல்நாளின் நோன்பை பெருநாள் தினத்திற்குப் பின்னர் களாச் செய்வதுதான் மார்க்கச் சட்டம் என்றால் சர்வதேச பிறை நிலைப்பாட்டின்படி சர்வதேச முஸ்லிம்களில் ஒருசாராருக்கு ரமழான் மாதம் 30 நாட்களாக இருந்தால் பிறிதொரு சாராருக்கு ரமழான் 29 நாட்களில் முடியும். அதேபோல ஒருசாராருக்கு ரமழான் 29 நாட்களாக அமைந்து விட்டால் பிரிதொரு சாராருக்கு 28 நாட்களிலேயே மாதம் முடிந்து விடும். இதுதான் சர்வதேசப்பிறை நிலைப்பாடு தந்த பிறைத்தீர்வா? இது சர்வதேசப்பிறை என்ற நிலைப்பாட்டை உலக முஸ்லிம்கள் நடைமுறைபடுத்த முடியாமல் ஏற்பட்ட தோல்வியாக இது தெரியவில்லையா?


9. சர்வதேசப்பிறை கருத்துடைய சிலர் இன்று துல்லியமான பிறைக் கணக்கீடை 'பித்அத்' என்றும் 'ஹராம்' என்றும் பிரச்சாரம் செய்யத் துணிந்துள்ளனர். இஸ்லாமிய மார்க்கத்தில் சந்திர மாதத்தை முற் கூட்டியே கணக்கிடுவது 'பித்அத்' என்பதற்கோ 'ஹராம்' என்பதற்கோ குர்ஆன் ஹதீஸிலிருந்து நேரடியான ஆதாரத்தைத் தரமுடியுமா?


10. பிறையைப் புறக்கண்களால் பார்த்த பின்னரே நோன்பு வையுங்கள், பிறையைப் புறக்கண்களால் பார்த்த பின்னரே நோன்பை விடுங்கள் என்று ஹதீஸ்கள் போதிப்பதாகவும், அவை சர்வதேசப் பிறை நிலைப்பாட்டைத்தான் குறிக்கிறது என்றும் சொல்கின்றனர். அப்படியெனில் தத்தமதுபகுதி பிறை மற்றும் மண்டல, மாநில, தேசியப் பிறை நிலைப்பாடுகளை சரிகாண்பவர்களும் தங்களது பிறை நிலைப்பாடுகளுக்கு மேற்படி ஹதிஸ்களையே ஆதாரமாகக் கருதுகின்றனர். இந்நிலையில் மேற்படி நிலைப்பாடுகள் பற்றியும், அந்நிலைபாடுகள் கொண்டவர்கள் பற்றியும் சர்வதேசப் பிறையினரின் மார்க்க தீர்ப்பு என்ன?


11. பிறை என்று மொழிபெயர்க்கப்படும் 'ஹிலால்' என்ற பதம் எந்த நாளுக்குரிய சந்திரனுக்கு கூறப் படும் சொல்லாகும்? எந்த நாளின் பிறையை புறக்கண்களால் பார்க்க நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டதாகச் சொல்கிறார்கள்? இதற்கான ஆதாரத்தைத் தர இயலுமா?


12. மாதத்தின் 29-வது நாள் மாலை 30-வது நாளின் மஃரிபில் பிறை பார்க்க வேண்டும் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் எங்கே ஆதாரம் இருக்கிறது? 29-வது நாள் மாலை 30-வது நாளின் மஃரிபில் பிறை பார்க்கச் செல்ல வேண்டும் என கூறினால், பிறை பார்க்கச் செல்பவருக்கு அன்றைய மஃரிப் தொழுகை ஜமாஅத்தில் கலந்து கொள்ளாமல் தொழுகையை பிற்படுத்தி தொழுது கொள்வதற்கு மார்க்கத்தில் சலுகை ஏதும் வழங்கப்பட்டுள்ளதா? நாம் இதை வீம்புக்காக இவ்வாறு கேட்கவில்லை, மாறாக 29-வது நாள் மாலை 30-வது நாளின் மஃரிபுடைய தொழுகை நேரத்தில்தான் பிறை புறக்கண்களுக்குத் தெரிவதாக சர்வதேசப் பிறையினரும் நம்பியுள்ளனர். எனவேதான் நாம் மேற்கண்ட வினாவை எழுப்புகிறோம். மேலும் மாதத்தின் இறுதிப் பகுதி தேய்பிறை நாட்களான 26, 27, 28 போன்ற நாட்களிலும் பிறையானது மேற்கு திசையில் மஃரிபு வேளையில்தான் தெரிகிறதா?


13. சர்வதேசப்பிறை நிலைப்பாட்டின்படி 29-வது நாளின் மாலையில் மேகம் மூட்டமாகி வானத்தை மேகம் மறைத்திருந்தால்தான் அந்த மாதத்திற்கு 30 நாட்களாக முடிவு செய்ய முடியும். இந்நிலையில், சர்வதேசப் பிறை கருத்துடைய இயக்கத்தினர் தயாரித்து வெளியிடும் நாட்காட்டிகளில் இன்னென்ன மாதங்கள் 29 நாட்களில் முடிகின்றது என்றும், இன்னென்ன மாதங்கள் 30 நாட்களில் முடிகின்றது என்றும் எவ்வாறு முற்கூட்டியே அச்சிட முடிகிறது? இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் துல்லியமான பிறைக் கணக்கீடு ஹராம் என்றால் சர்வதேசப் பிறையினர் தோராயமாகக் கணக்கிட்டு நாட்காட்டி வெளியிடுவது ஹராம் இல்லையா?


14. மார்க்க விஷயங்களுக்கு முர்ஸல் (தொடர்பு அறுந்த) வகை ஹதீஸ்கள் பிரதான ஆதாரமாகாது என்று நம்பும் சர்வதேசப் பிறை கருத்துடைய அறிஞர்கள், பிறை பற்றி பிரச்சாரம் செய்யும் போது மட்டும் ஹதீஸ்களின் பலவீனமான நிலைகளைக் கண்டு கொள்வதில்லை. தங்கள் நிலைப்பாட்டிற்கு நபிவழி ஆதாரமில்லை என்பதினால் பிறை குறித்த பலவீனமான ஹதீஸ்களைக்கூட ஆதாரமாக முன்னிறுத்துவதைக் காண்கிறோம். எனவே பிறை விஷயமாக வரும் ஹதீஸ்களுக்கு மட்டும் அறிவிப்பாளரான ஸஹாபியின் பெயர் குறிப்பிடாமல் ஹதீஸை அறிவிக்கலாம் என்ற புதிய சட்டம் ஏதும் ஹதீஸ்கலையில் புதிதாக உறுவாக்கப் பட்டுள்ளதா? பிறை விஷயத்திற்கு மட்டும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட, தொடர்பு அறுந்த அறிவிப்புகளை ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற சட்டம் ஏதும் உள்ளதா? அப்படி ஏதுமிருந்தால் அதை ஆதாரத்துடன் நமக்கு காட்டுமாறு கேட்கிறோம்.


15. சர்வதேசப் பிறை கருத்துடைய சிலர் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய ஹஜ்ஜில் அரபாவில் தவறான நாளில் நின்றுவிட்டார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் கூறியதாக பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். நமக்கு எதிரான மேற்படி பொய்ப் பிரச்சாரத்திற்கு தகுந்த ஆதாரத்தை மக்கள் மத்தியில் சமர்ப்பித்து அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய ஹஜ்ஜில் அரபாவில் நின்ற கிழமைமையையும் சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின்படி அறிந்து தெளிவாக நமக்கு அறிவிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜூ சம்பந்தமாக வரும் ஹதீஸில், 'லைலத்து ஜம்இன்' என்ற பதத்திற்கு என்ன பொருள் என்பதையும் மேற்படி சர்வதேசப்பிறை கருத்துடையோர் தெளிவுபடுத்த வேண்டும்.


16. ஹிஜ்ரி கமிட்டியினர் 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்று வரும் ஹதீஸ் சொற்றொடரின் 'ஹி' என்பதைத் தவறாக விளங்கியுள்ளனர், நாங்கள்தான் சரியாக விளங்கியுள்ளோம் என்று சர்வதேசப்பிறை கருத்துடைய சிலர் கூறி வருகின்றனர். அப்படியானால் 'ஹி' என்ற பதம் எதைக் குறிக்கின்றது?. எந்தப் பெயர்ச் சொல்லும் முன்னால் குறிப்பிடப்படாமல், 'ஹி' என்ற பதத்தைக் கூறி பொத்தாம் பொதுவாக சொல்வது அரபு மொழி இலக்கணப்படி சரியானதுதானா? அல்லது அது தவறானதா? சந்திரன் என்ற ஒருமையான கோளின் 'அஹில்லாஹ்' என்ற பன்மையான அனைத்து படித்தரங்களையும் மேற்படி 'ஹி' என்ற பதம் குறிக்கிறது என்று நாம் கூறுவதை எந்த அரபு இலக்கண விதிப்படி மாற்றுக் கருத்துடையோர் மறுக்கிறார்கள்.


17. நபித்தோழர் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் 'அஷ்ஷஹரு திஸ்வூவ் வ இஷ்ரீன லைலத் தன்' என்ற ஹதீஸ் தொடரில் 'ஸுமூ லி ருஃயத்திஹி' என்பதில் உள்ள 'ஹி' என்ற பதம் குறிக்கின்றது? இன்னும் அதே ஹதீஸில் இடம் பெரும் 'ஃப இதா ரஅய்துமூஹூ' என்பதில் உள்ள 'ஹூ' எதைக் குறிக்கின்றது?. மேலும் அந்த ஹதீஸில் இடம்பெரும் மற்றொரு சொற்றொடரான 'வலா தஃப்திரு ஹத்தா தரவ்ஹூ' என்பதில் உள்ள 'ஹூ' எதை குறிக்கின்றது?


'அஷ்ஷஹரு திஸ்வூவ் வ இஷ்ரீன லைலத்தன்' என்ற சொற்றொடர் இல்லாமல் நேரடியாக 'ஹத்தா தரவ்ஹூ' அல்லது 'ஸுமூ லி ருஃயத்திஹி' அல்லது 'ஃப இதா ரஅய்துமூஹூ' என்று வரும் ரிவாயத் துகளிலுள்ள 'ஹி' , 'ஹூ' போன்ற பதங்கள் எதைக் குறிக்கின்றன? ஹிஜ்ரி கமிட்டி அறிஞர்களுக்கு அரபு மொழி தெரியவில்லை என்று விமர்சிக்கும் அரபு மொழி விர்ப்பனர்கள் இவற்றிற்கு பதில் கூறக் கடமைப்பட்டுள்ளதால் இவ்வாறு கேட்கிறோம். மேற்படி பதங்கள் பிறை என்ற ஒரேயொரு படித்தரத்தை மட்டும் குறிக்கிறதா? அல்லது சந்திரனின் அனைத்துப் படித்தரங்களையும் குறிக்கின்றனவா?


18. 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்று வரும் ஹதீஸில் பயன்படுத்தப் பட்டிருக்கும் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கொள்ள வேண்டும்? 'கும்ம' என்ற பதத்திற்கு 'மேகம் மறைத்தால்' என்று மட்டும்தான் அர்த்தம் என்று சர்வதேசப் பிறை கருத்துடையோர் நம்பியுள்ள னர். 'கும்ம' என்பதற்கு 'மேகம்' என்று எவ்வாறு முடிவு செய்தார்கள்? மேலும் 'அலைக்கும்' என்ற பதம் யாரைக் குறிக்கும்? ஒட்டு மொத்த சர்வதேச உம்மத்தையா? அல்லது ஒரு பகுதியில் வாழும் மக்க ளையா?. ஒட்டுமொத்த மக்களைத்தான் அச்சொல் குறிக்கிறது மண்டல, மாநில, தேசியப் பிறை எல்கையை அல்ல என்று சர்வதேசப் பிறையினர் கூறினால் அந்த எல்கையை வரையறுத்துக் கூற முடியமா?


19. 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற சொற்றொடர் வரும் ஹதீஸில் இடம்பெறும் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதில் 'கும்ம' என்றால் 'மேக மூட்டம்தான்' என்று சர்வதேசப் பிறை கருத்துடையோர் வாதிடுகின்றனர். அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் 'கும்ம' என்ற பதத்ததைப் போலவே 'கும்மிய', 'உஃமிய', 'கபி(கு)ய', 'க(பு)ம்மிய', 'ஹஃபிய்ய' போன்ற பதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். மேற்படி 'கும்மிய', 'உஃமிய', 'கபி(கு)ய', 'க(பு)ம்மிய', 'ஹஃபிய்ய' போன்ற பதங்களுக்கும் 'மேகமூட்டம்' என்று தான் பொருள் கொடுக்க வேண்டுமா? இல்லை என்றால் மேற்படி சொற்களுக்கு என்னதான் பொருள்?


20. 29-வது நாளில் மேகம் வானத்தை மறைத்து பிறை தென்படா விட்டால் அந்த மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறுபவர்கள் மேகமும் மறைக்காமல் வானம் தெளிவாக இருந்து, பிறையும் தெரியாமல் இருந்தால் அந்த மாதத்தை எத்தனை நாட்களாக முடிவு செய்ய வேண்டும்? நபி (ஸல்) அவர்கள் வானம் தெளிவாக இருந்து பிறை தெரியாமல் இருக்கும் போது எவ்வாறு முடிவெடுத்தார்கள்? அதற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் எவை? சர்வதேசப் பிறை கருத்துடையோர் விளக்கம் தருவார்களா?


21. பிறையை புறக்கண்களால் பார்த்தே அமல் செய்ய வேண்டும் என்று வாதிக்கும் சர்வதேசப் பிறை கருத்துடையோர் ஸஹருடைய வக்தை அறிவது, நோன்பு திறக்கும் நேரம் மற்றும் கிரகணத் தொழுகை போன்ற இபாதத்துக்களை கண்ணால் பார்த்து அமல் செய்ய வேண்டும் என்பதை மறக்க இயலாது. அப் படியானால் கிரகணத் தொழுகை தொழுவதற்காக கிரகணத்தை பார்க்கும் முன்னரே அறிவிப்பு செய்வதேன்? ஸஹருடைய வக்தையும், நோன்பு திறக்கும் நேரத்தையும் கடிகாரத்தை நேரத்தை வைத்து முடிவெடுப்பதேன்? விஞ்ஞான சாதனங்களைப் பயன்படுத்தி நபி (ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளைகளை செயல் படுத்தாமல் புறக்கணிப்பதேன்?


22. பிறையை புறக்கண்களால் பார்க்காது கணக்கீடு செய்வது சுன்னாவிற்கு மாற்றமாகும் என்றும் சுன்னாவிற்கு மாற்றமாக செயல் பட்டால் 'குஃப்ரு' என்றும் தற்போது கூறிகின்றனர். அப்படியானால் சர் வதேசஃசவுதிதேசப் பிறை கருத்துடைய ஒரு இயக்கத்தின் முன்னால் தலைவர் ஸஹருடைய இரண்டாம் பாங்கு தேவையில்லை, அது குழப்பம் விளைவிக்கும் என்று சொன்னது மட்டும் 'குஃப்ரு' ஆகாதா?


23. பிறை பார்த்தவர்கள் அதை என்னிடம் கூறவேண்டும், நான் தான் பிறையை அறிவிப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் என்றாவது கட்டளையிட்டார்களா? அவ்வாறு ஆணையிட்டார்கள் என்றால் அவ்வாறு இட்ட கட்டளை ஹதீஸ்களில் எங்கே உள்ளது? அப்படி ஏதுமில்லை என்றால் நபி (ஸல்) அவர்களே அறிவிக்காத பிறைத் தகவலை அறிவிப்பதற்கு ஜமாஅத் தலைவர்களுக்கோ, இயக்கத் தலைவர்களுக்கோ என்ன உரிமை இருக்கிறது? அந்த உரிமையைக் கொடுத்தது யார்?


24. 'லா நக்துபு, வலா நஹ்ஸிபு' என்று வரும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிக்கு 'நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதும் கூடாது, எண்ணுவதும் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் பிறைக ளைக் கணக்கிடுவதைத் தடை செய்து விட்டார்கள்' என்று சர்வதேசப் பிறை கருத்துடையோர் பிரச்சாரம் செய்கின்றனர். அந்த ஹதீஸை 'பிறைகளைக் கணக்கிடுவதைத் தடை செய்துவிட்டார்கள்' மொழி பெயர்ப்பது எப்படி? இது சரியான மொழிபெயர்ப்புதானா? ஏந்த அரபு இலக்கண இலக்கிய விதிப்படி அவ்வாறு மொழிபெயர்த்தார்கள்? அல்லது விஞ்ஞானத்தின் அடிப்படையில் நாட்காட்டியை அமைத்திட உதவும் வானியல் பௌதீகம் (Astrophysics) என்னும் விண்ணியில் அறிவை அந்தகால சமுதாயம் அறிந்திருக்கவில்லை என்று ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பொருள் கொள்வது எந்த விதத்தில் தவறுனாதாகும்?


25. மாற்றுக் கருத்துடையோர் கூறுவது போல் 'லா நக்துபு, வலா நஹ்ஸிபு' என்பதற்குக் கணக்கிடுவதும் கூடாது, எழுதுவதும் கூடாது என மொழி பெயர்த்தால், முஸ்லிம் சமுதாயத்திற்கு எழுதும் முறைகளும், கணக்கிடுதலும் ஹராம் என்ற நிலை ஏற்படும். மேலும் நபித்தோழர்களிடமிருந்து செய்திகளை தாபிஈயீன்கள் பெற்றது முதல் ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரையும் உறுதிப்படுத்துவது உட்பட இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்திடும் ஹிஜ்ரி நாட்காட்டியின் கணக்கீடுகளும் ஹராம் என்று மறுக்கப்பட வேண்டிய கணக்குகளா? இவற்றை மாற்றுக் கருத்துடையோர் சிந்திக்க மறுப்பதேன்?


26. நபி (ஸல்) அவர்கள் தொழுகை நேரங்களை சூரியனால் ஏற்படும் நிழல்களின் அளவுகளைக் கொண்டு முடிவு செய்தார்கள். இன்று தொழுகை நேரம் என்று கூறி நேரக்கணக்கு பட்டியலை நடை முறைப் படுத்துவது ஹராமில்லையா? கணக்கிடமாட்டோம் என்ற கூற்றிற்கு முரணானது இல்லையா? இதுபோன்ற தொழுகை நேரக் கணக்கை முன்கூட்டியே கணக்கிட்டு அட்டவணையிட்டு அதைப் பார்த்து நபி(ஸல்) தொழுதார்கள் என்பதற்கு ஒரேயொரு ஆதாரத்தையாவது மேற்படி சர்வதேசப் பிறையினரால் எடுத்துக் காட்டிட முடியுமா? இதுபோன்று நபி (ஸல்) அவர்கள் சுன்னத்தாகக் கூறி நடை முறைப்படுத்திக் காட்டாத செயல்களை மார்க்கத்தின் பெயரால் செய்வது குற்றமாகாதா என்று அவர்கள் பாணியிலேயே கேட்க விரும்புகிறோம்.


27. சர்வதேசப் பிறைக் கருத்துடையோர் இதுவரை சவூதி அல்லாத வேறு நாடுகளிலிருந்து 30-வது நாளின் மஃரிபில் பிறைப் பார்த்த தகவலை தங்களுக்கு அளித்தவர்கள் யார்? யார்? என்று அவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்களா? நாங்கள் சவூதி அரேபியாவின் தகவலைத்தான் பின்பற்றுகின்றோம் என அவர்கள் கூறுவார்களேயானால் சவூதியில் பிறைப்பார்த்து இவர்களுக்குத் தகவல் கொடுத்த நபர்களின் பட்டியலையாவது அவர்களின் முகவரியுடன் வெளியிட இயலுமா? வெறுமனே சவுதி அரபியாவின் தொலைக் காட்சியைப் பார்த்துவிட்டு அறிவிக்கும் இவர்களின் பிறை நிலைப்பாடு சர்வதேச பிறை நிலைப்பாடா? சவுதி தேச பிறை நிலைப்பாடா?


இப்படி பல்வேறு கேள்விகளை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். பிறைகளைப் புறக்கண்களால் பார்ப்பது தொடர்பாக 'விடையே இல்லாத வினாக்களா இவை?' என்ற தலைப்பிட்டு சில பொதுவான கேள்விகளை முன்னரே நாம் கேட்டுள்ளோம் (பார்க்க : www.mooncalendar.in). அக்கேள்விகளுக்கு சர்வதேசப் பிறை கருத்துடையவர்கள் உட்பட எந்தப் பிறை நிலைப்பாட்டினரும் முறையான விடைகளை இதுவரை அளிக்கவில்லை.


மேற்கண்ட கேள்விகளுக்கு சர்வதேசப் பிறை கருத்துடையோரால் குர்ஆன் சுன்னா அடிப்படையில் தெளிவான, ஆதாரப்பூர்வமான பதிலைத் தர இயலாது என்பதை மக்களும் தெரிந்தே வைத்துள்ளனர். காரணம் சர்வதேசப்பிறை அல்லது சவுதிதேசப்பிறை என்ற பிறை நிலைப்பாடுகளுக்கு மார்க்க ஆதாரமில்லை. அந்நிலைப்பாடுகள் அறிவுப்பூர்வமானதாகவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.


எனவே நபி (ஸல்) அவர்கள் புறக்கண்களால் மட்டும்தான் பிறந்த பிறையை பார்க்க வேண்டும் என்று கட்டளையிடவில்லை. பிறைகளைக் கணக்கிட்டு நாட்காட்டியை பின்பற்றுவதை தடை செய்யவில்லை. பிறைகளைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்கு மார்க்கம் வலியுறுத்துகிறது, கட்டளையிடுகிறது என்பதை மிகமிகத் தெளிவாக அறிந்து கொண்டோம் – அல்ஹம்துலில்லாஹ். எனவே பிறை குழப்பத்திற்கு மகத்தான தீர்வு சந்திரனின் படித்தரங்களை துல்லியமாகக் கணக்கிட்டு வழங்கப்பட்டுள்ள ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றுவதுதான் என்பதை திட்ட வட்டமாக தெளிவு படுத்துகிறோம். ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க சட்டமில்லை என்பதை ஆணித்தரமாக இங்கு பதிவு செய்கிறோம்.


25. இப்புத்தகம் யாருக்குப் பயனளிக்கும்?

தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், தப்லீக் ஜமாஅத்தினர், ஸலஃபிகள் என்று பல்வேறு கொள்கைகளாலும், இயக்கங்களாலும் பிரிந்துள்ளனர். அனைத்துப் பிரிவினரும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி விஷயத்தில் ஒன்றுபட்டு ஓரணியாக வேண்டும் என்பதே நமது நோக்கம்.


சுன்னத் ஜமாஅத்தினர் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என்று நான்கு விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர். இன்னும் ழயீஃபான ஹதீஸ்களை நடைமுறைப் படுத்துவதில் சுன்னத் ஜமாஅத்தினருக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத்ஹபு இமாம்களின் சட்டங்கள், முன்னோர்களான பெரியார்களின் போதனைகளையும் சரியென நம்பி நடைமுறைப் படுத்துகின்றனர்.


பிறையை புறக்கண்களால் பார்த்தே அமல் செய்ய வேண்டும் என்பதற்கு எவ்வித மார்க்க ஆதாரமும் இல்லை என்பதை சுன்னத் ஜமாஅத்தினர் அறிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான செய்திகள் ஒருபோதும் மார்க்க ஆதாரமாகாது. இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் தீய சக்திகளின் கோர செயலினால் இப்பிறை விஷயத்தை மையமாக வைத்து நமது முஸ்லிம் உம்மத் பிரிந்து கிடக்கிறது என்பதையும் சுன்னத் ஜமாஅத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். பிறையை புறக்கண்ணால் பார்த்த பின்னர் 'அமல்' செய்வது சம்பந்தமாக நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தை உடைத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.


இப்பிறை விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற பலவீனமான செய்திகளையும் நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் முகமாக அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் மீது மிகுந்த முஹப்பத் வைக்க வேண்டும் என்பது சுன்னத் ஜமாஅத்தினரின் பிரச்சாரம். நபி (ஸல்) அவர்கள் மீது உண்மையிலேயே முஹப்பத் வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியானால் மேற்படி பொய்ச் செய்திகளை உணர்ந்து தமிழக எல்லைக்குள் தான் பிறையை பார்ப்போம் என்ற தவறான நிலைப்பாட்டை விட்டொழிக்க வேண்டுகிறோம். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் வழிகாட்டியுள்ள படி ஹிஜ்ரி நாட்காட்டியின் பிறை கணக்கீட்டின் பக்கம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறோம். தாங்கள் காலம் காலமாக நம்பியிருந்த இந்தப் புறக்கண் பார்வை நிலைபாட்டை தூக்கி நிறுத்திட வேண்டுமென்றோ, தற்போதுதான் இவை உங்களுக்குத் தெரியவந்ததா? என்ற கோணத்திலோ சிந்திக்கும் பட்சத்தில் அத்தகைய சுன்னத் ஜமாஅத்தினக்கு இப்புத்தகம் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதே உண்மையாகும்.


தவ்ஹீது ஜமாஅத்தினர் எனப்படுவோர் திருக்குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ்கள், ஆகிய இவ்விரண்டு மட்டும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் என்றும், இந்த இரண்டில் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்றும் ஏற்று பின்பற்றுகின்றனர். இன்னும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளில்கூட குர்ஆனுக்கு முரண் இல்லை என தங்களுக்கு தெரிபவற்றை மட்டும்தான் ஏற்று நடப்போம் என்று தவ்ஹீது ஜமாஅத்தினர் பிரசாரம் செய்கின்றனர். அத்தகையோர் நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தைச் சொல்லிடக் கடமைப் பட்டுள்ளார்கள். தங்களின் பிறை நிலைப்பாடுகளை பலமானதாகவும், ஆதாரமானதாகவும் நம்பி மக்களிடம் பிரச்சாரமும் செய்து விட்டதால், தற்போது இந்த உண்மைகளை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது? என்று தயக்கம் காட்டுவார்களேயானால் அத்தகைய தவ்ஹீதுவாதிகளுக்கு இப்புத்தகம் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதை வேதனையோடு சொல்லிக் கொள்கிறோம்.


மேலும் தப்லீக் ஜமாஅத்தினர் எனப்படுவோர் சுன்னத் ஜமாஅத்தினர்களின் மார்க்க ஆதாரங்களைப் போலவே அவர்களும் ஏற்றிருந்தாலும், தப்லீக் தஃலிம் தொகுப்புகள் போன்ற பெரியவர்களின் போதனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முஸ்லிம்களின் கடமைகளுள் ஒன்றான தொழுகையை இந்த முஸ்லிம் சமூகத்தில் நிலை நிறுத்தி அதை சரி செய்துவிட்டால் ஒரு முஸ்லிமின் பெரும்பாலான விஷயங்கள் சரியாகிவிடும் என்ற நல்ல நோக்கத்தில் தொழுகை விஷயத்தை மட்டுமே ஏவுவோம் என்ற நிலைப்பாட்டை கெட்டியாகப் பற்றிப் பிடித்து பிரச்சாரமும் செய்து வருகின்றனர். தொழுகை விஷயம் என்பது மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படைதான். அடிப்படையான விஷயங்களிலும் மிகமிக அடிப்படையான ஒரு விஷயமே தொழுகை என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்துமில்லை.


ஒரு மாணவன் துவக்கப் பாடசாலையில்தான் முதலாவதாக தன் கல்வியைத் துவங்குவான், பின்னர் நடுநிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும், பிறகு அவன் உயர்நிலைக் கல்வியை கற்க வேண்டும். அதன் பின்னர் கல்லூரி வாழ்கை, அதற்கு அடுத்தபடியாக பல்கலைக்கழகங்களில் துறைசார்ந்த ஆய்வு என்று கல்விக்கு பல படித்தரங்கள் உள்ளன. தொழுகையை சரி செய்து கொள்ள வேண்டும் என்ற தப்லீக் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு ஒரு மனிதனின் துவக்கப் பாடசாலை என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். ஒரு மாணவன் துவக்க பாடசாலையிலேயே இறுதி காலம் வரை இருக்க வேண்டும் என்பது அறிவார்ந்த வாதமாக இருக்க வாய்ப்பில்லை. தொழுகை என்ற கடமையோடு நோன்பு, ஜக்காத், ஹஜ், இஸ்லாத்தை பிறருக்கு எடுத்துச் சொல்வது போன்ற பல்வேறு கடமைகள் நமக்கு இருக்கின்றன என்பதையும் கண்ணிமிக்க தப்லீக் ஜமாஅத்தினர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


தப்லீக் ஜமாஅத்தினர்கள் வானத்திற்கு மேலேயும் பூமிக்குக் கீழேயும் உள்ள விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள் என்ற மலிவான குற்றச்சாட்டை பொய்யாக்கிட இனியேனும் அவர்கள் முயல வேண்டும். தங்களின் அழைப்புப் பணிகளுக்கு மத்தியில் மனிதர்களுக்கு நாள்காட்டியாகவும், ஹஜ்ஜை அறிவிப்பதாகவும் அல்லாஹ் கூறுகின்ற இந்தப் பிறை விஷயத்தை அக்கரையோடு கவனம் எடுக்க வலியுறுத்துகிறோம். 'ஓர் இறை', 'ஓர் மறை', 'ஒரே பிறை' என்று இந்த முஸ்லிம் உம்மத்தை ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுத்திட இருக்கும் ஒரே வாய்ப்பான இந்திய ஹிஜ்ரி கமிட்டியின் பிறை தீர்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும். மாறாக இப்பிறை பிரச்சனையை ஒரு பொருட்டாகவே கருதாத பட்சத்தில் அத்தகைய தப்லீக் ஜமாஅத்தினருக்கும் இப்புத்தகத்தின் கருத்துக்கள் எத்தகைய பிரதிபலனையும் அளிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இன்னும் ஸஹாபாக்களின் ஏகோபித்த கருத்தையும் பின்பற்ற வேண்டும், நம் காலத்திற்கு முன்னர் வாழ்ந்து மறைந்த நல்ல ஸலஃபு ஸாலிஹீன்களின் கருத்துக்களையும் ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களே ஸலஃபிகள் என்று அழைக்கப் படுகின்றனர். ஸலஃபிகள் எனப்படுவோரில்


அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்களை மையமாகக் கொண்ட ஸலஃபி அல்பானிய்யா என்ற பெயரில் ஒரு பிரிவினர்,


அரபு உலகின் சம காலத்தில் வாழ்ந்து மறைந்த அறிஞரான பெரியவர் இப்னல்பாஸ் என்ற பின்பாஸ் அவர்களின் சிந்தனைகளை மையப்படுத்தி பின்பற்றும் ஸலஃபிகள் பின்பாஸிய்யா என்ற பெயரில் மற்றொரு பிரிவினர்,


இன்னும் மறைந்த மற்றொரு அறிஞர் ஸாலிஹ் அல் உதைமீன் அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போர் என்று பல பிரிவுகளாக இருப்பதை நாமும் அறிவோம்.


இந்நிலையில் ஸலஃபிக் கொள்கையுடையோர் அனைவரும் நபித்தோழர்களான ஸஹாபாக்களை சிறந்த ஸலஃபுகளாக ஏற்றுக் கொள்வர். 'குரைபு சம்பவம்' போன்ற செய்திகளை முன்னிருத்தி ஸஹாபாக்கள் முரண்பட்ட இருவேறு நாட்களில் நோன்பை ஆரம்பித்ததாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இப்பிறை விஷயத்தில் பல்வேறு பலவீனமான செய்திகள் அந்த ஸஹாபாக்களின் பெயரைப் பயன்படுத்தியே புனையப் பட்டுள்ளன. குறிப்பாக ஒட்டுமொத்த அனைத்து ஸலஃபுகளையும் தாண்டிய கண்ணியத்தையும், சிறப்பையும், அந்தஸ்தையும் பெற்றுள்ள அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், நோன்பு நோற்க ஹராமான தினத்தில் அவர்கள் நோன்பை நோற்றிருந்தார்கள் என்று வாகனக்கூட்டம் அறிவிப்பு போன்றவை இட்டுக்கட்டி புனையப்பட்டு அவர்களின் கண்ணியத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.


பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்னர்தான் ரமழான் மாதத்தின் முதல் நோன்பைத் துவங்க வேண்டும் என்ற சித்தாந்தத்திற்கு மேற்படி பலவீனமான சம்பவங்கள்தான் முட்டுக் கொடுக்கப் படுகின்றன. மார்க்கத்தில் பெயரால் ஏற்படுத்தப் பட்டுவிட்ட இத்தகைய மோசமான நிலையை ஸலஃபிகள் நிச்சயமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லிடக் கடமைப் பட்டுள்ளார்கள். இன்னும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது கலீஃபாவும் தலைசிறந்த நபித்தோழருமான செய்யிதுனா உமர் (ரழி) அவர்களின் ஆட்சித் தலைமையில், இஸ்லாமிய நாட்காட்டியின் முக்கியத்துவத்தை அன்றைய ஸஹாபாக்கள் தெளிவாக அறிந்து கொண்டனர். ஹிஜ்ரி நாட்காட்டியின் ஆண்டுகளின் எண்ணிக்கையை நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திலிருந்து தொடங்கிய ஒட்டுமொத்த ஸஹாபாக்களின் ஏகோபித்த ('இஜ்மாவுஸ் ஸஹாபா') முடிவை ஸலஃபுக் கொள்கையுடையோர் ஏற்று ஹிஜ்ரி நாட்காட்டியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.


இதை விடுத்து நபி (ஸல்) அவர்கள், மற்றும் நபித்தோழர்களின் கண்ணியத்தை கருத்தில் கொள்ளாமல், கண்ணை மூடிக்கொண்டு ஹிஜ்ரி கமிட்டியினரை எதிர்ப்பதில் கவனம் செலுத்து வார்களேயானால் அத்தகைய பரிதாப நிலையுள்ள ஸலஃபிகளுக்கும் இந்த புத்தகத்தின் கருத்துக்கள் எந்தப் பயனையும் அளிக்காது என்று நிதர்சனமாகக் கூறிக் கொள்கிறோம்.


இப்புத்தகத்தைத் தூய நோக்கோடு படித்ததின் காரணமாக, இதுநாள்வரை நம்பியிருந்த பிறை கோட்பாடுகளை தற்போது எப்படி மாற்றிக் கொள்வது? என்ற சிந்தனை தங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது இக்கருத்துக்கள் சரியானதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் போது நமது சமுதாய மக்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது? என்று நீங்கள் நினைக்கலாம். சத்தியத்தை உளப்பூர்வமாக


உணர்ந்து மேற்படி சிந்தனையில் நீங்களும் இருந்தால், தாங்கள் நிதர்சனமாக விளங்கிக் கொண்ட சத்தியத்தை துணிந்து உரைக்க முன்வருமாறு வேண்டுகிறோம். உண்மையை உணர்ந்து வெளிப்படுத்துவோரும், தவறை திறுத்திக் கொள்வோரும்தான் உத்தமர்கள், உயர்ந்தவர்கள், இறை உவப்பைப் பெற்றவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். ஒரு முஃமின் சத்தியப்பாதையில்தான் இருக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் அஞ்சிவிடக் கூடாது. நேரான வழியில் நடப்பதற்கும், சத்தியத்திற்கு சான்று பகர்வதற்கும் தயங்கிடவே கூடாது. இதைத்தான் நமது மார்க்கம் போதிக்கிறது. இறைவனின் சத்தியப்பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்த, உண்மையை உரக்கச் சொல்லிட எங்களோடு புறப்பட்டு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறோம். 'வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது இஸ்லாமாக இருக்கட்டும்' என்ற சிந்தனையோடு இப்பிறை விஷயத்தில் எங்களோடு கைகோத்து செயல்பட உங்களையும் அழைக்கிறோம்.

26. விமர்சனங்கள் - விளக்கங்கள்

விமர்சனம் 1: ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை, மார்க்கமும் தெரியவில்லை. 'ஹிலால்' என்ற பதம் குறித்து அரபி அகராதியான காமூஸில் 'ஸின்னான்' என்று எழுதப்பட்டுள்ளதற்கு 'இரண்டு பற்கள்' என்று மொழி பெயர்த்துள்ளார்கள். மேலும் ஸூமூலி ருஃயத்திஹி என்று துவங்கும் ஹதீஸிலுள்ள 'ஹி' என்ற சொல் 'அஹில்லாஹ்' என்ற (பிறைகள் அனைத்தையும் குறிக்கும்) பன்மைச் சொல் என்றும் எழுதியுள்ளனர். இவை ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி ஞானம் கொஞ்சம்கூட இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


விளக்கம் :


மேற்படி வாதம் ஒரு நேர்மையற்ற வாதம் ஆகும். இஸ்லாமிய சமுதாயம் கண்ட மாபெரும் இமாம்களான இமாம் புகாரி (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்), இமாம் திர்மிதி (ரஹ்), இமாம் அபூதாவூது (ரஹ்), இமாம் இப்னு மாஜா (ரஹ்), இமாம் நஸாஈ (ரஹ்), இமாம் தபரானி (ரஹ்), இமாம் பைஹகீ (ரஹ்) உட்பட அறிஞர்களில் பலர் அரபு மொழியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லர். அதில் பலர் அரபு தேசத்தில் பிறந்தவர்களும் அல்லர்.


அரபி, அஜமி என மொழியின் மீதிருக்கும் மோகத்தையும், பாகுபாட்டையும் இஸ்லாமிய மார்க்கத்தின் மூலம் வல்ல அல்லாஹ் குழி தோண்டி புதைத்து விட்டான்;. 'மொழியின் மீது மோகம் கொள்ளாமை' என்ற நிலை முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ் அளித்துள்ள மாபெரும் பரிசாகும். இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த மகத்துவத்தைக்கூட விளங்காத இவர்களின் அரபுப் புலமையின் லட்சனத்தையும் நம் மக்கள் அறிந்தே வைத்துள்ளார்கள்.


இங்கு 'ஸின்' என்ற அரபுச் சொல்லுக்கு நேரடி பொருள் ஒரேயொரு 'பல்' என்பதாகும். இதன் இருமைச் சொல்லான 'ஸின்னான்' என்ற சொல்லுக்கு 'இரண்டு பற்கள்' என்றுதான் பொருள். அதன் பன்மைச் சொல்லான 'அஸ்னான்' என்றால் பல பற்கள் என்று பொருள்படும்.


மேற்படி விமர்சனத்தில் இடம்பெறும் 'ஸின்னான்' என்ற பதம் நேரடி மொழி பெயர்ப்பின்படி 'இரண்டு பற்கள்' என்றுதான் பொருள்படும். السنان الذي له شعبتان يصاد به الوحش என்ற முழுமையான வாக்கியத்தில் 'ஸின்னான்' என்ற பதம் கூர்மையான ஆயுதத்திற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது என்பதை நாமும் அறிவோம்.


உதாரணமாக ஒருவருடைய பற்கள் சுத்தமாக வெண்மையாக இருப்பதை சிலாகித்துச் சொல்லும் போது Shining Teeth, Lightning Teath என்று புகழ்வர். மேற்படி உவமையின் பொருள் பற்கள் சுத்தமாக வெண்மையானதாக இருப்பதைக் கூறுகிறது என்பதை பாமரரும் புரிந்து கொள்வர். இதே உவமைதான் அனைத்து மொழிக்கும் பொருந்தும். இருந்தாலும் Shining என்ற சொல்லுக்கு நேரடி பொருள் 'பிரகாசிக்கும் என்று பொருள். அதுபோல Lightning என்ற சொல்லுக்கு 'மின்னல்' என்பதே நேரடி பொருளாகும். இந்த உவமையான சொல்லாடலை வைத்து ' மின்னும் பற்கள் ' என்றோ, ' பிரகாசிக்கும் பற்கள் ' என்றோ யாரும் கூறினால் அவருக்கு ஆங்கில மொழிப் புலமை இல்லை என்று யாராவது கூறுவார்களா? - அப்படி கூற மாட்டார்கள். காரணம் பற்கள் மின்னலைப் போல மின்னுவதுமில்லை, பிரகாசமாக ஒளிர்வதும் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் வெண்மையான நிறத்தைத்தான் இவ்வாறு சிலாகித்துக் கூறப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்வோம். அதுபோல நேரடிப் பொருளை கையாண்டு 'வெண்ணிறப் பற்கள்' என்று கூறினாலும் அதன் பொருள் மாறுபடுவதில்லை. அப்படி நேரடியாகக் கூறுபவர்களை நோக்கி பார்த்தீர்களா ' மின்னும் பற்கள் ' என்றோ, ' பிரகாசிக்கும் பற்கள் ' என்று உவமையாகக் கூறத் தெரியவில்லை, இவருக்கு தமிழ் மொழியறிவுகூட இல்லை என்று எவரும் வாதம் வைத்தால் அவரை பற்றி நாம் எப்படி புரிந்து கொள்வோம்?. இதுபோன்ற ஒரு விமர்சனம்தான் இந்த ஸின்னான் பற்றிய மாற்றுக் கருத்துடையோரின் விமர்சனம்.


ஒரு சொல்லுக்கு நேரடி அர்த்தத்தையும், உவமையான அர்த்தத்தையும் கொள்ள முடியும் நிலையில் மொழி பெயர்ப்பாளர் ஏதேனும் ஒரு பொருளை கையாண்டால் அவருக்கு அந்த மொழியே தெரியவில்லை என்று பேசித்திரிவது நியாயமாகுமா? இது காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன?. அரபு மொழி அகராதிகள் மார்க்க ஆதாரங்கள் போன்றும், அது அல்லாஹ்விடமிருந்து வஹியாக இறங்கியதைப் போன்றும் நினைத்துக் கொண்டு 'அரபி அரபி ' என்று இவர்கள் புலம்பித் திரிவதைப் பார்த்தால் நமக்கு பரிதாபமாகத்தான் உள்ளது. அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஒரு சொல்லை பயன்படுத்தி இருக்கையில், அதை மனிதன் இயற்றிய இலக்கணத்தோடு உரசிப் பார்க்கும் அளவிற்கு இவர்களின் அரபு மொழி அகந்தை சென்று விட்டதைப் பார்க்கிறோம். இவர்களுக்கு அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும்.


பிறையும் புறக்கண்ணும் என்ற தலைப்பில் அமைந்த சுமார் 350 பக்கங்களைத் தாண்டிய இந்த ஆய்வு நூலில் பிறைகள் குறித்து பல்வேறு விஷயங்களை நாம் ஆய்வு செய்து தெரிவித்துள்ளோம். இந்நிலையில் 'ஸின்னான்' என்ற சொல்லுக்கு பொருள் வைக்கும் விஷயம்தான் பெரிய பிரச்சனையாக மேற்படி மௌலவிகளுக்கு தெரிந்துள்ளது. இவர்களுக்கு பல் விஷயம்தான் பெரிதாகத் தெரிந்துள்ளது போலும். ஏற்கனவே பிறைகள் விஷயத்தில் பல அபத்தக் கருத்துக்களை முன்வைத்ததிலும், பலஹீனமான செய்திகளை ஹதீஸ் என்று மக்களிடம் போதித்ததிலும் மூக்கறுபட்டவர்கள் இப்போது பற்கள் பற்றி இழுத்துள்ளார்கள். இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி பற்றியும் பிறைகள் குறித்தும் நாம் எடுத்து வைத்துள்ள தெளிவான ஆதாரங்களையும், ஆணித்தரமான வாதங்களையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. அவர்களின் புறக்கண் பிறை நிலைப்பாடுகள் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றதை ஒப்புக் கொண்டதைத்தான் இவர்களின் மேற்படி 'ஸின்னான்' வாதம் தெளிவாகக் காட்டுகிறது.


ஆக 'ஸின்னான்' என்ற சொல்லை அதன் நேரடியாக மொழி பெயர்ப்பான 'இரண்டு பற்கள்' என்று எவரும் கூறினால் அவருக்கு அரபுமொழி தெரியவில்லை என்று ஆகிவிடாது. அதுபோல 'ஸின்னான்' என்ற சொல்லை இருமுனைகள் கொண்ட கூர்மையான ஆயுதத்திற்கு உவமையாக மொழிபெயர்த்தால், அவர் அரபு மொழியை கரைத்துக் குடித்தவர் என்றும் ஆகிவிடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.


'ஸின்னான்' என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டு அரபுப் புலமை தங்களுக்கே உள்ளதாக ஆர்ப்பரிக்கும் மேற்படி மௌலவிகள் இதுவரை பிறைகள் பற்றிய தங்களின் நிலைப்பாடுகளை தலைப்பு வாரியாக மக்களுக்கு சமர்ப்பிக்க வில்லையே அது ஏன்?. ஹிஜ்ரி கமிட்டியினருக்கு 'அரபி தெரியவில்லை', 'அரபி தெரியவில்லை' என்று கூச்சலிடுகின்றனர். 'அரபி' என்றால் 'அரபு நாட்டைச் சார்ந்தவர்' என்று பொருள். அரபு நாட்டுக்காரரை எங்களுக்கு ஏன் தெரிய வேண்டும்? மார்க்கத்தைச் சொல்வதற்காக அரபிகளிடம் கூலி வாங்குபவர்கள் நாங்கள் இல்லையே!. அரபுக்கும், அரபிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் நம்மை நைய்யாண்டி செய்வது மிகப் பெரிய வேடிக்கையாக இல்லையா?


அடுத்ததாக 'ஸூமூலி ருஃயத்திஹி என்று துவங்கும் ஹதீஸிலுள்ள 'ஹி' என்ற சொல் 'அஹில்லாஹ்' என்ற (பிறைகள் அனைத்தையும் குறிக்கும்) பன்மைச் சொல் என்றும் எழுதியுள்ளனர், இவர்களுக்கு ஆண்பால் பெண்பால் என்ற வித்தியாசம் கூட தெரியவில்லை ' என்று வாதம் வைத்துள்ளதையும் பார்ப்போம். முதலில் 'ஸூமூலி ருஃயத்திஹி' என்ற சொற்றொடர் இடம்பெறும் ஹதீஸை இவர்கள் முழுமையாக படித்துவிட்டு பிறகு பிரச்சாரம் செய்ய வேண்டுகிறோம். அந்த ஹதீஸ் பின்வருமாறு


عبد الرزاق عن عبد العزيز بن أبي رواد عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه و سلم إن الله جعل الأهلة مواقيت للناس فصوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فعدوا له ثلاثين يوما . مصنف عبد الرزاق - (4 / 156) 7306 -)


''நிச்சயமாக அல்லாஹ் பிறை(யின் படித்தரங்)களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.'' அறிவித்தவர் இப்னு உமர் (ரழி). நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306)




தற்போது ' ஹி ' என்ற சொல் இடம் பெறும் நிலையில் பிறையின் படித்தரங்கள் என்று பன்மைப் பொருளை அது எவ்வாறு அது குறிக்கும், பன்மைப் பொருளைக்கு ' ஹா ' அல்லவா வரும் என்பதே அவர்களின் கேள்வி. ஸூமூலி ருஃயத்திஹி என்ற சொற்றொடர் குறிப்பது என்ன என்பதை சற்று நிதானமாக அவர்கள் சிந்தித்திருந்தால் இந்த அளவிற்கு தடுமாற்றங்கள் அவர்களுக்கு வந்திருக்காது.




முதலில் இந்த ஹதீஸை ரிவாயத்து செய்தது யார்? ஸூமூலி ருஃயத்திஹி என்று சொன்னது யார்? ஹிஜ்ரி கமிட்டியினரா? இல்லையே!. நபி (ஸல்) அவர்கள் இப்படி கூறியுள்ளார்கள் என்றால் நபி (ஸல்) அவர்கள் இதுபோன்ற இலக்கணப் பிழைகளோடு பேசுவார்களா? என்று இவர்கள் சிந்திக்க மறந்தது ஏன்?


தமிழ் மொழியில்கூட ஒருமை, பன்மை, உயர்தினை, அஃரினை, நேரடி பேச்சு, மறைமுகப் பேச்சு, உவமானம், உவமேயம், உவம உறுபு போன்ற தமிழ் இலக்கணங்களை இவர்கள் இன்னும் அறியாமல் இருப்பதை இவர்களின் மேடைப் பேச்சிலிருந்தே தெரிந்து நாம் கொள்ளலாம். இந்நிலையில் அரபு இலக்கணத்தைப் பற்றி இவர்கள் வாதிப்பது நகைப்புக்குரியதே. ஒருவேளை அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் இலக்கண விஷயத்தில் இவர்களைப் போலத்தான் இருந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். அப்படி அல்ல நபி (ஸல்) அவர்கள் மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்.


அதாவது மேற்கண்ட ஹதீஸில் 'பிறைகள்', அல்லது 'பிறையின் படித்தரங்கள்' என்று பொருள்படும் 'அஹில்லாஹ்' என்ற அரபுச் சொல் பெண்பால் ஆகும். மேலும் அது பன்மைச் சொல்லுமாகும். இருப்பினும் பிறையின் படித்தரங்கள் என்று அழைக்கப்படுகின்ற அஹில்லாஹ்வானது சந்திரன் (கமர்) என்ற ஒருமையான ஒரு கோளின் பல வடிவ நிலைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் ஸூமூலி ருஃயத்திஹி - ('ஹி') என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


'கமர்' என்று அரபுமொழியில் அழைக்கப்படும் அந்த சந்திரன், அரபு மொழி இலக்கியத்தின் படி ஆண்பால் ஆகும். மேலும் அது ஒருமையான சொல்லுமாகும். ஆண்பாலைக் குறிப்பதற்கு ' ஹி ' என்ற சொல்லும், பெண்பாலைக் குறிப்பதற்கு ' ஹா ' என்ற சொல்லும் பயன்படுத்தப்படுவது அரபு மொழி இலக்கணத்தின் ஆரம்ப அடிப்படை என்பதை அனைவரும் அறிவர். எனவேதான் நபி (ஸல்) அவர்கள், சந்திரன் (கமர்) என்ற ஒருமையான ஒரு கோளின் பல வடிவ நிலைகளின் காட்சிகளை கவனித்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். மேலும் அந்த வடிவநிலை மாதத்தின் இறுதிநாள் மறைக்கப்படுவதைப் பற்றியும் ரத்தினச் சுறுக்கமாக விளக்கியுள்ளார்கள். எனவே ஸூமூலி ருஃயத்திஹி என்ற சொற்றொடரில் இடம்பெறும் 'ஹி ' என்ற எழுத்து அதற்கு முன்னதாக இடம்பெறும் ''இன்னல்லாஹ ஜஅல்லல் அஹில்லத மவாகீத்து லின்னாஸ்..'' என்ற வாக்கியத்திலுள்ள 'அஹில்லாஹ்' என்பதைக் குறிக்கும் என்று ஹிஜ்ரி கமிட்டி சொன்னதுதான் சரியான என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.


இன்னும் நாம் முன்னர் குறிப்பிட்டுள்ள இப்னு ஹூசைமாவில் 1789-வது ஹதீஸாக இடம்பெறும் ''ஃபஇதாரய்துமூஹூ'' என்ற சொற்றொடரிலுள்ள 'ஹூ' என்ற ஓரெழுத்துச் சொல்லும் இதுபோன்றுதான் பொருள்படும். மேற்படி 'ஹி ' என்ற சொல் 'ஹிலால்' என்று ஒருமையைத்தான் குறிக்கும் என்றும் அதை புறக்கண்களால் பார்ப்பதற்குத்தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் நாக்கூசாமல் பேசியுள்ளார்கள். ஒரு வாதத்திற்காக 'ஹிலால்' என்றே வைத்துக் கொள்வோம். ஒருரேயொறு நாளில் தென்படும் சந்திரனின் படித்தரத்தையா இந்த 'ஹிலால்' என்ற சொல் குறிக்கிறது? ஹிலால் என்பது ஒரு சந்திர மாதத்தின் சுமார் 14 படித்தரங்கள் வரை குறிக்கும் என்பதை காமூஸுல் முஹீத், தாஜுல் உருஸ், லிஸானுல் அரப், ஸிஹ்ஹா ஃபில் லுஹா போன்ற அரபு இலக்கண, இலக்கிய அகராதிகளிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்.


இதை இன்னும் விரிவாகப் புரிந்து கொள்வதற்கு மேற்படி அதே 'அஹில்லாஹ்' என்ற சொல் இடம்பெறும் குர்ஆன் வசனத்தை படியுங்கள்


يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [البقرة : 189]


பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்குக் காலம் காட்டியாகவும், இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)


மேற்படி குர்ஆன் வசனத்தில் இடம்பெறும் 'ஹிய' என்ற சொல், பெண்பால் ஒருமைக்கும், பெண்பால் பன்மைக்கு பொருந்தும் பொதுவான ஒரு சொல்லாகும். சந்திரன் (கமர்) என்ற சொல் ஆண்பாலாகவும், ஒருமையாகவும் உள்ள நிலையில், அதிலிருந்து பிறந்த சந்திரனின் வடிவநிலைக்கு (அஹில்லாஹ்) பெண்பாலில் குறிப்பது சரியாகுமா? என்ற மேற்படி மௌலவிகள் இந்த குர்ஆன் ஆயத்திற்கும் கேள்வி கேட்கலாம். ''யஸ் அ லூனக அனில் அஹில்லாஹ் குல் ஹிய...'' என்று வரும் இந்த குர்ஆன் ஆயத்திற்கு விளக்கமாகத்தான் முஸன்னஃப் அப்துர்ரஸாக் கிரந்தத்தின் 7306-வது ஹதீஸ் உள்ளது. ஆக அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கு அரபு மொழி இலக்கணம் தெரியவில்லை என்று சொல்ல வருகிறார்கள் போலும் (நவ்வூதுபில்லாஹ்) - அல்லாஹ் நம்மைப் பாதுகாக்கட்டும்.


அரபு மொழிப் புலமை இல்லாத தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களிடம் பேசும்போது, ஆடையிலும் பேச்சு வழக்கிலும் அரபு நாட்டவரைப் போல இவர்கள் காட்சியளிக்கின்றனர். மேற்படி மௌலவிமார்களே! நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற அரபுமொழிப் புலமையைக் காட்டிவிட்டால், பிறை விஷயத்தில் நீங்கள் விட்டு அடிக்கும் அனைத்தும் மார்க்கம் என்று ஆகிவிடாது. உங்கள் தற்பெருமை இறுதியில் அல்லாஹ்வுக்கு, தூதருக்கு எதிரான ஒரு நிலையை உங்களைக் கொண்டு சேர்க்கும். பொதுமக்களும் உங்கள் அரபு மொழி அகம்பாவத்தை அறிந்து அதை குப்பையில் வீசி எறிந்துவிட்டு குர்ஆன் சுன்னா வலியுறுத்தும் பிறை கணக்கீட்டு கொள்கைக்கு அணி திரள்வார்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.


மக்களே! மேலும் அரபுப் புலமை தங்களுக்கே உள்ளதாக தம்பட்டம் அடிக்கும் மேற்படி மௌலவிகள் பிறைகள் பற்றி இதுவரை கூறியுள்ளது என்ன தெரியுமா?


• ஒரு மாதத்தின் 29-வது நாள் மேற்கு திசையில் நோக்கி மஃரிபு வேளையில் பிறை பார்க்க வேண்டும் என்கின்றனர்.


• பிறை மேக மூட்டத்தினால் மறைக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டுதான் இஸ்லாமிய மாதங்கள் துவங்குவதுபோல பிரச்சாரம் செய்கின்றனர்.


• நாம் பார்ப்பது மூன்றாம் பிறைதான் ஆனால் அதுதான் முதல் பிறை என்று கூறுகின்றனர். • பிறந்த பிறையைப் பார்த்த தகவல் எவ்வளவு தூரத்திலிருந்து வந்தால் ஏற்றுக் கொள்வது போன்ற கற்பனை சட்டத்திலேயே காலம் கழித்து வருகின்றனர்.


• பிறை பார்த்தத் தகவல் எவ்வளவு தாமதமாக வந்தாலும் அந்த அடிப்படையில் செயல்படலாம் என்று இல்லாத வாகனக்கூட்ட அறிவிப்பை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.


• பெருநாள் தினத்தை விட்டுவிட்டு அடுத்த நாளிலும் பெருநாள் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.


• எங்கு பிறை பார்த்தீர்களோ அங்கு போய் பெருநாள் தொழுகை தொழுது கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அவர்கள் மீது இட்டுக்கட்டுகின்றனர்.


இவ்வாறு பிறைகள் விஷயத்தில் அரபுப் புலமை வாதம் பேசுவோரின் நிலை இந்த அளவிற்கு படுபாதாளத்தில் உள்ளது. இவற்றில் ஒவ்வொரு மௌலவிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருப்பதும் தெரிகிறது. ஆக மொத்தத்தில் நாம் அறிந்தவரை பிறைகள் பற்றிய உருப்படியான ஆய்வுகளை ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவரும் செய்ததாகத் தெரியவில்லை. இதுதான் உண்மையும் கூட.


ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் அரபு மொழிக்கு எதிரானவர்கள் அல்லர். அரபு மொழியை நன்றாகப் படித்தவர்களிலும் மார்க்கத்தை விளங்காதவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாத ஒன்றுமல்ல. அதுபோல அரபு மொழி தெரியாத முஸ்லிம்களில் சிறந்த சிந்தனையாளர்கள் கணிசமாக இருக்கின்றனர் என்பதையும் ஒப்புக் கொள்ளுங்கள் என்கிறோம்.


நபி (ஸல்) அவர்கள், மக்கத்து குறைஷி ஆலிம்களின் தலைமைப்பீடமாக இருந்த தாருந்நத்வா அறிஞர்களிடம் இஸ்லாம் என்னும் இறைச்செய்தியை எடுத்துரைத்தபோது அதன் ஆலிம்களாக வீற்றிருந்த அபூஜஹிலும், அவனுடைய கூட்டாளிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு சவால் விட்டு இதே அரபு மொழி இலக்கணப் பெருமையைத்தான் பேசினார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். உண்மையை மறைத்து பல பொய்களை இட்டுக்கட்டி சத்தியத்தை எதிர்த்ததால் அவர்கள் அனைவரும் அழிந்தொழிந்தனர் என்பது மறக்கவியலாத வரலாறு. மொழிவாதம் பேசும் இவர்களின் வாதத்திற்கு இதையே பதிலாக அளிக்கிறோம்.


விமர்சனம் 2: நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும் போது தொழுகை நேரங்களைக் கணக்கிட்டுக் கொண்டார்கள். அதே நேரத்தில் சந்திரனை மேகம் மறைக்கும் போது கணக்கிடாமல் மாதத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்றார்கள். எனவே தான் சந்திரக் கணக்கீடு என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை என்கிறோம்.


விளக்கம்:


உலக முஸ்லிம்கள் மூன்று வௌ;வேறு நாட்களில் ரமழான் முதல் நாளைத் துவங்குகின்றனர். அதுபோல மூன்று வௌ;வேறு நாட்களில் தனித் தனியாக பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இந்த அவல நிலையைப் போக்கி குர்ஆன் சுன்னா ஒளியில் சரியான தினத்தில் நமது அமல்களை அமைத்துக் கொள்ள துல்லியமான சந்திர நாட்காட்டி மூலம் சரியானத் தீர்வைச் சொல்கிறோம். இதன் முக்கியத்துவத்தை விளங்காதவர்கள் எழுப்பும் கேள்வியைப் பாருங்கள்.


நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு வாரகாலம் மழை பெய்தது சம்பந்தமாக வரும் ஹதீஸை தவறாக இவர்கள் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட கேள்வியே இது. நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் தொடர் மழை பொழிந்தபோது சூரியனை அந்த ஒருவார காலம் மேகம் மறைத்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் தொழகை நேரத்தைக் 'கணக்கிட்டார்கள்' என்று அந்த ஹதீஸில் எங்கே வந்துள்ளது?.


ஒரு வாரம் மழை பெய்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நேரங்களை அறிவதற்கு செய்தவை என்ன என்பதை இவர்கள் சிந்திக்கக் கூடாதா?. சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து தானே நேரங்களை முடிவு செய்திருப்பார்கள்.


இவர்களின் வியாக்கியானத்தின் படி மழை பெய்துகொண்டு மேகம் சூரியனை மறைத்தால் மட்டும்தான் தொழுகை நேரங்களைக் கணக்கிட வேண்டும். அதாவது மழை பெய்து கொண்டு மேகம் சூரியனை மறைத்தால் மட்டும்தான் 'அவ்காத்துஸ்ஸலாத்' என்னும் தொழுகை நேரப் பட்டியலை பின்பற்ற வேண்டும். அப்படியானால் தொழுகை கால அட்டவணை என்று ஒரு நேரக் கணக்கை பள்ளிவாயில்களில் வருட முழுவதும் தொங்க விட்டு அதைப் பார்த்து பின்பற்றுவது ஏன்? இவர்களின் வாதத்திற்கு இவர்களே முரண்படுவதை மக்களே நீங்கள் தெளிவாகக் காணுங்கள்.


ஒரு வார காலம் மழை பெய்ததில் சூரியனை மேகம் மறைத்தது என்பது உண்மை. அதே நேரத்தில் சந்திரனை மேகம் மறைத்தால் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை கற்றுத் தந்தது யார்? என்பதை அவர்கள்தான் நமக்கு விளக்க வேண்டும். மேகமூட்டத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் அந்த ஹதீஸில் இல்லையே!


அடுத்ததாக பிறை சம்பந்தமாக வரும் ரிவாயத்துகளில் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற சொற்களில் கும்ம என்ற பதத்திற்கு மேகமூட்டம் என்று அரபு மொழி அறிஞர்கள் என தங்களை கூறிக் கொள்பவர்கள் மொழி பெயர்க்கிறார்கள். இது மிகவும் தவறான மொழிபெயர்ப்பாகும். அதாவது 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை 30 தினங்களாக மாற்றும் சக்தி மேகமூட்டத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதைப் போல உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று சர்வ சாதாரணமாக பிரச்சாரமும் செய்கின்றார்கள். மேகமூட்டத்தைக் குறிக்கும் 'கமாம்' என்ற சொல்லோ, 'ஸஹாப்' என்ற சொல்லோ இல்லாத நிலையில், மேகமூட்டம் என்று எப்படி மொழி பெயர்த்தார்கள்?


ஒரு வாதத்திற்காக சர்வதேசப்பிறை நிலைபாட்டின்படி 29-வது நாளின் மாலையில் மேகம் மூட்டமாகி வானத்தை மேகம் மறைத்திருந்தால்தான் அந்த மாதத்திற்கு 30 நாட்களாக முடிவு செய்ய முடியும். இந்நிலையில், சர்வதேசப் பிறை கருத்துடைய இயக்கத்தினர் தயாரித்து வெளியிடும் நாட்காட்டிகளில் இன்னின்ன மாதங்கள் 29 நாட்களில் முடிகின்றது என்றும், இன்னின்ன மாதங்கள் 30 நாட்களில் முடிகின்றது என்றும் எவ்வாறு முற்கூட்டியே அச்சிட முடிகிறது? ஒவ்வொரு மாதத்தின் 29-வது நாள் பின்னேரம் வரவேண்டிய மேகக்கூட்டங்கள் இவர்கள் காலண்டர் தயாரிப்பதற்காக வருட துவக்கத்தில் மொத்தமாக வந்து விட்டனவா? - யாமறியோம். இன்னும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் துல்லியமான பிறைக் கணக்கீடு ஹராம் என்றால் இவர்கள் இயக்கத்தின் சார்பில் குத்துமதிப்பாக, தோராயமாகக் கணக்கிட்டு நாட்காட்டி வெளியிடுவது ஹராம் இல்லையா?


ஒவ்வொரு மாதமும் இறுதிவாரத்தில் தேய்பிறைகள் அனைத்தும் ஃபஜ்ர் வேளையில் கிழக்குத் திசையில்தான் தெரியும் என்பதை பிறைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் அறிந்திருப்பர். அறிவியல் பூர்வமான நிரூபிக்கப்பட்ட உண்மையும் அதுதான். இந்நிலையில் மாதத்தின் 29-ஆம் நாளன்று மஃரிபு வேளையில் பிறை மேற்குதிசையில் தெரியும் என்று மேற்படி அரபு மொழி பயின்ற அறிஞர்களுக்கு சொன்னது யார்? எந்த ஆதாரத்தை வைத்து மக்களிடம் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள்? என்ற கேள்விக்கு மாற்றுக் கருத்துடைய அவ்வரபு மொழியறிஞர்கள்தாம் பதில் தரவேண்டும்.


இன்னும் மாதத்தின் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்றால் என்ன செய்வது? அந்த மாதத்தை இருபத்து ஒன்பது நாட்களில் நிறுத்திக் கொள்வதா? அல்லது முப்பதாக பூர்த்தி செய்வதா? உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்ற ஹதீஸ் வாசகத்தை வைத்து எப்படி சட்டம் எடுப்பது? போன்ற கேள்விகளுக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.


நாங்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பிறந்த பிறையைத் தேடிப் பார்ப்போம் என்று ஒரு பதிலை அவர்கள் சொல்லலாம். அப்படி சொல்வார்களேயானால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் இவர்கள் சொல்லும் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்று வைத்துக் கொண்டு நமது கேள்வியை சற்று சிந்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


ஒரு ஹதீஸை ஆய்வு செய்வதாக இருந்தால் அது சம்பந்தமான ரிவாயத்துகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு உங்களுக்கு மறைக்கப்படும்போது என்பதாகும். மறைக்கப்படும்போது என்ற இந்தச் சொல் மறைக்கப்பட்டால் என்ற சந்தேகமான பொருள்படும் சொல் அல்ல. மாறாக மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் என்ற பொருளில் கையாளப்பட்ட ஒரு சொல்லாகும் என்பதையும் அறியத் தருகிறோம்.


விமர்சனம் 3: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும், பிறை பார்த்த தகவலைப் பெறவேண்டும், மேகமூட்டம் ஏற்பட்டால் மாதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றது. இது தவிர்த்து நான்காவது நிலை என்று ஒன்றுமில்லை.


விளக்கம்:


மேற்கண்ட மூன்று நிலைபாடுகள்தாம் மார்க்கம் என்பதற்கும், அவற்றைத் தவிர்த்து நான்காவது நிலைபாடு ஏதும் இல்லை என்பதற்கும் குர்ஆன் சுன்னாவிலிருந்து நேரடி ஆதாரங்களைத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். இன்றுவரை நமது கேள்வி கிணற்றில் போட்ட கல்லாகத்தான் கிடக்கிறது.


ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறந்த பிறையை மஃரிபில் புறக்கண்களால் பார்த்த பிறகுதான் அமல் செய்ய வேண்டும் என்பது மார்க்கத்தின் பெயரால் மக்களிடையே போதிக்கப்பட்டுள்ள தவறான சிந்தனை என்பதை நாம் பலமுறை விளக்கி விட்டோம்.


ஒரு கிழமைக்கான தேதியை மாற்றும் சக்தியை அல்லாஹ் மேகமூட்டத்திற்கு வழங்கவில்லை. மேலும் 'ஃபஇன்கும்ம' என்ற அரபுப் பதத்திற்கு 'மேக மூட்டம்' என்றும் பொருளில்லை. இவற்றை திரும்பத் திரும்ப நாம் விளக்கியும் இவர்கள் அடம் பிடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்படியானால் மேகமூட்டம்தான் பிறையையும், மாதத்தையும் தீர்மானிக்கிறது என்றால் தமிழகப்பிறை, தேசியப்பிறை மற்றும் சர்வதேசப்பிறை என்ற பெயர்களில் அவரவர்கள் தங்களின் நிலைப்பாட்டை அடையாளப்படுத்தக் கூடாது. மாறாக 'மேகமூட்டப் பிறை' அல்லது 'மேகப்பிறை நிலைப்பாடு' என்றுதான் அவர்கள் கூறவேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தைச் சரியாகத் துவங்குவதற்காக, ஷஃஅபானுடைய நாட்களை மனனமிடும் அளவிற்கு கவனிப்பார்கள் என்பது யாரும் மறுக்கவியலாத ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும் (அபூதாவூது 1993). ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும்? என்பதை ஒரு வாரத்திற்கு முன்னரே நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் அறிந்து வைத்திருந்தனர் (பைஹகீ-8018, இப்னு குஜைமாஹ்-2024). இவ்வாறு துல்லியமாக மாதங்களைத் துவங்கி சரியான தினத்தில் மாதத்தை முடிக்கும் பழக்கத்தில் நபி (ஸல்) அவர்களும், அன்றைய ஸஹாபாக்களும் இருந்துள்ளார்கள். இந்நிலையில் தங்கள் நடைமுறைக்கு மாற்றமாக மேகமூட்டம் ஏற்பட்டால் அந்த மாதத்தில் ஒருநாளைக் கூட்டி முப்பதாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்களா? என்பதை சிந்தியுங்கள்.


'மேகமூட்டம் ஏற்பட்டால் அந்த மாதத்தில் ஒருநாளைக் கூட்டி முப்பதாக ஆக்கிக் கொள்ளுங்கள்' என்பதே நபி (ஸல்) அவர்களின் கட்டளை என்று இன்றைய மௌலவிகள் கூறித்திரிவது நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொந்த நடைமுறைக்கு முரணாக கட்டளை இட்டார்கள் என்று அவர்கள்மீது அவதூறு சுமத்துவதாகும்.


மேற்கண்ட மூன்று நிலைபாடுகளைத் தவிர்த்து நான்காவது நிலைப்பாடு இல்லை என்றால், சவுதி தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து அவர்களின் பிறை அறிவிப்புக்காக காத்திருப்பது என்ன நிலைபாடு? நபி (ஸல்) அவர்கள் பிறைத் தகவலை சவுதி தொலைக்காட்சி மூலம் பெறுவதற்கு ஏதும் சிறப்பு அனுமதி அளித்துள்ளார்களா?


மேற்கண்ட மூன்று நிலைபாடுகள்தான் மார்க்கம் என்றால் அதை பிரச்சாரம் செய்யும் மேற்படி இயக்கத் தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கும், தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளுக்கும் ரமழான் துவக்கம், முடிவு பற்றி கடிதம் எழுதுவதேன்? இது என்ன நிலைபாடு என்று விளக்குவார்களா?


இன்று உலகில் சுமார் 150 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு கிழமைக்கு மூன்று தேதிகளும், ஒரு தேதிக்கு மூன்று கிழமைகளும் ஏற்படுத்தப்பட்டு நாட்காட்டியின் அடிப்படையே தகர்க்கப்பட்டு விட்டது. இதனால் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளை சுட்டிக்காட்டி மேற்படி நாளில் வருகை தாருங்கள் என்று யாரையும் அழைக்கக்கூட இயலாத துர்பாக்கிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாம் கேட்பது என்னவெனில் இத்தகைய அவல நிலையைப் போக்கிட முரண்பாடற்ற, துல்லியமான, குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த ஒரு இஸ்லாமிய சந்திர நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றா இல்லையா?


அவ்வாறு துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசர அவசியம்தான் என்றால், மஃரிபு வேளையில் மறையும் பிறையை புறக்கண்களால் பார்த்து விட்டு அடுத்த நாளை முதல் நாளாகக் கொள்ளும் பிறை நிலைபாடுகளை வைத்துக் கொண்டு அத்தகைய நாட்காட்டியை ஏற்படுத்திட இயலுமா?


துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமில்லை என்று கருதினால், நாட்காட்டியையும், அதை கணக்கிடுவதையும் வலியுறுத்தும் 2:189, 10:5, 55:5, 17:12, 9:36,37, 36:39,40, 6:96 போன்ற பல இறை வசனங்கள் வலியுறுத்துவது என்ன? பதில் சொல்வார்களா? இஸ்லாம் பரிபூரண மார்க்கம் என்று அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். அத்தகைய பரிபூரண மார்க்கத்தில் நாட்காட்டி என்பதும் உள்ளடங்கியதா இல்லையா? அல்லது நாட்காட்டியைப் பற்றிய இஸ்லாம் ஒன்றும் தெளிவுபடுத்திட வில்லை என்று கூற வருகிறார்களா?


குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதல்படி பிறைகளைத் துல்லியமாகக் கணக்கிடலாம் என்பதையும், பிறைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு இஸ்லாமிய நாட்காட்டியை இந்த மனித சமுதாயத்திற்கு வழங்கிடவும் வேண்டும் என்றும் நாம் கூறுகிறோம். இதற்கு குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் நேரடி ஆதாரங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்துப் பிரச்சாரம் செய்கிறோம். அவற்றை மறுத்து வாதங்களை வைக்க முடியாதவர்கள் 'மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றது' என்கின்றனர். இன்னும் 'மேகமூட்டம் மறைத்தால் அந்த மாதத்தில் ஒரு நாளைக்கூட்டி முப்பதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்' என்றும் கூறுகின்றனர். இவ்வாறு இவர்கள் கூறித்திரிவது பிறை விஷயத்தில் அவர்களின் நிலைபாடுகள் தோல்வியைத் தழுவியதைத் தெளிவாக பறை சாற்றுகின்றன.


விமர்சனம் 4 : அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல் என்ற ஒரு வினை இருந்தால் அதற்கு கண்ணால் பார்த்தல் என்றே பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட வினைச் சொல் இருந்தால்தான் ஆய்வு செய்தல் என்று பொருள்படும். ஸூமுலிருஃயத்திஹி என்பதில் பிறையைப் பார்த்தல் ஒரேயொரு வினைச் சொல்தான் உள்ளது.


விளக்கம்:


ஒரேயொரு வினைச் சொல் இருந்தால் கண்ணால் காண்பது என்றுதான் அர்த்தம் என்ற மேற்படி இலக்கண விதி எந்த இலக்கணப் புத்தகத்தில் உள்ளது? இந்த இலக்கணத்தைச் சொல்லித் தந்தது யார்? குர்ஆனும், தங்களது மனோ இச்சைக்கு முரண்படாத ஸஹீஹான நபி மொழியுமே மார்க்கம் என்று கூறும் சிலர்தான் மேற்படி வாதத்திற்கு சொந்தக்காரர்கள் ஆவர்.




மேற்படி கருத்து 'லிஸானுல் அரப்' என்ற அரபு அகராதி நூலில் இடம் பெற்றிருப்பதாக ஒரு எண்ணையும் குறிப்பிட்டு 'ஹிஜ்ரி கமிட்டியினருக்கு மரணஅடி' என்ற தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டனர். அந்த அவதூறு புத்தகத்தில் இடம்பெற்ற அபத்தக் கருத்துக்களுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் சார்பில் 'மரணஅடி யாருக்கு?' என்ற தலைப்பில் வீடியோ பதிவுகளாக வரிக்கு வரி பதில் அளிக்கப்பட்டுள்ளது. 'சொந்தக் காசில் சூனியம் வைத்து விட்டார்கள்' என்ற உவமையைப் போல மேற்படி இயக்கத்தினர் தங்களுக்குத் தாங்களே மரணஅடி வாங்கியதை மக்களும் அறிந்து கொண்டார்கள்.


அல்குர்ஆனில் 105:1 மற்றும் 89:6 சூராக்களில் இடம்பெரும் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' - 'ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான்?' என்பதில் 'செய்தான்' என்ற ஒருரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. இதில் இடம்பெரும் யானைப்படையையும், ஆதுக் கூட்டத்தையும் மஃப்வூல் என்று எப்படி புரிந்து கொண்டார்கள்? பெயர்ச் சொல்லுக்கும், செயல்பாட்டு வினைக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?


அதுபோல அல்குர்ஆனின் வசனம் (37:102) கூறுவது போல 'ஃபன்ளுர் மாதா தரா'- உன் கருத்து என்ன? என்பதில் எத்தனை மஃப்வூல் வருகிறது? அந்த ஆயத்தில் 'இன்னீ அராஃபில் மனாமி' – நான் கனவில் கண்டேன் என்ற வார்த்தை வந்துள்ளதால் அந்த 'அரா' என்ற சொல்லுக்கு ஒரு மஃப்வூல் வந்துள்ளது என்று கூற வருகின்றீர்களா? அப்படியானால் அதற்கு அடுத்து இடம் பெரும் 'ஃபன்ளுர் மாதா தரா' என்ற அல்குர்ஆன் வாக்கியத்தில் இடம்பெரும் 'தரா' என்ற சொல்லுக்கு புறக்கண்களால் பார்த்தல் என்று பொருள் கொள்ளலாமா?


அல்குர்ஆனின் (3:13) வசனத்தில் 'புறக்கண்ணால் பார்த்தல்' என்பதற்கு வல்ல அல்லாஹ் 'ரஃயல்அய்ன்' என்ற பதத்தைப் பயன்படுத்துகிறான். 'ரஃயல்அய்ன்' என்ற இச்சொல் பிறை சம்பந்தமாக வரும் எந்த ரிவாயத்திலும் இடம் பெறவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.


மாற்றுக் கருத்துடையோரின் வாதப்படி 'அல்ஃபீல்' அத்தியாத்தின் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' என்ற வசனங்களில் 'யானைக் கூட்டம்' என்ற 'ஒரு பெயர்ச்சொல்'லும், 'அல்லாஹ் என்ன செய்தான்?' என்பதில் 'செய்தான்' என்ற 'ஒரு வினையும்'தானே உள்ளது. அந்த வசனத்தில் இவர்கள் கூறியுள்ளபடி ஒரேயொரு வினைச் சொல்தானே வந்துள்ளது. ஒரேயொரு 'மஃப்வூல்' மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்பதே இவர்களின் வாதம். இவர்கள் இயற்றியுள்ள இப்புதிய அரபு இலக்கண விதிப்படி பார்த்தால், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னரே அப்ரஹாவின் யானைப்படை அழிக்கப்பட்ட அச்சம்பவத்தை நபி (ஸல்)அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்ற பொருள் அல்லவா வருகிறது.


இன்னும் இறைவன் ஆது கூட்டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6) என்பதிலும் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' என்ற சொற்றொடரே வந்துள்ளன. இங்கும் ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான்? என்பதில் 'செய்தான்' என்ற ஒருரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்று கூறும் இவர்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆது கூட்டத்தார் அழிந்ததையும், நபி (ஸல்) அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா? சொன்னாலும் சொல்வார்கள்.


இன்னும் 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற சொற்றொடர் இடம்பெறும் முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306) ஹதீஸில் எத்தனை மஃப்வூல்கள் இடம்பெற்றுள்ளன? மேற்படி ஹதீஸில் எதுவெல்லாம் மஃப்வூல்? நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டளையா? அல்லது பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பது கட்டளையா? அதுபோல முஸ்லிம் (2551 மற்றும் 2567), புஹாரி (1823), அஹ்மது (9641) போன்ற ஹதீஸ்களில் 'ரஆ' மற்றும் அதுபோன்ற சொற்கள் வினையாகத்தான் வருகிறதா? மாற்றுக்கருத்தினர் பதில் தரட்டும்.


முதலில் 'லிஸானுல் அரப்' என்பது அரபு இலக்கணப் புத்தகமா? அப்படியே 'லிஸானுல் அரப்' அரபு இலக்கணப் புத்தகமாகவே இருந்துவிட்டு போகட்டும். மார்க்க விஷயத்தை புரிந்து கொள்வதற்கும், குர்ஆன் சுன்னாவிலிருந்து சட்டம் வகுப்பதற்கு 'லிஸானுல் அரப்' போன்ற புத்தகங்கள்தான் அடிப்படை ஆதாரமாகுமா? இதை விளக்கிவிட்டு மேற்சொன்ன வாதங்களை மாற்றுக்கருத்தினர் வைக்கட்டும்.


விமர்சனம் 5:


உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டிகள் பல உள்ளன. அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகள் சந்திரக் கணக்கீட்டு முறையை பின்பற்றினாலும் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல கணக்கு முறைகளைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நீங்கள் வெளியிடும் நாட்காட்டியை மட்டும் எந்த அடிப்படையில் துல்லியமான கணக்கு என்று பின்பற்றச் சொல்கிறீர்கள்? கணக்கீட்டாளர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இல்லையா?


விளக்கம்:


மேற்படி குற்றச்சாட்டில் கூறியுள்ளதுபடி அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகள் சந்திரக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றி ஹிஜ்ரி நாட்காட்டியை வெளியிட்டுள்ளனர் என்ற கூற்று வடிகட்டிய பொய்யாகும். குர்ஆன் சுன்னா ஒளியில் மேற்படி நாடுகள் துல்லியமான ஹிஜ்ரி நாட்காட்டியை வெளியிட்டுள்ளதாக பிரச்சாரம் செய்வோர் அந்நாட்காட்டிகளை முதலில் நமக்கு அனுப்பித் தரட்டும்.


சந்திர மாதத்தின் முதல்நாளில், சூரியன் மறைந்த பிறகு பிறையை பார்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் பிறைக்கும் சூரியனுக்கும் உள்ள கோணதூரம் ((Angular Distance)அல்லது நீட்சி (Elongation) அல்லது பிறையின் ஒளிர்வு (illuminations) போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு சிலர் மாதங்களை ஆரம்பிக்கின்றனர். அதற்காக அவர்கள் நமதூர் குத்துமதிப்பு காலண்டர்களைப் போல காலண்டர் ஒன்றை தயாரித்துள்ளனர் என்பதே உண்மை.


மேற்படி குத்துமதிப்பு காலண்டர்கள் குர்ஆன் சுன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பதை நம்பி தயாரிக்கப் பட்டவையாகும். எனவேதான் அவை ஒன்றோடொன்று முரண்படுகிறது. மேற்படி காலண்டர்களை ஹிஜ்ரி காலண்டரோடு ஒப்பிட்டுக் கூறுவதை அறியாமையின் உச்சகட்;டம் என்றே கூறவேண்டும்.


அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகளின் காலண்டர்கள் முரண்பட்டு உள்ளன என்று வாதம் வைக்கின்றனர். புறக்கண்ணால் பிறையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக போடப்பட்ட குத்துமதிப்பு காலண்டர்கள் முரண்படுவதில் என்ன ஆச்சரியம் உள்ளது? இவர்கள் ஏன் அல்ஜீரியாவுக்கும், துனிசியாவுக்கும், லிபியாவுக்கும் செல்ல வேண்டும்? நமதூர் சர்வதேசப்பிறை இயக்கத்தின் காலண்டரும், தமிழகப்பிறையை சரிகாணும் இயக்கத்தவரின் காலண்டரும் முரண்பட்டு இல்லையா?.


நமதூர் தத்தமது பகுதி பிறையினர், தமிழகப் பிறையினர், ஒரு நாடு அளவுக்குள்ள எல்கையை ஒப்புக் கொண்ட தேசியப் பிறையினர் மற்றும் சர்வதேசப் பிறையினர் என்று பிறையை புறக்கண்களால் பார்க்கும் நிலைபாடுகளைக் கொண்டுள்ளவர்கள், ரமழான் துவக்கத்தில் முரண்படுகிறார்கள். அவ்வாறே மேற்படி காலண்டர்களும் முரண்படுகின்றன. எனவே மேற்படி காலண்டர்கள் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்த்த பிறகுதான் அமல் செய்வோம் என்ற அணியைச் சார்ந்தவைகளே. அவை ஹிஜ்ரி காலண்டரைச் சார்ந்தவை அல்ல என்பதை முதலாவதாக புரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் சந்திரனைக் கணக்கிடுவதில் முரண்பாடு உள்ளது. எனவே கணக்கீட்டு முறையை பின்பற்றக் கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி வாதிப்பதே சிறுபிள்ளைத்தனமான வாதமாகத் தெரியவில்லையா? அவர்களைப் பார்த்து நாம் கேட்பது இதுதான். ஒருவர் ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் பத்துவரும் என்கிறார் (5105=10). மற்றொருவரோ ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் பதினொன்று என்று சொல்கிறார் (5105=11) என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இருவரும் முரண்பட்டு சொல்வதினால் நான் கணக்குப் பாடமே படிக்க மாட்டேன்! எங்கள் குழந்தைகள் கணிதப் பாடத்தை படிக்க அனுமதிக்க மாட்டேன்! என்று யாராவது கூறுவார்களா? ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் என்ன வரும்? என்பதை ஆய்வு செய்வதுதானே நமது கடமை. மாறாக கணக்கே ஹராம் என்று ஃபத்வா கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்ன அறியாமை இது? சிந்தியுங்கள் மக்களே!.


குர்ஆன் சுன்னா ஒளியில் துல்லியமான விஞ்ஞான கணக்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே நமது ஹிஜ்ரி காலண்டர். பல ஆண்டுகளாக நாம் வெளியிட்டு வரும் ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகளுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பிறைகளே சாட்சியாகும். ஹிஜ்ரி நாட்காட்டி பௌர்ணமி என்று தெரிவித்துள்ள அந்தக் கிழமை பௌர்ணமி தினமாக உள்ளதா? இல்லையா என்பதை மக்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம். நாம் அமாவாசை எனும் புவிமைய சங்கமதினம் என்று குறிப்பிட்டுள்ள அந்த நாள் அமாவாசை தினமாக உள்ளதா இல்லையா? என்பதையும் மக்களே உறுதிபட அறிந்து வருகின்றனர்.M மேலும் சந்திரனின் முதல் கால்பகுதி நாள், இறுதிகால் பகுதி நாள் என்று நாம் காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில் பிறையின் வடிவங்களும் அதன் கோணவிகிதமும் சரியானதாக உள்ளனவா என்பதையும் நீங்களே பார்த்து ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறோம்.


சரி, ஒரு வாதத்திற்காக பல ஹிஜ்ரி காலண்டர்கள் உள்ளன என்றே வைத்துக் கொள்வோம். பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்று கூறும் அனைவரும் ஒற்றுமையாக, முரண்படாமல், ஓர் அணியில்தான் இருக்கிறார்களா? இல்லையே. எத்தனை கருத்துள்ளவர்களாக அவர்கள் பிரிந்துள்ளனர் என்பதை கீழே பட்டியலிடுகிறோம்.


1- சர்வதேசப்பிறை நிலைபாடு (Internatioanl Sighting).

2- தத்தமதுபகுதி பிறை நிலைபாடு (Local Sighting).

3- மாநில அளவு பிறை நிலைபாடு (State Level Boundary)

4- பிறை பார்க்கப்படும் எல்கை ஒரு நாடு என்ற அளவில் இருக்கலாம் என்ற தேசியப் பிறை நிலைபாடு (National Boundary)

5- சவூதி அரேபியாவின் பிறைத் தகவலை (Following Saudi Arabia)ஏற்று பின்பற்றி வருபவர்கள்.

6- 'இம்கானே ருஃயத்' என்ற பிறை நிலைபாடு.

7- மாதங்களை ஆரம்பிக்க மக்கா தேதிக்கோடு (Makkah Date Line) என்ற பிறை நிலைபாடு.

8- ரமழானுக்கும், ஷவ்வாலுக்கும் சர்வதேசப் பிறை, ஹஜ் மாதத்தை துவங்குவதற்கு சவூதி அரசாங்க முடிவு என்ற பிறை நிலைபாடு.

மக்களே இவர்களின் வாதத்தின்படி உலகில் காலண்டர்கள் பல உள்ளன. எனவே ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றக் கூடாது என்று வாதம் வைத்தவர்கள், பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்ற கருத்தில் இந்த அளவுக்கு முரண்பாடுகள் உள்ளன என்பதை சிந்திக்கத் தவறியது ஏன்?.


கணக்கீடு முறையில் பல காலண்டர்கள் உள்ளது அதனால் ஹிஜ்ரி காலண்டரைப் பின்பற்றக் கூடாது என்றால் புறக்கண் பார்வை என்ற நிலைப்பாட்டில் அதிக முரண்பாடுகள் உள்ளதால் பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று இவர்கள் இனி பிரச்சாரம் செய்யத் தயாரா? என்று கேட்கிறோம்.


விமர்சனம் 6: ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள், பவுர்ணமி தினம், வளர்பிறை மற்றும் தேய் பிறைகளின் கணக்கீட்டை அமெரிக்காவின் நாஸா நிறுவனம்தானே வெளியிட்டுள்ளது. நீங்கள் நாஸாவின் கணக்கீட்டை எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறீர்கள்?


விளக்கம்:


ரமழான் நோன்பு ஆரம்பம், இரு பெருநாட்கள் போன்ற மார்க்கத்தின் இபாதத்துகளை நிர்ணயம் செய்வதற்கு பிறந்த முதல்நாளின் பிறையை அது மறையும் மஃரிபு வேளையில் புறக்கண்களால் பார்த்த பிறகுதான் மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற தீவிர நம்பிக்கையின் வெளிப்பாடுதான் மேற்படி கேள்வியாகும். பிறை பார்க்கப்படுவதாக சொல்லப்படுபவற்றை பற்றி நாம் கேள்வி கேட்டால், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கணக்கீட்டை எதிர்மறையாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாஸாவின் கணக்கை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.


பிற மதத்தவர்களின் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள அறிய கண்டுபிடிப்புகளை, தொழில்நுட்ப சாதனங்களை தங்கள் வசதிக்காகப் பயன்படுத்திடும் இவர்கள் இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா? ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது ஆத்திரப்படாமல் நிதானமாகவும், உளத்தூய்மையோடும், நல்லெண்ணத்துடனும் ஆய்வு செய்தால்தான் அறிவுப்பூர்வமான, உண்மையான கேள்விகளும், கருத்துகளும் பிறக்கும்.


நாஸா வெளியிட்டுள்ள கணக்கீடுகள் சரியானதுதானா? என்று நாம் பரிசோதித்து அறிந்து சரிபார்க்க முடிந்த காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில் இப்படியொரு கேள்வியை நம்மை நோக்கி இவர்கள் எழுப்பியுள்ளது இவர்களின் முதிர்ச்சியற்ற நிலையையே காட்டுகிறது. அடிப்படையற்ற கேள்வியை கேட்டுவிட்டு அறிவார்ந்த கேள்வியை எழுப்பியதாக நினைத்துக் கொள்கின்றனர் போலும்.


முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்காகவா நாஸா நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது? அல்லது நாஸா விஞ்ஞானிகள் ஹிஜ்ரி கமிட்டியினருக்கு சொந்தக்காரர்களா? முஸ்லிம்கள் சந்திரனின் படித்தரங்களால் அமைந்த ஹஜ்ரிகாலண்டரை வெளியிட வேண்டும் என்பதற்காகவா அவர்கள் சந்திரனின் படித்தரங்களை கணக்கிட்டுள்ளார்கள் - இல்லையே!. அவர்களின் சுய ஆராய்ச்சிக்காகவும், அவர்களின் செயற்கைக் கோள்கள் உட்பட விஞ்ஞான ஆய்வு சாதனங்கள் துல்லியமாக இயங்கவுமே சூரியன், சந்திரன் மற்றும் பிற கோள்களின் சூழற்சிகளை துல்லியமாகக் கணக்கிட்டு வைத்துள்ளார்கள். அவர்களின் சுயநலத்திற்காகத்தான் இவ்வளவு ஆய்வுகளையும் செய்து வைத்துள்ளார்களே தவிர முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. இவையே உண்மையாகும்.


இதுவல்லாமல் ஹிஜ்ரி காலண்டரை எங்கள் கணக்கீட்டின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுங்கள் என்று இதே நாஸாவினர் ஒரு கணக்கீட்டை உலகிற்குத் தந்தால் அதில் முதலில் சந்தேகம் கொள்பவர்களாக நாங்களாகத்தான் இருப்போம்.


இவர்கள் அமாவாசை நாளில்கூட சவுதியில் பிறை புறக்கண்களால் பார்க்கப்பட்டது என்று வெளியிடப்படும் தகவல்களை உண்மை என தக்லீது செய்வதைப்போல நாம் நாஸாவை தக்லீது செய்யச் சொல்லவில்லை. நாஸா வெளியிடும் அந்தத் துல்லியமான சந்திர சுழற்சியின் கணக்கீடுகளை சரி பார்க்காமலும், உறுதி செய்யாமலும் ஹிஜ்ரி காலண்டரின் கணக்கை நாம் வெளியிடவில்லை. மேலும் நாஸாவின் சந்திரக் கணக்கீட்டை மட்டும் வைத்துக் கொண்டு நாம் காலண்டர் வெளியிடவில்லை. அப்படி நாம் தயாரிப்பதாகத் தவறான ஒரு யூகத்தை இவர்களுக்குச் சொன்னது யார்? இதையாவது தெளிவு படுத்தட்டும்.


நாஸா வெளியிட்டுள்ள சந்திர, சூரியக் கணக்கீடுகள் சரியானதுதானா? என்பதை பரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வாளர்களை ஹிஜ்ரி கமிட்டிக்கு அல்லாஹ் வழங்கி தனது நாட்காட்டியை தவறுகளிலிருந்து தூய்மையாக்கி வைத்துள்ளான் - அல்ஹம்துலில்லாஹ். பிறை விஷயத்தில் சவுதி அரேபியாவின் தொலைக்காட்சியை, அல்லது இவர்கள் இயக்கத் தலைமைகளின் அறிவிப்புகளை இவர்கள் கண்மூடி பின்பற்றுவதைப் போல, ஹிஜ்ரி காலண்டரை நாம் கண்மூடி பின்பற்றச் சொல்லவில்லை.


இன்னும் நாம் வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகளுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பிறையின் படித்தரங்களே சாட்சி பகர்கின்றன. ஹிஜ்ரி நாட்காட்டி பௌர்ணமி என்று தெரிவித்துள்ள அந்தக் கிழமை பௌர்ணமி தினமாக உள்ளதா? இல்லையா என்பதை மக்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம். நாம் அமாவாசை எனும் புவிமைய சங்கம தினம் என்று குறிப்பிட்டுள்ள அந்த நாள் அமாவாசை தினமாக உள்ளதா இல்லையா? என்பதையும் மக்களே உறுதிபட அறிந்து வருகின்றனர்.


மேலும் சந்திரனின் முதல் கால்பகுதி நாள், இறுதிகால்பகுதி நாள் என்று நாம் காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அந்தந்த மன்ஜிலில் பிறையின் வடிவங்களும், அதன் கோண விகிதமும் சரியானதாக உள்ளனவா? என்பதையும் நீங்களே பார்த்து ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்று மீண்டும் பதிவு செய்கிறோம்.


அல்லாஹ்வின் உதவியால் ஹிஜ்ரி நாட்காட்டியை பல வருடங்களாக வெளியிட்டு இதை ஒரு சவாலாகவே வைத்து வருகிறோம். அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளை, அவனது நாட்காட்டியை இதுவரை யாராலும் பொய்யாக்கிட இயலவில்லை – அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் நாட்காட்டிக்கு எதிரான மாநிலப் பிறை, தேசியப் பிறை மற்றும் சர்வதேசப் பிறை போன்று எந்தப் பிறை போர்வைகளில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள் என்னதான் முயற்சித்தாலும், கியாமநாள் வரை சூழ்ச்சிகள் செய்தாலும், சத்தியத்தை தங்கள் வாய்களால் ஊதி அணைத்திட முயன்றாலும் அவர்களால் வெற்றிபெற இயலாது என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.


மக்களே நமது ஹிஜ்ரி காலண்டரின் துல்லியமான பிறைக் கணக்கீட்டை பொய்யாக்க நினைத்தவர்களின் சூழ்ச்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளதுதான் வரலாறு. அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளுக்கு முன் தோற்றுப்போனவர்கள் நமது எஜமானனான அல்லாஹ்விடம் மண்டியிடாமல் அடம் பிடிக்கின்றனர். ஹிஜ்ரி நாட்காட்டிக்கு எதிராக பொய்ச் செய்திகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர். அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் எதிராகப் போர்ப்பிரகடனம் செய்யத் துணிந்துள்ளனர். அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு யார் நேர்வழி காட்டிட முடியும்? இதுபோன்ற ஜாஹிலியாவிலிருந்து நம்மை வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக.


மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலை நாட்டவே நாடுகிறான். (அல்-குர்ஆன் 8:8)


விமர்சனம் 7: நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை செய்தார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் கூறுகின்றனர்.


விளக்கம்:


சர்வதேச (சவுதிதேசப்) பிறை இயக்கத்தின் 'அமீர்' அவர்களும் அவரது சகாக்களும்தான் மேற்படி தவறான குற்றச்சாட்டை சிறிதேனும் இறையச்சமின்றி மேடைகளில் முழங்கினர். அவர்கள் இயக்கத்தின் பிறை நிலைப்பாட்டிற்கு ஆதாரம் இல்லை என்பதே அதற்குக் காரணம். மேலும் சவுதி (பிறை) இயக்கமும் அவர்களது பிறை நிலைப்பாடும் புதைக்கப்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இவற்றை உணர்ந்து விட்டதால் மக்களை திசை திருப்புவதற்காக மேற்படி தவறான குற்றச்சாட்டை ஹிஜ்ரி கமிட்டி மீது அவர்கள் அள்ளி வீசுகின்றனர்.


நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளைச் செய்தார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டி ஒருபோதும் சொல்ல வில்லை. நாம் அவ்வாறு சொல்லியதாக அவர்கள் கூறும் அபாண்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர்களின் ஆதாரம் இருந்தால் மக்கள் மத்தியில் தெரிவிக்கட்டும். இந்நிலையில் மேற்படி சவுதி (பிறை) இயக்கத்தின் கூட்டாளிகளான போலி ஸலஃபு வகையறாக்கள்தாம் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது வெள்ளிக் கிழமை அரஃபாவில் நின்றதாகக் கூறியுள்ளனர். அதற்கும் ஆதாரத்தை சமர்ப்பிக்காமல் ஒரு யூதன் ஒருவன் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் உமர் (ரழி) அவர்களோடு உரையாடியதாகக் கூறப்படும் அடிப்படையற்ற சம்பவத்தை ஆதாரமாகக் காண்பிக்கின்றனர். அதன் அபத்தங்களை நபி (ஸல்) அவர்களின் அரஃபா நாள் எப்போது? என்ற தலைப்பில் அமைந்த ஹிஜ்ரி கமிட்டியின் வெளியீடுகளில் காணலாம்.


துல்லியமான விஞ்ஞான சந்திரக் கணக்கீட்டின் படி ஹிஜ்ரி 09-12-10 அன்று வியாழக் கிழமையாகத்தான் இருந்துள்ளது. அதாவது ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா 9-வது நாள் வியாழக்கிழமை ஆகும். பிறைகளைக் கணக்கிடுவது தவறு என்ற புதிய நிலைப்பாட்டை ஏற்றுள்ள மேற்படி சவுதி (பிறை) இயக்க அமீர் துல்லியமான விஞ்ஞானக் கணக்கீட்டை தவறு என்று விமர்சிப்பது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை.


பிறைகளைக் கணக்கீடு செய்வது மேற்படி அமீர், அவரது சகாக்கள் மற்றும் அவரது கூட்டாளிகளின் நிலைப்பாட்டின் படி ஹராம் ஆகும். அவ்வாறு ஹராம் என்றால் கடந்த 1426 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்ற தினத்தைப் பற்றி இவர்கள் கவலைப்படுவது ஏன்?


சர்வதேச (சவுதிதேசப்) பிறையினரைப் போலவே தமிழக அளவு பிறை நிலைப்பாட்டைக் கொண்டவர்களும் பிறையை புறக்கண்களால் பார்த்துவிட்டு அடுத்தநாள் மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என்கின்றனர். சவுதிதேசப் பிறை நிலைப்பாட்டிலிருந்து, 'தமிழக அளவு' என்ற எல்கை அளவில் மட்டும்தாம் அவர்கள் வேறுபட்டுள்ளனர்.


மேற்படி தமிழகப் பிறை நிலைப்பாட்டை பின்பற்றுபவர்களுக்கு கடந்த 1435-ஆம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா மாதம் அவர்கள் மாதத்தைத் துவங்கியதுபடி அவர்களின் பிறை 12-இல் பவுர்ணமி வந்து அன்று சந்திரக் கிரகணமும் ஏற்பட்டது. எங்காவது? என்றாவது? பிறை 12-இல் சந்திரக் கிரகணம் ஏற்படுமா? இதுபற்றி கணம் 'அமீர்' அவர்களோ, அவரது சகாக்களோ, மற்றும் அவரது கூட்டாளிகளோ கவலைப் படாதது ஏன்?.


சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி தன் சுழற்சிப் பாதையில் வரும். இப்படி சூரியன், பூமி, சந்திரன் ஆகிய இம்மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்து, சூரியனின் வெளிச்சத்தால் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுந்து சந்திரன் மறைக்கப்படுவதை சந்திரக் கிரகணம் என்கிறோம். இஸ்லாமிய சந்திர மாதத்தின் பவுர்ணமி நாளன்றே சந்திரக் கிரகணம் நடைபெறும். சந்திர மாதத்தின் பிறை 12-இல் நிச்சயமாக பவுர்ணமி ஏற்படாது. கடந்த 1426 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்ற தினத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள், தங்களது முன்னாள் சகாக்களான இன்றைய தமிழகப் பிறை இயக்கத்தின் பிறை நிலைப்பாடு தவறானதாகி விட்டது, தமிழகப்பிறை மண்ணைக் கவ்வி விட்டது என்று போர்க்குரல் எழுப்பாதது ஏன்? மேற்படி அமீர், அவரது சகாக்கள் மற்றும் அவரது கூட்டாளிகளின் நிலைப்பாட்டின் படி பிறை 12-இல் பவுர்ணமி ஏற்பட்டது சரியா? தவறா? - பதில் சொல்லட்டும்.


மேலும் சூரியனுக்கும், பூமிக்குமிடையே சந்திரன் குறுக்கிட்டு ஒரே நேர்க்கோட்டில் அம்மூன்றும் அமைந்தால் அது சூரியக் கிரகணமாகும். இஸ்லாமிய சந்திர மாதத்தின் இறுதி நாளான புவிமைய சங்கம தினத்தில்தான் (Geocentric Conjunction Day) சூரியக் கிரகணம் நடைபெறும்.


கடந்த 1435-ஆம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா மாத இறுதியில் தமிழகப்பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு அவர்களது பிறை 27-இல் அமாவாசை ஏற்பட்டு சூரியக் கிரகணமும் வந்தது. சந்திர மாதத்தின் 27-வது நாளன்று, அதாவது பிறை 27-இல் எங்காவது சூரியக் கிரகணம் ஏற்படுமா? - ஏற்படாது. ஆனால் தமிழகப்பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு அவர்களது பிறை 27-இல் அமாவாசை ஏற்பட்டு சூரியக் கிரகணமும் வந்ததை வைத்து அவர்கள் துல்ஹிஜ்ஜா மாதத்தை துவங்கியதும், அரஃபா நோன்பை நோற்றதும், ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடியதும் தவறு என்று பிரச்சாரம் செய்யவில்லையே ஏன்? இவை மட்டும் மேற்படி அமீருக்கும், அவரது சகாக்களுக்கும் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கும் தவறாகத் தெரியவில்லையா? அல்லது ஹிஜ்ரி கமிட்டியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மேற்படி தமிழகப் பிறை இயக்கத்துடன் இவர்கள் மறைமுக ஒப்பந்தத்தில் உள்ளனரா? - யாமறியோம்.


எனவே நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை செய்தார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் கூறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு வடிகட்டிய பொய்யாகும், மாபெரும் அவதூறாகும். இவ்வாறன பொய்க் குற்றச் சாட்டுகளை எழுப்பி ஆதாயம் தேட நினைப்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.


மேற்படி நபர்கள் ஹிஜ்ரி கமிட்டி மீது சுமத்தியுள்ள அவதூறுகளுக்கும், தார்ப்பாயில் வடிகட்டிய பொய்களுக்கும் பிரதிபலனாக நியாயத் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வின் முன்னிலையில் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். உண்மையிலேயே இவர்களுக்கு இறையச்சம் சிறிதேனும் இருந்தால், மறுமையின் மோசமான சூழ்நிலைக்கும் அஞ்சி மேற்படி அவதூறான குற்றச்சாட்டு உட்பட ஹஜ்ரி கமிட்டி மீது அவர்கள் கூறி வரும் அனைத்து குற்றச் சாட்டுகளையும் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம். இல்லையேல் நாளை மறுமையில் அவர்கள் செய்திருக்கும் நல்ல அமல்கள் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அவை எங்கள் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்பதை எச்சரிக்கிறோம்.


விமர்சனம் 8: ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குவோர்) கணக்கீட்டு முறையையும் பின்பற்றுகின்றனர். அந்த யூதர்களை பின்பற்றிய ஷியாக்கள், ராபிளாக்களின் வழிமுறையைத்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் பின்பற்றுகின்றனர். மேலும் ஹிஜ்ரி கமிட்டியினர் 'மஆஸியத்துர் ரஸூல்' - ரஸூலுக்கு மாறு செய்பவர்கள் என்றும் விமர்சிக்கப்படுவது பற்றி உங்கள் கருத்தென்ன?


விளக்கம்:


மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் சிலர் நம்மை நோக்கி, மேற்கண்ட வசை மொழிகளை வரம்பை மீறி அள்ளி வீசுகின்றனர். அவர்கள் பிறைகள் குறித்து ஆதாரமில்லாதவற்றை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து தற்போது மாட்டிக் கொண்டதால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் மேற்கண்ட வசை மொழிகள். முஸ்லிம்கள் ரமழான் மாதத்தில் ஒரு நோன்பை நோற்காமல் விட்டுவிட்டால் அது உம்மத்திற்கு ஈடு இணையற்ற பேரிழப்பு என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளதால் இவை போன்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பொருமையுடன் பதில் அளிக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.


இறைவேத வரிகளையும், இறைத்தூதர் மொழிகளையும் ஆதாரமாக சமர்பித்து, இம்மார்க்கப் பணிக்கு யாரிடமும் எந்தவித கூலியையும் வாங்கிடாமல், மக்களிடம் 'ஹிஜ்ரி நாட்காட்டி' குறித்த சத்தியத்தை எடுத்துச் சொல்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். அத்தகைய நம்மைப் பார்த்து 'மஆஸியத்துர் ரஸூல்' – 'ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்பவர்கள்' என்று துணிந்து விமர்சிக்கின்றனர். ஆடையிலும் வெளித்தோற்றத்திலும் அரபு நாட்டவரைப் போல காட்டிக் கொள்ளும் இம்முல்லாக்களுக்கு இறையச்சம் சிறிதேனும் இருந்தால் எம்மை வரம்பு மீறி விமர்ச்சித்ததற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை கோரட்டும். அல்லாஹ்வின் கோரப்பிடிக்கும், தண்டனைக்கும் அஞ்சிக் கொள்ளட்டும்.


இன்னும் யூதர்கள் என்றும், 'மஜூஸிகள்' - நெருப்பை வணங்குவோர் என்றும் நம்மை இவர்கள் விமர்சித்து விட்டதால் பதிலுக்கு நாமும் இவர்களை இதுபோன்று தரம் தாழ்ந்து விமர்சிக்க மாட்டோம். காரணம் சக முஸ்லிம்களின் கண்ணியத்தைப் பேண வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். மார்க்கப் பணி செய்கிறேன் பேரிவழி என்று கூலிக்கு மாறடிக்கும் மேப்படியார்களுக்கு, இவ்வுயர்ந்த உணர்வுகள் இல்லாமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.


சூரியன் எப்போது உதயமாகிறது? எப்போது மறைகிறது? போன்ற நேரக் கணக்குகள் இஸ்லாமிய கடமையான தொழுகைக்கும், நோன்புக்கும் இன்றியமையாதவை. மேற்படி சூரியன் உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களைக் கணக்கிட்டவர்கள் யார்? இவர்களின் இயக்கத்தில் ஏதும் விஞ்ஞானிகள் இருந்து அவர்கள் கணக்கிட்டுச் சொன்னார்களா? ஹிஜ்ரி நாட்காட்டியின் கணக்கு யூதர்களின் கணக்கு என்றால், பள்ளிவாயில்கள் தோறும் பின்பற்றப்படும் தொழுகை நேர அட்டவணை யாருடைய கணக்கு? என்பதை இவர்கள் மக்களுக்கு விளக்கிட தயாரா? மேலும் இவர்களின் இயக்கங்களின் பெயரால் அச்சிடப்படும் கிரிகோரியன் நாட்காட்டியின் தேதிகளும், அதன் கணக்கு முறையும் முஸ்லிம்களின் கணக்குதானா? இவற்றை நமக்கு விளக்கிவிட்டு பின்னர் ஹிஜ்ரி கமிட்டியினரைப் பற்றி இவர்கள் கவலை கொள்ளட்டும்.


பிறைகள் விஷயத்தில் மக்கள் விழித்துக் கொண்டு ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்டு வரும் பிறைகள் குறித்த சிற்றேடுகளை கையில் ஏந்தி, அதிலிருந்து கேள்விக் கணைகளை மேற்படி மார்க்கப் பிழைப்பு நடத்தும் மௌலவிகளை நோக்கி கேட்க ஆரம்பித்து விட்டனர். அக்கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் திக்குமுக்காடி வரும் மேப்படியார்கள், இதற்கு ஹிஜ்ரிகமிட்டியினரே காரணம் என்பதால் கோபங் கொண்டு படுபயங்கர ஃபத்வாக்களை நமக்கெதிராக வீசி எறிகின்றனர். அதனால்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் 'மஆஸியத்துர் ரஸூல்' – அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்பவர்கள் என்றுகூட நாக்கூசாமல் விமர்சிக்கின்றனர்.


மக்களின் பார்வையிலிருந்து தங்களின் தவறை திசை திருப்பும் முயற்சியே மௌலானா மௌலவிகளின் வரம்பை மீறிய வசை மொழிகளின் பிண்ணனியாகும். எனவே அவர்களையும், அவர்களது தரம்தாழ்ந்த விமர்சனங்களையும் அலட்சியம் செய்ய வேண்டுகிறோம்.